கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

“காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!

ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து  தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 10.30 க்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் திரு, சி. ஆறுமுகம் தலைமையேற்றார்.

காவிரி நீரை மறுத்துவரும் கர்நாடக அரசுக்கு எதிராகவும்,  காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்ககள் எழுப்பப்பட்டது. தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட தலைவர் திரு அ.கோ.சிவராமன், முன்னிலை வகித்தார்.  பொறுப்பாளர்கள், திரு தங்க.கென்னடி, பொறியாளர் என்.ஜெயபாலன் , கோ.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

நிறைவாக தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி. வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உலக ஆற்று நீர் சட்டங்களையோ நீதிகளையோ, நீதிமன்ற உத்தரவுகளையோ மதிக்காத கர்நாடக அரசின் அடாவடித்தனத்துக்கு இந்திய அரசு துணை நிற்கிறது.   தமிழகத்துக்குரிய காவிரி நீரை இழந்து தமிழக உழவர்கள் கையறு நிலையில் உள்ளனர். தொடர்ந்து காவிரி நீரின்றி நிலத்தடி நீர் குறைந்து வருவதால்   காவிரி மாவட்ட மக்களின் குடிநீரும் கேள்விக்குறியாய் உள்ளது.

இந்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி அணைகளின் நீர் நிர்வாகப் பொறுப்பை  அதனிடம் ஒப்படைத்து, தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தனது சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு மன்றம் செல்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. உடனடியாக தமிழகத்தில்  அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.  முதலமைச்சரே முன் முயற்சி எடுத்து   காவிரி எழுச்சி நாள் அறிவித்து உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டும் "என்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  நிறைவாக திரு,அ.மதிவாணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - வெளியார் மயத்தில் தமிழ்நாடு - தோழர் கி.வெங்கட்ராமன்

தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை மிக அபாயகரமான வேகத்தில் அதிகரித்து வருவதை, அண்மையில் வெளியான மக்கள் தொகை கணக் கெடுப்பு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

இந்திய அரசு இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இதற்கு முன்னர் 2001 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அடுத்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு 2011 மார்ச் 31 நள்ளிரவு 12 மணிவரை உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கு இறுதி அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2011 ஏப்ரலில் முதல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டு அதற்குப் பிறகு துல்லியமான கணக்கீடுகள் முடிந்து இப்போது இறுதி அறிக்கை வெளிவந்துள்ளது.
இதன்படி 2011 மார்ச்சு முடிய தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,47,030 (7 கோடியே 21 இலட்சத்து 47 ஆயிரத்து முப்பது) ஆகும். அனைத்திந்திய மக்கள் தொகை சுமார் 121.02 கோடி ஆகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மக்கள் தொகை 97 இலட்சத்து 46 ஆயிரம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது கடந்த பத்து ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகை 15.6 விழுக்காடு கூடியுள்ளது.
ஆனால் இந்த மக்கள் தொகை உயர்வை ஆய்வு செய்தால் இது தமிழர்களின் இயல்பான பிறப்புத் தொகை கூடியதால் வந்த பெருக்கமல்ல, மாறாக வெளிமாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் தமிழ் நாட்டில் வந்து குவிந்ததால் நிகழ்ந்துள்ள வீக்கம் என்பது புலனாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 15.3 (15.3/1000) என்ற அளவில் உள்ளது. இறப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு 7.6 நபர்கள் (7.6/1000) என்ற வகையில் இருக்கிறது. நிகரமாகப் பார்த்தால் ஆயிரத்துக்கு 8.6 பேர் என்ற வகையில் பிறப்பு பெருக்கம் உள்ளது.
இதன்படி கணக்கிட்டால் இயல்பான பிறப்பு விகிதம் காரணமாக தமிழ்நாட்டில் கூடியுள்ள மக்கள் தொகை 53 இலட்சம் பேர்தான் ஆனால் மீதியுள்ள சுமார் 44 லட்சம் பேர் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை ஆகும். அதாவது தமிழர்களின் இயல்பான பிறப்பு விகிதத்தால் உயர்ந்துள்ள மக்கள் தொகை 54.6 விழுக்காடு ஆகும். வெளிமாநிலத்தவர் திபு திபு என்று புகுந்து விட்டதால் வீங்கியுள்ள மக்கள் தொகை 45.4 விழுக்காடு ஆகும்.
இது மிக மிக அபாயகரமான நிலைமையை குறிக்கிறது.
6 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை விகிதத்தை ஆய்வு செய்தால் இந்த ஆபத்து எதிர்காலத்தில் இன்னும் தீவிரம் பெறும் என்பது புரியும். 2001-ல் 6 வயதுக்கு கீழிருந்த தமிழ்நாட்டுக் குழந்தைகளின் எண்ணிக்கை அன்றைய மக்கள் தொகையில் 15.59 விழுக்காடாக இருந்தது. அந்த வகை குழந்தைகளின் எண்ணிக்கையானது இன்றைய மக்கள் தொகையில் 9.56 விழுக்காடாக குறைந்துள்ளது. அதாவது தமிழர்களின் குழந்தைப் பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது.

துல்லியமாகச் சொன்னால் எதிர்காலத்தில் தமிழர்களின் மக்கள் தொகைப் பெருக்கம் குறையப்போகிறது. இந்தச் சூழலில் வெளி மாநிலத் தவரின் நுழைவு இப்போதுள்ள வேகத்தில் நீடித்தால் கூட மிக விரைவில் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இல்லாமல் கலப்பினத் தாயகமாக மாறிவிடும் என்று பொருள்.
1971 - 81இல் அன்றையத் தமிழ்நாட்டு மக்கள்தொகைப் பெருக்கத்தில் வெளிமாநிலத்தவர் நுழைவால் ஏற்பட்ட பெருக்கம் 0.2 விழுக்காடுதான். அதனை இன்றுள்ள 45.4 விழுக்காடு என்ற அளவோடு ஒப்பிட்டுப் பார்த் தால் ஏறத்தாழ 23 மடங்கு வெளி மாநிலத்தவர் பெருக்கம் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. என்பது புரியும்.
விரைந்து தொழில் வளர்ச்சிப் பெற்றுவரும் மாவட்டங்களில் தான் இந்த வெளியார் வீக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1991 - 2001க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட 19.15 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2001-- 2011 ஆகியப் பத்தாண்டு காலத்தில் இரண்டு மடங்கையும் தாண்டி 38.6 விழுக்காடாக உள்ளது.
சென்னையை அடுத்துள்ள இன்னொரு மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 2001--2011 இடைப்பட்ட காலத்தில் 35.25 விழுக்காடு தாவியுள்ளது. இதற்கு முந்தையப் பத்தாண்டுகளில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 23.06 விழுக்காடு இது இருந்தது.
தமிழகத்தின் நடுப்பகுதியிலுள்ள கடலோர மாவட்டமான கடலூரில் இப்போதைய பத்தாண்டுகளிலும் மக்கள் தொகை பெருக்கம் 13.80 விழுக்காடு எட்டியுள்ளது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் 7.66 விழுக்காடாக இருந்தது.
தென் தமிழக மாவட்டங்களில் இதே போக்கு வளர்ந்து வருகிறது. எடுத்துக்காட்டாக சிவகங்கை மாவட்டத்தில் 1991-2001 பத்தாண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் 4.74 விழுக்காடு உயர்ந்துள்ளது. 2001--2011 காலகட்டத்தில் ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்து 16.09 மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் 1991 - 2001இல் மக்கள் தொகைப்பெருக்கம் 7.41 விழுக்காடாக இருந்தது இது 2001 - 2011 பத்தாண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்து 17.95 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தின் மக்கள் தொகைப் பெருக்கம் 4.25 ஆக இருந்தது 13.69 விழுக்காடாக இருந்தது.
இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகிற உண்மை என்ன? கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை மிகை வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதாகும். இன்னொன்று இந்த வெளியார் நுழைவு சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் கோவை திருப்பூர் மாவட்டங்கள், கடலூர் மாவட்டம் சிவகங்கை, மதுரை, தேனி மாவட்டங்கள் என தமிழகத்தின் எல்லா திசைகளிலும் அதிகரித்து வருகிறது என்பதாகும்.
வெளிமாநிலத்தவரின் இவ்வாறான மிகை நுழைவு தமிழர்தாயகத்துக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. சமூகம் குற்றமயமாகி வருவதை இது அதிகரிக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் கடுமையாக வெட்டிக்குறுக்கு கிறது.
உலகமயப் பொருளியல் கொள்கை தீவிரப்பட்டதிலிருந்து இந்த வெளியார் மிகை நுழைவு அதிகரித்துள்ளதையும் காணலாம். இந்தியாவில் யாரும் எங்கும் சென்று பணியாற்றலாம். தொழில் தொடங்கலாம் குடியிருக்கலாம், என்ற இந்தியமயம் இந்த வெளியார் மயத்துக்கு உற்ற கருவியாக இயங்குகிறது. 
உலகமயம் - இந்திய மயம் - வெளியார் மயம் என்ற ஆக்கிரமிப்பு அச்சு ஒரு புள்ளியில் இயங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது. வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை தமிழர்கள் தீவிரப்படுத்தாமல் போனால் மிக விரைவான எதிர்காலத்திலேயே தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அனாதையாகும் சூழல் உள்ளது.
உடனடிக் கோரிக்கையாக வெளிமாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது என்றக் கோரிக்கையையும் தமிழர்கள் அழுத்தமாக முன்வைத்து போராட வேண்டும். தவறுவோமேயானால் தமிழ்நாடு கலப்பினத் தாயகமாக மாறி தமிழர்கள் தங்கள் தாயகத்தை இழக்க நேரிடும்.
தமிழீழத்தில்துப்பாக்கி முனையில் சிங்களமயம் செய்ததை உலக மயத்தோடு இணைந்து இந்தியமயம் தமிழ்நாட்டில் செய்கிறது.
தாயகமற்ற ஒரு இனத்து மக்கள் தங்களது மண்ணில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளையோ வர்க்கச் சுரண்டல்களையோ எதிர்த்துப் போராடி வெற்றிப் பெறமுடியாது. சுவர் இருந்தால்தான் சித்திரம். தாயகம் இருந்தால்தான் சமத்துவ வாழ்வு.

0 கருத்துகள்:

மரண தண்டனையும் மார்க்சிஸ்ட் கட்சியும் - தோழர் கி.வெங்கட்ராமன்

கடைசியில் ஒரு வழியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மரண தண்டனையை எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டது. கடந்த மே 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் தில்லியில் கூடிய அக்கட்சியின் நடுவண் குழு இவ்வாறு தீர்மானித்தது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தாங்கள் முதன்மையான கட்சி என்று கூறிக்கொள்ளும் இக்கட்சியின் மார்க்சிய மூளைகளுக்கு மரண தண்டனைக்கு எதிராக முடிவெடுக்க இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது. இப்போதும் இக்கட்சி அரைக் கிணறுதான் தாண்டியிருக்கிறது.
“மரணதண்டனை பல நேரங்களில் தவறாக வழங்கப்பட்டுவிடுகிறது. இதனால் ஏற்படும் உயிர் பாதிப்பு பின்னால் சரி செய்துகொள்ள முடியாத ஒன்றாகும்’’ என்று தனது முடிவுக்குக் காரணத்தை விளக்கும் அத்தீர்மானம் “எனினும் அரிதிலும் அரிதான வழக்குகளில், தண்டனைக் குறைப்பு ஏதுமின்றி வாழ் நாள்முழுவதும் சிறைத்தண்டனை வழங்கலாம்’’ என்று கூறுகிறது.
“அரிதிலும் அரிதான’’ என்பதற்கு தெளிவான வரையறை ஏதுமில்லை என்பதுதான் மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் முக்கிய வாதம். நீதிபதிகள் அரிதிலும் அரிதான என்பதற்கு மனம் போன போக்கில் விளக்கமளித்து தவறான முறையில் சாவுத்தண்டனை வழங்கிவிடுகிறார்கள் என்பதை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டுள்ளது. (எ.கா: சந்தோஷ்குமார்பரியார் – எதிர் -- மகாராஷ்ட்டிர மாநில அரசு) இவ்வாறு தவறான முறையில் நீதிமன்றம் மூலம் உயிர்ப்பறிப்பு நடப்பதுதான் மரணதண்டனைக்கு எதிரான முக்கிய காரணமாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடுவண் குழு தீர்மானம் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டுதான் மரண தண்டனையை எதிர்ப்பது என முடிவுக்கு வந்துள்ளது. எனினும் ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்ற நிபந்தனையை முற்றிலும் கைவிட அதற்கு மனம் வரவில்லை. வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் தண்டனை என்பதற்கு இந்த நிபந்தனையை பொருத்திக் கொள்ளுகிறது. இது மரண தண்டனைக்கு எதிரான அதன் நிலைப்பாட்டையே கேலிக் கூத்தாக்குகிறது. மரண தண்டனையைக் கைவிட வேண்டும் என்று கோருவதற்கு முதன்மையான நோக்கமே, குறிப்பிட்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு சிறையாளிகள் விடுதலையாகி தங்கள் குடும்பத்தோடும், சமூகத் தோடும் இணைந்து பிறரைப் போல இயல்பான வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான்.
மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவு மரணதண்டனை பெற்றோரின் உற்றார் உறவினர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் செய்யும் அரைகுறை நடவடிக்கையே ஆகும்.
தூக்கு தண்டனை சிறையாளிகளின் மனநிலையிலிருந்து நோக்கினால் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடுவதை விட தூக்கில் தொங்கவிடப்படுவது மேலானது. பல நீதிமன்றத் தீர்ப்புகளே கூறுவது போல் மரணதண்டனை என்பது ஒரு நொடி மரணம். மரண தண்டனைக்காக காத்திருப்பது என்பது ஒவ்வொரு நொடியும் மரணம். வாழ்நாள் முழுவதும் சிறைக்குள் இருப்பதோ, அதை விடக்கொடியது. பிணமாகத் தொங்காமல் நடைப் பிணமாய் இருக்க வைப்பது. இதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இந்த முடிவு எடுப்பதற்குத்தான் இக்கட்சிக்கு இவ்வளவு காலம் ஆகியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்றுள்ள இந்திய நீதி மன்றங்களை ‘முதலாளிய நீதி மன்றங்கள்’ என்றுதான் வரை யறுக்கிறது. ஆனால் இந்த ‘முதலாளிய நீதிமன்றங்கள்’ கூட மார்க்சிஸ்ட் கட்சியை விட முற்போக்காக சிந்திக்கின்றன.
எடுத்துக்காட்டாக சங்கீத் - எதிர் - அரியானா மாநிலஅரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வாழ்நாள் தண்டனை பற்றி விவாதிப்பதை குறிப்பிடலாம். 2012 நவம்பர் 20 அன்று நீதிபதிகள் கே.எஸ்.இராதா கிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றப் பிரிவு வாழ்நாள் தண்டனை குறித்து கீழ்வருமாறு திறனாய்வு செய்கிறது.
“20ஆண்டுகள், 25ஆண்டுகள் சிறைத்தண்டனை, தண்டனை குறைப்பே இன்றி வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை என உச்ச நீதிமன்றம் வழங்கிவரும் தீர்ப்புகள் அரசாங்கத்தின் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தையே நீக்குவதாக உள்ளது.
இந்த நிலைப்பாடு அனுமதிக்கப்படக் கூடாதது என்று நாங்கள் கருதுகிறோம். அரசாங்கத்தை பார்த்து உங்களுக்கு தண்டனை குறைப்பு அதிகாரம் இல்லை என்று சொல்வது போல் இவ்வாறான தீர்ப்புகள் உள்ளன. அவ்வாறு நீதிமன்றம் அரசைக்கட்டிப் போட முடியாது. எந்தக் காரணம் கொண்டும் ஒரு நீண்ட நாள் சிறையாளி தண்டனைக் குறைப்பு கோருவதற்கான உரிமையை நீதிமன்றம் பறித்து விடக்கூடாது’’.
வாழ்நாள் தண்டனை என்பதை ஒரு மனிதனின் எஞ்சிய வாழ்நாள் முழுவதற்கும் சிறையிலடைக்கும் தண்டனை எனப்பொருள் கொள்ளக்கூடாது என்று இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 432 தண்டனக் குறைப்பு பற்றி பேசுகிறது.
ஒரு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் ஒருவரின் தண்டனையை தொடர்புடைய மாநிலஅரசு எப்போது வேண்டுமானாலும் குறைக்கலாம். அவ்வாறு தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு முன் அக்குற்றவாளிக்கு தண்டனை வழங்கிய அல்லது தண்டனையை உறுதி செய்த நீதிபதியிடம் கருத்துக் கேட்டு அதனை ஆய்வு செய்து அதன்பிறகு முடிவெடுக்க வேண்டும் என்பது இதற்குரிய நிபந்தனை.
ஆயினும், அரசுக்கு உள்ள இந்த தண்டனைக் குறைப்பு அதிகாரத்துக்கு இந்திய தண்ட னைச் சட்ட விதி 433 (A) ஒரு வரம்பு விதிக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனுவில் மரணதண்டனை நீக்கப்பட்டு வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறைவாசம் முடிவதற்கு முன்னால் தண்டனைக் குறைப்பு கோரமுடியாது என்பதே அந்த வரம்பு.
இந்திய தண்டனைச் சட்ட விதி 433 (A) விதிக்கும் வரம்புக்குட்பட்டு விதி 432ன் படி தண்டனைக் குறைப்பு பெறும் உரிமையைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுக்கிறது.
‘முதலாளிய சட்டம்‘ வழங்கும் சனநாயகத்தைக் கூட ‘பாட்டாளியக் கட்சி’ தட்டிப் பறிக்கிறது.
தண்டனைக் குறைப்பு கோரும் மேல் முறையீடுகளில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் தவறு செய்வதை உச்சநீதிமன்ற தீர்ப்புகளே சுட்டி காட்டுகின்றன. இவ்வாறான தீர்ப்புகளில் இராம்தியோசவான் -எதிர்- பானிகாந்த்தாஸ் என்ற வழக்கின் தீர்ப்பு கவனிக்கத்தக்கது.
மிகவும் அரிதாக, ஏற்கப்படும் இரண்டாவது சீராய்வு மனுவின் மீது (Second Review Petition) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.கே.,ஜெயின், வி.எஸ்.சிர்புர்கர், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் 2010 நவம்பர் 19 அன்று தீர்ப்பு வழங்கினர். அசாமில் நிகழ்ந்த கொலை வழக்கு இது.
இராம்தியோசவான் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவரைக் கொலைசெய்துவிடுகிறார். அவர்க்கு கீழமை நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலும் அத்தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அத்தீர்ப்பின் மீது அவர் அதே உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு அளிக்க 10.05.2001 அன்று அம்மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து மரணதண்டனையை உறுதிசெய்கிறது.
ஆயினும் கொலைக் குற்றம் நடந்த போது, இராம்தியோசவானுக்கு 16 வயது என எடுத்துக்காட்டி “சிறாருக்கு மரண தண்டனையா?’’ என்ற தலைப்பில் முனைவர் வேத்குமாரி என்ற சட்டத்துறைப் பேராசிரியர் தில்லியிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதுகிறார்.
இந்தக் கட்டுரையையே காரணமாக வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் தானே முன்வந்து இராம்தியோசவான் மரணதண்டனை குறித்து விசாரித்தது. கொலைக் குற்றம் நடந்த நேரத்தில் இராம்தியோசவான் சிறுவன்தான் என முடிவு செய்த தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து கருணை மனு அசாம் ஆளுநரிடமோ இந்திய குடியரசுத் தலைவரிடமோ வருமானால் மரண தண்டனையை இரத்து செய்து தண்டனைக் குறைப்பு வழங்கும் வகையில் அம்மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது.
இதே அடிப்படையில் இராம்தியோசவான் அசாம் ஆளுநரிடம் கருணை மனு அளித்தார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின் பின்னணியில் இம்மனுவை ஆய்வு செய்த அசாம் மாநில ஆளுநர் இராம்தியோசவானுக்கு 12.01.2002 அன்று தண்டனைக் குறைப்பு வழங்கி வாழ்நாள் சிறையாக மாற்றி ஆணையிட்டார்.
இந்த தண்டனைக் குறைப்பை எதிர்த்து கொலையுண்டவரின் சகோதரர் பானிகாந்த்தாஸ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 8.05.209 அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஆளுநரின் தண்டனைக் குறைப்பை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்து ஆணையிட்டது.
இத்தீர்ப்பின் மீது இரண்டாவது சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு முன்வைக்கப்பட்ட இரண்டாவது சீராய்வு மனுவை ஏற்று விசாரித்ததே மிகவும் அரிதான நிகழ்வு ஆகும்.
இந்த இரண்டாவது சீராய்வு மனுவின் மீது தீர்ப்பளித்த அமர்வு தனது தீர்ப்புரையில் கீழ் வருமாறு குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
“இந்த உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளில் ஒரு மனிதனின் மனித உரிமை பறிக்கப் பட்டிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதிக் கொண்டு முதல் சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதாகக் கருதுகிறோம். அது தவறானது. குடிமக்களின் மனித உரிமை மீறல்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் அரிதாக நிகழ்பவையாக இருக்கலாம். ஆனால் அவ்வாறான மீறல்கள் உச்ச நீதிமன்றத்தில் நிகழவே நிகழாது என்று சொல்லிவிட முடியாது’’.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் திறனாய்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவனித்ததாகத் தெரியவில்லை.
மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுவரும் புல்லர் வழக்கிலும், இராசீவ் காந்தி கொலை வழக்கிலும் இவ்வாறான கடும் தவறுகள் நடந்திருப்பதை ஏடுகளில் வெளிவரும் ஆய்வுரைகள் அக்கக்காக பிய்த்துப் போட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வது போல் அரிதிலும் அரிதான வழக்குகளில் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்க வேண்டுமென்றால் தூக்குமர நிழலில் நிற்க வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழர் மட்டுமின்றி நளினி, இராபட்பயஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய அப்பாவிகளும் கால் நூற்றாண்டுக்கு நெருக்கமாக சிறையில் வாடியபின்னும் விடுதலையே ஆகக்கூடாது என்று பொருள்.
எல்லா வழக்குகளிலும், அரிதிலும் அரிதான வழக்கு என வரையறுக்கப்பட்டே மரண தண்டனைகள் வழங்கப்படுகிறன. மார்க்சிஸ்ட் கட்சியின் தர்க்கப்படி மரண தண்டனை நீக்கப்பட்ட யாருக்குமே விடுதலை கிடைக்காது.
நல்ல வேலை, தமிழ் நாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி இப்போது ஆட்சியிலிருந்து புலவர் கலிய பெருமாள், தோழர் தியாகு போன்றவர்கள் (மரணதண்டனை நீக்கப்பட்டு) சிறைக்குள் இல்லை. இருந்திருந்தால் மார்சிஸ்ட் கட்சி அதன் நடுவண் குழு தீர்மானத்தின்படி இவர்களை வெளியில் விட்டிருக்காது.
உலகெங்கிலும், இந்தியாவிலும் மரண தண்டனைக்கு எதிராக ஏற்பட்டு வரும் கருத்து அலைகளால் அழுத்தப்பட்டு வேறு வழியின்றி, மரண தண்டனைக்கு எதிராக முடிவெடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆயினும் அதன் பழமைவாதம் அதனை இன்னும் பின்னுக்கு இழுத்துக் கொண்டிருக்கிறது. எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரைக்கிணறு தாண்டுகிறது. அரைக்கிணறு தாண்டுவதை விட கிணறு தாண்டாமலிருப்பது தாழ்வற்றது.

0 கருத்துகள்: