கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி: தீர்ப்பாக அரங்கேறிய சதி..!



ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி:

தீர்ப்பாக அரங்கேறிய சதி..!
தோழர் கி. வெங்கட்ராமன்,

பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடையை நீக்கி, அந்த ஆலை தொடர்ந்து இயங்கலாம் என்று பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு வியப்பு அளிக்கவில்லை. மாறாக சீற்றத்தை விளைவிக்கிறது. நீதிபதி ஆதர்ஸ் குமார் கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 15.12.2018 அன்று வழங்கிய இத்தீர்ப்பு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு , திட்டமிட்ட முறையில் அரங்கேறிய அநீதிதான்!

நீதிபதி தருண் அகர்வால் குழு அளித்த ஆய்வறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு மூன்று வாரத்திற்குள் வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய ஆணையை வழங்க வேண்டுமென்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டுமென்றும் பசுமைக் தீர்ப்பாயம் ஆணையிட்டது.

இந்த வழக்கு முகாமையாக 28.5.2018 அன்று தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பிறப்பித்த ஆணை மீதான வழக்கு தான். மாநில அரசு பிறப்பித்த ஆணையின் மீது வழக்கு நடத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என்று எதிர்த் தரப்பினர் முன்வைத்த முதல் நிலை வழக்கு குறித்து எதுவும் கூறாமலேயே தீர்ப்பாய நீதிபதி கோயல் தீர்ப்பு வழங்கியிருப்பது நீதி முறைமைக்கே எதிரானது! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைக்கப்பட்ட எந்தக் குற்றச்சாட்டையும் தீர்ப்பாயம் மறுக்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமம் அடுக்கடுக்கான விதி மீறல்கள் செய்து சுற்றுச்சூழலை நாசப்படுத்தி இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித வலுவான மறுப்பையும் இத்தீர்ப்பு கூறிவிடவில்லை. மாறாக, சூழலை நாசப்படுத்திய குற்றத்திற்காக ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம் இரண்டரை கோடி ரூபாய் தண்டத்தொகை (அபாரதம்) கட்டவேண்டும் என "ஆகப்பெரிய" தண்டனையையும் வழங்கியிருக்கிறது.

மக்களுக்கு கையூட்டு கொடுப்பது போல், தூத்துக்குடியில் நலத்திட்டங்கள் நிறைவேற்ற 100 கோடி ரூபாய் அளிக்க முன்வருவதாக வேதாந்தா குழுமம் கூறியதை கண்டிப்பதற்கு மாறாக அதையே தீர்ப்பாக கோயல் தீர்ப்பாயம் அறிவித்திருப்பது அருவருப்பானது.

இந்த நீதிபதி கோயல் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற அன்றே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக அமர்த்தப்பட்டது தற்செயலானது அல்ல. முன்கூட்டியே திட்டமிட்டு மோடி அரசு நிறைவேற்றிய சதித்திட்ட நகர்வு தான். சூழலுக்கும், மக்கள் வாழ்வுரிமைக்கும் எதிராக இயங்கும் நச்சுத் தொழில் நிறுவனங்களுக்கும், பேரழிவுத் திட்டங்களுக்கும் இனி தொடர்ந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்பதற்கான முதல் அறிவிப்பு தான் இந்த கோயல் தீர்ப்பு.

ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்ட நாளிலிருந்தே அடுத்தடுத்து விதிமீறலில் ஈடுபடுவதும், அரசின் வலுவற்ற தடையாணைகளை தனது பண வலிமையால், அதிகார மையத்தின் நெருக்கத்தால் அடுத்தடுத்து முறியடித்து தனது பேரழிவுக் கொள்ளையை தொடர்ந்ததுதான் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் வரலாறாகும்.

1994இல் மன்னார் வளைகுடாவிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் அப்பால் தான் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டுமென்று நிபந்தனை விதித்து தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவ்வாலையை நிறுவிக் கொள்ள தடையில்லாச் சான்று அளித்தது. இந்த நிபந்தனையை மீறித்தான் இந்த ஆலையே நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விதிமீறல்களை இவ்வாலை மேற்கொள்ளும் போதெல்லாம் மக்களின் எதிர்ப்பும், அதன் மீதான ஆய்வும், மேம்போக்கான தடையாணைகளும் அதன் மீதான வழக்குகளும், இவ்வழக்குகளில் குறுக்கு வழியில் வேதாந்தா குழுமம் வெற்றி பெறுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் விதிமீறல் வரலாற்றை உற்று நோக்கினால் 1994, 1998, 2004, 2008, 2010, 2013 என ஒவ்வொரு ஆண்டும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதும், அவை மீறப்பட்டதும், அவை குறித்த வழக்குகளில் அவ்வப்போது தண்டத்தொகை கட்டிவிட்டு தொடர்ந்து பேரழிவைத் தொடர்வதும் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். 

இப்போதைய தீர்ப்பிலும் அதுதான் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசின் வலுவற்ற தடையாணைகள் நீதிமன்றத்தால் நீக்கப்படுவது நிகழ்ந்து வருகிறது. இறுதியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் முடிவு 28.5.2018 அன்று வெறும் அரசாணையாக அறிவிக்கப்பட்டதானது தீர்ப்பாயத்தின் அநீதியான தீர்ப்பிற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. 

இப்போதாவது தமிழ்நாடு அரசு உயர் வெப்பத்தில் செம்புத்தாதுகளை உருக்கும் தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் தாமிர ஆலைகளை தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வகையில் சிறப்பு அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும்!

அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் செய்து தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் தொழில்நுட்பத்தையும் அபாயகரமானவை எனப் பட்டியலிட்டுத் தடை செய்ய வேண்டும். இந்திய அரசு உயர் வெப்பத்தில் உருக்கும் தாமிர ஆலைகளைத் தடை செய்து தனிச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான விழிப்புணர்வும், போராட்டமும் தூத்துக்குடி மாவட்டத்தோடு நிற்காமல், தமிழ்நாடு முழுவதும் மக்கள் பங்கு பெறும் போராட்டமாக விரிவடைய வேண்டும். எக்காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கக் கூடாது!

0 கருத்துகள்:

கணினித் தகவல்களுக்குத் தண்டனையா? இந்திய அரசின் ஆணையைக் கண்டிக்கிறேன்!



கணினித் தகவல்களுக்குத் தண்டனையா?

இந்திய அரசின் ஆணையைக் கண்டிக்கிறேன்! 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று (20.12.2018) இரவு பிறப்பித்த அரசாணை, ஒட்டுமொத்த இந்திய மக்களையும், அவர்களது கணினி வழித் தொடர்புகள் அனைத்தையும் குற்றச்செயல் போல் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வந்து விட்டது.

இந்திய அரசின் உளவு ஆணையம் (ஐ.பி. – IB), நடுவண் புலனாய்வுக் குழு, தேசியப் புலனாய்வு அமைப்பு, ரா (RAW), தில்லி காவல்துறை ஆணையம் உள்ளிட்ட பத்து புலனாய்வு நிறுவனங்களுக்கு இந்த பணிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. 

முகநூல் செயலி, ட்விட்டர், மின்னஞ்சல் உள்ளிட்ட கணினிவழித் தகவல் தொடர்புகள் அனைத்தும் இந்திய அரசின் உளவு நிறுவனங்களின் கண்காணிப்புக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படுவதாக இந்த உள்துறை ஆணை அறிவிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 (1)-இன் கீழ் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதாக இந்திய அரசு கூறுகிறது. 

சமூக வலைத்தளம் உள்ளிட்டு கணினி வழியாகத் தகவல் பரிமாற்றம் செய்து கொள்பவர்கள், தகவல் தளங்கள் உள்ளிட்ட அனைவரும் மேற்சொன்ன உளவு அமைப்பினர் கேட்கும்போதெல்லாம் தங்களது கணினித் தகவல்களை திறந்து காட்டவேண்டும். தொழில்நுட்ப வகையில் இந்நிறுவனங்கள் கேட்கும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். தவறுபவர்கள் ஏழாண்டு வரை சிறைத் தண்டனை பெறுவார்கள் என்று இந்த ஆணை கூறுகிறது. 

சமூக செயல்பாட்டாளர்களும், தேர்தல்அரசியலுக்கு வெளியே உள்ள மக்கள் இயக்கங்களும் மோடி அரசுக்கு எதிராக செய்து கொள்ளும் தகவல் பரிமாற்றங்களை - கருத்து உரையாடல்களை “இந்திய பாதுகாப்பிற்கு எதிரானது” அல்லது “பொது அமைதிக்கு இடையுறு செய்வது” அல்லது “பிற குற்றச்செயல்களை தூண்டக்கூடியது” என்று இந்திய உளவு அமைப்பினர் ஐயப்பட்டால் யாரையும் கைது செய்யலாம் என்ற வரம்பற்ற அதிகாரம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவோ, நியூட்ரினோ ஆய்வகம், எட்டு வழிச் சாலை போன்றவற்றிலோ, மோடி அரசின் மக்கள் பகை கொள்கைகளை எதிர்த்தோ கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வோர் அனைவரும் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டு தண்டனைக்குரிய குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர்.

அவசர நிலையை அறிவிக்காமலேயே ஒட்டுமொத்த கருத்துரிமையைப் பறிக்கும் இந்திய உள்துறை அமைச்சக ஆணையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

அரசமைப்புச் சட்டத்திற்கும், தனியுரிமை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரான இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்துகிறேன். 

0 கருத்துகள்:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும்!


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட 

தமிழ்நாடு அரசு அமைச்சரவையைக் கூட்டி 
கொள்கை முடிவெடுக்க வேண்டும்! 

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


“முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்ற வகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு எதிரான பசுமைத் தீர்ப்பாய வழக்கு நடந்து வருகிறது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் காப்பர் குறித்த மூன்று வழக்குகள் விசாரணையில் இருந்தாலும், 28.05.2018 அன்று தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு பிறப்பித்த ஆணை குறித்த வழக்குதான் முகாமையானது.
இதுகுறித்து, அனைத்துத் தரப்பினரிடமும் நேரடி விசாரணை நடத்தி பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பதற்கு வல்லுநர் குழுவை அமர்த்த தீர்ப்பாயம் முடிவு செய்தபோது, ஓய்வுபெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் அல்லது சந்துரு தலைமையில் இக்குழுவை அமைக்கலாம் என்ற கருத்து வந்தபோது, வேதாந்தா ஸ்டெர்லைட் தரப்பு தமிழர்கள் அனைவரும் தமக்கு எதிராகக் கருத்து சொல்வார்கள் என்று எதிர்ப்புத் தெரிவித்தது.
பசுமைத் தீர்ப்பாயமோ, இதை ஏற்றுக் கொண்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் வல்லுநர் குழுவை அமைத்தது. அப்போதே தமிழர்களுக்கு நீதி கிடைக்காதோ என்ற ஐயம் எழுந்துவிட்டது!
தருண் அகர்வால் குழு தனது விசாரணை அறிக்கையை சீலிட்ட உறையில் தீர்ப்பாயத்தில் வழங்கியது. அதன் முகாமையான முடிவுகளை 28.11.2018 அன்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி தருண் அகர்வால் திறந்த நீதிமன்றத்தில் படித்தார். ஆனால், இந்த அறிக்கையின் நகல்களை எதிர் மனுதாரர்களுக்கு தருவதற்கில்லை என்றும் அறிவித்தார். இது அடுத்த கோணல்!
அகர்வால் அறிக்கை, “ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழ்நாடு அரசு பிறப்பித்த ஆணை இயற்கை நீதிக்குப் புறம்பானது; ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு கூறியுள்ள காரணங்கள் வலுவானதாக இல்லை” என்று கூறியது.
மேலும், “ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் தொடர்பான நிபந்தனைகளையும் நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கத் தவறியதாக இருந்தாலும், அவை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குரிய காரணமாக அமைய முடியாது” என்றது. சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று பரிந்துரைத்தது. வழக்கு 2018 திசம்பர் 7ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இடையிட்டு மனுதாரர்களாக இணைந்த திரு. வைகோ, பேராசிரியர் பாத்திமாபாபு உள்ளிட்டோர் முதல்நிலை எதிர்ப்பாக இந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு தமிழ்நாடு அரசின் ஆணை மீதான மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டா என்ற அடிப்படை வினாவை தொடுத்திருந்தனர்.
தனது விசாரணை வரம்பில்தான் ஆலை மூடல் ஆணை வழக்கு வருகிறது என்பதை முதல் நிலையில் நிலைநாட்டாமல், தொடர்ந்த வழக்கை இத்தீர்ப்பாயம் விசாரிப்பதே நீதிமுறைமைக்கு எதிரானது! விசாரணைக் குழு அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்குத் தர முடியாது என்று வெளிப்படையாக அறிவிப்பது, அதைவிட நீதிமுறைமைக்குப் புறம்பானது!
பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு எப்படி அமையும் என்பதற்கான அபாய அறிவிப்பாகவே, விசாரணைக் குழுவின் அறிக்கையும், அதுகுறித்த தீர்ப்பாயத்தின் அணுகுமுறையும் அமைந்திருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை இன்னும் வலுவாக மேற்கொள்வதோடு, அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவெடுத்து, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்!
செம்பு தயாரிப்பதற்கு உயர் வெப்பத்தில் சால்க்கோசைட், சால்க்கோ பைரைட் போன்ற செம்புத் தாதுக்களை உருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஆலைகளை தடை செய்வது என்ற கொள்கை முடிவெடுத்து, சட்டம் இயற்றினால்தான் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வலுவான வாய்ப்பு ஏற்படும்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடைபிடிப்பது போன்ற உருக்குத் தொழில்நுட்பத்தை தடை செய்து ஐ.நா. ஏற்பாட்டில் உருவான மின்னாமாட்டா உடன்படிக்கையில் இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளது. இந்த மின்னாமாட்டா உடன்படிக்கை மாற்றுத் தொழில்நுட்பங்களைப் பரிந்துரைக்கிறது.
இந்திய அரசு தான் கையெழுத்திட்டுள்ள ஐ.நா. உடன்படிக்கையைப் பின்பற்றி, உயர் வெப்பத்தில் உருக்கும் தாமிர ஆலை தொழில்நுட்பத்தைத் தடை செய்து சட்டமியற்ற வேண்டும்!
பதிமூன்று உயிர்களை பலிகொடுத்த தமிழ்நாடு எக்காரணம் கொண்டும், ஸ்டெர்லைட் காப்பர் ஆலை திறப்பதை அனுமதிக்கவே கூடாது!

0 கருத்துகள்:

கசா” புயலால் ஏழு மாவட்டங்கள் தரைமட்டம்! தமிழ்நாடு அரசு வழங்குவது கண்துடைப்பு நிவாரணம் முழு இழப்பீடு வழங்க வேண்டும்!



கசா” புயலால் ஏழு மாவட்டங்கள் தரைமட்டம்!
தமிழ்நாடு அரசு வழங்குவது கண்துடைப்பு நிவாரணம்
முழு இழப்பீடு வழங்க வேண்டும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

“கசா” புயலால் பாதிப்படைந்துள்ள திருவாரூர் – நாகை மாவட்டப் பகுதிகளுக்கு நேற்று (20.11.2018), நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் தை. செயபால், தோழர் எல்லாளன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா ஆகியோரும் நேரில் சென்றோம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம் – தண்டலச்சேரி, கண்ணந்தங்குடி, வேளூர், திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும், தகட்டூர், வாய்மேடு, ஆயக்காரன்புலம் 1, 2, 3, கருப்பம்புலம், நெய்விளக்கு, வேதாரணியம் நகரம், கடினல்வயல் – உப்பளப் பகுதிகள் வரை சென்று பார்வையிட்டோம்.    
                             
“கசா” புயலால் திருத்துறைப்பூண்டி – வேதாரணியம் பகுதிகள், யாரும் கற்பனை செய்திட முடியாத பேரழிவில் சிக்கியுள்ளன. புயல் தாக்கிய ஏழு மாவட்டங்களிலும் இதேபோல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  

பெருமழை - வெள்ளம் ஆகிய பாதிப்புக்கும், இந்தப் புயலின் பாதிப்புக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. பெருமழை – வெள்ளம் ஆகியவை உற்பத்திப் பொருட்களையும், மக்களின் உடனடி தேவைப் பொருட்களையும் அழிப்பதே அடிப்படையான சிக்கலாகும். ஆனால், இந்த “கசா” புயல் அது பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்தையும் சமூகத்தின் பொதுக் கட்டமைப்புகளையும் தகர்த்து – வீழ்த்தியிருக்கிறது!

எனவே, நாகை – திருவாரூர் – தஞ்சை – புதுக்கோட்டை – இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உடனடியான துயர் நீக்கப் பணிகளும் தேவைப்படுகின்றன. அதைத் தொடர்ந்து அடிப்படைக் கட்டமைப்புகளையும் வாழ்வாதாரங்களையும் மீட்டுக் கொடுப்பதற்கான தேவையும் இருக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு “கசா” புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை “பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக” அறிவித்து, அதற்குரிய மீட்பு அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக அம்மக்களுக்கு இடர்நீக்க முகாம்கள் அமைப்பது, உணவு – குடிநீர் வழங்குவது போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்நடவடிக்கைகள் அதன் தேவைக்கேற்ப நடத்தப்படாமல், ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு உடனடியான ஒரு மாதக் காலத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், உடை, கொசுவத்தி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை வழங்க வேண்டும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில், கால்நடைகளும், பறவைகளும் கடல் வாழ் உயிரினங்களும் கரையில் வீசப்பட்டு அவை அழுகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, நோய் பரவாமல் தடுப்பதற்கு, சுற்றுச்சூழலை தூய்மைப் படுத்துவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்றவற்றை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து, “கசா” புயல் பேரிடரில் சிக்கியுள்ள உழவர்கள், சிறு வணிகர்கள், தொழில் முனைவோர், மீனவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்வுத் தொழிலையும், இவ்வளவு நாள் பாடுபட்டு வளர்த்த மரப் பயிர்கள், கால்நடைகள், படகுகள் போன்ற தொழில் ஆதாரங்கள், வணிக நிறுவனக் கட்டடங்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர். நெற்பயிர்கள் சீறும் காற்றால் கிழிக்கப்பட்டதால், நைந்து போனப் பயிர்கள் அரிசிப் பிடிக்கும் ஆற்றல் இழந்து வெறும் பச்சை நிறத்தில் மட்டும் நிற்கின்றன. அவற்றிலிருந்து விளைச்சல் எதுவும் வராது.

எனவே, இந்த இழப்புகளை ஈடு செய்து அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வுத் தொழிலையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால், இம்மாவட்ட மக்கள் மீள முடியாத பொருளியல் இழப்புக்கு ஆளாவார்கள்.

எனவே, தமிழ்நாடு அரசு, “துயர் துடைப்பு நிதி வழங்குவது” என்ற வழக்கமான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாற வேண்டும். இழப்பை ஈடு செய்யவும், தங்கள் வாழ்வாதாரத்தை மீள் கட்டமைப்பு செய்து கொள்ளவும், உரிய இழப்பீடு வழங்கியாக வேண்டும்.

தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள “நிவாரணத் தொகை அறிவிப்பு” வழமையான அணுகுமுறையாகும். இது இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கவோ, அடிப்படைக் கட்டமைப்புகளை மீட்கவோ பயன்படாது.

தமிழ்நாடு அரசு, தென்னை மரத்துக்கு 1100 ரூபாயும், நெற்பயிர் ஏக்கருக்கு 13,500 ரூபாயும், சேதமடைந்த படகுகளுக்கு 42,000 ரூபாயும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களின் இழப்பை மீட்டெடுக்கத் தேவையான தொகையில் 10 விழுக்காடுகூட இல்லை!

எடுத்துக்காட்டாக, தற்போது சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்கு தென்னை மரங்களை இழக்கும் உழவர்களுக்கு மரத்திற்கு 12,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை நிலம் எடுப்பு சிக்கல் எழுந்ததையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு தென்னை மரத்திற்கும் உரிமையாளர்களுக்கு 40,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்தார். வீழ்ந்துள்ள தென்னை மரத்தை பயிர் செய்வதற்கு செய்யப்பட்ட செலவு, அது வாழும் காலம் முழுவதற்கும் உழவர்களுக்கு அதனால் கிடைக்கும் விளைச்சல், அவற்றை மறு உருவாக்கம் செய்யத் தேவையான தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொள்வதாகச் சொல்லித்தான் இந்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்தார். அதுவே போதுமானதில்லை என்ற திறனாய்வு உண்டு!

வலை, படகுகள் போன்றவற்றை முற்றிலுமோ, பகுதியளவிலோ இழந்த மீனவர்கள், வணிக நிறுவனக் கட்டமைப்புகளை இழந்த வணிகர்கள், தொழில் முனைவோர் போன்றவர்களின் இழந்த வாழ்வாதாரங்களை மீட்க வேண்டுமானால், இப்போது அறிவித்துள்ள தொகை எந்த வகையிலும் பொருத்தமில்லாதது!

இவ்வளவு பேரழிவுக்குப் பிறகும், நடப்பு மாதத்திற்கும் வரும் மூன்று மாதங்களுக்கும் உள்ள மின் கட்டணத்தை முழுவதுமாகத் தள்ளுபடி செய்வது என்ற ஞாயமான அணுகுமுறைக்கு மாறாக, இந்த மாத அபராதக் கட்டணத்தை மட்டும் தள்ளுபடி செய்வதாக தமிழ்நாடு மின்சாரத்துறை அறிவித்திருப்பது பேரிழப்புக்கு ஆளான மக்களை கேலி செய்வது போல் உள்ளது.

அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை அணுகுமுறை மனிதநேயத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல, அறிவியல் கணக்கீடுகளுக்குப் பொருத்தமில்லாததும்கூட! இம்மக்கள் அரசுக்கு அளித்துவரும் வரி மற்றும் கட்டணங்களை கணக்கில் கொண்டால், இது அறிவியல் கணக்கீட்டிற்கு இது ஒவ்வாதது என்று தெரியவரும்.

எனவே, ஒரு தென்னை மரத்திற்கு ரூபாய் 50,000, நெற்பயிர் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 30,000, அதேபோல் சோளம், காய்கறி போன்ற பயிர்களுக்கான முழு இழப்பீடு வழங்க வேண்டும். வாழை, கரும்பு, பிற மரப்பயிர்கள் ஆகியவற்றுக்கும் மேற்சொன்ன கணக்கீட்டின் அடிப்படையில் முழு இழப்பீடு வழங்க வேண்டும்.

மீன்பிடி படகுகள், வலைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனக் கட்டமைப்புகள் போன்றவற்றிற்கு அவற்றின் முக மதிப்பில் குறைந்தது 75 விழுக்காட்டுத் தொகையாவது இழப்பீடாக வழங்க வேண்டும்.

மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கட்டமைப்புகள், சாலை சீரமைப்பு போன்றவற்றை “பேரிடர் பாதித்த பகுதிகள்” என்ற அவசர அணுகுமுறையோடு மீள் கட்டமைக்க வேண்டும். இவை அனைத்திற்கும் தேவையான நிதியில் 75 விழுக்காட்டை இந்திய அரசே வழங்க வேண்டும்.

இன்னொருபுறம், ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியபோது செய்ததுபோல், மக்கள் இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் உடனடி மீட்புப் பணிகளிலும், துயர் துடைப்புச் செயல்களிலும், குடியிருப்புகள், படகுகள் ஆகியவற்றை மறு கட்டமைப்பது போன்ற பணிகளிலும் அவரவர் வாய்ப்புக்கு ஏற்ப மேற்சொன்ன ஏழு மாவட்டங்களில் ஈடுபட வேண்டும்.

இந்திய அரசு, பேரிடர் மானியங்கள் வழங்கியும், அரசு வங்கிகள் வட்டியில்லாக் கடன்கள் வழங்கியும் இந்த மீள் கட்டமைப்புப் பணியில் துணை செய்ய வேண்டும். பேரிடர் மாவட்டங்களில் வேளாண்மை, வணிகம், மீன்பிடித் தொழில் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

உடனடியாகத் துயர் துடைப்புப் பணிகள் நடக்காத ஆவேசத்தில் பொது மக்கள் ஆங்காங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அமைதிப்படுத்தி, பணிகளை விரைவுபடுத்த வேண்டிய அரசு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், வீடு புகுந்து கைது செய்வதும் கண்டனத்திற்குரியது! எனவே, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசு, தனது அணுகுமுறையில் அடிப்படையான மாறுதல் செய்து கொண்டு செயல்படுவதும், மக்கள் இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மக்களுக்குத் துணை நிற்பதும்தான் “கசா” புயலால் தரைமட்டமாகியுள்ள மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்கப் பயன்படும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கம் – துயர் துடைப்புப் பணிகள்
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், “கசா” புயல் – துயர் துடைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. “தமிழர் கண்ணோட்டம் அறக்கட்டளை”யுடன் இணைந்து, இக்குழுக்கள் சார்பில், ஆங்காங்கு துயர் துடைப்பு உதவிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படும்.

துயர் துடைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கீழ்வரும் பேரியக்கச் செயல்பாட்டாளர்களையும், அலுவலக முகவரிகளையும் தொடர்பு கொண்டு, பொது மக்கள் துயர் நீக்கப் பணிகளுக்கான பொருட்களைக் கொடுத்து உதவலாம்.   

பகுதி
பொறுப்பாளர்
கைப்பேசி
சென்னை
முழுநிலவன்
9677229494
புதுச்சேரி
இராவேல்சாமி
9345495214
தருமபுரி
க. விஜயன்
9894424343
ஓசூர்
சுப்பிரமணியன்
7010104644
துரைமுருகன்
8682053401
வனமூர்த்தி
9600222529
கிருட்டிணகிரி
கனகராசு
8667819080
தஞ்சை
நா. வைகறை 
9443617757
பழ. இராசேந்திரன்
9486927540
இலெ. இராமசாமி
9942403641
மதுரை
இரெ. இராசு
9443393733
அருணா
9486638383
திருச்சி
மூ.த. கவித்துவன்
9443975784
போடி
சுப்பிரமணியன்
8270161674
குமாரபாளையம்
ஆறுமுகம்
9443350742
ஈரோடு
வெ. இளங்கோவன்
9994141416
கோவை
விளவை இராசேந்திரன்
8903219855
குடந்தை
விடுதலைச்சுடர்
9443704375
குரும்பூர்
மு. தமிழ்மணி
9444866892

சென்னை
தமிழ்த்தேசியப் பேரியக்கம் – தலைமையகம்,
21, முதல் தெரு, முதல் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகர்,
சென்னை – 600 078. பேச – 044-24742911, 9677229494

திருச்சி
தோழர் மூ.த. கவித்துவன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம் – அலுவலகம், 116/8, எஸ்.வி.வி. வளாகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, திருச்சி – 1. பேச – 9443975784

தஞ்சை
தோழர் பழ. இராசேந்திரன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம் – அலுவலகம், 150, சமீன்தார் குடியிருப்பு,
புது ஆற்றுச்சாலை, தஞ்சாவூர் – 1. பேச – 9486927540

குடந்தை
தோழர் க. விடுதலைச்சுடர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம் – அலுவலகம், 71/42, தியாகி இராமசாமி தெரு,
குடந்தை – 612 001. பேச - 9443704375

புதுச்சேரி
தோழர் இரா. வேல்சாமி,
தமிழ்த்தேசியப் பேரியக்கம், 140, இரண்டாவது முதன்மைச் சாலை,
சப்தகிரி தங்க நகரம், புதுச்சேரி – 605 004. பேச - 7305566671

பணிகள் ஒருங்கிணைப்பு

துயர் துடைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பகுதிகள் குறித்து கள நிலவரத்தை அறிந்து கொள்ள பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தை. செயபால் அவர்களை 94433 21192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பேரியக்கத் தோழர்கள் தோழர் செயபால் மூலமாகத்தான் திருத்துறைப்பூண்டி, வேதாரணியம் பகுதிகளுக்கான துயர் துடைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நிதி அளிப்போருக்கு

நிதி அளிக்க முன்வருவோர் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் தொகை செலுத்திவிட்டு, அது குறித்தத் தகவலை tkannotam@gmail.comமின்னஞ்சல் வழியாகவோ, www.facebook.com/Tamizhdesiyam முகநூல் பக்கம் வழியாகவோ அல்லது 044 – 24742911, 9025162216, 9840848594 ஆகிய தொடர்பு எண்களின் வழியாகவோ தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். நிதி அளிப்போருக்கு,  பற்றுச்சீட்டும், பொதுச் செயலாளர் கையொப்பமிட்ட கடிதமும் அனுப்பி வைக்கப்படும். 

0 கருத்துகள்:

தொடரும் ஆணவக் கொலைகள் : ஓசூர் சாதி மறுப்பு இணையர் கொலையில் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!


தொடரும் ஆணவக் கொலைகள் :

ஓசூர் சாதி மறுப்பு இணையர்
கொலையில் காவல்துறை விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கிருட்டிணகிரியில் சாதி கடந்து காதல் திருமணம் செய்த இணையர்கள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அக்கொலையை “தாங்களே செய்தோம்” என பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் காவல்துறையிடம் சரணடைந்து உள்ளனர். 

கிருட்டிணகிரி மாவட்டம் - சூளகிரி அருகிலுள்ள சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர் நந்தீஷ் (அகவை 25) என்பவரும், அதே பகுதியில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுவாதி (அகவை 21) என்பவரும், கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். நந்தீஷ் ஐ.டி.ஐ. படிப்பை முடித்துவிட்டு, ஓசூர் பேருந்து நிலையம் அருகில் தனியார் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார். சுவாதி, ஓசூரில் மகளிர் கல்லூரி ஒன்றில் பி.காம். பயின்று வந்தார். 

இதனையடுத்து, நந்தீசின் தந்தை நாராயணப்பா சுவாதியின் இல்லத்திற்குச் சென்று முறைப்படி பெண் கேட்டபோது, சாதியைக் காரணம் காட்டி அதற்குக் கடுமையாக மறுத்துள்ளார் சுவாதியின் சந்தை சீனிவாசன். சுவாதியை கடுமையாகத் தாக்கி, வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 2018 ஆகத்து மாதம் வீட்டிலிருந்து வெளியேறிய சுவாதியும், நந்தீசும் சூளகிரி திம்மராயசாமி கோவிலில் 15.08.2018 அன்று திருமணம் செய்து கொண்டனர். 04.09.2018 அன்று, தங்கள் திருமணத்தை சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவும் செய்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, ஓசூரில் தனது அலுவலம் அருகிலேயே இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் குடியிருந்து வந்தனர். 

இந்நிலையில், கடந்த 2018 நவம்பர் 11ஆம் நாள், நந்தீசின் வீட்டிற்கு அவரது சகோதரர் சங்கர் சென்றபோது, நந்திஷ் - சுவாதி இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்களது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இதுகுறித்து ஓசூர் காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்தார். 

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் - மாண்டியா மாவட்டத்தின் சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் இரண்டு உடல்கள் கரை ஒதுங்கிக் கிடப்பது குறித்து காவல்துறைக்குக் தகவல் வந்தது. இரு உடல்களும் அடையாளம் காண முடியாத அளவுக்கு, ஆணின் உடல் நீரில் மூழ்கிய நிலையிலும், பெண்ணின் உடல் கயிற்றால் கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையிலும் மிகக் கோரமாகக் காட்சியளித்தது. 

இந்நிலையில், சுவாதியின் தந்தை சீனிவாசன், உறவினர்கள் - பெரியப்பா வெங்கடேசு மற்றும் கிருட்டிணன் ஆகியோர் கிருட்டிணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்து, தாங்களே தன் மகளையும் – அவரது கணவரையும் கொன்றதாகக் கூறினர். இதனையடுத்துதான், சிவசமுத்திரம் ஆற்றில் கிடந்த உடல்கள் நந்திஷ், சுவாதியின் உடல்கள் எனத் தெரியவந்தது. சுவாதி மூன்று மாதக் கர்ப்பிணி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கடத்தலுக்கு உதவிய மேலும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கடந்த நவம்பர் 11ஆம் நாளே, நந்தீஷின் தம்பி சங்கர் காவல்துறையிடம் புகார் அளித்த போது, சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் காவல்துறையிடம் கூறியுள்ளார். ஆனால், காவல்துறையினர் அது குறித்த விசாரிக்காமல் மெத்தனமாக இருந்ததும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய மறுத்திருப்பதும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நவம்பர் 13-ஆம் நாள் கர்நாடக ஆற்றில் நந்தீஷ் – சுவாதி உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், நவம்பர் 14-ஆம் நாள் ஓசூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த அக்டோபர் மாதம், சேலம் மாவட்டம் – ஆத்தூரில், தினேசுகுமார் என்ற சாதிவெறியன் ஒடுக்கப்பட்ட வகுப்பு சிறுமி இராசலட்சுமியை பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சித்து, அவரது தலையைத் துண்டித்து மிகக் கொடூரமாக படுகொலை செய்த நிகழ்வு ஏற்படுத்திய அதிர்ச்சி அகலுவதற்குள், இப்போது கிருட்டிணகிரியில் நடந்துள்ள சாதிவெறிப் படுகொலை நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. 

தருமபுரியில், இரமேசு – சதீசு ஆகிய இரு கயவர்கள் பழங்குடியின மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நிகழ்வின்போது, அது குறித்தப் புகாரையே வாங்க மறுத்தக் காவல்துறையினர், பெண்ணின் தந்தையிடம் கையூட்டு பெற்ற பிறகுதான் வழக்கேப் பதிவு செய்தனர். அதன்பிறகும், பாலியல் வன்கொமையை மறைக்க முயற்சித்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால், அப்பெண் உயிரிழந்த அவலமும் நடந்துள்ளது. 

அரசியல் - சமூகம் என அனைத்திலும் சாதியை வெறுத்து ஒதுக்கும் பொதுப் பண்பு வளர்ந்தால்தான், கணிசமான மக்களிடையே குடிகொண்டிருக்கும் சாதிவெறியை ஒழிக்க முடியும். இதுபோல், தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிவெறிக் கொடுமைகளை, காவல்துறையும், அரசும் மட்டுமின்றி, முதன்மையான கட்சிகளும் அலட்சியமாகக் கடப்பதென்பது, தேர்தல் கட்சிகளின் சாதி வாக்குவங்கி அரசியல் கணக்குகள் இவற்றின் பின் இருப்பதை உணர்த்துகின்றது. எனவே, இவற்றிலெல்லாம் மாறுதல்கள் வந்தாலொழிய, சாதிவெறிப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது! 

நந்தீஷ் – சுவாதி இணையரைக் கொலை செய்தோர் மீதும், அதற்கு உதவியோர் மீதும் தமிழகக் காவல்துறையினர், கொலை, கடத்தல் பிரிவுகளிலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உடனடியாகவும், தீவிரமாகவும் உரிய வேகத்தில் இவ்வழக்கில் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, நந்தீஷ் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள், அறம் சார்ந்த விழுமியங்களோடும், விழிப்புணர்வோடும் சாதிவெறிப் படுகொலைகளை கண்டிக்க வேண்டும். 

0 கருத்துகள்:

தன்னாட்சி இழக்கும் சேம வங்கி



தன்னாட்சி இழக்கும் சேம வங்கி 

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், 

தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

இந்திய அரசமைப்பின் அதிகாரச் சமநிலையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்புகள் ஒவ்வொன்றாக கவிழ்க்கப்பட்டு, மோடி ஆட்சியின் பாசிச அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்ததாக மாற்றப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். அவற்றின் புதிய உச்சமாக நரேந்திர மோடிக்கும் ரிலையன்சு அம்பானிக்கும் ஒத்திசைவான உர்சித் பட்டேல் இந்திய சேம வங்கியின் ஆளுநராக்கப்பட்டார்.
உர்சித் பட்டேலின் கேள்வி கேட்காத கீழ்ப்படிதலைப் பயன்படுத்தித்தான், சேம வங்கியின் பெரும்பாலான இயக்குநர்களின் எதிர்ப்பையும் புறந்தள்ளி, “செல்லாத பணத்தாள்” அறிவிப்பை மோடி அடாவடியாக வெளியிட்டார்.
இன்னொரு பக்கம், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஒட்டுண்ணி வலைப்பின்னல் முதலாளிகளுக்கு கேள்வி முறையில்லாமல் கடனை வாரி இறைத்ததால், வாராக் கடன்கள் இப்போது 7 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டன.
சேம வங்கியின் ஆண்டு உபரித் தொகையில், ஏறத்தாழ 99 விழுக்காட்டுத் தொகை மோடி ஆட்சிக்கு வந்த 2014லிருந்து 2017 வரை வழங்கப்பட்டு, அத்தொகையில்தான் மோடியும், அவருக்கு வேண்டிய “பெரும்புள்ளி”களும் மக்கள் பணத்தை தங்கள் சொந்தப் பணம் போல் பயன்படுத்துகிறார்கள்.
இவ்வளவுக்குப் பிறகும், மோடி ஆட்சி சேம வங்கியை தமது சொந்த வீட்டுப் பணப் பெட்டி போல் பயன்படுத்த நினைத்ததால், அதன் ஆளுநரே மோடி ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாக பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2018 அக்டோபர் 26 அன்று, மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய சேம வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, “இந்திய அரசு நடுவண் வங்கியின் தன்னாட்சித் தன்மையை மதிக்கத் தவறினால், அது உடனடியாகவோ பின்னாளிலோ நிதிச்சந்தையின் சீற்றத்தை சந்திக்க நேரிடும். இந்தியாவின் முகாமையான பொருளியல் ஒழுங்குமுறை நிறுவனத்தை தனக்குக் கீழே தாழ்த்த நினைக்கும் நாள் அரசு வருத்தப்பட வேண்டிய நாளாக அமைந்து விடும்” என்று விரிவான தகவல்களோடு எச்சரித்தார். சேம வங்கி ஆளுநர் உர்சித் பட்டேலின் ஒப்புதலோடு, இதைப் பேசுவதாகவும் ஆச்சார்யா அறிவித்தார்.
இதற்குப் பிறகு, சேம வங்கியை வெளிப்படையாகவே இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி குற்றம் சுமத்தி மிரட்டத் தொடங்கி விட்டார்.
ஏற்கெனவே, சேம வங்கியின் இயக்குநர் அவை மாற்றப்பட்டு, குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ். ஆட்களால் நிரப்பப்பட்டுவிட்டது. இந்த “இயக்குநர் அவை”யை வைத்து, தான் சொல்லுகிற ஆட்களுக்கு தாராளக் கடன் வழங்கச் செய்வதும், அந்தக் கடன் தொகையில், தனது கட்சியின் 2019 நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காக பல்லாயிரம் கோடி கையூட்டுப் பெறுவதும் என்ற அலங்கோலமான திட்டத்தில் மோடி ஆட்சி இருக்கிறது.
முற்றிலும் கைப்பொம்மையாக மாற வேண்டும் அல்லது பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற நெருக்கடியில், சேம வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே மோடி அரசு தேர்தல் நிதிப் பத்திரங்கள் (Election Bond) வெளியிட்டு, நிதித் திரட்டுவதற்கு சட்டத்திருத்தம் செய்து விட்டது. யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள் என்று எதுவும் தெரியாமல், கருப்புப் பணத்தைக் கைமாற்றிக் கொள்வதற்கு வலுவான ஏற்பாடு இது!
இது தேர்தல் முறையையே குடை சாய்த்து விடும் என்று அப்போதைய தேர்தல் ஆணையர் நசீன் சைதி எச்சரித்தார். உடனே அவருக்குப் பிறகு, ஏ.கே. ஜோதி என்ற தனக்கு இசைவான நபரை தேர்தல் ஆணையராக மோடி ஆட்சி அமர்த்தியது. அவர் இந்தக் கருப்புப் பணக் கூட்டணி முயற்சியை ஆதரிக்கிறார். தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பும் நிலைக் கவிழ்க்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம் தற்சார்பானதாக ஆளும்கட்சி - எதிர்க்கட்சி என்ற சார்பு இல்லாமல் இருந்து வந்தது. இதைக் குடை சாய்க்க தனக்கு வேண்டிய பிபின் இராவத் என்பவரை, அவருக்கு மேல் உள்ள இரண்டு பணி மூப்பு பெற்ற மூத்த அதிகாரிகளைப் புறந்தள்ளி மோடி ஆட்சி தலைமைத் தளபதியாக அமர்த்தியது. எல்லை தாண்டி பாக்கித்தானில் நடத்தப்பட்ட “துல்லியத் தாக்குதலை”, அவர் பா.ச.க. பிரச்சார பீரங்கியாகவே பரப்புரை செய்து வருகிறார்.
நீதித்துறையில் மோடி ஆட்சியின் தலையீட்டைக் கண்டித்து, வரலாறு காணாத அளவில் செல்லமேசுவர், இரஞ்சன் கோகாய் உள்ளிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெடித்ததை உலகம் கண்டது.
அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள பல அதிகார மையங்களுக்கிடையில் சமநிலை பேணப்பட்டால்தான் சட்டத்தின் ஆட்சி நீடிக்க முடியும்! ஆனால், பாசிச பா.ச.க. ஆட்சியின் அதிகார மையக் கவிழ்ப்புகள் மிக நீண்ட வருங்காலத்திற்கு சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்துவிடும்!
ஒருவேளை, நாளைக்கு மோடியின் பா.ச.க. ஆட்சிப் போய் வேறு ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சிக்கு வந்தால்கூட இந்தக் குலைவுகள் அனைத்தையும் சீர் செய்துவிட மாட்டார்கள். அதிகாரத்தின் சுவை அப்படிப்பட்டது!
வெள்ளை ஏகாதிபத்தியம் பிறப்பித்த பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களையும், நிறுவனங்களையும் விடுதலை பெற்ற இந்தியாவின் காங்கிரசு ஆட்சி, அப்படியே பாதுகாத்து வந்ததையும், அவை இன்னும் தொடர்வதையும் பார்க்கிறோம்.
அதிகாரச் சமநிலையை பாதுகாப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைப்படுத்துவதற்கும் குடிமைச் சமூகத்தின் நீண்ட நெடிய போராட்டம் தேவைப்படும் என்பதைத்தான் மோடி ஆட்சியின் கவிழ்ப்புகள் காட்டுகின்றன.

0 கருத்துகள்: