கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

தமிழர்களைப் புறக்கணித்து வடநாட்டவர்களை சேர்க்கும் ஜிப்மரின் இன ஒதுக்கலைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை முற்றுகைப் போராட்டம்!




தமிழர்களைப் புறக்கணித்து வடநாட்டவர்களை 

சேர்க்கும் ஜிப்மரின் இன ஒதுக்கலைக் கண்டித்து 
புதுச்சேரியில் நாளை முற்றுகைப் போராட்டம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


புதுச்சேரியில் இயங்கிவரும் நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமான சிப்மர் (JIPMER), மண்ணின் மக்களான தமிழர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றது. 

புதுச்சேரி சிப்மரில் 150 இடங்கள், காரைக்கால் சிப்மரில் 50 இடங்கள் என மொத்தம் 200 மருத்துவ மாணவர்கள் ஆண்டுதோறும் இதில் சேர்க்கப்படுகின்றனர். புதுச்சேரி – காரைக்கால் ஆகிய தமிழர் தாயகங்களின் நிலங்களை அளித்துதான் சிப்மர் நிறுவனம் உருவாக்கப்பட்டது. எனவே, இதில் புதுச்சேரி – காரைக்கால் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காட்டு இடங்களையும், பிறருக்கு 10 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கோரி வருகிறது. ஆனால், இப்போது மண்ணின் மக்களுக்கு என 40 இடங்கள் – அதாவது 20 விழுக்காட்டு இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது, அந்த 20 விழுக்காட்டிற்கும் ஆபத்து நேர்ந்துள்ளது! 

சிப்மரில், 2018 – 2019ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, கடந்த 2018 மார்ச்சு 7 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான எழுத்துத் தேர்வு சூன் 3 அன்று நடைபெற்றது. அதில், 290 மையங்களில் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் சூன் 8 அன்று வெளியிடப்பட்டது. அதில், மண்ணின் மக்களுக்கான 20 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டில், அதுவும் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கானப் பட்டியலில் வடநாட்டவர்கள் பலர் இடம் பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்பு, இதேபோன்று அண்மையில் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் 91 பேரும், LDC எனப்படும் கீழ்நிலை எழுத்தர் பணிக்கானத் தேர்விலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதிலும் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் வட மாநிலத்தவர்கள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள். 

சிப்மர் நிர்வாகம், இந்தத் தமிழின ஒதுக்கல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். மாணவர் சேர்க்கையிலும், பணியமர்த்தத்திலும் தமிழர்களுக்கு 90 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதுவரை, சிப்மர் கலந்தாய்வை நிர்வாகம் நிறுத்தி வைக்க வேண்டும்! 

சிப்மர் நிர்வாகத்தின் தமிழின ஒதுக்கலைக் கண்டித்தும், கலந்தாய்வை நிறுத்தி வைக்கக் கோரியும், நாளை (27.06.2018) காலை 10 மணிக்கு, புதுச்சேரியிலுள்ள சமூக – சனநாயக இயக்கங்கள் சார்பில், சிப்மர் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகின்றது. இதில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கேற்கிறது. 

தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையைப் பறிப்பதோடு, தமிழர் தாயக உரிமையை சிதைக்கவும் முயலும் சிப்மரைக் கண்டித்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் – கட்சிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

0 கருத்துகள்:

அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க!




அரசமைப்பு உறுப்பு 161இன்படி 

ஏழு தமிழர்களை விடுதலை செய்க!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

உச்ச நீதிமன்ற கெடு முடியும் தருவாயில், இந்திய அரசு - குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் வழியாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையை நிராகரித்துள்ளது.

2014இல், குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 435 (1)இன்படி, தனது ஏழு தமிழர் விடுதலை முடிவு குறித்து இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டது. 

இந்திய அரசின் வழக்கைத் தொடர்ந்து, அது அரசமைப்புச் சட்ட ஆயத்திற்குச் சென்று அதன் பிறகு இவர்கள் விடுதலை பற்றி விசாரித்து வந்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னால் நின்றது. நான்காண்டுகளாக இவ்வழக்கை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை! இந்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு விதித்து ஒன்றிய அரசு தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய பிறகு, இப்போது இந்திய உள்துறை அமைச்சகம் “தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதுபோல், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டாம்” என முடிவு செய்து, அதனை இந்தியக் குடியரசுத் தலைவர் வழியாக வெளியிட்டிருக்கிறது. 

குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் இந்த முடிவு, அப்பட்டமான சட்டமீறலாகும்! 

ஏனெனில், இவ்வழக்கை புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உயர் அதிகாரி தியாகராசன் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில், முக்கியமானப் பிழையைத் தான் செய்ததாக ஒத்துக் கொண்டு, இவ்வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்விலேயே தனது உறுதியுரையை (பிரமாண வாக்குமூலம்) அளித்துள்ளார். 

இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார். 
கொலையுண்ட இராசீவ் காந்தியின் மகன் இராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர்! 

இராசீவ் காந்தி கொலையில் பன்னாட்டு சதித் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை, தொடர முடியாமல் முட்டுச் சந்தில் நிற்கிறது! 

இந்த நிலையில், உச்ச நீதிமன்றமே ஏழு தமிழர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது! இந்திய அரசோ, ஏழு தமிழர் விடுதலையை ஏற்க முடியாது என குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. 

இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! 

அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும்! 

மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில், குடியரசுத் தலைவர் அதிகாரமும், மாநில ஆளுநரின் அதிகாரமும் சம வலு கொண்டவை. அவை ஒரே நேரத்தில் செயல்படவும் முடியும்! அதுமட்டுமல்ல, எந்த நேரத்திலும் மாநில ஆளுநர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தண்டனைக் குறைப்பு வழங்க முடியும் - அந்த அதிகாரம் கட்டற்றது!

ஆளுநர் முடிவு என்பது, தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பொறுத்தளவில் அரசமைப்புச் சட்டப்படி அது அமைச்சரவையின் முடிவே ஆகும்! 

குடியரசுத் தலைவர் முடிவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நமது அனைவரின் நேசத்திற்கும் உரிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தனது மகன் பேரறிவாளனை வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே வைத்திருப்பதைவிட கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்பது – மனச்சான்று உள்ள அனைவரையும் உலுக்கியெடுத்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

0 கருத்துகள்:

சிவகங்கை சாதிவெறிப் படுகொலை வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்!




சிவகங்கை சாதிவெறிப் படுகொலை 

வன்கொடுமைத் தடுப்பில் கைது செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 

தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

இந்திய – தமிழ்நாடு அரசுகளின் துணையோடு கொண்டு வரப்பட்ட ஆபத்தான திட்டங்களை எதிர்த்து சாதி – மதங்களைக் கடந்து தமிழ்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதி ஆதிக்கவாதிகளின் கொடுஞ்செயல்கள், நம்மை அதிர்ச்சி கொள்ள வைக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் – திருப்பாச்சேத்தி அருகிலுள்ள கச்சநத்தம் கிராமத்தில், கடந்த மே 25-ஆம் நாள், பட்டியல் வகுப்பு மக்கள் கருப்பணசாமி கோயில் திருவிழாவை நடத்தியுள்ளனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் வந்தபோது, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்ததாகவும், தங்கள் முன் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கால் மேல் கால் போட்டு அமர்வதா என சந்திரகுமாரின் மகன்கள் அதைத் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சந்திரகுமார் மீது திருப்பாச்சேத்தி காவல் நிலையத்தில் கச்சநத்தம் ஆறுமுகம், சண்முகநாதன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். சந்திரகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே, சந்திரகுமார் மகன் சுமன் கஞ்சா விற்பதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த புதிய வழக்கு அவர்களை மேலும் ஆத்திரப்படுத்தலாம் என உணர்ந்த கச்சநத்தம் ஒடுக்கப்பட்ட மக்கள் பழையனூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், காவல் துறையோ மெத்தனமாக இருந்துள்ளது.

இந்நிலையில், கச்சநத்தம் மக்கள் அச்சப்பட்டதைப் போலவே சந்திரகுமாரின் மகன்கள் சுமன், அருண் ஆகியோர் ஆவரங்காட்டைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை ஒன்றுதிரட்டிக் கொண்டு, கடந்த 27.05.2018 அன்றிரவு, ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்குள் கத்தி – அரிவாள் உள்ளிட்ட கொடூரக் கருவிகளுடன் நுழைந்தனர்.

இக்கொடூர நிகழ்வில் அரிவாளால் வெட்டப்பட்டு எட்டு பேர் அங்கேயே படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் ஆறுமுகம் (அகவை 65), மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அறிவழகன் மகன் சண்முகநாதன் (அகவை 31), சந்திரசேகர் (அகவை 35) ஆகியோர் உயிரிழந்தனர். கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். தாக்குவதற்கு முன்பாக அவர்கள் அப்பகுதியின் மின் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.

சந்திரகுமார் மீது புகார் அளித்தோர் அவ்விடத்தில் இல்லாத நிலையில்கூட, கண்மூடித்தனமாக எல்லோர் மீதும் சாதி ஆதிக்க வெறியுடன் இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ள செயல், தமிழ்ச்சமூகத்தின் இளையோரில் ஒரு பிரிவினரிடம் எந்தளவிற்கு சாதிய நச்சு விதைக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

மறுநாள் (28.05.2018) மதுரை குற்றவியல் நீதிமன்றம் 4-இல், கச்சநத்தத்தைச் சேர்ந்த சுமன், அருண், ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த இராசேசுவரன், அக்னிராஜ், அஜய்தேவன் ஆகிய ஐந்து பேர் இவ்வழக்கில் சரணடைந்தபோது, இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என வெளிப்பட்டது.

இப்பகுதியில் இவ்விரு சமூகங்களிடையே கடந்த மூன்றாண்டுகளாகவே மோதல்கள் நடந்து வந்துள்ளன. இந்நிலையில், உரிய நேரத்தில் செயல்பட்டு – கொலைகளைத் தடுக்கத் தவறிய காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். கச்சநத்தம் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரணடைந்துள்ள சுமன் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், அவருக்கும் பிறருக்கும் பிணை வழங்காமல் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும். கொலையுண்டோர் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் குற்றவாளிகள் மீது பக்கச்சாய்வு இல்லாமல் நடவடிக்கை எடுப்பதோடு, இரு தரப்புக்குமிடையே பதட்டத்தைத் தணித்து, இணக்கச் சூழலை ஏற்படுத்த உடனடியாக செயல்பட வேண்டும்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாடே ஓரணியில் நின்று தற்காப்புப் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில், இந்தத் தமிழின ஓர்மையை வீழ்த்த ஆரிய ஆதிக்கவாதிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு பக்கம். இன்னொருபக்கம், சாதிவெறி நஞ்சை நம் மனத்திலிருந்து அப்புறப்படுத்தி, மனத்தூய்மை பெற வேண்டும். தமிழர்கள் நாம் ஒரு தாய் மக்கள் என்ற உறவுக்கு இருதரப்பு இளையோரும் முன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதேவேளை சாதிவெறிக் கொலையில் ஈடுபட்டோர், அதற்குத் தூண்டியோர், துணை நின்றோர் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!

0 கருத்துகள்: