கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மக்கள் பணத்தை வங்கிகள் திருட மோடியின் புதிய சட்டம்

மக்கள் பணத்தை வங்கிகள் திருட மோடியின் புதிய சட்டம்


உங்கள் பணம் உங்கள் கையில்’’ என்று கூறி, எல்லா மக்களையும் வங்கிக் கணக்கில் இழுத்துவிட்ட நரேந்திர மோடி அரசு, இப்போது உங்கள் சேமிப்புத் தொகை - உங்களுக்கு இல்லைஎனக் கூறிவிட்டது!

நிதித்தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு - சட்ட வரைவு _- 2017” (The Finance Resolution and Deposit Insurance Bill - 2017) என்ற பெயரில், மோடி அரசு நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத் தொடரில் சட்டவரைவு ஒன்றை முன்வைத் திருக்கிறது.

கடந்த 2017 சூன் 14 அன்று, மோடி அமைச்சரவையால் இறுதி செய்யப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு ஆய்வுக்குழுவிற்கு விடப்பட்ட இந்த வரைவுச் - சட்டம் வழியாக இந்தத் திட்டம்  நிறை வேற்றப்படும் ஆபத்து இருக்கிறது!

இச்சட்டத்தின் முதன்மையான ஏற்பாடு தீர்வுக் கழகம்’’ (Resolution Corporation) என்ற ஒற்றை சர்வாதிகார அமைப்பை நிறுவி, அதன் அதிகாரத் தின்கீழ் அனைத்து அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஊரக வங்கிகள், காப்பீட்டுக் கழகங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவ னங்கள் போன்ற அனைத்தையும் வைப்பதாகும்.

இந்தத் தீர்வுக் கழகம், இந்திய நிதி அமைச்சகத் திற்குக் கட்டுப்பட்ட கீழ் அமைப்பாக மட்டும் இருக்கும்.

இந்திய சேம வங்கி (ரிசர்வ் வங்கி), காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை ஆணையம், பங்குச்சந்தை கட்டுப் பாட்டு வாரியம் (செபி), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் போன்ற தற்சார்பான (சுயேச்சையான) நிறுவனங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு - அகற்றப்பட்டு, அந்த இடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட - ஆனால் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்ட தீர்வுக் கழகம் அமைக்கப் படுகிறது.

ஏற்கெனவே, ஓரளவுக்கு தற்சார்பாக இருந்த திட்டக் குழுக் கலைக்கப்பட்டு, நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.

நாட்டின் வரி விதிப்பு குறித்தும், வரி வருமானப் பங்கீடு குறித்தும் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமிருந்து பிடுங்கப்பட்டு, அவற்றுள் மறைமுக வரி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கொண்ட சரக்கு சேவை வரி மன்றம்’’ (ஜி.எஸ்.டி. கவுன் சில்) நிறுவப்பட்டுவிட்டது.

பல்கலைக்கழக நல்கைக் குழு, அனைத்திந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம், மருத்துவக் கல்விக் கழகம் போன்ற தனித்த நிறுவனங் களை ஒழித்துக்கட்டி, அவை அனைத்திற்கும் சேர்த்து ஒற்றை தேசியக் கல்வி வாரியம் அமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்திய சேம வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதலின்றியே 500 ரூபாய் - 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்ற முடிவு, தலைமை அமைச்சரின் தான டித்த மூப்பான அறிவிப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நாட்களின் எண்ணிக்கை திட்டமிட்டு வெட்டப்படுகிறது. இந்திய அரசுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள், உயராய்வு நிறுவனத் தலைவர்கள் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அறிவுரை பெறுவதற்கு அரசே வற்புறுத்தியது.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனங்களைக் குடைசாய்த்து, தனது அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட அமைப்பாக தாழ்த்தப்படுவதுதான் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளில் மோசமானவையாகும்!

அந்த வரிசையில், நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு சட்டத்தின்படி அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம்”, சேம வங்கி போன்ற தற்சார்பான நிதித்துறை அமைப்புகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி, நடுவண் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission), நடுவண் புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) போன்றவற்றையும் தாண்டி தனித்த புலனாய்வு அதிகாரமும் கொடுக்கப்பட்ட அமைப்பாகும்.

இந்தத் தீர்வுக் கழகம், ஏதாவதொரு வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் சிக்கலான நிலையில் (Critical) இருப்பதாக மதிப்பிட்டாலோ அல்லது சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதினாலோ அந்த வங்கியை இன்னொரு அரசுத்துறை அல்லது தனியார் வங்கியோடு இணைக்கலாம். அல்லது இன்னொரு நிறுவனம் அந்த வங்கியை எடுத்துக் கொள்ள அறிவுறுத் தலாம். அல்லது அந்த வங்கியை மீட்க முடியாது என்று அறிவித்து கலைத்துவிடலாம். அதற்கு இச்சட்டத்தின் விதி 48 மிக விரிவான வாய்ப்புகளை வழங்குகிறது.

இச்சட்ட வரைவின் 42, 43, 44 ஆகிய விதிகள் வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கான வட்டியை நிறுத்தவோ, தள்ளிப்போடவோ, மாற்றியமைக்கவோ தீர்வுக்கழகத்திற்கு அதிகாரம் வழங்குகிறது. அது மட்டுமின்றி, வங்கி மற்றும் காப்பீட்டுக்கழகப் பணியாளர்கள், அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட் டோரின் ஊதியத்தை நிறுத்திவைக்கவோ, குறைக்கவோ, சில காலத்திற்கு மறுக்கவோ, அவர்களின் எண்ணிக் கையைக் குறைக்கவோ, அனைவரையும் வெளி யேற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யவோ தீர்வுக் கழகத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.

இச்சட்ட வரைவின் விதி 52, வாடிக்கையா ளர்களின் சேமிப்பு வைப்புத் தொகையை அவர்கள் இசை வின்றியே எடுத்துக்கொள்வதற்கு வழி செய்கிறது. விதி 52-இன் துணை விதிகள் மூலம் (அ) - வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை (Liability) இரத்து செய்வது, (ஆ) -_ பொறுப்புகள் நிறைவேற்றுவதில் மாற்றங்கள் செய்வது, (இ) -_ வாடிக்கையாளர்களின் நிலைத்த வைப்புத் தொகையின் காலத்தை தன்னிச்சையாக நீட்டிப்பது அல்லது மாற்றியமைப்பது, (ஈ) - வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை முழுமையாகவோ பகுதியாகவோ முதலீட்டுக்கு எடுத்துக் கொள்வது என்ற கட்டற்ற அதிகாரத்தை தீர்வுக் கழகத்திற்கு வழங்குகிறது.

அதாவது, வங்கிகள் நொடித்துப்போகும் என்று கருதினால் வாடிக்கையாளர்களின் சேமிப்புத் தொகையை _- அந்த இழப்பை ஈடு செய்ய வாடிக்கையாளரின் இசைவின்றியே எடுத்துக் கொள்ளலாம் என்று பொருள்!

ஏற்கெனவே, வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கு எந்த குறைவும் வந்துவிடாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதற்காகவே வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிப் பாட்டுக் கழகம்(Deposit Insurance and Credit Guarantee Corporation - DICGC) என்ற அமைப்பு 1961ஆம் ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்டுள்ளது.

அரசு வங்கிகள் கலைக்கப்படும் நிலை ஏற்பட்டால், ஒரு இலட்ச ரூபாய் வரையிலாவது வாடிக்கையாளரின் சேமிப்புத் தொகை முழுமையாகக் கிடைப்பதற்கு இந்த உறுதிப்பாட்டுக் கழகத்தின் வழியாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில், வங்கி சேமிப்புத் தொகைக்கு ஈடாக, இந்தக் கழகத்திடம் ஏறத்தாழ 16 இலட்சம் கோடி ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.

அரசு வங்கிகளுக்கு உழவர்களாலோ, சிறு உற்பத்தியாளர்களாலோ, சில்லறை வணிகர்களாலோ ஆபத்து ஏற்படுவது இல்லை! இந்திய சேம வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படியே, ஒட்டுமொத்த வாராக் கடன் 14.6 இலட்சம் கோடி ரூபாயாகும்! இந்த வாராக் கடனில் 88.4 விழுக்காடு வாராக்கடன் தொகை ஐந்து கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களிடமிருந்து நிலுவையில் நிற்பதாகும். அதிலும், அதானி, அம்பானி, டாட்டா உள்ளிட்ட இந்தியாவின் முதல் பன்னிரெண்டு பணக்காரர்களிடமிருந்து வசூலிக்க முடியாமல் நிற்கும் வாராக்கடன் ஏறத்தாழ 4 இலட்சம் கோடி ரூபாயாகும்!

இந்த முதல் வரிசை முதலாளிகளின் மடியில்தான் நரேந்திர மோடியின் ஆட்சி தவழ்கிறது! இவர்களின் வாராக்கடன்தான் வங்கிகள் நொடிப்பதற்கு முதன்மைக் காரணமாகும். இவற்றை முறையாக வசூலித்து விட்டாலே வங்கிகள் நிலைப்பெற்றுவிடும். இப்பெரு முதலாளிகளிடமிருந்து வாராக் கடன்களை வசூலிக்கத் தடை போடும் மோடி, நிலைகுலையும் வங்கிகளை தூக்கி நிறுத்துவதற்கு மாற்று வழியாகத்தான் பணத்தாள்  செல்லாது என அறிவித்தார்.

பணப்பரிமாற்றத்தை வன்முறையாகத் தடுத்து நிறுத்தி, அனைத்து மக்களையும் வங்கிகளில் பணம் போடும்படி மோடி வற்புறுத்தியது இதற்காகத்தான்! முதலாளிகளிடமிருந்து வாராக் கடனை வசூலிக்கா மலேயே, மக்களின் பணத்தை கட்டாயப்படுத்தி வங்கிகளில் செலுத்த வைத்ததன் மூலம் வங்கிகளை நிலைகுலைவிலிருந்து காத்துவிடலாம் என்று கருதினார்.

ஏற்கெனவே எரிவளி மானியம், உழவர் மானியம், உதவித் தொகைகள் ஆகியவற்றை வங்கிகளில் செலுத் துவது, “ஜன்தன்என்ற மக்கள் சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது என்று பல வகைகளில் எளிய மக்களை வங்கியோடு கட்டிப்போடும் வேலையை மோடி அரசு தொடங்கிவிட்டது.

வங்கிக் கணக்குகளில் குறைந்தது ரூபாய் 1,000 முதல் 5,000 வரை (Minimum Balance) வைத்திருக்க வேண்டும். அதற்குள் குறைந்தால் தண்டத்தொகை வசூல் என்று கெடுபிடி செய்கிறது

எல்லா மக்களின் பணத்தையும் வங்கியை நோக்கி விரட்டியதற்குப் பிறகு, இப்போது உங்களுக்கு சொல்லாமலேயே உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிகளைப் பாதுகாப்போம்என்று மோடி அரசு அறிவிக்கிறது.

இதற்கு முன்னர், வாராக்கடனில் சிக்கியுள்ள அரசு வங்கிகளுக்கு இந்திய அரசின் நிதியிலிருந்து 2 இலட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் உயிர்ப்புத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நிலைப்படுத்தப்படும் வங்கிகளின் சேமிப்புத் தொகையிலிருந்து மேலும் மேலும் பெருமுதலாளிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இனி புதிதாக வாராக்கடன் குவிந்தால், இன்னொரு முறை அரசு நிதியிலிருந்து உயிர்ப்புத் தொகை தர முடியாது என்பதனால், ஏழை எளிய மக்கள் - உழைப்பாளர்கள் - ஓய்வூதியர்கள் போன்றவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு உறுதியான சேமிப்பு என்று கருதிக் கொண்டிருப்பதிலும் கைவைக்கிறார் மோடி!

இந்தியாவின் ஒட்டுமொத்த வாராக்கடனில் அரசு வங்கிகளின் வாராக்கடன்தான் 80 விழுக்காட்டிற்கு மேலாக உள்ளது. தனியார் வங்கிகள் கடன் திரும்ப வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு கொடுக்கும்போது, ஆட்சியாளர்களின் உயர்மட்ட அதிகாரிகளின் கையூட்டுத் தேவைகளுக்காக எந்த உறுதியுமற்று பெருமுதலாளிகளுக்கு சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடன் தொகை வாரி வழங்கப் பட்டிருக்கிறது. இதனால்தான் தனியார் வங்கிகளை விட, அரசு வங்கிகள் சிக்கலில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்பெருமுதலாளிகளின் வாராக்கடனை வசூலித்து வருங்காலத்தில் கடன் கொடுப்பதை முறைப்படுத்தினாலே போதும் எந்த சிக்கலும் வராது! ஆனால், மோடி அரசு மக்களை பலி கொடுத்து -  மக்களின் பணத்தை வழிப்பறி செய்து, பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்குவதிலேயே குறியாக இருக்கிறது. அதற்காகவே, எந்த சட்ட நெறிமுறைகளையும் மதிக்காமல் சர்வாதிகார ஆட்டம் போடுகிறது. இந்தப் போக்கை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு வழியாகத் தான், நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு சட்டத்தைக் கொண்டு வருகிறது!

அமெரிக்க வல்லரசும் பிற மேற்குலக நாடுகளும் 2008 நிதி மூலதன நெருக்கடியிலிருந்து திவாலான லேமென் பிரதர்ஸ், கோல்டுமேன் சாக் போன்ற வங்கிகளைப் பாதுகாப்பதற்கு அரசின் கருவூலத்திலிருந்து கண்ணை மூடிக் கொண்டு, நிதியை வாரி வழங்கி அந்த வங்கிகளைத் தூக்கி நிறுத்தின.

பல இலட்சம் கோடி டாலர் நிதியை விழுங்கிய அந்த வங்கிகளை வீழ்வதற்கு விட முடியாதவை’’ (Too big to fail) என அமெரிக்க அரசு வகைப்படுத்தி, தன் செயலை ஞாயப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதலில் 2013இல் சைப்ரஸ் நாடு, வீழ்ச்சியிலிருந்து தனது வங்கிகளைப் பாதுகாக்க வாடிக்கையாளரின் சேமிப்புத் தொகையிலிருந்து 50 விழுக்காடு வரை எடுத்துக் கொண்டு, வங்கிகளைக் காப்பாற்ற முயன்றது. அதே வழியை இந்தியாவிலும் பின்பற்றலாம் என்று மோடி அரசுக்கு அமெரிக்கா, பிரான்சு, சீனா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20’’ கூட்டமைப்பு 2014 லிலேயே அறிவுரை வழங்கியது.

இந்த அடிப்படையிலேயே மோடி அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவருகிறது.

அரசு வங்கிகளை தனியாருக்கு மொத்தமாகக் கொடுத்து விடுவது என்ற சதி நோக்கமும் இதிலுள்ளது! இதற்காகவே, இந்திய அரசு வங்கி (ஸ்டேட் வங்கி) சட்டத்தைக் கைவிட்டு, அந்த வங்கியையும் தனியாருக்கு வழங்கலாம் என்ற ஏற்பாட்டை இந்த புதிய சட்டத்தின் வழியாக மோடி அரசு செய்கிறது. 

இதற்காக எந்த சட்டக் குறுக்கீட்டிற்கும் மக்கள் கண்காணிப்பிற்கும் நாடாளுமன்ற விவாதத்திற்கும் அப்பாற்பட்ட தீர்வுக்கழகத்தை உருவாக்கி, அதன் கையில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைக்கத் திட்டமிடுகிறது.

வருங்காலத்திற்குத் தேவையான சேமிப்பைத் திருடர் அச்சமின்றி கையிலும் வைத்திருக்க முடியாது, ஓரளவுக்கு மேல் தங்கமாகவும் வைக்க முடியாது, வங்கிகளையும் நம்பி சேமிக்க முடியாது என்றால் பெரும்பான்மை மக்களை பொருளியல் நடவடிக்கைகளிலிருந்தே முடக்கி வைப்பது என்றாகும்!

எனவே, முதலாளிகளின் கைத்தடி - முரட்டு மூடர் பாசிஸ்ட் மோடியின் இச்சட்டத்தை மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு நின்று முறியடித்தே ஆக வேண்டும்!

(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 டிசம்பர் 16 - 31 இதழில் வெளியானது).



0 கருத்துகள்:

இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன் செல்ல வேண்டும்!

கட்டலோனியா, குர்திஸ் தான்_-அடுத்து ஈழம்?’’ என்ற தலைப்பில், இளந்தமிழகம் இயக்கம் சார்பில், 25.11.2017 காலை, சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, “விசை’’ இணைய இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் தோழர் அ.மு. செய்யது தலைமை தாங்கினார். 

இளந்தமிழகம் இயக்கத் தோழர்கள் வசுமதி, சரவணக்குமார், வினோத் களிகை, பட்டு ராசா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி, சென்னைப் பல்கலைக் கழக அரசியல்துறைத் தலைவர் பேராசிரியர் இரா மு.மணிவண்ணன், ஊடகவியலாளர் தோழர் ஆழிசெந்தில்நாதன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பட்டுராசன் காந்தி, தமிழ்நாடு மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் இளையராசா ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களது உரையின் எழுத்து வடிவம் :

கட்டலோனியா, குர்திஸ்தான் - அடுத்து ஈழம்?’’ என்ற தலைப்பில், முகாமையான பொருளில், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள தோழர்களுக்கு முதலில் எனது நன்றியையும்,  பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இனப்போராட்டங்கள் குறித்து நாம் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, இதுபோன்ற கருத்தரங்குகள் பயன்படவேண்டும்.

பொதுவாக நாம், “கருத்து வாக்கெடுப்பு’’ என்றும், “பொது வாக்கெடுப்பு’’ என்றும் மாறிமாறிப் பயன்படுத்துகிறோம். இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு! பொது மக்கள் பங்கெடுக்கும் வாக்கெடுப்புதான் என்றாலும், ஒரு குறிப்பிட்ட அரசியல் நிலைப்பாட்டின் மீது நடக்கும் வாக்கெடுப்பு என்பதால், குறிப்பாக தேசிய இறையாண்மை குறித்தது என்பதால் நாம் இதனை கருத்து வாக்கெடுப்பு’’ (Plebiscite) என்றே கூற வேண்டும். பொது வாக்கெடுப்பு’’ எனக் கூறக்கூடாது என்பது எனது கருத்து!

அவ்வகையில், குர்திஸ்தான் - கட்டலோனியாவில் தங்கள் விடுதலையை முன்னிறுத்தி நடத்திய கருத்து வாக்கெடுப்புகளை நாம் ஆதரிக்கிறோம். கட்டலோனியா, குர்திஸ்தான் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை, தமிழ்ச்சூழலுக்கு எப்படிப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் நாம் சிந்திக்க வேண்டும்.

நம் எல்லோருக்கும்,  தமிழீழ விடுதலை என்ற நோக்கத்தில் பொதுக் கருத்தும், அக்கறையும் இருக்கிறது. தமிழீழத்தில் ஒரு மாபெரும் இன அழிப்பு நடந்த நிலையில், அந்த அக்கறை நம்மிடத்தில் கூடுதலாகவும் உள்ளது. ஆனால், அதனை சாத்தியப்படுத்துவதற்கான அணுகுமுறையில் நம்மிடையே வேறுபாடுகள் உள்ளன.

ஐ.நா.வின் சட்டங்கள் - பிரகடனங்கள் போன்றவற்றில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்துக் கொண்டு என்றைக்குமே வல்லரசு நாடுகள் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டத்திற்கு தானே முன்வந்து ஆதரவு  தெரிவித்த வரலாறு கிடையாது! வரலாற்று நிர் பந்தங்களின் அடிப்படையிலேயே அவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதுவும் அவர்களது நாட்டு நலன்களை அல்லது அவர்களது ஆதிக்கத் தேவைகளுக்கு இசைவாக இருக்கும் போதுதான் ஆதரிக்கிறார்கள்.

பொதுவுடைமை சித்தாந்தத்தை முன்வைத்து ஆட்சி செய்த சோவியத் - சீனா போன்ற நாடுகள், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, தேச விடுதலைப் போராட்டங்களுக்கு துணையாக நின்றது உண்மை தான்! ஆனால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளதையும் பார்க்கிறோம்.

மாபெரும் தலைவர் மாசேதுங் உயிரோடு இருந்த காலத்தில்தான், சீனா - திபெத் தேசிய இனத்தாயகத்தை ஆக்கிரமித்தது.

தேசிய இனங்களுக்கு பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை அளித்து - உலகிற்கே முன்னெடுத்துக்காட்டாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை, சோவியத் ஒன்றியம் வைத்திருந்தது. அந்த உரிமையைக் கொண்டு பின்லாந்து நாடு பிரிந்து போவதை தலைவர் லெனின் ஏற்றுக் கொண்டு, தனி நாடு அமைத்துக்கொள்ள வழிவிட்டார்.

இங்குதான் நாம் சோவியத் ரசியாஎன்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், அவர்கள் சட்டப்படி சோவியத் ஒன்றியம்என்றுதான் சொன்னார்களே ஒழிய, நாட்டின் பெயரில் இரசியஅடையாளம் வெளிப்படையாகவராமல் தான் பார்த்துக்கொண்டார்கள்.

ஆனால், ஏட்டளவில் உரிமைகள் இருந்தாலும், நடைமுறையில் சோவியத் நாட்டில், இரசிய மொழி - இரசிய இன ஆதிக்கம் மேலோங்கியது. லெனின் காலந்தொட்டு, அங்கு இரசிய மேலாதிக்கத்திற்காக நடந்த அத்துமீறல்கள் குறித்து உக்ரேனியக் கம்யூனிஸ்ட்டுகள் இப்போது எழுதுகிறார்கள். லாட்வியக் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படுத்துகிறார்கள். சோவியத் ஒன்றியம் சிதறிப் போனதில், இரசிய மேலாதிக்கத்திற்கு முகாமையான பங்குண்டு!

லெனின் பிரிந்து போகும் உரிமையை ஆதரித்தாலும், தேச அரசு அமைத்துக் கொள்வதை நிபந்தனையற்று ஏற்கவில்லை. தேசியத் தன்னுரிமையை மணமுறிவு (விவாகரத்து உரிமைக்கு) இணையானதாகக் கூறினார். அதாவது பல தேசங்கள் சேர்ந்து இருப்பது குடும்பமாக வாழ்வது போல் இயல்பானது; பிரிந்து சென்று தேச அரசு அமைப்பது விவாகரத்து போல விதிவிலக்கானது என்பதுதான் லெனின் கோட்பாடு!

ஐ.நா.வின் உரிமைப் பிரகடனத்தின் உறுப்பு 1 (2) இல், எல்லா தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை உண்டு என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்கு முரணாக அடுத்த பகுதியிலேயே, உறுப்பு நாடுகளின் இறை யாண்மையை -பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரண்டு பிரிவுகளையும் தேவைக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக வல்லரசு நாடுகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எப்போதுமே தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது, எதிர்நிலையான இந்த சர்வதேச சூழலில் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டுதான் முன்னேறுகிறது! வரலாற்றுத் தேவைகளைக் கருதி, வல்லரசுகள்கூட தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சூழல் வரலாம். ஒரு ஏகாதிபத்திய வல்லரசு நாடு ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல் இருக்கக் கூடாது என்று லெனின் சொன்னார்.

அதுபோல், வட அமெரிக்கா ஆதரிக்கிறது என்பதற்காக ஒரு விடுதலைப் போராட்டத்தை, “அமெரிக்கக்கையாட்களின் போராட்டம்என்று முத்திரை குத்திவிட முடியாது. குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் அதுதான்!

ஈராக், துருக்கி போன்ற பல நாடுகளிடையே குர்து இன மக்கள் சிதறிக் கிடக்கின்றனர். துருக்கியில் ஒசலான் தலைமையில் பி.கே.கே. என்ற கம்யூனிஸ்ட்டு தொழிலாளர் கட்சி தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பல்லாண்டுகளாக - பல ஒடுக்குமுறைகளை  எதிர்த்து முன்னேறிக் கொண்டுச் சென்றுள்ளது. ஒசலான் வாழ்நாள் சிறையாளியாக துருக்கியில் அடைக்கப்பட் டுள்ளார்.

1988இல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு, குர்து மக்களை இனப் படுகொலை செய்து, தொகை தொகையாகக் கொன்ற போது குர்து மக்களின் விடுதலைத் தாகம் பெருமளவில் பேசப்பட்டது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, குர்திஸ்தான் விடுதலை இயக்கத்தினர் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு மாகாண அரசு ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழலாக அதை அமைத்துக் கொண்டார்கள்.

அதன் தலைவர் பர்சானி அப்போதே சொன்னார். எங்களுக்குச் சாதகமான சூழல் வரும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு இந்த மாகாண அரசைப் பயன்படுத்திக் கொள்வோம்’’ என்றார். அதைத்தான் இப்போது 25.09.2017இல் கருத்து வாக்கெடுப்பு நடத்தி - தங்கள் விடுதலைக் கோரிக்கையை உலகறியச் செய்துள்ளனர். 

விடுதலைக் கோரிக்கைக்காக ஆயுதம் தூக்கினால் அதை பயங்கரவாதம் என்கிறாயே, இதோ அங்கீகரிக்கப்பட்ட அரசைக் கொண்டு - சனநாயக வடிவி லேயே எங்கள் விடுதலைக் கோரிக்கையை - மக்கள் கருத்தாக நாங்கள் முன்வைக்கிறோம் என்று குர்து மக்களும், கட்டலோனிய மக்களும் தெரிவித்துள்ளார்கள்.

செர்மனி மேலாதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம், கொசோவா விடுதலையை ஆதரிக்கிறது,  ஆனால்,  கட்டலோனியா விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதுபோல்தான் பல வல்லரசுகளும்!

இதே சூழலில்தான், கனடாவில் கியூபெக் மாகாணத்திலும், ஐக்கிய முடியரசான பிரிட்டனில்  ஸ்காட்லாந்திலும் கருத்து வாக்கெடுப்புகள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. எந்த வல்லரசும் அதை முன்வைக்கவில்லை. அங்கிருக்கும் சனநாயக வளர்ச்சிக் கேற்ப, அதை அங்குள்ள பிரிட்டன் அரசும், கனடா அரசும்தான் நடத்தியது.

பல தேசிய இனங்கள் வாழக்கூடிய நாட்டில் கூட்டாட்சி(Federation Ü™ô¶ Confederation) என்பது தோற்றுப்போன ஒரு கோட்பாடு! கூடுதல் உரிமைகள் பெற்றெல்லாம் ஒரு தேசிய இனம் கூட்டாட்சியில் நிலைத்துவிட முடியாது! கூடுதல் அதிகாரத்தை நோக்கிப் போவதே இயல்பாக நடப்பதில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் வலுவாகும் இடங்களில் அவற்றின் அழுத்தத்தில் அவற்றை எதிர்கொள்ள சில இடங்களில் நடக்கலாம்.

சோவியத் ஒன்றியத்தைவிட, தேசிய இனங்களுக்கு உரிமை வழங்கிய ஒரு அரசமைப்புச் சட்டம் உலகில் எங்காவது உண்டா? ஆனால், நடைமுறையில் இரசிய மொழி இன மேலாதிக்கம்தான் அங்கு நடந்தது. ஒரே கட்சி, ஒரே சித்தாந்தம் என்ற வழியில் அது நடந்தது. வட அமெரிக்காவில் பெரும்பாலும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களின் ஆங்கிலோ சாக்சன் மொழியினரின் கூட்டாட்சியாக அது இருந்தாலும் கூட, அங்கும் முரண்பாடுகள் வெடிக்கின்றன. கலிபோர்னியாவில் தனி நாட்டுக் குரல் கேட்கிறது.  பல தேசிய இனங்களின் கூட்டாட்சி அரசில், ஏதாவதொரு தேசிய இனம் மேலாதிக்கம் செலுத்துவது இயல்பாக உள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி சன்னி பிரிவு முஸ்லீம்கள் ஆட்சியாகத்தான் நடந்தது. குர்திஸ் தானில், சன்னி இசுலாமியப் பிரிவினரே பெரும் பான்மையாக உள்ளனர். கட்டலோனியாவில் ரோமன் கிருத்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஸ்பெயினிலும் அவ்வாறே! இருப்பினும், அங்கெல்லாம் மதத்தைத் தாண்டி மொழி வழி தேசிய இனப் போராட்டம் நடக்கிறது. பண்பாட்டுக் கூறாக மதம் இருக்கலாமே தவிர, மொழி - தாயகம் தான் தேசிய இனத்தின் அடித்தளமாக இருக்கின்றன. இவையே விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாக உள்ளன. சில அரிதான சூழல்களில், நாகாலாந்து போன்ற இடங்களில் பல மொழி பேசுபவர்கள் வரலாற்றுத் தாயகம் என்ற அடிப்படையில், ஒரு தேசிய இனமாக ஒருங்கிணைந்து கொண்டு, தங்களுக்கான தேச அரசை அமைத்துக் கொள்ளப் போராடுவதும் நடக்கிறது. இது சராசரிப் போக்கல்ல!

தமிழீழத்தில் இன்றைக்குள்ள நிலையில், விடுதலைக் கோரிக்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில் அங்கு அமைப்புரீதியான சில குழப்பங்கள் உண்டு!

தமிழீழத்தில், தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேச அரசை நிறுவி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரசையும், தமிழீழ மக்களையும் சிங்கள பௌத்த இனவெறி அரசு பல நாடுகளின் பங்களிப்போடு போர் நடத்தி - இரத்தக்களரியில் அழித்தொழித்தது.

எனவே, பன்னாட்டுச் சமூகம்தான் ஐ.நா. வழியே அந்த அரசை மீட்டெடுத்துத் தர வேண்டும்! அதற்கான கருத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். அதற்குமுன், நமக்கு சில புரிதல்கள் வேண்டும்.

இந்தியாவின் அனுசரணையோடு - இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்தவே முடியாது என்ற அடிப்படைப் புரிதல் நமக்கு வேண்டும். எந்தவொரு அரசுக்கும் வர்க்கத்தன்மை இருப்பதைப் போல், அவற்றுக்கு ஒரு இனத்தன்மையும் இருக்கிறது. அவ்வாறு, இந்தியாவுக்கு ஒரு ஆரிய இனத்தன்மை இருக்கிறது. ஆரியக் கட்டமைப்பாக அது செயல்படுகிறது.

ஆண்டாண்டு காலமாக ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழினத்தை பகையாக நிறுத்தியே, இந்தியா பிறந்து வளர்ந்து நம்முன் நிற்கிறது என்ற புரிதல் நமக்கு அவசியமானது! 

உலகின் புவிசார் அரசியல் நிலைமைகள் அவ்வப் போது மாறலாம். சோவியத் - அமெரிக்கா என்ற இருமுனை உலகம் இருந்தபோது, உலக நிலைமைகள் வேறு! இன்றைக்கு, வட அமெரிக்கா தலைமையில் ஒருமுனை உலகம் வலிந்து திணிக்கப்படும் சூழலில், அதற்கு எதிராகப் பலமுனை உலகம் உருவாகி வரும் சூழல் வேறு! எனவே, புவிசார் அரசியல் நலன் என்பது தற்காலிகமானது!

இன்னொருபக்கம், சீன எதிர்ப்புக்காக இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லும் கருத்தாளர்கள் இருக்கின்றனர். இந்தியா ஒருபோதும் அவ்வாறு செய்யாது! தமிழினப் பகையோடுதான், இந்திய அரசு சீன எதிர்ப்பை முன்வைக்கும். அவ்வாறுதான் செயல் படுகிறது. தனது பிம்ஸ்டெக் (BIMSTEC) கூட்டமைப்பிலும், சாகர் மாலா திட்டத்திலும் சீனாவோடு கைகோக்கிறது. பன்னாட்டு உறவு வெறும் கருப்பு வெள்ளையாக இல்லை!

எனவே, இந்தியா - தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடுதான் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசியல் அணி வகுப்பை நாம் முன்வைக்க வேண்டும். 

தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த  வழக்கம்போல் சிங்கள அரசு எதிர்க்கும்! எனவே, அதற்கு ஆதரவாக வெளியில்தான் சூழல்களை உருவாக்க வேண்டும். அப்பணியில் நாம் ஈடுபட வேண்டும்.  

இன்றைக்கு, பல தடைகளைக் கடந்து தமிழீழத்தில் மாவீரர் நாள் எழுச்சியோடு கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில், மாவீரர் நாள் என்பது துக்கம் கொண்டாடும் நிகழ்வல்ல! நாங்கள் ஒரு தேசம்! இது எங்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் எதிரியால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாள்’’ என்று உலகிற்குத் தங்கள் விடுதலைக் கோரிக்கையை பறைசாற்றும் நிகழ்வு!

இவ்வாறான சூழலில், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த விரும்பினால், அதற்கு மிகப்பெரிய தடையாக இந்தியாதான் முன் நிற்கிறது!

நாமெல்லாம் நேசித்த கியூபா, வெனிசுவேலா போன்ற பல இடதுசாரி நாடுகள், இந்தியாவின் உதவி வேண்டும் என்பதற்காகத்தான், கேள்வி இல்லாமல் இந்தியா ஆதரித்த இலங்கையின் தமிழின அழிப்புப் போரை ஆதரித்தார்கள். இதில் முதலாளிய நாடு - பொதுவுடைமை நாடு என்ற சித்தாந்த வேறுபாடுகள் கிடையாது! 

இன்றைக்குள்ள உலகச் சூழலில், தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, வல்லரசுப் போட்டிகளுக்கு உள்ளே நுழைந்து நடத்தும் ஒரு காய் நகர்த்தல் ஆகும்! வெறும் கொள்கை உறவோடு, ஞாயங்களின் அடிப் படையில் அது நடக்காது! மனித உரிமை ஆர்வலர்கள் இருப்பார்கள், மக்கள் இருப்பார்கள். ஆனால், அரசு என்பது ஒரு போதும் ஞாயத்தின் பக்கம் நிற்காது. தங்கள் அரசுக்கு அல்லது தங்கள் மண்டலத்திற்கு ஒரு நலன் இருக்கிறதென்றால், ஒரு தேச விடுதலைப் போரை ஆதரிக்கும் நிலை ஏற்படலாம்! 

இன்னொரு கருத்தை முன் வைக்கின்றனர். கட்டலோனியா மற்றும் குர்திஸ்தானில்மாகாண அரசுதான் கருத்து வாக்கெடுப்பை நடத்தியது. எனவே, இங்கேயும் தமிழ்நாட்டில்  முதலமைச்சர் பதவியைப் பிடித்த பிறகு அவ்வாறு கருத்து வாக்கெடுப்பு நடத்து வோம் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு வாய்ப் பில்லை!

ஒரு சாதாரண பஞ்சாயத்துத் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குக் கூட இந்திய ஒருமைப் பாட்டை - இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம்என்று ஒருவர் வாக்குறுதி அளித்தால் தான், இங்கு தேர்தலிலேயே நிற்கமுடியும்! இந்திய அரசமைப்புச் சட்டம், தேர்தல் முறை ஆகியவை அத்தகையவை! கருத்து வாக்கெடுப்பு என்று அறிவித்தால் அடுத்த நொடி தமிழ்நாட்டு ஆட்சியை இந்திய அரசு கலைத்துவிடும்!

அடைந்தால் திராவிட நாடுஎன முழங்கியவர்கள் கூட, ஏதோவொரு வடிவத்தில் விடுதலைக் கோரிக்கையை முன்வைத்தபோது, தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தி.மு.க.வுக்கு அப்போது கூடுதல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிடைத்தனர். ஆனால், இந்திய அரசு ஒரு தடைச்சட்டம் போட்டு அதை கைவிடச் செய்தது. 

தனிநாடு கேட்டவர்கள் ஆயிற்றே என தமிழ் நாட்டுக்குக் கூடுதல் உரிமைகள் எல்லாம் கொடுக்கப் படவில்லை. கூடுதலாக அதிகாரங்கள்தான் பறிக்கப் பட்டன. மாநில உரிமைகள் பல பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அவ்வாறுதான், தமிழ்நாட்டின் கல்வி உரிமைப் பறிக்கப்பட்டு இந்திய அரசால் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது.

இந்திய நாடாளுமன்றம்தான் தேசிய இன ஒடுக்குமுறையின் முதன்மைக் கருவியாக இருக்கிறது. சனநாயகம் என்ற போர்வையில் ஆரியமய இந்தி இனத்தின் ஆதிக்கம், ஆரிய வளையத்தில் வீழ்ந்துபோன பிற இனங்களின் துணையோடு நடக்கிறது. நாடாளுமன்றப் பெரும்பான்மை என்பது அதுதான்!

எல்லா வகையிலும் அதிகாரத்தைமையப்படுத்துவதென்பது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல! சமற்கிருத இந்தி மொழித் திணிப்பும், மாநில உரிமைகள் பறிப்பும் ஆரிய இன மேலாதிக்கத்திற்காக நடக்கின்றன. மோடி இதில் வேகமாக உள்ளார் என்றால், காங்கிரசு அதில் கொஞ்சம் பதமாக நடக்கிறது. அடிப்படையில் இருவருக்கும் வேறுபாடில்லை!

சிலர், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று கூறுகின்றனர். அது உயர்ந்த இலட்சியம்தான் என்றாலும், அதற்கு உடனடி வாய்ப்பில்லை! 

எனவே, முதல் கட்டமாக ஒத்த தேசிய இனங்கள் என்ற வகையில் தமிழர்கள் தங்கள் இறையாண்மை இலட்சிய அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். தமிழர்களின் தேசியத் தாயகங்களான தமிழீழமும் தமிழ்நாடும் தமிழர் சர்வதேசியம்என்ற வகையில்,   பொதுப் புரிதலோடு ஒத்திசைய வேண்டும்.

அதன் வழியிலேயே,  தமிழீழத்துக்கான கருத்து வாக்கெடுப்பு நோக்கி நாம் நகர முடியும்! தமிழீழம் இன்றைக்கு எலும்புக்கூடாக இருக்கலாம்! சாம்பல் மேடாக இருக்கலாம். ஆனால், நாளை எழும்! சாம்பலிலிருந்து மீண்டும் எழும்! மாவீரர்களின் ஈகம் வீண் போகாது! தமிழீழம் உறுதியாய் வெல்லும்!”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.



 .
(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 திசம்பர்1-15 இதழில் வெளியானது)


0 கருத்துகள்: