கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

புதிய கோணத்தில் மார்க்சியத்தை ஆய்வு செய்த சமிர் அமின் அவர்கள் மறைவு!



புதிய கோணத்தில் மார்க்சியத்தை ஆய்வு

செய்த சமிர் அமின் அவர்கள் மறைவு !

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல் !

புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் – மக்கள் இயக்கச் செயல்பாட்டாளர் சமிர் அமின், நேற்று (12.08.2018) பாரீசில் காலமானார். 

தனது 86 ஆவது அகவையில் மறைந்த சமிர் அமின், எகிப்து தலைநகர் கெய்ரோவில் 1931 செப்டம்பர் 3ஆம் நாள் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே எகிப்து பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். 

எகிப்தில் நாசர் ஆட்சிக்காலத்தில், அந்நாட்டுத் திட்டக்குழுவில் குறுகிய காலம் செயலாற்றினாலும், விரைவில் நாசர் ஆட்சி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடியபோது சமிர் அமின் பாரீசுக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் பிரஞ்சு கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 

ஆயினும், மார்க்சியமும், பிற பொருளியல் அரசியல் கோட்பாடுகளும் ஐரோப்பாவை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன என்ற கருத்திற்கு வந்த சமிர் அமின் 1988இல், “ஐரோப்பிய மையவாதம்” (Euro Centrisim) என்ற ஆய்வு நூல் எழுதினார். 

சமிர் அமின் அறிமுகப்படுத்திய “ஐரோப்பிய மையவாதம்” என்ற சொல்லாடல், மார்க்சியம் உள்ளிட்ட ஆய்வுலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பொருளியல் – அரசியல் ஆய்வில் புதிய போக்கின் தொடக்கமாகவும் அது அமைந்தது. 

சமிர் அமின் மார்க்சியத்தின் மதிப்புக் கோட்பாட்டை வெறும் பொருளியல் வாய்ப்பாடாக முன்வைப்பதை எதிர்த்தார். அவரது “உலகு தழுவிய மதிப்பின் விதி” (The Law of Worldwide Value) என்ற நூல் மேற்குலகம் முன்வைக்கும் “வளர்ச்சி” வாதத்தை கேள்விக்கு உட்படுத்தியது. 

ஒவ்வொரு தேசமும் தத்தமக்குரிய பொருளியல் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்று வலியுறுத்திய அவரது “வர்க்கமும் தேசமும்” (The Class and Nation) என்ற நூல், புதிய புரிதல்களுக்கு இட்டுச்சென்றது. 

கடந்த 2016ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து எழுதியும் மக்கள் இயக்கங்களில் பங்கேற்றும் வந்த சமிர் அமின், மூளைப் புற்றுநோய் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக நினைவு மறதி நோய்க்கு ஆட்பட்டார். 

பாரிசீல் கடந்த ஒரு மாத காலமாக உயர் சிகிச்சையில் இருந்தாலும், பயனின்றி 12.08.2018 அன்று மறைவுற்றார். 

சமிர் அமின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 

0 கருத்துகள்:

வீட்டில் சுகப்பிரசவம் தண்டனைக்குரிய குற்றமா?


வீட்டில் சுகப்பிரசவம் தண்டனைக்குரிய குற்றமா?

தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப்
பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி - தென்றல் நகரில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரியான கண்ணன், கடந்த 03.08.2018 அன்றிரவு தனது மனைவி மகாலெட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இரவு 11.45 மணியளவில், அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து, தாயும் சேயும் நலமாக இருந்துள்ளனர். பிரசவம் முடிந்த மறுநாள், மகாலட்சுமி தனது இயல்பான வீட்டு வேலைகளைப் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து ஆரம்ப நலத்துறை (சுகாதார) ஊழியர்கள் மூலம் தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், மாவட்ட பொது சுகாதாரம் இணை இயக்குநர் உள்ளிட்ட மொத்த மருத்துவக் குழுவும், பி.சி. பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன், தேனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான காவலர்களும் “குற்றவாளி” வீட்டை முற்றுகையிடுவது போல், கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டு, தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் சேர்க்கக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
தாயையும் குழந்தையையும் பரிசோதிக்க வந்த அலோபதி மருத்துவர்களுக்கு கண்ணன் – மகாலட்சுமி இணையர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அரசு சார்பில் சித்த மருத்துவர் குழு அங்கு வந்தது. தாயையும் குழந்தையும் பரிசோதித்த போடேந்திரபுரம் வட்டார துணை மருத்துவ அலுவலரும், சித்த மருத்துவருமான திலகவதி, கம்பம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் சிராஜூதீன் ஆகியோர் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்றாலும், தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது, எனவே குழந்தையின் தொப்புள் கொடியை அகற்ற வேண்டுமெனக் கூறி அகற்றியுள்ளார். அரசு நலத்துறை துணை இயக்குநர் வரதராஜ், குழந்தை 3.50 கிலோ எடையுடன் நல்ல நிலையில் உள்ளது என்றார்.
இந்நிலையில், மருத்துவர்களை மிரட்டியதாக கூறி கண்ணன் மற்றும் அவரது தந்தை தனுஷ்கோடி, தாய் அழகம்மாள் ஆகியோர் மீது பி.சி.பட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்ததுடன், தனுஷ்கோடியை கைது செய்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்து, தேனியில் ஊடகங்களிடம் பேசியுள்ள தமிழ்நாடு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்றும், சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழ்நாடு நலத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன், வீட்டுப்பிரசவம் பார்ப்பது சட்டப்படி அனுமதிக்கப்பட்டிருக்கிறது, அந்தப் பிறப்பை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்று மட்டுமே சட்டம் கூறுவதாக பி்.பி.சி. தமிழ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
நாடெங்கும் ஓடும் தொடர்வண்டிகளில், பேருந்துகளில், வீடுகளில் என பிரசவங்கள் இயல்பான முறையில் நடந்து கொண்டுள்ள நிலையில், அவற்றையெல்லாம் “குற்றச்செயலாக” சித்தரித்து, அதில் ஈடுபடுபவர்கள் மீது “குற்ற” நடவடிக்கை எடுக்கும் கார்ப்பரேட் ஆதரவுப் போக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கொண்டுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையால் சூழப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தையும், மருத்துவ முறைகளையும் கட்டாயப்படுத்தித் திணிக்கும் தமிழ்நாடு அரசின் இப்போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரசமைப்புச் சட்டமும், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயமும் அந்தரங்க உரிமை (Right to Privacy)-யை உறுதி செய்கின்றன. தாங்கள் விரும்பும் மருத்துவ முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. இவை அனைத்தையும், தமிழ்நாடு அரசு மீறியுள்ளது, இங்கு கார்ப்பரேட் காட்டாட்சி நடக்கிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசு, உடனடியாக தனுஷ்கோடியை விடுதலை செய்து, கண்ணன் உள்ளிட்டோர் மீது தொடர்ந்துள்ள வழக்கைத் திருபம்பப் பெற வேண்டும்! உரிய முறையில் நடைபெறும் இயற்கை முறை வீட்டுப்பிரசவங்களை தமிழ்நாடு அரசு தடுப்பதும், அதில் ஈடுபடுவோரை மிரட்டுவதும் கூடாது!

0 கருத்துகள்:

ஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது! உடனே விடுதலை செய்க!

ஹீலர் பாஸ்கர் கைது :

மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது!
உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

புகழ் பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர், நேற்று (02.08.2018) கோவையில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர் என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்திருக்கும்.
வரும் ஆகத்து 26ஆம் நாள் கோவை புதூரில், “மருந்து – மாத்திரைகள் – ஸ்கேனிங் இல்லாத இனிய சுகப்பிரசவத்திற்காக” - இலவச பயிற்சி அளிக்க ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதனை எதிர்த்து, ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹீலர் பாஸ்கரும், அவரது அலுவலக மேலாளர் சீனவாசனும் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மோசடி செய்யும் நோக்குடன் ஏமாற்றுதல் (420) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் கிருத்திகா என்ற பெண்மணிக்கு, அவரது கணவர் யூடியூப்பை பார்த்து வீட்டில் இயற்கை பிரசவம் நடத்த முயன்றபோது, கூடுதல் குருதிப்போக்கு ஏற்பட்டு கிருத்திகா இறந்து போனதைத் தொடர்ந்து, மரபுவழி மருத்துவர்களையும் மருத்துவ ஆலோசகர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், நல்வாழ்வுத்துறை செயலாளரும் தொடங்கினர். அலோபதி மருத்துவர்கள் பலரும், “முற்போக்கு” சிந்தனையாளர்கள் சிலரும், பெண்ணியவாதிகள் சிலரும்கூட இந்த கூக்குரலில் இணைந்தனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான், ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மத நம்பிக்கைகளின் பெயரால் உடலுக்கும், மனதிற்கும் ஊறு விளைவிக்கக்கூடிய செயல்கள் குற்றச்செயல்களாக கருதப்படுவதில்லை. ஆனால், மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை கூட குற்றச்செயலாக வரையறுக்கப்பட்டு அச்சுறுத்தல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இச்செயல் கருத்துரிமைக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் மரபு அறிவியல் அனைத்தையும் “மூடநம்பிக்கை” என ஒதுக்கும் செயலும் ஆகும்!
எந்த மருத்துவமும் அதற்குரிய பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுவதே சரியானது. முறையான மரபுவழி மருத்துவமும் அவ்வாறுதான் நடந்து வருகிறது.
மரபுவழி பிரசவத்தில் சுகப்பிரசவம் என்பதுதான் பொதுப் போக்காக இருந்தது. இதற்கு முன்பு மரபுவழி சுகப்பிரசவத்தில் தாயோ, குழந்தையோ இறந்தது அரிதான நிகழ்வாகும்! ஒரு தலைமுறைக்கு முன்பான எந்தக் குடும்பத்தை விசாரித்தாலும், இந்த உண்மையை உறுதி செய் முடியும்.
அரசின் துணையோடு மரபுவழி அறிவியலும், அதன் ஒரு பகுதியான மரபு வழி மருத்துவமும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில், பயிற்சி பெற்ற மரபுவழி மருத்துவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள்.
மரபுவழி மருத்துவத்தை ஒரு மருத்துவமாகவே நடைமுறையில் இந்திய – தமிழக அரசுகள் ஏற்பதில்லை! எனவே, மரபுவழி மருத்துவத்திற்கு முறையான பயிற்சி அளித்து முறைப்படுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. பெயருக்கு ஒரு ஓரத்தில், சித்த மருத்துவப் பிரிவும், “சித்த மருத்துவக் கல்லூரிகளும் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவம் என்றாலே அலோபதி மருத்துவம் என்றும், மண்ணின் மருத்துவங்கள் “மாற்று மருத்துவம்” என்ற பெயரிலும் புறந்தள்ளப்பட்டது.
மருத்துவத் துறையில் நிகழ்ந்து வரும் அரசின் இத்தாக்குதலைத் தொடர்ந்து அனுமதித்தால், இன்றைக்கு பல போராட்டங்களுக்கிடையில் முன்னேறி வரும் மரபு வழி வேளாண்மையும் புறந்தள்ளப்படும். இரசாயண மருத்துவம் போலவே, இரசாயண வேளாண்மையும் மீண்டும் உறுதிப்படும்!
அறிவியல், பகுத்தறிவு, முற்போக்கு, நவீனம் என்ற பெயரால் திணிக்கப்படும் “வளர்ச்சி” வாதத்தின் (Growthism) ஒரு சீரழிவே இச்செயல்!
தமிழ் மொழி, தமிழர் மரபு, தமிழர் மரபின் அறிவியல் ஆகிய அனைத்தையும் புறக்கணிக்கச் செய்வதில்தான் “வளர்ச்சி” வாத ஆதிக்கத்தின் வெற்றியே இருக்கிறது. இந்த வளர்ச்சி வாதத்தின் உச்சமாகத்தான், மரபுவழி மருத்துவமே தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக மரபுவழி மருத்துவத்தை பரப்பி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர் மரபு அறிவியலுக்கும், தமிழின உரிமைக்கும், அடிப்படை சனநாயக உரிமைக்கும் எதிரானதாகும்!
எனவே, ஹீலர் பாஸ்கரையும், அவரது அலுவலக மேலாளரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும், மரபுவழி மருத்துவத்தை மருத்துவமாக அங்கீகரித்து அதை ஒரு கல்வித்திட்டமாக ஆக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் செயல் திட்டங்கள் வகுக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

1 கருத்துகள்: