கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

கல்பாக்கம் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறைக்கு கண்டனம்! - தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை

கல்பாக்கத்தில்தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக அரசுக் காவல்துறைகொடும் அடக்கு முறைகளை ஏவியுள்ளது கண்டிக்கத்தக்கது.
கல்பாக்கத்தில் இந்திய அரசால் நிறுவப்பட்டு செயலில் உள்ள அணுஉலைகளிலிருந்து தடையில்லா மின்சாரம் வேண்டும்இலவசமான சுகாதாரமான குடிநீர் வேண்டும்,கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பிலும்கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்இந்திய அரசால் எங்கிருந்தோ கொண்டு வரப்படுகின்றகதிரியக்கம் கொண்ட அணுக்கழிவுகளை கல்பாக்கத்தில் சேமிக்கக் கூடாதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அணுக்கதிரியக்கத்தின் தாக்கத்தைக் கண்டறியும் வசதிகள் கொண்டபன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும்புதிய அணுஉலைகளை கல்பாக்கத்தில் நிறுவக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம்அணுஉலையைச் சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம்பட்ராஸ்புதுப்பட்டினம்ஒய்யாரி குப்பம்கொக்கிளமேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறுபோராட்டங்களி்ல் ஈடுபட்டு வந்தனர்.
26.03.2013 அன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பேரெழுச்சியுடன் திரண்ட 3000க்கும் மேற்பட்ட மக்கள் முதல் அணுமின் நகரியம் வாயிலை அமைதியான வழியில் முற்றுகையிட்டனர்காலையில் தொடங்கிய மறியல் போராட்டம் மாலை வரை நீடித்ததுகிராம மக்கள் சார்பில் ஊர் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள்மீனவர்கள் மற்றும் தொண்டுநிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுமாவட்ட வருவாய் அதிகாரி(ஆர்.டி..), தாசில்தார் முன்னிலையில் அன்று மாலை அணுமின் நிர்வாகத்துடன்பேச்சுவார்த்தை நடத்தியதுகோரிக்கைகளை பரிசீலிப்பதாக வாய்மொழியில் அணுமின் நிர்வாகம் கூறியதைபோராட்டக் குழுப் பிரதிநிதிகள் ஏற்கவில்லைஎழுத்து மூலம்உத்தரவாதம் அளிக்கக் கோரியதையும் அணுமின் நிர்வாகம் ஏற்கவில்லைஎழுத்து உத்தரவாதம் கொடுக்கப் படவில்லையெனில் அணுமின் நிலையத்தை முற்றுகையிடுவோம்என போராட்டக் குழுவினர் எச்சரித்துவிட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்துமறுநாளான 27.03.2013 அன்று அணுமின் நிலையத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான மக்களை காவல்துறையினர் வழிமறுத்துத் தடுத்தனர்.அங்கு அறவழியில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது காவல்துறை கொடுமையான முறையில் தடியடி நடத்தியதுஅதில், 22 பேர்வரை காயமுற்றனர். 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்தடியடியைக் கண்டித்து, காவல்துறையிடமும் அணுமின் நிர்வாகத்திடமும் முறையிட்ட 30 பேர்கொண்ட போராட்டக்குழுவினரில், 18 பேர் தடியடியை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் தானே முன்வந்து கைதாயினர்அதில்நால்வர் தடியடியில் கடுமையாகக்காயமுற்றிருந்தனர்.
இந்நிலையில்கைதான 18 பேரை விடுவிக்கக் கோரி கல்பாக்கம் பகுதியைத் துண்டிக்கும் வகையில் அனைத்து வழிகளிலும் மக்கள் அமைதியான வழியில் சாலை மறியலில்அமர்ந்தனர்இந்நிலையில்போராட்டக் குழுவினரிடம் கடிதம் ஒன்றை அளித்த அணுமின் நிர்வாக இயக்குநர் கோட்டீசுவரன்மக்கள் கோரிக்கைகள் சிலவற்றைப்பரிசீலிப்பதாகவும்புதிய அணுஉலைகள் அமைக்கும் முடிவு இந்திய அரசிடம் தான் உள்ளதெனவும் தெரிவித்தார்எனினும்கைது செய்யப்பட்ட 18 பேரை விடுவிக்கக் கோரிநள்ளிரவு 12 மணி வரை சாலை மறியல் தொடர்ந்தது.
இந்நிலையில்கைதான 18 பேர் மீது கொலை முயற்சி (..பிரிவு 307) உள்ளிட்ட கடும் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. காவல்துறையினரின் இந்தஅடக்குமுறையைக் கண்டித்தும், 18 பேரை விடுவிக்கக் கோரியும் 28.03.2013 அன்று கல்பாக்கத்தில் மக்கள் நடத்தவிருந்த உண்ணாப் போராட்டத்திற்கும் அனுமதிமறுக்கப்பட்டதுதடையை மீறி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில், 130 பெண்கள் மற்றும் 440 ஆண்கள் என மொத்தம் 670 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்களில் ஆண்கள் 440 பேரைத் தவிர்த்துபெண்களை இரவு 9 மணிக்கு விடுவித்தனர்.
ஆண்கள் அனைவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பக் காவல்துறை திட்டமிட்ட நிலையில்அதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பினஇதனையடுத்து, ஒவ்வொருகிராமத்திற்கும் 2 பேர் என போராட்டத்தில் முன்னிலை வகித்த 27 பேரையும்அதன் பின் 102 பேரையும் சேர்த்த மொத்தமாக 129 பேரை நீதிமன்றக்காவலில் சிறைக்குஅனுப்பியுள்ளது காவல்துறை. 27 பேரை சென்னை - புழல் நடுவண் சிறைக்கும்எஞ்சிய 102 பேரை வேலூர் நடுவண் சிறைக்கும் அனுப்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும்அப்பகுதியைச் சேர்ந்த எளிய கிராம மக்கள் ஆவார்கள்இவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததுஅரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்ததுகலவரத்திற்கு வித்திட்டது என பிணையில் வர முடியாத பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகில் எங்குமே நிறுவப்படாத வி.வி..ஆர்.(VVER) எனப்படும் புதிய அணுத் தொழில்நுட்பத்தில் தான் கல்பாக்கம் அணுஉலை செயல்பட்டு வருகின்றதுஅப்பகுதி மக்கள்,செயல்பட்டு வரும் அணுஉலையை மூட வேண்டுமெனக் கோரவில்லைஅதிலிருந்துமின்சாரம் வேண்டுமென்றும்புதிய அணு உலைகளை நிறுவ வேண்டாம் என்றும், ஆபத்தான அணுக்கழிவுகளை எங்கிருந்தோ கொண்டு வந்து கல்பாக்கத்தில் வைக்க வேண்டாம் என்றும் தான் அறிவுறுத்துகின்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்குசிலசலுகைகள் வேண்டுமென்று தான் போராடுகின்றனர்.
ஆனால்அவர்கள் மீது இவ்வளவுக் கொடிய அடக்குமுறைகளை ஏவ வேண்டிய அவசியமென்ன? அணுஉலைகளால் மின்சாரச் சிக்கல் தீர்ந்துவிடும் என்று அரசும்ஊடகங்களும்பரப்புகின்ற பொய்ச் செய்திகளை கல்பாக்கம் மக்களின் போராட்டம் தகர்த்தெறிந்துள்ளது தான் இதற்கக் காரணமா?
இந்திய அரசின் கல்பாக்கம் அணுமின் நிலையம்அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லையெனில்அதை தமிழக அரசு தான் தட்டிக்கேட்டுநிறைவேற்றிவைக்க வேண்டும்ஆனால்மக்களுக்கு எதிராக காவல்துறையை ஏவி ஒடுக்குவது எவ்வகையிலும் நியாமல்ல.
எனவேதமிழக அரசுகைதுசெய்யப்பட்ட அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும்மக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறைஅதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்மக்கள் கோரிக்கைகளை அணுமின் நிலைய நிர்வாகம் செயல்படுத்த முன்வரவில்லையெனில்கல்பாக்கம் அணுமின்நிலையத்தை செயல்பட அனுமதிக்க முடியாதென இந்திய அரசுக்குதமிழக அரசு அறிவிக்க வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இங்ஙனம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 கருத்துகள்:

அப்சல் குருவுக்குத் தூக்கு - கொன்று புதைக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சி - தோழர் கி.வெங்கட்ராமன்

பாரதிய சனதாவின் தீவிர இந்துத்துவத்திற்கும் காங்கிரசின் மிதவாத இந்துத்துவத்திற்கும் இடையே நடக்கிற போட்டியில் சட்ட நெறிகளும், நீதி நியாயங்களும், அறம் சார்ந்த ஆட்சிமுறையும் வீசி எறியப்பட்டு ஒரு அப்பாவி அவசர அவசர மாகத் தூக்கிலடப்பட்டு, ஒரு பச்சைப் படுகொலை அரங்கேறிவிட்டது.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல்குரு 9-2-2013 அன்று காலை 7.56 க்கு முன்னறிவிப்பு ஏதுமின்றி, அவரது மனைவிக்கோ குடும்பத்தாருக்கோ தெரிவிக்காமல் தில்லி திகார் சிறையில் கமுக்கமாகத் தூக்கிலடப்பட்டு, அவரது உடல் சிறை வளாகத்துக்குள்ளேயே புதைக்கப்பட்டது. இச்செய்தியை இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே அன்று காலை 8 மணிக்கு அறிவித்து அது தொலைக்காட்சிகளில் செய்தியாக காட்டப்பட்டபோது தான் அப்சல் குருவின் மனைவிக்கே அச்செய்தி தெரிந் துள்ளது.
இச்சாவுத் தண்டனை நிறைவேற்றப் படும் போது ஜம்மு- காசுமீர் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டு, கைப்பேசி, இணையதளத் தொடர்புகள் அனைத்தும் அம் மாநி லத்தில் முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டு போராட்டத் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு ஒட்டு மொத்த காசுமீரும் அரச பயங்கர வாத அதிரடியில் வைக்கப்பட்டிருந்தது.
வாஜ்பாய் தலைமையில் பாரதிய சனதா கூட்டணி ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் 13-12-2001 அன்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத் தில் வெள்ளை அம்பாசிடர் காரில் நுழைந்த 5 பயங் கரவாதிகள் நாடாளு மன்றத்தைத் தகர்க் கும் நோக் குடன் வந்தார்கள் என்பதே வழக்கு. நாடாளு மன்றப் பாதுகாவல் படையின ருக்கும், தாக்குதல் நடத்தியோ ருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையை அன்று தொலைக்காட்சி ஒளிபரப்பி யது.
உள்துறை அமைச்சகத்தின் அனுமதி ஒட்டி (ஸ்டிக்கர்) போலியாகத் தயாரிக்கப்பட்டு அம்பாசிடர் காரில் ஒட்டப் பட்டிருந்ததால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் காவலர்களின் அனுமதியைப் பெற்று அந்த கார் உள்ளே நுழைய முடிந்தது என்று தில்லி காவல்துறை விளக்கமளித்தது. வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த வரிசையில் காரை நிறுத்த முயலும் போது அங்கு நிறுத்திவைக்கப்படிருந்த குடியரசுத் துணைத் தலைவரின் வண்டியில் இந்த அம்பாசிடர் கார் இடித்ததால் நாடாளு மன்றக் காவல் படையினர் அங்கு விரைந்ததாகவும் அப் போது வெள்ளை அம்பாசிடரி லிருந்து வெளியே வந்த 5 பேரும் துப்பாக்கியால் சுடத் தொடங்கி சண்டை நடை பெற்றதாகவும் அரசு கூறியது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ‘பயங்கரவாதிகள்’ 5 பேரும் நிகழ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் படையினர் 8 பேர் தோட்டக் காரர் ஒருவர் என அரசுத் தரப்பில் 9 பேர் கொல்லப் பட்டனர்.
வந்தவர்களின் நோக்கம் நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கி தகர்ப்பதுதான் எனக் கூறிய அன்றைய பிரதமர் வாஜ்பாய், நியூயார்க் இரட்டை கோபுரத் தகர்ப்புக்கு இணையான சர்வதேச இசுலாமிய பயங்கரவாதத்தின் இன்னொரு தாக்குதல் இது என வர்ணித்தார்.
பயங்கரவாதிகள் வந்த காரில் அவர்கள் பயன்படுத்திய ஆயு தங்கள், கைப்பேசி சிம் கார்டு, மடிக்கணினி, அவர்களில் சிலரது புகைப்படங்கள், உலர்ந்த பழங்கள், அவற்றோடு ஒரு காதல் கடிதம்வேறு கிடந்து கைப்பற்றப்பட்டதாக காவல் துறை அறிவித்தது.
தாக்குதல் நடந்த இரண்டா வது நாளே அதாவது 15.12.2001 அன்றே வழக்கின் முழுப் பரி மாணமும் தெளிவாகி விட் டதாகக் கூறிய தில்லி காவல் துறை இக்குற்றத்தில் ஈடுபட்ட பயங்ரவாதிகள் 4 பேரைக் கைது செய்துவிட்டதாகவும் அறிவித் தது.
1999 இல் இந்திய விமானம் ஒன்று பாக்கிசுத்தானிய பயங் கரவாதிகளால் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்த்தானத்தின் கந்தகார் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் இந்திய அரசோடு நடந்த பேச்சு வார்த் தையின் விளைவாக அவர் களது நிபந்தனைப்படி இந்தியச் சிறையிலிருந்து ஜெய்ஷ் - சே- முகமது என்ற அமைப்பின் தலைவர் மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டார்.
மசூத் அசார் விடுதலையான உடனேயே தீட்டிய திட்டம் தான் நாடாளுமன்றத் தாக்குதல் என்று இந்திய அரசு கூறியது. மசூத் அசார் இத்தாக்குதல் செயலுக்கான பொறுப்பை அவ்வமைப்பை சேர்ந்த அடுத்த நிலைத் தலைவரான காசி பாபா என்பவரிடம் ஒப்படைத்ததா கவும், இந்த காசி பாபா இதனை நிறைவேற்ற தாரிக் அகமது என்ற பாக்கிசுத்தானியரை ஈடு படுத்தியதாகவும் அவரது திட் டப்படி பாக்கிசுத்தானி லிருந்து 5 பயங்கரவாதிகள் தில்லி மாநகருக்குள் ஊடுருவியதா கவும் தில்லி காவல்துறை தனது வழக்குரையில் கூறியது.
இத்தாக்குதலுக்கான சதிச் செயலில் வெவ்வேறு பாத்திரம் வகித்ததாக பேராசிரியர் எஸ்.ஏ. ஆர் கிலானி, சௌகத் உசைன் குரு, அவருடைய மனைவி அப்சான் குரு மற்றும் அப்சல் குரு ஆகிய நால்வர் கைது செய் யப்பட்டு இவர்களில் அப்சான் குருவுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் மற்ற மூவருக் கும் மரண தண்டனையும் விரைவு நீதிமன்றத்தில் வழங்கப் பட்டன. மேல் முறையீட்டில் வெவ்வேறு கட்டங்களில் சௌகத் குருவுக்கு பத்தாண்டு தண்டனையும், பேராசிரியர் கிலானிக்கு விடுதலையும் வழங் கப்பட்டது. உச்ச நீதிமன்றம் 4.8.2005 அன்று அளித்த தீர்ப் பில் அப்சல் குருவின் சாவுத் தண்டனையை உறுதி செய்தது.
இந்த ஒட்டுமொத்த வழக்கே உண்மையான குற்றவாளிக ளைக்கண்டுபிடிக்காமல் கையில் கிடைத்தவர்களைக் கொண்டு புனையப்பட்ட ஒன்று என்பதை உச்ச நீதி மன்றம் உணர்ந்தே இருந்தது. நீதிபதிகள் வெங்கட்டராம ரெட்டி மற்றும் நாவலேக்கர் ஆகிய இருவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புரையில் வெவ்வேறு வகை யில் இது ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது.
உயர் பாதுகாப்புப் பகுதி யான நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள் கை பேசி, சிம்கார்டு, லேப்டாப் போன்ற பல தடயங்களைக் கையோடு கொண்டுவந்ததாகக் காவல்துறை கூறுவதே நம்பும் படியாக இல்லை.
தில்லி காவல்துறை புனை வில் பல ஓட்டைகள் இருந் தாலும் அவற்றை எடுத்துக் கூறி வலுவாக வாதாடி வழக்கு நடத்த அப்சல் குருவுக்கு உரிய வாய்ப்பு வழங்கப் படவில்லை. இவர் களுக்கு வழக்காட முன்வந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத் மலானியின் வீடு தாக்கப் பட்டது. எனவே முன்னணி வழக்கறிஞர்கள் இவர்களுக்காக வழக்காடத் தயங்கினர். விரைவு நீதிமன்றம் அப்சல் குருவுக்காக மிக இளைய வழக்குரைஞரை அமர்த்தியது. பயிற்சி பெற்ற காவல்துறை அதிகாரிகள் புனைந்த வழக்கை எதிர் கொள் ளும் அளவுக்குப் போதிய பயிற்சி இல்லாதவர் அவர்.
இந்த வழக்குரைஞரும் ஒரு முறைகூட சிறையிலடைக்கப் பட்டிருந்த அப்சல் குருவை சந்தித்து வழக்கு பற்றி கலந்து ஆலோசிக்கவில்லை. தனிமைச் சிறையில் மிகுந்த கெடுபிடிக்கு இடையில் இருந்த அப்சல் குரு வறியவர் என்பதால் முன்னணி வழக்குரைஞர்களை அமர்த்தி கொள்ளவும் அவரால் முடிய வில்லை.
அப்சல் குருவை இவ்வழக்கில் சேர்ப்பதற்கிருந்த முக்கிய மான சான்றுக்கருவிகள் மடிக் கணினி, கைப்பேசி, சிம்கார்டு மற்றும் தக்குதலுக்குப் பயன் பட்ட வெள்ளை அம்பாசிடர் கார் ஆகியவை ஆகும்.
இந்த அம்பாசிடர் காரைத் தீவிரவாதிகளுக்கு அப்சல் குரு தான் வாங்கிக்கொடுத்தார் என்பதற்கான, ஐயத்திற்கிடமற்ற எந்தச் சான்றையும் காவல்துறை வைக்கவில்லை. எதற்கு இந்த வாகனம் பயன்படப்போகிறது என்பதை அறிந்திருந்தார் என்ப தையும் ஐயத்திற்கிடமின்றி காவல்துறை மெய்ப்பிக்க வில்லை. அப்சல்குருவை 15.12. 2001 அன்று ஜம்மு காசுமீர் மாநிலத் தலைநகர் சிறீநகரில் மடிக்கணிணி மற்றும் மோட் டரோலா கைப்பேசியுடன் கைது செய்ததாக கைது ஆவ ணத்தில் (அரஸ்ட் மெமோ) கூறிய காவல்துறை இப் பொருள்களைக் கைப்பற்றிய தற்கான சான்றாவணத்தில் (சீசர் மெமோ) அவை தில்லியில் கை பற்றப்பட்டதாக கூறியது. அதற்கு தில்லியை சேர்ந்த பிஸ் மில்லா என்பவரிடம் சாட்சிக் கையொப்பமும் காட்டியது.
திசம்பர் 12 அன்று கைப் பேசி, அதிலுள்ள சிம் கார் டுடன் வாங்கப்பட்டதாக சாட் சிகள் மூலம் கூறிய தில்லி காவல்துறையானது இந்த சிம் கார்டு ஏற்கெனவே நவம்பர் மாதத்திலிருந்தே செயல் பாட்டி லிருந்திருக்கிறது என்பதை கிலானி குறித்த குறுக்கு விசார ணையில் ஏற்றுக் கொண்டது. முக்கியமான இந்த முரண் பாட்டைக் கீழ் நீதிமன்றம் கண்டுகொள்ளவே இல்லை. உச்ச நீதிமன்றம் இந்த ஓட்டை யைக் கவனமாகக் குறிப்பிடு கிறது. ஆயினும் அப்சல் குரு குற்றவாளி அல்ல என்ற முடி வுக்கு வரமறுத்தது.
அப்சல் குருவிடம் திசம்பர் 15 அன்று கைப்பற்றிய மடிக் கணினியை 2002 சனவரி 16 அன்று தான் சீலிட்ட உறையில் காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மடிக்கணினி அப்சல் குருவின் பயன்பாட்டில் நீண்டகாலம் இருந்ததாக சொல்லும் தில்லி காவல்துறை அக்கணினியில் தீவிரவாதி களுக்கு உருவாக்கிய போலி அடையாள அட்டைகள், உள் துறை அமைச்சகத்தின் அனு மதி பெற்றதாக போலியாக தயாரிக் கப்பட்ட போலி ஒட்டிகள் ஆகியவற்றுக்கான பதிவுகள் மட்டுமே இருந்ததா கவும் மற்றவற்றை கைப்பற்றப் படுவதற்கு முன்னதாகவே அப்சல் குரு அழித்துவிட்ட தாகவும் கூறினர். மற்றவற்றை அழித்த அப்சல் குரு முக்கிய மான இந்தத் தடயத்தை மட்டும் எப்படி அழிக்காமல் விட்டார் என்பதற்கு காவல்துறை உருப் படியான எந்த விளக்கமும் அளிக்கவில்லை. நீதிமன்றமும் இதனைக் கண்டு கொள்ள வில்லை.
நீதிமன்றத்தில் தாக்கல் செய் ததாக சொல்லப்பட்ட நாளுக் குப் பின்னாலும் மடிக்கணி னியில் புதிய பதிவுகள் இருந் தது கண்டறியப்பட்டது. விரைவு நீதிமன்றத்தின் பொறுப்பிலிருந்த மடிக்கணி னியில் புதிய பதிவுகள் எப்படி வந்தன என்பது விளக்கப்பட வும் இல்லை.
அதைவிட தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டு நிகழ் விடத்திலேயே கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளின் பெயர்கள் மற்றும் ஊர்கள் பற்றி ஆதாரப் பூர்வமான எந்தத் தகவலையும் இது நாள்வரை காவல்துறை முன்வைக்கவே இல்லை. கொடும் சித்ரவதைகளின் ஊடே அப்சல் குரு கூறியதாக சொல்லப்படும் பெயர்கள் மட்டுமே உள்ளன. அதற்குத் தற்சார்பான வேறு எந்தச் சான்றும் இல்லை.
மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் இவ்வாறான குறை பாடுகள் மலிந்திருப்பதை ஏற் றுக்கொண்டது. அப்சல் குரு வுக்கு எதிராக நேரடிச் சான் றுகள் எதுவுமே இல்லை, சுற்ற டியான சான்றுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்றம் உறுதிபடக் கூறியது. ஆயினும் “தேசத்தின் மனச்சான்றையே உலுக்கிய இவ்வளவு பெரிய பயங்கரவாதச் செயலுக்கு அப்சல் குருவை தூக்கிலிடாவிட்டால் தேசத் தின் கூட்டுமனச்சான்று நிறை வடையாது என்பதால் அரிதி லும் அரிதான வழக்காக கருதி அவருக்கு உயிர் பிரியும் வரை தூக்கிலிடும் தண்டனையை உறுதிசெய்கிறோம் ”என நீதி பதிகள் வெங்கட்ட ரெட்டியும் நாவலேக்கரும் தங்கள் தீர்ப்பு ரையில் குறிப்பிட்டனர்.
இந்துத்துவா வெறிபிடித்த இரத்தக் காட்டேரியான பாரத மாதாவுக்கு ஏதாவது ஒரு மனித உயிரை பலிகொடுத்தால்தான் அவள் மலையேறுவாள் என் பதை இந்த நீதிமன்ற பூசாரிகள் மென்மையான சொற்களில் குறிப்பிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
பாரத மாதாவின் பலிபீடத் தில் ஒரு அப்பாவி காசுமீரியின் உயிர் காவுகொடுக்கப்பட நீதி யின் பெயராலேயே இவ்வாறான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தேசத்தின் கூட்டு மனச் சான்று எதைக் கோருகிறது என அறிவதற்கு கருத்துக் கணிப்பு ஏதும் வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு செய்தார் களா? இல்லை. இந்தக் கூட்டு மனச்சான்றுக்குள் காசுமீரி மக்களின் மனவிருப்பமும், நாடு முழுவதும் உள்ள இசுலா மியர்களின் கூட்டு மன விருப்ப மும் கணக்கில் கொள்ளப் பட்டதா? அதுவும் இல்லை.
இந்துத்துவ - இந்தியத் தேசிய வெறியர்கள் சிலரின் ஊடக வெறிக்கூச்சல் மட்டுமே உச்ச நீதி மன்றத்தால் நாட்டின் கூட்டு மனச்சான்று என கொள்ளப்பட்டிருக்கிறது.
சரி, இந்தக் கூட்டு மனச் சான்று என்பதன் பொருள் என்ன? பழிக்குப் பழி வாங்கு வது என்பது தானே ! ஒரு கொலையில் உயிரிழந்தவரின் உறவினர்களோ, கொலையுண் டவர்களின் மீது அனுதாபம் கொண்டவர்களோ பழிக்குப் பழியாக மரணதண்டனையைக் கோருவது இயல்பு. சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் நிலை நாட்டவேண்டியப் பொறுப் பிலுள்ள நீதிமன்றம் இந்த உணர்வலைகளுக்கு ஆட்படக் கூடாது. அவ்வாறு ஆட்பட் டால் கொலையுண்டவர்களின் குடும்பம் சார்பாக பழிக்குப் பழியாகக் கொலைக் குற்றத்தில் ஈடுபடுகிற நிறுவனமாக நீதி மன்றம் மாறிவிடும். இதனை உச்ச நீதிமன்றத்தின் பலத் தீர்ப்புகள் எச்சரிக்கையாக கூறிச் சென்றிருக்கின்றன.
இதனால்தான் பழிக்குப் பழி என்ற மரணதண்டனை கூடாது என்ற குரல் உலகமெங்கும் இன்று ஓங்கி ஒலிக்கிறது.
அப்சல்குரு தொடர்பில் சட்ட வழிமுறைகளின்படி “அரிதிலும் அரிதான வழக்கு” என்பதைக்கூட உச்ச நீதி மன்றம் மெய்ப்பித்துவிட வில்லை. அப்சல் குரு எந்த பயங்கரவாத அமைப்பையும் சேர்ந்தவர் அல்லர், பயங்கரவாத செயல் எதிலும் அவர் ஈடு படவில்லை என்று சான்று ரைக்கும் உச்ச நீதிமன்றம், இத் தாக்குதலில் ஒன்பது பேர் மரணமடைவதற்கு அப்சல் குரு காரணமாக இருந்தார் என்ப தற்கு நேரடிச் சான்றுகள் எதுவு மில்லை என எடுத்துரைக்கும் உச்ச நீதிமன்றம், இது மரண தண்டனை வழங்கத்தக்க அரிதி லும் அரிதான வழக்கு என் பதை சட்ட நெறிப்படி நிலை நாட்டவும் இல்லை. “இவ்வழக் கில் ஒருவருக்காவது மரண தண்டனை வழங்க வில்லை என்றால் நாட்டு மக்கள் திருப்தி அடைய மாட்டார்கள் ”என வாதிடுவது சட்டத்தின் ஆட் சிக்கு எதிரானது. நேயர் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டுப் பாடும் பாடகர் அல்லர் நீதி பதிகள்.
அப்சல் குருவின் சாவுத் தண்டனைக்கு எதிராகக் கரு ணை மனு தன்னிடம் வந்த போது குடியரசுத்தலைவர் சாவுத்தண்டனையை நீக்கி சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டியிருக்க வேண்டும். இந்திய அமைச்சரவையின் சார் பில் உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க மறுத்து அவரது சாவுத்தண்டனையை உறுதி செய்து பரிந்துரை அளித்தபின் குடியரசுத்தலைவர் தம்மிச் சையாக வேறு ஒரு முடிவு எடுக்கமுடியாதுதான். ஆயினும் அந்தக் கோப்பில் உடனடியா கக் கையெழுத்திடுவதை பிர ணாப் முகர்ஜி தவிர்த்திருக் கலாம்.
2013 சனவரி 21 அன்று உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும் கோப்பை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அனுப்பியது. 2013 பிப்ரவரி 3 அன்று அப்பரிந்துரையை ஏற்று பிரணாப் முகர்ஜி அவசரமாகக் கையெழுத்திட வேண்டிய சட்டத்தேவை எதுவு மில்லை.
சாவுத்தண்டணை தொடர் பாக முக்கியமான சில வழக்கு கள் உச்ச நீதிமன்ற விசாரணை யில் உள்ளன. சாவுத் தண் டணை வழங்கப்பட்டு நீண்ட காலம் சிறையிலிருப்பவர்க ளுக்கு, அந்த நீண்டகால சிறை வாசத்தையே காரணமாகக் காட்டி சாவுத்தண்டணையை ரத்து செய்து வாழ்நாள் சிறை யாக மாற்றி, குடியரசுத் தலை வரும் மாநில ஆளுநரும் கருணை வழங்கலாமா என்ற முக்கிய சிக்கல் உச்ச நீதிமன்ற ஆய்வில் உள்ளது. “நீண்டகால சிறைவாசம்” என எவ்வளவு ஆண்டு சிறைவாசத்தை வரை யறுப்பது என்பது உள்ளிட்ட பல கேள்விகள் இவ்வழக்கு களில் நிலுவையில் உள்ளன.
தவிரவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனம்போன போக் கில் மரணதண்டனை வழங்கிய போது சட்ட அறியாமை (ஜீமீக்ஷீ வீஸீநீuக்ஷீவீuனீ) என்ற தவறு நேர்ந்து விட்டதையும், அவ்வகைத் தீர்ப்புகளின் காரணமாக ஏற் கெனவே இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்பதையும் உச்ச நீதிமன்றமே வலுவான ஆதாரங் களோடு எடுத்துக் காட்டியிருக் கிறது. (விரிவிற்கு காண்க : “மூன்று தமிழர் கருணை மனுவுக்கு ஆதரவான புதிய சட்ட நிலை” -கி.வெங்கட்ராமன், தமிழ்த் தேசியத் தமிழர் கண் ணோட்டம், சனவரி 16-31, 2013 )
இவை அனைத்துமே கருணை மனுத் தொடர்பான வழக்குகளாக உள்ளவை. எனவே, நியாயமாகப் பார்த்தால் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்வழக்குகளின் தீர்ப்பு வரும்வரை அப்சல் குரு கோப்பில் ஒப்புதல் கையெழுத் திடுவதை தவிர்த்திருக்க வேண்டும். மாறாகக் கோப்பு வந்து இரண்டு வாரத்துக் குள்ளாகவே அவசர அவசரமாக கையெழுத்திட்டுருக்கிறார்.
கருணை மனு நிராகரிக்கப் பட்ட பிறகு தூக்கில் போடுவ தற்கான நாள் குறிக்கப்பட்டதை தொடர்புடையவரின் குடும்பத் திற்குத் தெரிவிப்பது ஆட்சியா ளர்களின் சட்டக் கடமை. அப்சல் குரு மனைவியின் பெயர் குறிப்பிட்டு சோப்பூரில் உள்ள அவரது முகவரிக்கு விரைவு அஞ்சலில் தூக்கிலிடும் நாள் தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டு விட்டதாக இந்திய உள்துறை அமைச்சர் சிண்டே கூறுகிறார். அஞ்சலில் அனுப்பிவிட்டு ஊரடங்கு உத் தரவும் பிறப்பித்தனர். ஊர டங்கு நேரத்தில் அஞ்சலகர்கள் வெளியில் செல்ல முடியாது என்பது ஊரறிந்த உண்மை.
கடிதம் போய் சேர்வதற்குள் ளாக அப்சல் குருவை கொன்று விட வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் உண்மையான நோக்கம்.
ஏன் இவ்வளவு கமுக்கமாக அப்சல் குருவின் தூக்கு தண்ட னையை நிறைவேற்றி னார்கள் என்ற வினாவுக்கு அரசுத் தரப்பிலிருந்து கசிந்து வரும் விடை அதிர்ச்சி அளிக்கிறது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு தூக்கி லிடுவதற்கான நாள் முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட தால்தான் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு இது தொடர்பாக உயர்நீதி மன்றத் தில் வழக்கு தொடுக்கப்பட்டு தடையாணையும் பெறப்பட்டது. இனி இவ்வாறான நிலை ஏற்பட வாய்ப்பளிக்கக் கூடாது என ஆட்சியாளர்கள் முடிவெடுத்துவிட்டார்களாம். ஏற்கெனவே அஜ்மல் கசாப் கடந்த 2012 நவம்பர் 12 அன்று இதே போல் கமுக்கமான முறையில் தூக்கிலிடப்பட் டதை நோக்கும் போது கசிந்து வந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.
தங்களது போட்டி இந்துத்துவ - இந்திய வெறி அரசியலுக்கு தோதாக சட்டத்தின் ஆட்சியையே குழி தோண்டிப் புதைக்கிறார்கள். இந்தப் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ‘இடதுசாரிகளும்’, மாயாவதி, நிதீஷ்குமார், முலாயம் சிங் உள்ளிட்ட ‘சமூக நீதிக்காவலர்களும்’ ஒரே ஆரிய இந்தியப் படை வரிசையில் தான் அணிவகுக்கிறார்கள். இது மிக ஆபத்தானது.
அப்சல் குருவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக் கப்பட்டால் அவரது இறுதி ஊர்வலமே ஜம்மு- காசுமீரில் பயங்கரமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் எனக் காரணம் காட்டி அவரது உடலைக்கூட அவரது மனை வியிடம் ஒப்படைக்க மறுக்கி றது இந்தியப் பேயாட்சி.
சேகுவேராவின் உடலுக்கும், பின்லேடன் உடலுக்கும், தமிழீத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிப் போராளிகளின் உடலுக்கும், காசுமீர் போராளி மக்புல் பட்டின் உடலுக்கும் நேர்ந்த நிலையே அப்சல் குருவுக்கும் நிகழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் வல்லாதிக்க - இன வெறியர்கள் ஒன்று போலவே நடந்துகொள்கிறார்கள்.
தூக்கில் கொன்று புதைக்கப் பட்டது அப்சல் குரு மட்டுமல்ல சட்டத்தின் ஆட்சியும் தான்.

0 கருத்துகள்:

காவிரித் தீர்ப்பு செயலுக்கு வர.... - தோழர் கி.வெங்கட்ராமன்

மிகநீண்ட இழுபறிக்குப் பிறகு,காவிரிதீர்ப் பாயத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு 20.2.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்டது.
அரசிதழில் வெளியானவுடன் காவிரிச் சிக்கலே தீர்ந்துவிட்டது போலவும், காவிரி நீர் வந்து விட்டது போலவும் அ.தி.மு.க.வினர் குதியாட்டம் போட்டனர். ஊருக்கு ஊர் இனிப்பு வழங்கி, செயலலிதாவை வானளாவப் புகழ்ந்து சுவரொட்டிகள், பதாகைகள் வைத்தனர். இது தனது வாழ்நாள் சாதனை என முதலமைச்சர் செயலலிதா துள்ளிக் குதித்தார்.
அரசிதழில் காவிரி தீர்ப்பு வெளியானதற்குத் தாங்கள் தான் காரணமென தி.மு.க தலைவர் கருணாநிதியும் காங்கிரசுக் கட்சியினரும் போட்டிப் போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடினர்.
காவிரிச் சிக்கல் தீர்ந்துவிட்டது போன்ற குழப்பத்தை பெரும் பகுதி உழவர்களிடமும், பொதுமக்களிடமும் இது ஏற்படுத்தி இருக்கிறது.இதேபோல் இடைக்கால தீர்ப்பு 1991-ல் வெளியிடப்பட்டு நேற்று வரை கடந்த 21ஆண்டுகளாக அது வெறும் ஏட்டளவில் இருந்ததை பலரும் நினைவுகூரத் தவறிவிட்டனர்.
இறுதித் தீர்ப்பை செயல்படுத்த உறுதியான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்யாது போனால் இதுவும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து விடும்.
“தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வழங்கப் பட்டவுடன் அதனை நடுவண் அரசு தனது அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் 1956 இதற்கு கால வரம்பு எதுவும் கூறவில்லை என்றாலும்,ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அரசிதழில் வெளியிடப்படாமல் இருப்பது நீண்ட காலதாமதம் ஆகும். இனியாவது 20.02.2013 ஆம் நாளைத் தாண்டாமல் விரைவில் அரசிதழில் வெளியிடவேண்டும்”எனஉச்ச நீதிமன்றம் இடித்துரைத்து கெடுவிதித்த பிறகே,அக்கெடுவின் கடைசி நாளான 20.02.2013 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
இத் தீர்ப்பின்படி கர்நாடகம் சூன் மாதம் 10, சூலையில் 34, ஆகஸ்டில் 50, செப்டம்பரில் 40, அக்டோபரில் 22, நவம்பரில் 15, டிசம்பரில் 8, சனவரியில் 3, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாதத்திற்கு 2.5ஆ.மி.க மொத்தம் ஆண்டுக்கு 192ஆ.மி.க காவிரி நீர் தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டும். (1 ஆ.மி.க = 100 கோடிகன அடி) இதில் 10 ஆ.மி.க சுற்றுச் சூழல் பயன் பாட்டிற்காக ஒதுக்கப்படும். மீதமுள்ள 182 ஆ.மி.க. தான். இதில் புதுவைக்கு 7ஆ.மி.க.தமிழகம் தரவேண்டும்.தமிழகத்துப் பாசனத்திற்கு மிஞ்சுவது 175 ஆ.மி.க. தான். இந்தப் பங்கீடு மிகவும் பாதக மானது என்றாலும் இதையாவது உறுதி செய்து கொள்ள வேண் டும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.
தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கு மிகக் குறைவான நீரை ஒதுக்கீடு செய்தாலும் இத் தீர்ப்பை செயல்படுத்த உறுதியான சட்ட ஏற்பாடுகளைக் காவிரித் தீர்ப்பாயம் வலியுறுத்திக் கூறுகிறது.
‘இத்தீர்ப்பை செயல்படுத்த நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) அமைக்க வேண்டும். அதன் கட்டுப் பாட்டில் கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய நான்கு அணைகளையும் தமிழ்நாட்டின் மேட்டூர், பவானிசாகர்,அமராவதி ஆகிய மூன்று அணைகளையும் கேரளத்தின் பாணாசுரசாகர் அணையையும் வைத்து தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விடுவதைக் கண்காணிக்க வேண்டும்.பத்து நாட்களுக்கு ஒருமுறை இதனை ஆய்வு செய்ய வேண்டும்.இந்த மேலாண்மை வாரியம் தனது பணிகளை நிறைவேற்ற காவிரி ஒழுங்குமுறைக் குழுவை  ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’ என வலியுறுத்துகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதற்கான காரணங்களையும், அதற்கான முன் எடுத்துக்காட்டுகளையும் விரிவாக எடுத்துக் கூறுவதோடு, மேலாண்மைவாரியம், ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றின் கட்டமைப்பு பற்றியும் காவிரித் தீர்ப்பாயம் விவரமாகக் கூறுகிறது.
“1991-ல் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்புப்படி தண்ணீர் பெற ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தை அணுக வேண்டியிருந்தது என்பதை ஆவணங் களிலிருந்து அறியமுடிகிறது.ஒவ்வொரு முறையும் பற்றாக் குறை என்று காரணம் சொல்லி கர்நாடகம் தட்டிக்கழித்தது என்பதையும் அறியமுடிகிறது.எனவே இப்போது அளிக்கும் தீர்ப்பை செயல்படுத்த உருப்படியான பொறியமைவுகள் உருவாக்காமல் போனால் இத்தீர்ப்பும் வெற்றுக் காகிதமாகவே இருக்கும்.”என மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தனது பரிந்துரைக்கான காரணத்தை தீர்ப்பாயம் கூறுகிறது. (காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அறிக்கை, தொகுதி 5, பக்கம் 216)
இறுதித் தீர்ப்பு குறித்த உச்ச நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை இந்த இறுதித் தீர்ப்பை செயல்படுத்த மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என கர்நாடகம் கூறுவது அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானது.மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கும் எதிரானது.
ஆனால், இந்த சட்ட விரோத நிலைப்பாட்டிற்கு இந்திய அரசு ஒத்துழைக்க முனைந்துள்ளது. “உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவ தற்கு முன்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம்’என இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அரீஷ் ராவத் கூறுவது சட்டவிரோத - இனப்பகைக் கொக்கரிப்பு ஆகும்.
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப் பட்டு விட்டால் அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டவிதி 6 (2) கூறுகிறது. கிருஷ்ணா ஆற்று நீர்ப் பகிர்வு குறித்து எழுந்த சட்டச் சிக்கலின் பட்டறிவு விளைவாக 2002-ஆம் ஆண்டு தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6ல் இந்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி உருவாக்கப் பட்டதே 6 (2) என்ற உட் பிரிவு ஆகும். திருத்தப்பட்ட இப்பிரிவு 06.08.2002 முதல் செயலுக்கு வந்தது.
விதி 6 (2) கூறுவதாவது:
“6 (1) ன் படி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசால் அதன் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டப் பிறகு அத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது ஆணையின் வலு வைப் பெறுகிறது’.’
எனவே,அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு தீர்ப்பாயத்தின் தீர்ப்பானது,தொடர்புடைய அனைத்து மாநிலங்களையும் இந்திய அரசையும் கட்டுப் படுத்தும்.
ஆயினும் இந்திய அரசு தனது சட்டக் கடமையிலிருந்து வழுவி விடும் என்ற ஐயம் தீர்ப்பாயத்திற்கு இருந்தது போலும்.எனவே தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து விரி வாக எடுத்துரைக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்குகள் முடியும் வரை மேலாண்மை வாரியம் அமைப்பதை நிறுத்தி வைக்கக் கூடாது. அரசிதழில் வெளியிட ஆணை யிட்ட தீர்ப்பிலேயே உச்ச நீதி மன்றம் அதனைத் தெளிவு படுத்துகிறது.“தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசி தழில் வெளியிட்டு செயல்படுத்துவது இது தொடர் பாக நிலுவையில் உள்ள உச்ச நீதிமன்ற வழக்கு களை எவ்விதத் திலும் பாதிக்காது என்பது சொல்லாமலே விளங்கும்” என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத் திய பிறகும் இந்திய அரசு ‘மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை’ எனக் கூறு வது அடாவடியானது.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனது முடிவுக்கான முன் எடுத் துக்காட்டுகளை தீர்ப்பாயம் காட்டுகிறது.
“தீர்ப்பாயமானது தனது தீர்ப்பை செயல்படுத்தத் தேவை யான பொறியமைவு குறித்தும், அப்பொறியமைவு செயல்பாட் டிற்கான வழிமுறை குறித்தும் ஆணை பிறப்பிக்கலாம், அது தீர்ப்பாயத் தீர்ப்பின் ஒருங்கி ணைந்த பகுதியாக அமையும்” என கிருஷ்ணா ஆற்று நீர் தீர்ப் பாயம் கூறுகிறது. (கிருஷ்ணா தீர்ப்பாய அறிக்கை - தொகுதி 2, பக்கம் 164 )
”ஆற்று நீர்ப் பகிர்வு சிக்கல் குறித்து விசாரணை செய்வதற்கும், கட்டுப்படுத்தும் ஆணைப் பிறப்பிப்பதற்கும் தீர்ப்பாயத்திற்கு நாடாளுமன்றம் அதிகாரம் வழங்குகிறது. கட்டுப்படுத்தும் ஆணைப் பிறப்பிக்க அதிகாரம் உண்டு என்றால்,அந்த ஆணை யைச் செயல்படுத்த இன்றிய மையாத் தேவையான அனைத் தையும் செய்வதற்குத் தீர்ப்பாயத் திற்கு அதிகாரம் உண்டு என்று பொருள்”. (நர்மதா தீர்ப்பாய அறிக்கை - தொகுதி 2, பக்கம் 130).
நர்மதை தீர்ப்பு 1979-ல் வெளியானதற்குப் பிறகே மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர் தகராறு சட்டத்தில் 6கி என்ற பிரிவு சேர்க் கப்பட்டது. தீர்ப்பு அரசிதழில் வெளியிடப் பட்ட பிறகு அதனைச் செயல் படுத்தத் தேவையான பொறியமைவு அல்லது பொறியமைவுகளை இந்திய அரசு நிறுவவேண்டும் என இப்பிரிவு கூறுகிறது.
இப்பொறியமைவு குறித்த அறிவிக்கைகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும்,நாடாளுமன்றம் விரும் பினால் இப்பொறிய மைவை மாற்றி அமைக்கலாம் என்றும் 6கி (7) கூறுகிறது.
மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்ட விதி 6 (2) -ன் வெளிச்சத்தில் இந்த 6கி (7) ஐ நோக்கினால் இது தொடர் பான நாடாளு மன்றத் தின் அதிகாரம் மிகவும் வரம்புக்குட் பட்டது என்பது புலனாகும்.ஏனெனில் 6(2)-ன் படி தீர்ப் பாயத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபிறகு அது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணையா கிறது.உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றம் திருத்தவோ மாற்றியமைக்கவோ முடியாது.வேண்டுமானால் வேறொரு புதிய சட்டத்தின் மூலம்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர் கொள் ளலாம்.
6 (2) இப்போது செயலில் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு அனைத்துத் தரப்பையும் கட்டுப் படுத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப் புக்கு இணையான ஆணையாகும்.
எனவே, இந்திய அரசு ஒரு நிர்வாக ஆணை மூலம் (Executive order) தீர்ப்பாயம் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.இதற்கு 6கி(7)ன் படி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதென்பது ஒரு சட்ட சடங்கே தவிர வேறொன்று மில்லை.நிர்வாக ஆணையின் மூலம் காவிரி மேலாண்மை வாரி யம் அமைத்து அதனை உடனே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விடலாம். நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
உண்மையில் கிருஷ்ணா ஆற்று நீர்ச் சிக்கலில் கர்நாடகத் தின் நிலைப்பாடும் இதுதான். கிருஷ்ணா வழக்கில் கர்நாடகம் சார்பில் வழக்காடிய மூத்த வழக்குரைஞர் நாரிமன் செயலாக் கப் பொறியமைவுக்கு நிர்வாக ஆணை போதும் என்றே வழக் காடினார். கிருஷ்ணா வழக்கில் கர்நாடகம் கோரியதைத் தான் காவிரி சிக்கலில் நாம் கோருகி றோம்.
கிருஷ்ணா உச்ச நீதிமன்ற வழக்கு 2000 -ல் நடந்தது. அப் போதே இந்த வாதத்தை கர் நாடகம் வைத்தது.அதன்பிறகு 2002-ல் மாநிலங்களுக் கிடையி லான தண்ணீர் தகராறு சட்டத் தில் 6(2)சேர்க்கப் பட்டது.இது உச்ச நீதிமன்ற ஆணைக்கு இணையான கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஆணையே தீர்ப்பாயத்தின் முடிவு எனக் கூறுகிறது.
சட்ட நிலைமைகள் இவ் வாறு இருக்க,உச்ச நீதிமன்ற காவிரி வழக்குகளின் முடிவு தெரியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என இந்திய அரசு கூறுவது அப்பட்டமான சட்ட மீறலாகும்.
எனவே, இந்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கட்டுப் பாட்டில் மூன்று மாநிலங் களிலும் உள்ள காவிரி அணை களின் நீர்ப்பகிர்வு மேலாண்மையைக் கொண்டு வந்து காவிரித் தீர்ப்பை முழுமை யாக செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசும், தமிழகக் கட்சிகளும்,தமிழ்நாட்டு உழவர்களும் இத்திசையில் இந்திய அரசுக்கு வலுவான அரசியல் அழுத் தங்கள் கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் இடக்காலத் தீர்ப்பைப் போலவே இறுதித் தீர்ப்பும் ஏட்டுச் சுரைக்காயா கத்தான் இருக்கும். அது கரிக்கு உதவாது.

0 கருத்துகள்: