கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

அசாமில் வெளியார் கணக்கெடுப்பு தமிழ்நாட்டிலும் வேண்டும்!


அசாமில் வெளியார் கணக்கெடுப்பு
தமிழ்நாட்டிலும் வேண்டும்!

தோழர் கி. வெங்கட்ராமன் 
பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்


அசாமில் வெளியாரை அடையாளம் கண்டு வெளியேற்றும் நடவடிக்கைக்காக அணியப்படுத்தப்பட்ட “தேசிய குடிமக்கள் பதிவேடு” (National Rigister of Citizens) இறுதி வரைவு நேற்று (30.07.2018) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவின்படி, ஏறத்தாழ 40 இலட்சம் பேர் “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் தவறு இருப்பதாகவோ, தவறாக விடுபட்டுள்ளதாகவோ கருதுபவர்கள் உரிய ஆவணங்களுடன் 2018 செப்டம்பர் 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா “சுதந்திரம்” அடைந்தபோது, 1948 சூலை 19 அன்றும், அதற்கு முன்பும் இந்தியாவில் இருந்தவர்கள் “இந்தியக் குடிமக்கள்” (Citizens of India) என வரையறுக்கப்பட்டு, 1951ஆம் ஆண்டு முதல் “தேசிய குடிமக்கள் பதிவேடு” வெளியிடப்பட்டது.
ஆயினும், அசாமில் மண்ணின் மக்களான அசாமியர்களைவிட வெளி மாநிலத்தவர் மற்றும் வங்காளதேச மக்கள் குறிப்பாக வங்காளிகள் மிகை எண்ணிக்கையினராக மாறிவிடும் ஆபத்து நேர்ந்தபோது, அசாம் மாணவர்களின் வெளியார் எதிர்ப்புப் போராட்டம் எழுந்தது.
அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் முன்முயற்சியில், 1979ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம் மிகப்பெரும் மக்கள் கிளர்ச்சியாக வளர்ந்தது. இந்திய அரசு படை கொண்டு தாக்கியும், இடைவிடாத அடக்குமுறைகளை ஏவியும்கூட அப்போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை.
வேறு வழியின்றி, அன்றைய இராசீவ்காந்தி அரசாங்கம் போராடிய மாணவர் அமைப்பினருடன் 1985 ஆகத்து 15 அன்று உடன்பாடு கண்டது. இந்த “அசாம் உடன்பாடு” 1971 மார்ச் 24 – நள்ளிரவுக்குப் பிறகு அசாமுக்குள் குடியேறியோர் “வெளியார்” என வரையறுத்தது.
இந்த “வெளியாரை” அடையாளம் காண அசாம் முழுவதும் 100 “வெளியார் தீர்ப்பாயங்கள்” (Foreigners Tribunal) நிறுவப்பட்டு, பணி தொடங்கப்பட்டது. ஆனால், விரைவிலேயே இந்திய அரசு அப்பணிகளை கிடப்பில் போட்டது. காரணம் – வங்காளிகள் காங்கிரசுக் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாக்கு வங்கிகளாக இருந்தனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன்பேரில் மார்ச் 2015இல் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இப்பணிகள் தொடர்ந்தன. பல்வேறு கால நீட்டிப்புகளுக்குப் பிறகு 2018 சூலை 30 – என்பதை இறுதிக் கெடுவாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த இறுதிக் கெடு நாளான சூலை 30இல்தான், இந்த இறுதி வரைவு அளிக்கப்பட்டுள்ளது.
“வெளியார்” என்று அடையாளம் காணப்பட்டவர்களில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் மோடி அரசும், அசாம் மாநில பா.ச.க. அரசும் “வெளியார்” என்ற பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அவர்களை “அசாமியர்களாக” சட்ட விரோதமாக அடையாளப்படுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை!
அதேநேரம், “வெளியார்” என அடையாளம் காணப்பட்டுள்ள 40 இலட்சம் பேரை அவர்களது சொந்தப் பகுதியான வங்காளதேசத்திற்கோ, மேற்கு வங்காளத்திற்கோ உரிய முறையில் அனுப்பி வைப்பது இந்திய அரசின் கடமையாகும்!
அசாம் ஒப்பந்தம் நடந்து, அதனை உடனே நிறைவேற்றாமல் 43 ஆண்டுகள் கடத்தியது இந்திய அரசின் குற்றம்! 40 ஆண்டுகளாக இருந்துவிட்டார்கள், இப்போது அவர்களை வெளியேற்றச் சொல்வது ஞாயமா என்று கேட்பது ஒட்டுமொத்த அசாமியருக்கு எதிரானது; அயலாருக்குத் துணை போவது!
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு 2018 இறுதியில் அணியப்படும்போது, அதில் அடையாளம் காணப்படும் “வெளியாரை” அசாமிலிருந்து வெளியேற்றி அவரவர் பகுதியில் குடியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்வதில் எந்த காலத்தாமதமும் இன்றி இந்திய அரசு செயல்பட வேண்டும்!
இதே வெளியார் சிக்கல், தமிழ்நாட்டையும் கடுமையாக பாதித்து வருவதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். கடந்த 2011ஆம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், அதன் பிறகான நடப்புகளும் தமிழ்நாடு – அசாமைவிட மிகப்பெரும் வெளியார் ஆபத்தில் சிக்கியிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. (காண்க : தமிழர் கண்ணோட்டம் 2018 சூலை 1-15 ஆசிரியவுரை).
தமிழ்நாட்டில் வெளியார் குடியேற்றம் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வரும் திருவள்ளூர், காஞ்சி, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் மிகையாக அதிகரித்து வருவதை பல்வேறு ஆவணங்களின் வழியாகத் தொடர்ந்து எடுத்துக்காட்டி வருகிறோம்.
எடுத்துக்காட்டாக, 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையில் 86,500 பேர் இந்தி மாநிலத்தவர் இருந்திருக்கிறார்கள். 2011 கணக்கில், இவர்களது மக்கள் தொகை 3,93,380 ஆக உயர்ந்திருக்கிறது. கோவையில், இந்திக்காரர்களின் எண்ணிக்கை 7,308லிருந்து 28,049 ஆகியிருக்கிறது. மதுரையில், 1766லிருந்து 9,443 ஆக உயர்ந்திருக்கிறது. வங்காளிகள் எண்ணிக்கையும் இவர்களைவிட உயர்ந்திருக்கிறது.
இவ்வாறு தமிழ்நாட்டில், 2001-க்கும் 2011-க்கும் இடையில் வங்காளிகளின் எண்ணிக்கை 160 விழுக்காடும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 107 விழுக்காடும் உயர்ந்திருக்கிறது.
இது தமிழர் தாயகத்தை கலப்பின மக்கள் வாழிடமாக மாற்றிவிடும்! தமிழர்களின் வேலை வாய்ப்பை – தொழில் வாய்ப்பை – மொழி வாய்ப்பைப் பறித்துவிடும்! தமிழ்நாட்டு அரசியலில் பா.ச.க.வும் அதற்கு அடுத்தநிலையில், பிற அனைத்திந்தியக் கட்சிகளும் கோலோச்சி தமிழையும், தமிழர்களையும் அவர்களுக்கான அரசியலையும் கீழ்ப்படுத்திவிடும்!
எனவேதான், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் வருவதை வரம்பு கட்டும் வகையில், “உள் அனுமதிச் சீட்டு முறை” (Inner Line Permit System) கொண்டு வர வேண்டும் என்றும், மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவான 1956 நவம்பர் 1–க்குப் பிறகு தமிழ்நாட்டிற்குள் வந்தோரை “வெளியார்” என வரையறுத்து, அவர்களது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொண்டு, அவ்வாறு “வெளியார்” என்று அடையாளப்படுத்துவோரை படிப்படியாக வெளியேற்ற சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

0 கருத்துகள்:

கர்நாடகத்தில் தனியார் துறையிலும் கன்னடர்களுக்கே வேலை தமிழ்நாடு இனியாவது திருந்த வேண்டும்! தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை வேண்டும்!


கர்நாடகத்தில் தனியார் துறையிலும்

கன்னடர்களுக்கே வேலை
தமிழ்நாடு இனியாவது திருந்த வேண்டும்!

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

"கர்நாடகாவிலுள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 விழுக்காட்டுப் பணிகளை வழங்க வேண்டுமென கர்நாடக அரசு சட்டதிருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கென கர்நாடக அரசின் தொழில்துறை அமைச்சகம், கர்நாடக தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையாணை) விதிகள் – 1961 - சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. அதற்கானத் திருத்தங்கள் வெளியாகியுள்ளன.

அப்புதியத் திருத்தங்களின்படி, கர்நாடகாவில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களில் உதவியாளர் உள்ளிட்ட இரண்டாம் நிலைப் பணியாளர்களாக, கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட கன்னடர்களை மட்டுமே நியமிக்க முடியும். அவ்வாறு நியமிக்காத நிறுவனங்களுக்கு கர்நாடக அரசு வழங்கியுள்ள நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைவசதிகளும் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பெங்களூருவிலுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை, உயிரி தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு 2014ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு கர்நாடகத் தொழில்துறை அமைச்சர் சந்தோசுலாட் ஒப்புதல் அளித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடமும் இதற்கு இசைவு பெறப்பட்டுள்ளது. முனைவர் சரோசினி மகிசி ஆணையப் பரிந்துரை, கர்நாடகத்தில் செயலில் உள்ளது. அதற்கு இசையவே இப்புதிய சட்ட திருத்தம் நிலையாணைச் சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம், காங்கிரசு – பா.ச.க – சனதா தளம் ஆகிய அனைந்தியக் கட்சிகளால் மாறி மாறி ஆளப்படுகிறது. ஆனால், அங்கு மண்ணின் மக்களான கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பிலும், கட்டமைப்புப் பணி ஒப்பந்த வாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அந்த மாநிலத்திலுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி, பிற இடதுசாரிகள் யாரும் இதனை தொழிலாளி வர்க்க ஒற்றுமைக்கு இடையூறு என்று கூறி தடுப்பதில்லை!

ஆனால், தமிழ்நாட்டில் “மாநிலக் கட்சிகள்” மட்டுமே மாறி மாறி ஆட்சி புரியும் வாய்ப்பிருந்தாலும், இதுவரை இதனை எண்ணிப் பார்க்கவில்லை. மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை – தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு மக்களுக்கே 90 விழுக்காடு வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரினால், அதனை “இனவெறி” – “வர்க்கப் பிளவு” என பழித்தூற்றுவதற்கு பலப் பிரிவு இடதுசாரிகள் வரிந்து கட்டுகிறார்கள்.

அண்மையில்கூட, தமிழ்நாட்டில் இந்திய ஸ்டேட் வங்கி(SBI)க்கு எடுத்த 1420 புதிய பணியிடங்களில், ஏறத்தாழ 80 விழுக்காட்டு இடங்களக்கு கேரளத்தைச் சேர்ந்தவர்களும், வடமாநிலத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு நடைபெற்று அவர்கள் வேலையில் அமர்த்தப்படும் நிலை உள்ளது. நல்ல ஊதியம் கிடைக்கும் பணிகள் தமிழ்நாட்டிலேயே தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கிடைக்காமல் புறக்கணிக்கப்படும் இன ஒதுக்கல் அரங்கேற இருக்கிறது.

வங்கிப்பணி மட்டுமின்றி, தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல்., ஆவடி திண்ணூர்தித் தொழிற்சாலை, ஐ.சி.எப். உள்ளிட்ட இந்திய அரசுத் தொழிலகங்கள், வருமானவரி – சுங்க வரி உள்ளிட்ட இந்திய அரசுத் துறைகள் ஆகிய அனைத்திலும் தமிழ்நாட்டில் அயல் மாநிலத்தவர்களே அதிகம் பணியமர்த்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளியில் நிறுத்தப்படுகிறார்கள். இந்த நிலை இனியாவது மாற வேண்டும்.

கர்நாடகத்தைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் திருத்தம் வர வேண்டும். கர்நாடகத்தைப் போல தமிழ்நாடு அரசும், இதற்கென விசாரணை ஆணையத்தை அமைத்து உரிய பரிந்துரை பெற்று, கர்நாடகத்தைப் போல இந்திய – மாநில அரசுத்துறைகளிலும், தனியார் தொழில் நிறுவனங்களிலும் குறைந்தது 90 விழுக்காடு வேலை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே வழங்குவதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கர்நாடகத்து இடதுசாரிகளைப் போல, இங்குள்ள முற்போக்காளர்கள் மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த அநீதிக்கு எதிராக போராடவும், வெளியார் பணிக்கு அமர்த்தப்படும் இடங்களில் புகுந்து போராடி உரிமையை நிலைநாட்டவும் முன் வர வேண்டும்."

1 கருத்துகள்:

நெல் கொள்முதல் விலையில் மோடியின் மோசடி - சிறப்புக் கட்டுரை!




"நெல் கொள்முதல் விலையில்

மோடியின் மோசடி"

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


மோடி அரசின் மோசடி அறிவிப்புகளில் ஒன்றாக வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஆதரவு விலை அறிவிப்பும் வந்துள்ளது.

வேளாண் விளை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிப்பதற்கு முனைவர் எம்.எஸ். சாமிநாதன் குழு வரையறுத்த கோட்பாடு பின்பற்றபட்டதாக கடந்த 08.07.2018 அன்று வெளியான இந்திய அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இந்திய அரசு கடந்த 2004-இல் எம்.எஸ். சாமிநாதன் தலைமையில் அமைத்த வேளாண்மை ஆணையம், உற்பத்திச் செலவுக்கு மேல் 50 விழுக்காடு குறைந்த அளவு இலாபம் சேர்த்து எல்லா வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறியது.

எந்தத் தொழிற்சாலை உற்பத்திப் பொருளுக்கும் உற்பத்திச் செலவை விட மூன்று மடங்குக்கு (300 விழுக்காடு) குறைவாக விற்பனை விலை தீர்மானிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் எம்.எஸ். சாமிநாதன் குழு 50 விழுக்காடு சேர்த்து வழங்க வேண்டும் என்று வரையறுத்ததே மிகவும் பிற்போக்கானது!

இந்த கணக்கீட்டின்படி கூட நெல், சோளம், கம்பு, நிலக்கடலை, பருத்தி போன்றவற்றிற்கு மோடி அரசு அறிவித்துள்ள அடிப்படை விலை அமையவில்லை. ஆனால் மோடி அரசு எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரைப்படி ஆதார விலைகள் அறிவிக்கப்பட்டதாக கூறுவது கடைந்தெடுத்த மோசடியாகும். 

உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்கு சாமிநாதன் குழு ஒரு வரையறுப்பை கூறுகிறது. C2 + 50% என்பதே அது!

இங்கு C2 என்பது இந்தியா முழுவதற்குமான சராசரி உற்பத்திச் செலவைக் குறிக்கிறது. இதுவே அறிவியலுக்குப் புறம்பானது. ஏனெனில் உற்பத்திச் செலவு மாநிலத்திற்கு மாநிலம் பெருமளவு வேறுபடும். மாநிலத்திற்கு உள்ளேயே பாசன வாய்ப்புக்கு ஏற்ப உற்பத்திச் செலவு மாறுபடும். ஒரு கணக்கீட்டு வசதிக்காக வேண்டுமானால் ஒரு மாநிலச் சராசரியை எடுத்துக் கொள்ளலாம். இந்தியா முழுவதற்கும் சராசரி என்பது பொறுத்தமில்லாதது. 

இவ்வாறு கணக்கிடப்படும் C2 என்ற சராசரி உற்பத்திச் செலவானது, A2 
+ FL + R என்ற வாய்ப்பாட்டின் மூலம் பெறப்படுகிறது.

இதில் A2 என்பது விதை, உரம், பூச்சிக்கொல்லி, நீர்ப் பாசனம், தொழிலாளர் ஊதியம் போன்ற இடுபொருள் செலவைக் குறிக்கிறது. FL என்பது உழவரின் குடும்பத்தினர் உழைப்புக்கான ஊதிய அளவைக் குறிக்கிறது. R என்பது குத்தகை நிலமாக இருந்தால் அதற்கான வாடகை கணக்கீடு, சொந்த நிலமாக இருந்தால் அதில் செலுத்தப்படும் நிலை மூலதனத்திற்கான வட்டி ஆகியவற்றைக் குறிக்கும். நிலத்தின் வளத்தேய்மானமும் இந்த கணக்கீட்டில் வரும்.

இவை அனைத்தின் கூட்டுத் தொகையே மொத்த உற்பத்திச் செலவு C2 ஆகும். இந்த செலவோடு இதில் 50 விழுக்காடு இலாபத் தொகைச் சேர்த்து கணக்கிடுவதே சாமிநாதன் குழு பரிந்துரைக்கும் அடிப்படை விலையாகும். 

மோடி அரசு மேலே குறிப்பிட்ட R ஐ நீக்கி விட்டு A2 + FL என்பதை மட்டும் உற்பத்தி செலவாகக் கருத்தில் கொண்டு அதற்கு மேல் 50 விழுக்காடு சேர்த்து அடிப்படை விலையை அறிவித்துள்ளதாகக் கூறுகிறது. அதே நேரம் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை அறிவித்துள்ளதாகவும் கூறிக் கொள்கிறது. இதுவே மோசடியானது; சுய முரண்பாடானது. 

சரி, உண்மையில் இந்த கணக்கீட்டின் படியாவது வேளாண் விளைப் பொருள்களுக்கு அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளதா என்றால் அதுவும் இல்லை. 

எடுத்துக்காட்டாக நெல்லுக்கு 2018 – 2019 ஆம் ஆண்டுக்கு மோடி அரசு அறிவித்துள்ள அடிப்படை விலை குவிண்டாலுக்கு 1750 ரூபாய் ஆகும்.

நல்ல பாசன வசதியுள்ள நிலத்தில் நெல் சாகுபடி செய்ய ஆகும் உற்பத்திச் செலவு (A2) மட்டும் ஏக்கருக்கு சராசரியாக 31,700 ரூபாய் ஆகும். எந்த இயற்கை பாதிப்பும் இல்லாது போனால் ஒரு ஏக்கருக்கு 18 குவிண்டால் நெல் அறுவடை கிடைக்கும். இந்த வகையில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ஆகும் இடுபொருள் செலவு (A2) மட்டும் 1760 ரூபாய்.

வெறும் A2 + 50 % என்றுக் கணக்கிட்டாலே 1760 + 880 = 2440 ரூபாய் ஆகும். ஆனால் (A2 + FL) + 50 % அளிப்பதாகக் கூறி 1750 ரூபாயை அடிப்படை விலையாக மோடி அரசு அறிவித்து இருக்கிறது. இது இன்னும் மிகப் பெரிய மோசடியாகும்!

இதையே மிகப்பெரும் சாதனையாக பெருமளவு பரப்புரை செய்ய மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் உள்ள மோசடித்தன்மையை – பொய்மையை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக உழவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வேளாண் விளை பொருள்களுக்கு இலாப விலை கேட்டு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

0 கருத்துகள்: