கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?



“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?”

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்

ஐயா கி.வெங்கட்ராமன் கட்டுரை !

“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” என்ற தலைப்பில், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஏப்பிரல் 1-15 இதழில், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் எழுதியுள்ள கட்டுரை :

“தேசியம் குறித்த விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்ஷா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 - 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது.

“தேசியம் குறித்த விவாதத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இது உண்மையென்பதும் புலப்படும்.

அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான இந்துத்துவம் என்றும் நாம் கூறுவது உறுதியாக மெய்ப்பிக்கப்படுகிறது என்பதும் புலப்படும். மதச்சார் பற்ற இந்தியம் என்பதோ, முற்போக்கான இந்தியம் என்பதோ, பன்மைக்கு இடமளிக்கும் இந்தியம் என்பதோ எதுவும் இல்லை என நாம் கூறி வருவதும் உறுதிப்படுகிறது.

இப்போது, இந்த விவாதம் கடந்த 2016 பிப்ரவரி 8ஆம் நாள், தில்லி - சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறையிலிருந்து மேலெழுந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பரிவாரங்களை கருத்தியல் களத்திலும் போராட்டக் களத்திலும் எதிர்கொண்டு வருபவர்கள் முதன்மையாக சி.பி.ஐ., சி.பி.ஐ.எம்., சி.பி.ஐ.எம்.எல். ஆகிய இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வியாளர்களுமே ஆவர்.

இப்போராட்டக் களத்தில், பாரதிய சனதா குண்டர்களையும் ஆட்சி நிர்வாகத்தின் அடக்குமுறைகளையும் உறுதியாக அவர்கள் எதிர் கொள்கிறார்கள் என்பது பாராட்டத்தக்கது.

பா.ச.க. ஆட்சியின் பாசிச அடக்கு முறை சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தோடு மட்டும் நிற்கவில்லை. அகமதாபாத் பல்கலைக் கழகம், புனே பெர்கூசன் கல்லூரி, மீண்டும் அடுத்த சுற்று ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் வரலாறு காணாத காவல்துறைத் தாக்குதல் என தொடர்கிறது. இங்கெல்லாம் மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

“இந்திய இராணுவம் காசுமீரிலும் வடகிழக்கு தேசிய இன மாநிலங்களிலும் ஆக்கிரமிப்புப் படையாக செயல் படுகிறது’’ என ஓர் கருத்தரங்கில் பேசியதற்காக புகழ்பெற்ற பேராசிரியர் நிவேதித்தா மேனன் தாக்கப்பட்டார். அந்த அம்மையார் மின்னஞ்சலுக்கும் கைப்பேசிக்கும் திட்டமிட்ட முறையில் அன்றாடம் நூற்றுக்கணக்கான ஆபாச வசவுகள் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் அனுப்பப்படுகின்றன. ஜீ தொலைக் காட்சி உள்ளிட்ட வடநாட்டு ஊடகங்கள் சில அவரை இந்திய எதிரியாக தொடர்ந்து சித்தரிக் கின்றன. அவர் மீது பொய் வழக்கும் போடப்பட்டுள்ளது.

அதேபோல், உலகப்புகழ் பெற்ற வரலாற்றியலாளர் முனைவர் சமன் லால் மார்ச்சு 23 அன்று பகத்சிங் நினைவு நாளில், தில்லி பல்கலைக் கழகத்தில் பா.ச.க. வெறியாட்டத் தைக் கண்டித்துப் பேசியதற்காகத் தாக்கப்பட்டார்.

இந்தக் கல்வியாளர்கள் இத் தாக்குதல்களைக் கண்டு அஞ்சாமல் தங்கள் கருத்துகளை உறுதியாகப் பேசி வருகிறார்கள்.

ஆயினும், இந்த இடதுசாரி மாணவர்களும் பேராசிரியர்களும் இக்கட்சிகளின் தலைவர்களும் இந்துத்துவாவிற்கு எதிராக பன்மைகளை ஏற்கும் இந்தியத் தேசியம், மதச்சார்பற்ற இந்தியத் தேசியம், உலகமயத்திற்கு எதிரான முற்போக்கு இந்தியத் தேசியம் என பேசும் போது தான் தோல்வியை மீண்டும் மீண்டும் சந்திக்கிறார்கள்.

ஏனெனில், இந்துத்துவத்திற்கு எதிராக இந்தியத் தேசியத்தை முன்வைப்பது உண்மையில் வெறும் நிழல் சண்டைதான்! ஆனால், இந்த நிழல் சண்டையை தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் தொடர்கிற போது, “முதல் சுற்று வெற்றி எங்களுக்கு’’ என அருண் ஜெட்லிகள் கொக்கரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த விவாதத்தின் போக்கில் இவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு தங்கள் விசுவாசத்தை சத்தியம் செய்து உறுதி செய்கிறார்கள்.

இவற்றின் காரணமாக பா.ச.க.வின் இந்துத்துவத் தேசியத்திற்கு எதிரான, மக்கள் சார்பான மாற்றுகளை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. நடைமுறை யில், ஒரே கருத்தியல் முகாமுக்குள் நடக்கிற சண்டை யாக இது தொடர்கிறது.

உயராய்வு நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங் களிலும் தங்கள் ஆட்களை உயர் பதவியில் அமர்த் துவது காங்கிரசு ஆட்சியிலும் நடந்ததுதான். ஆயினும், தகுதியுள் ளவர்களில் தங்களது ஆட்களைக் கொண்டு காங்கிரசு ஆட்சி இந்த இடங்களை நிரப்பியது. இதனால், தங்கள் தகுதி காரணமாக இடது சாரி அறிஞர்கள் இந்த ஆய்வு நிறுவனங்களில் முகாமையான இடங்களில் செயல்பட முடிந்தது.

ஆனால், பா.ச.க. ஆட்சி இதே வேலையை செய்யும் போது, ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும், அது பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் பரிவார ஆட்களைக் கொண்டு உயராய்வு நிறுவனங்களை நிரப்புவது பா.ச.க. ஆட்சியின் பொதுப் போக்காக உள்ளது.

புனே, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் தலைவராக அமர்த்தப்பட்ட கஜேந்திர சவுகான், இந்திய வரலாற்றுக் கழகத்தின் தலைவராக அமர்த்தப்பட்ட சுதர்சன ராவ், தேசிய புத்தக ஆணையத் தின் தலைவராக அமர்த்தப்பட்ட பாலதேவ் சர்மா, திரைப்படத் தலைமைத் தணிக்கையாளராக அமர்த்தப் பட்ட பாலாஜி நிகலானி போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உரிய தகுதி பெற்றவர்கள் அல்லர். ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் என்பது மட்டுமே அவர்களின் தகுதி!

இதுபோன்ற சிற்சில இடங்களில் இந்த இடது சாரிகள் சரியான மாற்றுகளை முன்வைத்துப் போராடினாலும், கருத்தியல் தளத்தில் மாற்றுகளை முன்வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

இவர்கள் விசுவாசம் காட்டும் இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியத் தேசியம் என்பதாக ஒன்றை சொல்லாவிட்டாலும், இந்த இடதுசாரிகள் பா.ச.க.வை விடவும் இந்தியத் தேசியம் குறித்து உரத்துப் பேசுகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டு, 1950-இல் செயலுக்கு வந்தபோது, “இறையாண்மையுள்ள சனநாயகக் குடியரசு’’ என்பதாகத்தான் இந்தியா வரையறுக்கப்பட்டது. இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சிக் காலத்தில், 1976 இறுதியில்தான் 42ஆவது திருத்தத்தின் மூலம்“இறையாண்மையுள்ள மதச்சார்பற்ற சோசலிச சனநாயகக் குடியரசு’’ என மாற்றப்பட்டது.

ஆனால், இதே காலப்பகுதியில்தான் முஸ்லிம்கள் தில்லியில் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டார்கள். துர்க்மான் கேட்டில் அவர்களது வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டன. தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போலியாக இதுபோன்ற பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி பிறப்பித்தார். அவசரகால ஆட்சிக் காலத்தில் “கல்வி’’யும், “வனம்’’ தொடர்பான அதிகாரங்களும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

ஆயினும், சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து மதச்சார்பற்ற இந்தியா என்பது பேசப்பட்ட ஒன்றாக வே தொடர்ந்தது. மதச்சார்பின்மை கருத்தியலின் இந்தியத் தலைமகனாக கருதப்பட்ட சவகர்லால் நேரு கூற்றுகளிலிருந்தே, இந்தியத்திற்கும் மதச்சார்பின் மைக்கும் தொடர்பேதும் இருக்க முடியாது என்பது தெளிவாகும்.

நேரு எழுதிய புகழ்பெற்ற நூலான “தி டிஸ்கவரி ஆப் இந்தியா’’வில், “ஆரிய நாகரிகமும், பிராம ணிய கட்டமைப்பும் இணைந்த இந்துயிசத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தியத் தேசியம்” என பல இடங்களில் குறிப்பிடு கிறார். அவர் ஆற்றிய பல்வேறு சொற்பொழிவுகளிலும் இதே செய்தியை வெவ்வேறு சொற்களில் குறிப்பிடுகிறார்.

“மதத்தோடு மெய்யியலும் வரலாற்றோடு மரபும் பழக்க வழக்கங்களும் சமூகக் கட்டமைப் பும் கலந்த கலவைதான் இந்திய வாழ்வின் மிகப்பெரும்பாலான கூறுகளில் நிறைந்து காணப்படு கிறது. பிராமணியம் அல்லது இந்துயிசம் என்று கூறப்படும் இந்தப் பொதுத்தன்மைதான் இந்தியத் தேசியத்தின் குறியீடாக இருக்கிறது. இதுதான் தேசிய மதமாகவும் விளங்குகிறது’’ என்பதே சவகர்லால் நேருவின் இந்தியா குறித்த வரையறுப்பு.

இதற்குள் நின்றுகொண்டு, சில சகிப்புத்தன்மைகளை அவர் கூறுகிறார். இதைத்தான் மதச்சார் பின்மை என்பதாக தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஆரிய பிராமணிய இந்துத் தன்மைதான் இந்தியத் தின் அடிப்படை! இதில், மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் எனக் கூறுவதற்கு என்ன இடமிருக்கிறது?

ஏனெனில், எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் மெய்யியல், வரலாறு, மரபு, இனத் தொடர்ச்சி ஆகியவை அடிப்படையாக தேவைப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தில், இதில் எந்தவொரு கூறிலும் ஒற்றைத் தன்மை இல்லை. ஒத்தத்தன்மையும் இல்லை. எனவே, ஏதாவதொரு சமூகத்தின் மேற்கண்ட கூறுகளைக் கொண்டு ஓர் தேசியத்தை புனைய வேண்டிய அவசியத்தில் இதிலுள்ள ஆதிக்க சக்திகள் உள்ளன. அவ்வாறான ஆதிக்கப் புனைவே இந்தியத் தேசியமாகும்.

இன்னொன்று, எந்தவொரு தேசியத்திற்கும் ஓர் வரலாற்றுத் தாயகமும், தேசிய மொழியும் இன்றிய மையாதக் கூறாகும்.

நேருவும், காந்தியடிகளும் அடிக்கடி கூறியது போல், பிரித்தானிய இந்திய ஆட்சிப் பகுதியே இவர்களது புனைவுக்கான தாயகமாக வாய்த் தது. இயற்கையில் ஆட்சிப் பகுதியும் (Territory) தேசியத் தாயகமும் வரலாற்றில் பல நேரங்களில் வெவ்வேறாக அமைந்து விடுகின் றன. தேசியத் தாயகமே ஆட்சிப் பகுதியாக மாறும்போது, அங்கு ஓர் தேச அரசு மலர்கிறது. அது விடுதலையின் அடையாளம்!

ஆனால், வரலாற்றில் தற்செய லாக ஆயுத வலிமை காரணமாக அமைந்துவிட்ட ஓர் ஆட்சிப் பகுதியை தேசியத் தாயகமாக மாற்ற முயலும்போது,அது ஆதிக்கப் புனைவாக அமைகிறது. அதற்குள் பல்வேறு தேசியத் தாயகங்கள் சிறைப்படுகின்றன. இந்தியாவில் அதுதான் நிகழ்ந்தது.

காந்தி, நேரு, அம்பேத்கர், பொதுவுடைமைத் தலைவர்கள், இந்து மகா சபையினர் ஆகிய வெவ்வேறு உலகப் பார்வை கொண்ட இந்தியத் தலைவர்கள் மேற்கண்ட ஆட்சிப் பகுதி தேசியத்தில் (Territorial Nationalism) ஒரே கருத்துடையவர்களாக இருந் தார்கள்.

இதன் தவிர்க்க முடியாத தருக்க முடிவாக அவர்களுக்கு ஓர் ஒற்றை தேசிய மொழி தேவைப் பட்டது. அதற்கு, இந்தி மொழியைத் தேர்ந்தெடுத் தார்கள். அரசமைப்புச் சட்டத்தில் இந்தியை அலுவல் மொழி எனக் குறிப்பிட்டாலும், இவர்களது புனைவான இந்தியத் தேசியத்தின் தேசிய மொழியாகவே அதை நடைமுறையில் மாற்றினார்கள். “சமற்கிருத மயமாக்கப்பட்ட இந்தி’’ என்பதிலும் பெரிய வேறுபாடு இவர்களிடையே இல்லை.

வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்திய நேருவின் ஆட்சியில் மிகத் தீவிரமான போராட்டத் திற்குப் பிறகே மொழிவழி மாநிலங்கள் அமைய முடிந்தது. இச்சிக்கலில் தீவிர இந்தியவாதியாக அம்பேத்கர் விளங்கினார். மொழிவழி மாநிலத்தையே எதிர்த்தார்.

தனி நாடாக விளங்கிய காசுமீரின் மீது படை யெடுத்து பாகிஸ்தானோடு பங்கு போட்டுக் கொண்டதிலோ, நாகாலாந்து - மிசோரம் - மணிப்பூர் போன்ற தனித்தன்மையான தேசங்களின் மீது படை நடத்தி அவற்றை இந்தியாவின் மாநிலங்களாக மாற்றிக் கொண்டதிலோ, தனி அரசோடு விளங்கிய சிக்கிம்மை இந்தியாவின் ஆட்சிப் பகுதியாக மாற்றிக் கொண்டதிலோ வலதுசாரி -- இடதுசாரி, மதவாத -- மதச்சார்பற்ற, முற்போக்கு - பிற்போக்கு இந்தியத் தேசியத் தலைவர்களிடையே ஒரு வேறுபாடும் இல்லை.

அங்கங்கே நடக்கும் சில மிகை அத்துமீறல்களைக் கண்டித்து அவ்வப்போது சிலர் முனகுவார்கள் என்பதைத் தவிர இந்த இந்தியத்திற்குள் எந்த வேறுபாட்டையும் காண முடியாது.

இதனால்தான் “காசுமீரைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை’’ என்று கண்ணையா குமாரிலிருந்து சீத்தாராம் யெச்சூரி வரை எல்லோரும் ஒரே‘தேசபக்தி’ கூக்குரல் எழுப்புகிறார்கள். தமிழீழ இனப் படுகொலையில் எல்லாத் தரப்பு வட இந்தியத் தலைவர்களும், ஒத்த கருத்தில் இருப்பதற்கும் இதுவே காரணம்! ஏழு தமிழர் விடுதலையில் அனைத்திந்தியத் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசுவதன் அடிப்படையும் இதுதான்!

காவிரிச் சிக்கலிலோ, முல்லைப் பெரியாறு சிக்கலிலோ அனைத்திந்தியத் தலைவர்கள் பலரின் அழுத்தமான மவுனத்திற்குப் பின்னணியும் இதுதான்!

இந்திய அரசியலும், இந்திய அரசமைப்பும் இவ்வாறு இருப்பதன் காரணமாகத்தான் இந்திய நீதிமன்றமும் பெரும்பாலான நேரங்களில் இது போன்ற வழக்குகளில் இவர்களுக்கு ஒத்த குரலில் பேசுகின்றது.

நேரு, அம்பேத்கர், இந்து மகா சபையினர், இடதுசாரிகள் அனைவருமே வலுவான இந்தியா, வல்லரசு இந்தியா என்ற முழக்கத்தில் ஒரே குரலில் பேசுகின்றனர். இதன்வழியாக அதிகாரக் குவிப்பதற்கு துணையாகவோ, மவுன சாட்சியாகவோ நிற்கின்றனர்.

இப்போது, மாட்டுக்கறி சிக்கலை முன்வைத்து தனி மனிதரின் உணவுப் பழக்கத்தையும் இந்துத்துவ வெறியர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற ஞாயமான எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், இதற்கான அடிப்படை “மதச்சார்பற்ற” இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் கூறு 48, பசுவிற்கு தனித்தப் பாதுகாப்பு வழங்குகிறது.

“மாநிலங்கள் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் நவீனமான அறிவியல் வழிப்பட்ட முறையில் ஒழுங்கமைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பசு, அதன் கன்றுகள் மற்றும் பிற பால் வழங்கும் விலங்குகள், பண்ணை உழைப்பு விலங்குகள் ஆகியவற்றை கொல்வதைத் தடை செய்து அவற்றின் இனங்களை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என அரசமைப்பின் உறுப்பு 48கூறுகிறது.

மேல் தோற்றத்தில் கால்நடை வளர்ப்பு குறித்து கவலைப்படுவதைப் போல இதன் வாசகங்கள் தோன்றினாலும், இப்பிரிவின் உண்மை நோக்கம் அதுவல்ல!

இச்சட்டப்பிரிவு குறித்து அரசியல் நிர்ணய அவையில் நடந்த விவாதமும் அதை அடியொற்றி இதுகுறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புரையும் இதற்கு சான்று கூறும்.

அரசியல் நிர்ணய அவையில் பிரிவு 48-ஐ, (அன்றைக்கு 38கி) முன்மொழிந்து பேசிய தாக்கூர் பர்காவா மற்றும் சேத் கோவிந்த தாஸ் ஆகியோர் முதலில் பசுப்பாலின் மேன்மையையும், வேளாண் உழைப்புக் கால்நடைகளின் தேவையையும் அவற்றின் பற்றாக்குறையையும் பட்டியலிட்டு பேசினர். இவ்விலங்குகளை எக்காரணம் கொண்டும் கொல்லக் கூடாது என வலியுறுத்தினர்.

சையது முகம்மது சாய்துல்லா என்ற உறுப்பினரும் வேறு சிலரும், இதனை மாற்றுப் புள்ளி விவரங்களோடு எதிர் கொண்டனர். பால் மறுத்துப் போன விலங்குகளையோ உழைக்கத் தகுதியற்ற விலங்கு களையோ தொடர்ந்து பராமரிப்பது உழவர்களுக்குப் பெரும் சுமையாக அமையும்,அவ்விலங்குகளுக்கும் பெரும் துயரமாக இருக்கும் என மறுப்புரைத்தனர்.

இதில், திக்குமுக்காடிய மேற்சொன்ன இந்துத்துவ வாதிகள் தங்களது உண்மை நோக்கத்தை வேறு வழியின்றி வெளிப்படையாகக் கூறினர்.

“எங்கள் மத வழிபாட்டுச் சின்னம், எங்கள் கடவுள் கிருஷ்ணருக்கு விருப்பமான விலங்கு! எனவே பசுவை கொல்வதை நாங்கள் ஏற்க முடியாது. பசுவின் உயிர் வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்க வேண்டும்” என வாதிட்டனர்.

வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கரின் பெரு முயற்சிக்குப் பிறகு இப்பிரிவை அடிப்படை உரிமை என்ற பகுதிக்குப் பதிலாக ‘வழிகாட்டும் நெறி’பகுதியில் சேர்க்க ஏற்றுக் கொண்டனர்.

இவ்வாறு இன்று மாட்டுக்கறி உணவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் எழுப்பும் கூக்குரலுக்கு அன்றைக்கே அரசமைப்புச் சட்ட ஏற்பு ஒருவகையில் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வழிகாட்டும் நெறியை ஏற்றுக் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பசு மற்றும் வேளாண் கால்நடைகளை இறைச்சிக்காகக் கொல்வதை தடை செய்து, சட்டங்கள் இயற்றின. இது குறித்து வழக்குகள் குவிந்தன. இதன் தொடர்ச்சியாக 2005இல் 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் இச்சிக்கல் குறித்து விவாதித்துத் தீர்ப்பு வழங்கியது.

அன்றையத் தலைமை நீதிபதி ஆர்.சி. லகோத்தி தலைமையிலான அரசமைப்பு ஆயம் வழங்கியத் தீர்ப்பு, இச்சட்டப்பிரிவின் உண்மையான நோக்கத்தை எடுத்துக் கூறியது.

“பால் கறக்காது போனாலும், பசுவை மட்டும் கொல்லக்கூடாது ஏனெனில் பசு இந்துக்களின் தெய்வம். காளை உள்ளிட்ட பிறவும் தெய்வம்தான் எனினும் அவை அடுத்த நிலையிலானவை. அவை பயன் பாடற்றுப் போனால் கொல்வதற்குத் தடையில்லை. அதன் இறைச்சியை உண்ணவும் தடையில்லை” என தீர்ப்புரைத்தது.

அதன்பிறகு, எந்த மாட்டிறைச்சி தின்றாலும் அது பசு மாட்டிறைச்சி இல்லை என மெய்ப்பிக்கும் சிக்கல் உண்பவரது தரப்பில் மாற்றப்பட்டது. அண்மையில், மகாராட்டிர மாநில அரசு பிறப்பித்துள்ள சட்டம், பசு மாட்டிறைச்சி வைத்திருந்தார் என மெய்ப்பிக் கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை என கூறுகிறது. இந்த சட்டமும் சரி என உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில்கூட இவ்விலங்குகள் பயனற்றவை என சான்று பெற்ற பிறகே உணவுக்காக கொல்லப்பட முடியும்.

இவ்வாறு உணவு பழக்க வழக்கம் தொடர்பாகவும், இந்துத்துவக் கோட்பாடு மதச்சார்பற்றதாகச் சொல்லப்படும் அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

எனவே, இடதுசாரித் தோழர்கள் நம்பச் சொல்வது போல் மதச்சார்பற்ற இந்தியத் தேசியமோ, வேற்றுமையில் ஒற்றுமை வழங்கும் பன்மைத் தன்மையான இந்தியத் தேசியமோ, தேசிய இனங்களின் வாழ்வுரிமையை ஏற்கும் சனநாயகமான இந்தியத் தேசியமோ இல்லை என்பது தெளிவாகும்.

இந்தியத் தேசியத்தை எவ்வளவு முற்போக்கு எண்ணத்தோடு உரத்து முழங்கினாலும், முதல் சுற்றில் மட்டுமல்ல இறுதிச்சுற்றிலும் வெல்வது இந்துத்துவமாகவே இருக்கும்!

ஏனெனில் இந்தியத் தேசியத்தின் இன அடிப்படை ஆரிய இனவாதம், மெய்யியல் அடிப்படை பிராமணிய வர்ணாசிரம வாதம்; மத அடிப்படை வேதமதவாதம்; பொருளியல் அடிப்படை கட்டற்ற முதலாளியம் ஆகும்!

0 கருத்துகள்:

பதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை மண்ணின் மாணவர்களுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் தாக்குதல்!




பதினோராம் வகுப்புக்கு மதிப்பில்லை

மண்ணின் மாணவர்களுக்கு எதிரான
தமிழ்நாடு அரசின் தாக்குதல்!

தோழர் கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம். 


கல்வி வணிகர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, தமிழ்நாடு அரசு பதினொன்றாம் வகுப்பின் தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விக்கு கணக்கில் கொள்ளப்படாது என்று அறிவித்திருக்கிறது. 

இவ்வறிவிப்பை வெளியிட்டு 14.09.2018 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி முதலாளிகளின் அழுத்தத்திற்கு தான் பணிந்ததை மறைத்து, 10, 11, 12 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு நடப்பது மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தைத் தருவதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். 

மேனிலைப் பள்ளி வகுப்பு என்பது (+2), பதினொன்று – பன்னிரெண்டு ஆகிய இரண்டு ஆண்டு படிப்புகளின் தொகுப்பாகும். இதில், பதினொன்றாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தாமல் தவிர்ப்பதும், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்ணை உயர்கல்விக்கு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும், கல்லூரிக் கல்விக்குள் நுழையும் மாணவர்களை முதலாமாண்டிலும் அடுத்த ஆண்டிலும் திக்குமுக்காடச் செய்கிறது. 

தன்நிதிப் பள்ளிகள், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தையே நடத்தாமல் இரண்டு ஆண்டுகளும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்தையே நடத்தி, செயற்கையாக தேர்ச்சியை உயர்த்திக் காட்டி, கல்விக் கொள்ளை நடத்துவதற்கு இது வாய்ப்பளிக்கிறது. 

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற சிறப்பு உயர்கல்வியில் நுழைவுத் தேர்வுகளில், பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்வித் தாள்கள் இடம்பெறுவதால், அதற்குள்ளேயே நுழைய முடியாமல் மாணவர்களை வெளியே நிறுத்துகிறது. 

பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தும் அரசுப் பள்ளிகள் மோசடியான இப்போட்டியில் பின்தங்கிப் போகின்றன. 

இந்த நெருக்கடியில் பெற்றோர்கள், தன்நிதி தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பணம் கொட்டி சேர்த்தாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டுமென்றும், அதில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்குத் தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் மிக நீண்டகாலமாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். 

இதனை ஏற்று, கடந்த கல்வியாண்டில் +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது, அத்தேர்வு மதிப்பெண்ணையும் உயர்கல்விக்கு தகுதியாக வரையறுப்பது, +2 தேர்வுக்கான மொத்த மதிப்பெண்ணை 1200லிருந்து 600ஆகக் குறைப்பது என்ற முடிவுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தபோது அது கல்வியாளர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது. 

ஆனால், இது ஓராண்டு முடிந்த நிலையில் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்லும் அரசாணை 195 வெளியாகியுள்ளது. 

மேனிலைப் பள்ளிக் கல்வியில் +1, +2 ஆகியவை இடைநிலைக் கல்லூரிக் கல்வி போன்று, ஒன்றிலிருந்து ஒன்று தொடர்ச்சியாக இருக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டாண்டு படிப்பும் ஒருங்கிணைந்த (Integrated) படிப்பு ஆகும். இதில், ஓராண்டு படிப்பை (+1) வெட்டிப் பிரிப்பது மாணவர்களின் மேல் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படாது! மாறாக, தன்நிதி தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கும், தனிப்பயிற்சி என்ற பெயரில் நடத்தப்படும் மதிப்பெண் பட்டறைகளுக்குமே பயன்படும்! 

இப்போது இந்திய அரசு, “நீட்” தேர்வை திணித்துள்ளது. அந்த “நீட்” தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி தான் வினாத்தாள் அமையும் என்று அறிவித்துள்ளது. “நீட்” தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே மருத்துவக் கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது மேனிலைப் படிப்பில் முதல் வரிசை மதிப்பெண் வாங்குவதை தேவையற்றதாக்கிவிட்டது. மாநிலப் பாடத்திட்ட மேனிலைப் பள்ளிப் படிப்பையே மதிப்பற்றதாக்கிவிட்டது. 

இச்சூழலில், +1 வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டு, ஆனால் அந்த மதிப்பெண் உயர் கல்விக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு – இன்னும் ஒரு தாக்குதலாக அமைந்திருக்கிறது. 

+1 பாடங்களை நடத்தும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள், 11 - 12 ஆகிய இரண்டாண்டுகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே நடக்கும் தனியார் தன்நிதி பள்ளி மாணவர்களோடு போட்டியிடும்போது, குறை வாய்ப்பு பெறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

பள்ளிக் கல்வி முற்றுமுழுக்க தனியார் கொள்ளைக்குத் தங்குதடையின்றி திறந்து விடுவதற்கே இது வழிவகுக்கும்! பாடத்தின் செய்தி தெரியாமல், உயர் மதிப்பெண் மட்டுமே வாங்கும் மாணவர்களைத்தான் இது உருவாக்கும். 

இப்போது இந்திய அரசு, பல்கலைக்கழக நல்கைக் குழுவைக் கலைத்துவிட்டு, அந்த இடத்தில் உயர்கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை நிறுவி, உயர்கல்வி முழுவதையும் தனியார்மயமாக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது. 

“நீட்” தேர்வும், உயர்கல்வி தனியார்மயமாக்கலும் தமிழ்நாட்டில் பணம் படைத்த வெளி மாநிலத்து மாணவர்கள் கணக்கின்றி நுழைவதற்கு வாய்ப்பளிக்கும். இப்போது, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை 195 – பள்ளிக் கல்வியை முற்றிலும் தனியார் கைக்குக் கொண்டு சென்றுவிடும்! 

மண்ணின் மக்களான ஏழை எளிய மாணவர்கள், பள்ளிக் கல்வியிலிருந்தும் உயர்கல்வியிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்! 

எனவே, தமிழ்நாடு அரசு அரசாணை எண் 195-ஐ திரும்பப் பெற வேண்டும்! பதினோராம் வகுப்புக்கு நடக்கும் பொதுத்தேர்வின் மதிப்பெண் உயர்கல்விக்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்! 

பதினோராம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது, அதுவும் மேல் கல்விக்கு தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படுவது மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் என்பது பொருந்தாத காரணமாகும். 

அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமை, சோதனைக் கூடம், வகுப்பறை, கல்விக் கருவிகள், கழிப்பறைகள், விளையாட்டிடங்கள் ஆகியவை உரிய அளவில் இல்லாமை ஆகியவையே இப்பள்ளிகள் பின்தங்கியிருப்பதற்கு முதன்மைக் காரணமாகும். அங்குள்ள மாணவர்கள் இந்தத் தடைகளுக்கிடையே படிப்பதால்தான் கடைசி நேரத்தில் பொதுத்தேர்வுக்கு தங்களை அணியப்படுத்திக் கொள்ள வேண்டிய அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். 

இன்னொருபுறம், அனைவரும் தேர்ச்சி, அதிகம் பேர் அதிக மதிப்பெண் என்ற வணிகப் போட்டியில் இயற்கை நிலைக்குப் பொருந்தாத வகையில், தனியார் தன்நிதிப் பள்ளிகளும் தனிப்பயிற்சி மதிப்பெண் பட்டறைகளும் மாணவர்களை பொதுத்தேர்வு குறித்த அச்சத்திலேயே வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வினாடியும் மாணவர்கள் மதிப்பெண்ணை நோக்கி அச்சத்தோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 

இவைதான் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகிறது. 

பாடச் சுமையைக் குறைப்பது, கற்பித்தல் முறையை மேம்படுத்துவது, ஆண்டுக்கு இரு பருவ (செமஸ்டர்) தேர்வு முறையைக் கொண்டு வருவது, தொடர் மதிப்பீடு நடத்துவது, மாணவர்களின் பன்முகத் திறன்களையும் தகுதியாக மதிப்பிடுவது போன்ற மாற்று வழிகளை கல்வியாளர்களின் துணை கொண்டு கண்டுணர்ந்து, கல்வித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மேம்படுத்த வேண்டும். 

நோய்க்கு மருந்து தேடுவதைவிடுத்து, இன்னொரு பெரிய நோயை மருந்தாகக் கொடுக்கிற பணியைத்தான் தமிழ்நாடு அரசு இப்போது செய்துள்ளது!

தமிழ்நாடு அரசு ஆணை 195-ஐ திரும்பப் பெற வேண்டும்! கல்வியாளர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் பெற்றோர்களும் தரமான கல்வி என்ன, முன்னேற்றத்திற்கான கல்வி என்ன என்பது குறித்த விழிப்புணர்வு பெற்று, தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராகத் தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை முறியடிக்க ஒன்றுதிரள வேண்டும்! 

0 கருத்துகள்:

நெல் கொள்முதலும் நிறுத்தப்படும் ரேசன் நிலையங்களும் மூடப்படும்!




நெல் கொள்முதலும் நிறுத்தப்படும்
ரேசன் நிலையங்களும் மூடப்படும்!

தோழர் கி. வெங்கட்ராமன் 

பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

தமிழ்நாடு அரசு உழவர்களிடம் நேரடி நெல் கொள்முதல் செய்வதை விரைவில் நிறுத்தப்போகிறது. அதேபோல், நியாய விலைக்கடைகளையும் மூடப் போகிறது! மிக அருகில் நெருங்கி வரும் இந்த ஆபத்தை உரிய அளவு உழவர் அமைப்புகளும், அரசியல் இயக்கஙகளும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை!
கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு இதற்கான திட்டமிட்ட நகர்வுகளை நிகழ்த்தி வருகிறது என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இப்போது அந்த நகர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்திய அரசின் ஆணைப்படி தமிழ்நாடு அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த ஆகத்து 31ஆம் நாளோடு மூடியது.
உழவர்களின் எதிர்வினை காரணமாக இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று, 2018 செப்டம்பர் 30 வரை உழவர்களிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
உண்மையில், பெரும்பாலான அறுவடை அக்டோ பரில்தான் நடக்க இருக்கிறது. அந்த நேரத்தில் அரசுக் கொள்முதல் நிலையங்கள் செயல்படாது! பெரும்பாலான உழவர்கள், மழைக்காலத்தில் நெல்லை பாதுகாப்பாக வைக்க முடியாமல் வந்த விலைக்குத் தனியார் வணிகர் களிடம் விற்கும் மிகப்பெரிய அவலம் நிகழ இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் இந்திய அரசு நிறுவனமான - இந்திய உணவுக் கழகத்தின் முகவராக மாறிச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் தனித்த செயல்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன.
இந்திய உணவுக் கழகம் தமிழ்நாட்டில், எவ்வளவு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறிவிக் கிறதோ அதை மட்டும் கொள்முதல் செய்வது என்ற நிலை நடந்து வருகிறது.
மோடி பதவிக்கு வந்தவுடன் சாந்தக்குமார் என்பவர் தலைமையில் அமர்த்திய ஆய்வுக்குழு 2015இல் அளித்த பரிந்துரையினை ஏற்று, இனி இந்திய உணவுக் கழகத்தையும் (எப்.சி.ஐ.) படிப்படியாகக் கலைத்து விடுவது என மோடி அரசு அறிவித்துவிட்டது. அதன் செயல்பாட்டு முடிவைத்தான் தமிழ்நாடு அரசின் வாயிலாக இப்போது அறிவித்திருக்கிறது.
மறுபுறம், கடந்த 2017 சூலை 26இல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிக்கையின்படி மிகப்பெரும் பாலான தமிழ்நாட்டுக் குடும்பங்களை ரேசன் கடையி லிருந்து ஒதுக்கி வைக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 2 கோடியே 1 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில் மாதம் 8,300 ரூபாய் ஊதியம் பெறுவோர், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், வருமான வரி அல்லது தொழில் வரி கட்டுவோர், வீட்டில் குளிர் சாதன வசதி செய்திருப்போர் என்று பல வகையில் வரம்பு கட்டி பெரும்பாலான குடும்பங்களை விலக்கி வைக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது. ஆயினும், அது தற்காலிகமாக செயலில் வராமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் முற்றிலுமாக உழவர்களிடமிருந்து கொள்முதலும், ரேசன் கடைகளில் உணவுப் பொருள் வழங்கலும் நிறுத்தப்பட இருக்கிறது. பெரும்பாலான உழவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள், வாழ வழியின்றி நிலத்தையும் தங்கள் வாழ்விடத்தையும் விட்டு வெளியேறுவதா என்ற நிலைமைக்குத் தள்ளப்பட இருக்கிறார்கள்.
இந்த நெருக்கடியை இப்போதாவது உணர்ந்து, உழவர்களும் ரேசன் கடைகளை சார்ந்து வாழும் ஏழை நடுத்தரக் குடும்ப மக்களும் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புப் போராட்டங் களிலும், முயற்சிகளிலும் இறங்க வேண்டும்.
இல்லையென்றால், மிகப்பெரும் ஆபத்து தமிழ்நாட்டு மக்களை கவ்விக் கொள்ளும்!

0 கருத்துகள்:

ஆரியத்தின் இரட்டை நாக்கு..!


ஆரியத்தின் இரட்டை நாக்கு..!!" 

ஐயா கி.வெங்கட்ராமன் அவர்கள், 
 பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


"நேற்று (17.09.2018) பெரியாரின் 140ஆவது பிறந்தநாள்! இதனையடுத்து, பெரியார் பற்றாளர்கள் தமிழகமெங்கும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இந்நிலையில், சென்னை அண்ணா சாலையிலும், திருப்பூர் தாராபுரத்திலும் பெரியார் சிலைகளை சிலர் அவமரியாதை செய்துள்ளனர்.
சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பு வீசிய பா.ச.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் செகதீசன், அங்கேயே காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். தாராபுரத்தில் உடுமலை சாலை தீவுதிடல் பூங்காவிலுள்ள பெரியார் சிலையை அவமரியாதை செய்ததாக செங்கல் சேம்பர் உரிமையாளரின் மகன் நவீன் குமார் என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
நிலைமை இவ்வாறிருக்க, நேற்று (17.09.2018) திருச்சியில் பா.ச.க. நடத்திய அமைப்புச் சாரா தொழிலாளர்களின் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராசன் அவர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் தங்கள் கட்சியினரே இல்லை என்றார். அவருக்குப்பின் பேசிய நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் அதை வழிமொழிந்ததோடு, “தமிழ்த் தீவிரவாதிகள்தான் அவ்வாறு செய்திருப்பர்” என்று பேசியுள்ளார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் - பெரியாரின் கருத்துகளை திறனாய்வு செய்கிறது. திராவிடக் குழப்பவாதத்தை எதிர்க்கிறது. ஆனால், அதற்காக பெரியார் சிலையை அவமரியாதை செய்வதை பேரியக்கமும், தமிழ்த்தேசியர்களும் ஒருபோதும் ஏற்பதற்கில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கம் நேற்றைய நிகழ்வுகள் உள்ளிட்டு, பெரியார் சிலை ஆரியத்துவாவாதிகளால் இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் கண்டித்து வருகிறது.
ஒரு விடயத்தை தான் பேசிவிட்டு, பின்னர் பேசவில்லை என மறுப்பது ஆரியத்துவா வாதிகளுக்குப் புதிதானதல்ல!
காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பார்கள். ஆனால், கோட்சேவுக்கு விழா எடுப்பார்கள்! பெரியார் சிலைகளை அகற்ற வேண்டுமென முகநூலில் எழுதிவிட்டு, தான் அவ்வாறு எழுதவில்லை - தனது அட்மின் அவ்வாறு எழுதிவிட்டதாகக் கூறி தப்ப முயன்றார் எச். இராசா! இப்போதுகூட, உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டு அவ்வாறு தான் பேசவே இல்லை என்று வாதிடுகிறார் எச். இராசா!
இதை எழுதும் இந்த நிமிடம் வரை, பெரியார் சிலையை அவமரியாதை செய்த செகதீசனை பா.ச.க. தனது கட்சியை விட்டு நீக்கி அறிவிப்பு வெளியிடவில்லை. ஆனால், பா.ச.க. பெயர் பொறித்த அட்டையுடன் கைது செய்யப்பட்ட அவரை - தனது அமைப்பே இல்லை என்று வாதிடுகிறது பா.ச.க.! பா.ச.க. தப்பித்தவறி கூட உண்மையைப் பேச விரும்புவதில்லை! இதுதான் ஆரியத்தின் இரட்டை நாக்கு!"

0 கருத்துகள்:

ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு!


ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநரின் எதிர்போக்கு! 


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


நீண்டகாலக் காத்திருப்புக்குப்பிறகு தமிழ்நாடு அமைச்சரவை, இராசீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தீர்மானித்து, அதனைப் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் அதனை இன்று (13.09.2018) இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.
உறுப்பு 161-இன்படி முன் விடுதலை குறித்து மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் தகவலாகவோ, கருத்துக் கேட்டோ அனுப்புவது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்!
உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது; எந்த நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது! உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு என்பது ஆளுநரின் ஆணையாக வெளியிடப்படுகிறதே அன்றி, இதில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு அதிகாரம் (Personal Discretion) எதுவும் இல்லை! ஆளுநர் 163 (1)-இன்படி அமைச்சரவை முடிவை செயல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பு மட்டுமே கொண்டவர் ஆவார்.
தண்டனைக் குறைப்பு தொடர்பான மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை சாம்ஷேர்சிங் - எதிர் - பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் (1974 AIR 2192) நீதிபதி ஏ.என். ரே தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் தெளிவுபட கூறியிருக்கிறது.
இதன்பிறகு, மாரூராம் வழக்கில் (1981) நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் இன்னும் விரிவாகவும் - தெளிவாகவும் கூறிவிட்டது.
“ஒரு மாநில ஆளுநர் விரும்புகிறாரோ இல்லையோ உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரைக்கு அவர் கட்டுப்பட்டவர் ஆவார். முன் விடுதலை அளிப்பதில் ஆளுநர் சுயேச்சையான எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆளுநர் என்பவர் உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவம் ஆகும்” என்று உறுதிபடக் கூறியிருக்கிறது.
இதை அடியொற்றி நளினி - எதிர் - தமிழ்நாடு ஆளுநர் என்ற வழக்கில் (25.11.1999), சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவையின் முடிவின்படியே ஆளுநர் செயல்பட்டாக வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது.
நளினி மற்றும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தங்களுக்கு மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கி விடுதலை அளிக்க வேண்டும் எனக் கோரி அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா பீவிக்கு மனு அனுப்பியிருந்தனர். மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் காத்திராமல், ஆளுநர் பாத்திமா பீவி, நளினி உள்ளிட்ட நால்வரின் மனுவை தன்னிச்சையாக நிராகரித்தார்.
அதனை எதிர்த்து நளினி மற்றும் மூவர் தொடுத்த மேற்கண்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவை பரிந்துரைப்படிதான் ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும் எனத் தீர்ப்புரைத்தது.
எனவே, உறுப்பு 161-இன்படியான தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை எந்தவித குறுக்கீட்டுக்கும் இடம் தராமல் செயல்படுத்த வேண்டும் என்பதே சட்டநெறியாகும்!
ஆளுநர் புரோகித் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து அறிக்கை அனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டத்தை ஆளுநரே கவிழ்க்க முயல்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
ஒருபுறம் தமிழ்நாட்டுக்கு வந்து சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் இராசீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை மன்னித்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இப்போது காங்கிரசுக் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுரஜ்வாலா வழியாக ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக அறிக்கை கொடுப்பது காங்கிரசுக் கட்சியின் தமிழினப் பகைப் போக்கையும், நயவஞ்சக இரட்டை வேடத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
வழக்கம் போல் பா.ச.க. சுப்பிரமணியசாமி போன்றவர்கள் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக நஞ்சு கக்கி வருகிறார்கள். இப்போது ஆளுநர் இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவது, வடநாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படுகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஆணையாக வெளியிட வேண்டும் என்பதில் உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். சட்டநெறிப்படியும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்திற்கு மதிப்பளித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
தமிழின உணர்வாளர்கள் விழிப்போடு இருந்து, ஏழு தமிழர் விடுதலையில் உறுதியாக செயலாற்ற வேண்டும்!

0 கருத்துகள்:

உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது : ஏழு தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்!



உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது : 

ஏழு தமிழர்களையும்
உடனே விடுதலை செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

நாம் நீண்ட நாளாக வலியுறுத்தி வருவதை உறுதி செய்வதுபோல், ஏழு தமிழர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 

இராசீவ் கொலையில் தண்டனை வழங்கப்பட்டு கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக - சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (06.09.2018) தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி, மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதில் மாநில அரசின் அதிகாரம் கட்டற்றது; எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் செயல்படக்கூடியது என்று மாரூராம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடங்கி, இறுதியில் இதே வழக்கில் (இந்திய ஒன்றிய அரசு - எதிர் - முருகன் (எ) சிறீகரன் மற்றும் பிறர்) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரை தெளிவுபடுத்தியுள்ளது. 

இதனடிப்படையில், தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்து உறுப்பு 161இன்படி ஆளுநர் வழியாக ஆணையிட்டு ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து நாமும் பல்வேறு இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் அறிவுறுத்தி வந்தோம். இப்போது, நீதிபதி இரஞ்சன் கோகாய் அமர்வு இன்னும் உறுதியாக தெளிவுபடுத்திவிட்டது! 

ஏழு தமிழரையும் விடுதலை செய்ய 2014 – பிப்ரவரி 18இல், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

எனவே, செயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சரவை முடிவாக ஆளுநருக்கு அனுப்பி பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

0 கருத்துகள்: