கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மாவீரர் நாள் செய்தி

25 ஆவது மாவீரர் நாளையொட்டி 
 தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
 தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களின் செய்தி


0 கருத்துகள்:

மீனவர்களே தமிழர்களாக ஒன்றிணையுங்கள்!





‘உலக மீன் வள நாள்’ இன்று (21.11.2014) கடைபிடிக்கப்படுவதையொட்டி, இராமநாதபுரத்தில், இராமநாதபுர மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்கம்(RFTU) மற்றும் இந்திய சமூக செயற்பாட்டு பேரவை (INSAF) ஆகிய அமைப்புகளின் சார்பில், இன்றைய நாள் ‘மீனவர் நாளாக’கடைபிடிக்கப்பட்டு, கருத்தரங்கம் நடைபெற்றது.

இராமநாதபுரம் வலம்புரி மகாலில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, சங்கத்தின் தலைவர் திரு. பாலுச்சாமி தலைமையேற்றார். செயலாளர் திரு. ஜோசப் வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர். திருவாட்டி அன்னம்மாள்,தேசிய மீனவர் சம்மேளனத் தலைவர் திரு.இளங்கோவன், இந்திய தேசிய சமூக செயல்பாட்டு மன்றஒருங்கிணைப்பாளர் திரு. மத்தியாஸ் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

‘இன்று ‘உலக மீன் வள நாள்’ இங்கு ‘மீனவர்’ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதே நாளில் தான், இலங்கையில் தூக்குத் தண்டனைப் பெற்று விடுதலையாகியுள்ள இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தோழர்கள் விடுதலையாகி, தமிழகம் வந்திருக்கின்றனர். அவர்களை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!

இந்த ஐந்து மீனவர் விடுதலை எப்படி நடைபெற்றது என்பதை நாம் இந்த தருணத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெறும் அரசின் தயவோடு இந்த மீனவர் விடுதலை என்பது சாத்தியமாகவில்லை.

அக்டோபர் 30ஆம் நாள், இராமேசுவர மீனவர்களக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த செய்தி வந்தவுடன், உடனடியாகக் கொந்தளிப்பு ஏற்பட்டு, இராமேசுவரத்தில் போராட்டம் வெடித்தது. போர்க்குணமிக்க அந்தப் போராட்டத்தின் போது, இந்திய அரசின் தொடர்வண்டி இருப்புப் பாதைகள் பெயர்க்கப்பட்டன. பல கிலோ மீட்டர் மனிதத் தலைகளே தெரியுமளவிற்கு மிகப்பெரும் சாலை மறியல்கள் இராமேசுவரத்தில் நடைபெற்றன.

தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் முகங்கள் – ஊர் பேர் என எதுவும் தெரியாத நிலையிலும் கூட, அவர்கள் தமிழர்கள் என்பதை உறவாகஉணர்ந்து கொண்டு, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழர் என்ற இணைப்பின் கீழ்தான் இது சாத்தியமானது.

இதே போல் நாம் ஒருங்கிணைந்து போராடியதன் விளைவாகவே, அரசுக்கு ஐந்து மீனவர்களை மீட்க வேண்டுமென்ற அழுத்தம் ஏற்பட்டது என்பது,மிகையானக் கூற்று அல்ல! ஒவ்வொரு சிக்கலிலும், இவ்வாறான ஒருங்கிணைந்த போராட்ட வழிமுறைத் தேவை! அதுவே நம்மை பாதுகாக்கும்!

2013ஆம் ஆண்டு, கடற்கரை மேலாண்மைச் சட்டம் - புதிய சட்ட விதிகளைக் கொண்டு திருத்தப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் வேளாண்மையிலிருந்து எப்படி உழவர்களை வெளியேற்றுகிறார்களோ, அது போல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகளுக்காக கடலோரத்திலிருந்து – கடலிலிருந்து மீனவர்களை வெளியேற்றும் திட்டத்திற்குத்தான் அச்சட்டம் பயன்படப் போகிறது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், 200 மீட்டர் முதல் 500 மீட்டர்வரை ஆழம் உள்ள கடல் பகுதிகளில், மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையில்லை என அறிவிக்கப்படும். அந்த பகுதிகளில் பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்கள் மீன் பிடித்துக்  கொள்ள அனுமதிக்கப்படும். அது போல,மீனவர் கடலிலிருந்து 500மீட்டருக்குள் குடியிருக்கக் கூடாது என்றும் சொல்வார்கள். இச்சட்டத்தை நாம் அனைவரும் ஒருங்கிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள 25 தீவுகளிலும்,  அதைச்சுற்றியுள்ள 560 சதுர கிலோ மீட்டர் பகுதிகளிலும், நம்மீனவப் பெண்கள் காலங்காலமாக கடல் பாசி எடுத்து வரும் தொழிலைச் செய்து வந்தனர். ‘இந்திய விடுதலை’க்குப் பிறகு, அந்த உரிமை நம் மீனவப் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. வனத்துறையினர், நம் மீனவர்களை தடுக்கின்றனர். எனவே, இந்த உரிமையை மீட்க நாம் போராட வேண்டியத் தேவையுள்ளது.
  
அதே போல, நம் மீனவர்கள் காலங்காலமாகப் புழங்கி வந்த கச்சத்தீவு, இலங்கைக்கு இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதை மீட்பதற்கும் நாம் போராட வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பரப்பை, இருதரப்பினரும் மீன்பிடிக்கும் வகையிலானபொதுவான கடற்பரப்பாக அறிவித்து, இச்சிக்கலைத் தீர்க்க முடியும்.

இது போன்ற பல உரிமைகளை மீட்க, நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியத் தேவையுள்ளது. மீனவர்கள் மட்டுமே ஒன்றுகூட, தொழிற்சங்கங்கள் அமைத்து, இந்த உரிமைகளை மீட்டுவிட முடியாது. நாம் அனைவரும், இணைய வேண்டிய புள்ளியில் இணைந்து, இந்த உரிமைகளை மீட்கலாம். அந்த ஒருங்கிணைப்பு, தமிழர் என்ற புள்ளியில்தான் இருக்கிறது. எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம், அதனை அமைப்பு வழியில் செய்து வருகின்றது“

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

கூட்டத்தின் நிறைவில், சங்கப் பொருளாளர் திருவாட்டி மீனா நன்றியுரையாற்றினார். நிகழ்வில், திரளான ஆண்கள் – பெண்கள் என நூற்றுக்கணக்கான மீனவத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசு உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

அறிவை விடுதலை செய்வோம்




அறிவுடையார் எல்லாம் உடையார்’’ என்றார் திருவள்ளுவப் பேராசான்! தனிஆள் வகையிலும் சரி, சமூகச் செயல்பாட்டிலும் சரி அறிவை ஆள்பவர்கள் மேல் நிலையில் நிற்கின்றனர். அவர்களில் சிலர் ஆதிக்க வாய்ப்பையும் பெறுகிறார்கள். அறிவு விடுதலையே சமூக விடுதலையின் முன் நிபந்தனை ஆகிறது.

அதுவும் இன்றுள்ள தகவல் யுகத்தில் அறிவுசார் மேலாண்மை என்பது சமூக மேலாதிக்கத்திற்கு உற்ற வழியாகத் திகழ்கிறது.

அறிவு என்றால் என்ன என்று வரையறுப்பது, அவ்வாறு வரையறுக்கப்பட்ட அறிவை உற்பத்தி செய்வது, அதனை மேலாண்மை செய்வது ஆகியவை ஆதிக்க ஆற்றல்கள் தன் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.

இது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று, அறிவை வரையறுத்து தமதாக்கிக் கொள்வது, இரண்டு அறிவுசார் மொழியை நசுக்குவது. வரலாறு நெடுகிலும் நடைபெற்ற இந்த மேலாதிக்க முறை இன்றும் தொடர்கிறது.

தமிழ் இனத்தின் மீது ஆரியப் பார்ப்பன மேலாதிக்கம்  நிறுவப்படுவதில் மேற்சொன்ன வழி முறைகள் முதன்மைப் பங்காற்றின. இன்று உலகமய முதலாளிய மேலாதிக்கத்திலும் இது தொடர்கிறது.

பன்னெடுங்காலமாக நிலவிய தமிழர்களின் திணை வாழ்க்கை பெரிதும் அறிவியலுக்கு இசைவான, இயற்கையோடு இணைந்த அழகிய வாழ்க்கை நெறியாகும். தமிழ் உழவர்கள் பருவநிலை, நீரியல், மண்ணியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார்கள். மருத்துவம், உலோகவியல், கட்டடவியல், உள்ளிட்ட  பலவற்றிலும் முதல்நிலைச் சமூகமாக விளங்கினார்கள்.

ஆயினும் கடந்த 5000 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நடைமுறை அறிவை பிற மனிதர்களிடத்திலும், அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கும், வாய்மொழியாகவே பரப்பிவந்தனர். அதன் பிறகே இவர்களுடைய பல்துறை அறிவு எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் பெற்றது.

இந்தப் படைப்பாற்றல் மிக்க அறிவை இவ்வகைப் படைப்பாற்றல்களில் பின் தங்கியிருந்த ஆரியர்கள் எழுத்து வடிவில் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினர். அரசர்களின் ஆதரவு இருந்ததால் இவ்வாறு பதிவு செய்வது எளிதாகவும் அமைந்தது. இவ்வாறான பதிவுகள் பெரும்பாலும் சமற்கிருதத்தில் செய்யப்பட்டன.

வடமொழி சார்ந்த இந்த ஏட்டறிவைத் தான் அறிவு (knowledge) என்பதாக வரையறை செய்தார்கள்.

உண்மையான படைப்பாளிகளாக இருந்த தமிழர்கள் உடல் உழைப்பாளர்களாகவும், ஏட்டறிவு மட்டுமே பெற்றிருந்த ஆரியப் பார்ப்பனர்கள் மேலாண்மை செய்வோர்களாகவும் காலப்போக்கில் மாறினார்கள். வடமொழி ஆதிக்கம் அவர்களது இந்த அறிவு மேலாதிக்கத்திற்கு அரண் செய்தது.

எடுத்துக்காட்டாக, வானளாவிய கோபுரங்கள், நுணுக்கமான சிற்பங்கள் ஆகியவற்றைத் தமிழர்கள் படைத்தார்கள். இன்றளவிலும் வடஇந்தியாவில் இவ்வாறான சிறப்பு வாய்ந்த பழங்காலக் கட்டடங்களைக் காண்பது அரிது.

ஆனால் இவைகுறித்து சில்ப சாஸ்திரம்’’ என்று வடமொழியில் நூல் எழுதியதின் மூலம் பார்ப்பனர்கள் இத்துறையில் அறிவு மேலாதிக்கம் பெற்றார்கள். பரதம் தமிழ் மண்ணைச் சார்ந்த உடல் மொழிக் (மெய்ப்பாட்டு) கலையாகும். ஆனால் பரதசாஸ்திரம்’’ சமற்கிருதத்தில் பதிவானதன் வழி ஆரியர்கள் அதன் மீது உரிமை கொண்டாடினார்கள்.

இவ்வாறு படைப்பாற்றல் மிக்க அறிவை அறிவு’’ என்ற வரையறுப்புக்கு வெளியே வைப்பது, அப்படைப்பாற்றல் மிக்க மொழியை அறிவுத்துறைக்கு வெளியில் வைப்பது, படைப்பாற்றல் உள்ள மக்களை அறிவுத் துறைக்கு வெளியில் வைப்பது ஆகியவற்றின் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை ஆரியப் பார்ப்பனர்கள் உறுதி செய்து கொண்டார்கள்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இதனை மீண்டும் மீண்டும் அரசு ஆதரவோடு சொல்லிக் கொடுக்கும் போது உரிமையைப் பறிகொடுத்த சமூகமே அதனை இயல்பான நிலையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. இவ்வகைக் கருத்தியல் மேலாண்மையே மேல்நிலை வர்ணமாக பார்ப்பனர்கள் நிலை பெறுவதற்கு பெரும் பங்காற்றியது.

முதலாளியத்திற்கும் இந்தத் தன்மை உண்டு. வெறும் அரசு அடக்கு முறையின் மூலமாக மட்டுமே முதலாளியம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது. எந்த ஆதிக்கமும் வெறும் அடக்கு முறையின் துணைக் கொண்டு மட்டுமே நீடித்து நிற்பதில்லை. அறிவை ஆள்வது, கருத்தியல் மேலாண்மை செலுத்துவது ஆகியவற்றின் வழியாகத்தான் முதலாளியமானது சுரண்டப்படும் வர்க்கங்களைத் தமது ஆதிக்கத்தை ஏற்கும்படிச் செய்கிறது. அந்த ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் அடிமை நிலையே ஒழுங்கு’’ என்பதாக பெயர்பெற்று விடுகிறது. இந்த ஒழுங்கு’’ மீறப்படும் போது மட்டுமே அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.

சமற்கிருதம் செய்த வேலையை இன்று ஆங்கிலமும் செய்கிறது. இந்தியத்தோடு சமற்கிருத - இந்தி ஆதிக்கம் இணைந்து வருவது போலவே உலகமயத்தோடு ஆங்கில ஆதிக்கம் கைக்கோத்து வருகிறது.

ஆன்மிகத்தில் சமற்கிருதமும், ஆட்சியில் இந்தியும், பொருளியலில் ஆங்கிலமும் இணைந்து தமிழ் இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்தந்தத் துறையில், அந்தந்த மொழியின் மேலாண்மையை இயல்பான ஒன்றாக ஏற்கச் செய்வதன் மூலம் தமிழினம் தமது அடிமை நிலையை ஏற்கச் செய்யுமாறு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் அறிவியல் மொழியல்ல, தமிழினம் அறிவியல் அறிவற்றது என்ற கருத்தைத் தமிழர்களே ஏற்கும் படிச் செய்வதில்தான் ஆதிக்க சக்திகளின் வெற்றியே இருக்கிறது.

இவ்வாறு நாம் தாழ்ந்தவர்கள், அறிவற்றவர்கள், நமது மொழியில் ஒன்றுமில்லை என்ற கருத்து ஒன்றிரண்டு தலைமுறைகளின் மீது நிலை நிறுத்தப்பட்ட பிறகு தமிழர்களின் பண்டைய அறிவே மொழிமாற்றம் அடைந்து சில வடிவ மாற்றங்களும் பெற்று நவீன அறிவியல் போல் கொண்டுவரப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, பல் துலக்கும் வேப்பங்குச்சி, ஆலம் விழுது ஆகியவை பத்தாம்பசலித்தனமானவை என்ற கருத்து நிலைநாட்டப்பட்டது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிஎன்ற அறிவியல் மொழி மூடநம்பிக்கை வரிசையில் வைக்கப்பட்டு அறிவு என்ற வலையத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டது.

ஆனால் அதுவே நீம் டூத் பேஸ்ட்’, ‘ஹெர்பல் டூத் பேஸ்ட்என்ற பெயர்களில் பன்னாட்டுப் பெருமுதலாளி நிறுவனங்களின் பற்பசையாக வடிவம் பெற்று வருகிறபோது அது நவீன அறிவியல் என்பதாகக் கேள்வி முறையின்றி ஏற்கப்படுகிறது. பூண்டுத் துவையல், பூண்டு இரசம் என்ற உணவே மருந்தாக இருந்த தமிழர் முறை பத்தாம்பசலித்தனமானது என்று ஒதுக்கப்பட்டு, அதுவே கார்லிக் பெர்ல்ஸ்என்ற ஆங்கிலப் பெயரில் உறை மாத்திரை என்ற மருந்து வடிவம் பெற்ற பிறகு நவீன அறிவியல் கண்டுபிடிப்பாக ஏற்கப் படுகிறது.

இவ்வாறான ஏற்பை சமூகம் நிரந்தரமாக நீடித்து வைத்துக் கொள்வதற்கு  உறுதியான நிறுவன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உயராய்வு மையங்கள் என்பதை உலகமயப் பெருமுதலாளி நிறுவனங்களின் மேலாண்மையை உறுதி செய்வதற்கு இந்த வகையில் பணியாற்றுகின்றன. அந்த ஆய்வு நிறுவனங்களில் பயின்று வெளியே வரும் இளையதலைமுறை அறிவாளர்கள். பரந்துபட்ட மக்களிடமும், அடுத்தத் தலைமுறையிடமும் இக் கருத்தைக் கொண்டு செல்லும் ஏந்திகளாக (Conveyers) செயல்படுகின்றனர்.

இதனால் அறிவு விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை, பொருளியல் விடுதலை ஆகியவை ஒரு புள்ளியில் நிலைக்கொண்டுள்ளன.

இந்த விடுதலைகள் தனித்தனி யாக நிகழ்பவை அல்ல.

எனவே முதலாளியத்தை எதிர்ப்பவர்கள் அறிவு விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை ஆகியவற்றோடு இணையாமல் தனியாக வர்க்க விடுதலையைப் பெறமுடியாது. அதே போல் மொழி விடுதலை என்பது அதற்கான பின்னணி ஆதிக்க ஆற்றல்களை எதிர்கொள்ளாமல் தனியே சாதிக்க முடியாது.

தமிழ்ச் சமூகம் அறிவுச்சமூகம்தான் என்ற உண்மையை உணர வரலாற்று அறிவு முகாமையானது. வரலாற்று அறிவு அற்ற சமூகம் தன்னம்பிக்கை அற்ற உதிரிகளாகச் சிதைந்து போகும். இவ்வாறான சிதைவே ஆதிக்கவாதிகளின் வேட்டைக்கு உவப்பானது. மொழிதான் இந்த வரலாற்று அறிவைப் பொதிந்து வைத்துள்ள பெட்டகமாகும். மொழி அறிவோ, தம் மொழி குறித்த பெருமிதமோ அற்ற சமூகம் ஒரு சமூகமாகவே நிலைத்திருக்க முடியாது. உதிரிகளாகச் சிதைந்து விடும்.

தொடக்கக் கல்வியிலிருந்தே தமிழ் மொழியை நீக்கி விடுவது என்ற ஆட்சியாளர்களின் முயற்சிக்குப் பின்னால் இவ்வாறான சதித்திட்டம் இருக்கிறது.

ஏற்கெனவே தமிழ் மொழி குறித்த அறிவும், பெருமிதமும் குறைந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாற்றப்பட்டிருப்பதால் குறிப்பாக ஆங்கிலத்தை ஒப்பிட தமிழ் தாழ்ந்தது என்ற தவறான மனப்பான்மை உள்ள சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாற்றப் பட்டிருப்பதால் அயல் ஆதிக்கம் இங்கு எளிதில் ஏற்கப்படுகிறது.

இடத்தையும், காலத்தையும் இணைக்கிற மொழி என்ற கண்ணியானது இவ்வாறு அறுக்கப்பட்டால் தமிழினம் உதிரிகளாகச் சிதைந்து திசை தெரியாப் பயணத்தில் தடுமாறும்.

தமிழினத்தின் அறிவு வரலாறு நிலைநாட்டப்படாது போனால் தமிழினம் தன்னம்பிக்கை அற்ற இனமாகக் கைபிசைந்து நிற்கும்; தனது அறமரபு குறித்து விழிப்புணர்வு இல்லாது போனால் தமிழினம் தனக்குள்ளாகவே மேல் - கீழ் எனப் பிரிந்து சண்டையிட்டு உருக் குலைந்து போகும்.

இந்த வரலாற்று அறிவே தன்னம்பிக்கை அளித்து அறிவு விடுதலைக்கும் அறவாழ்வுக்கும் வழிவகுக்கும். அறிவு விடுதலை மொழி விடுதலையோடு பிணைந்து இருக்கிறது.

இனம் விடுதலை அடைய அறிவு விடுதலை முன் தேவையா கிறது.
எனவே அறிவை விடுதலை செய்வோம்.

0 கருத்துகள்: