கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

Showing posts with label கண்டன அறிக்கை. Show all posts

வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு சூறையாடாதே! - ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!



வீடற்றவர்களாகத் துரத்தப்பட்டுள்ள சென்னை குடிசைப்பகுதி மக்களிடம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணம் கேட்டு  சூறையாடாதே!

தமிழ்நாடு அரசுக்குத்
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் கண்டனம்!

சென்னை புளியந்தோப்பு பகுதியில், கேசவப்பிள்ளை பூங்கா (கே.பி. பார்க்) குடியிருப்பில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அடித்தட்டு மக்களை தமிழ்நாடு அரசு வீடற்றவர்களாக மாற்றியுள்ளது. இந்த கே.பி. பார்க் குடியிருப்பு என்பது, கேசவப்பிள்ளை என்ற நல்லெண்ணம் கொண்ட செல்வந்தர் அரசுக்குக் கொடையாக வழங்கிய மனையில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம், வீடற்ற மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்பாகும். இதில் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் மிகப்பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

கடந்த அ.தி.மு.க. அரசு, 2016 சூலையில் கே.பி. பார்க் மைதானத்தில் குடிசையமைத்துத் தங்கயிருந்த இம்மக்களுக்கு புதிதாக வீடு கட்டித் தரப் போவதாகக் கூறி, அதிரடியாக காவல்துறையின் உதவியோடு அம்மக்களை காலி செய்தது. போராட்டம் நடத்திய மக்களிடம் 18 மாதங்களில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு வழங்குவதாக அ.தி.மு.க. அரசு அறிவித்தது. அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னும் அவர்களுக்கு வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு 2021 பிப்ரவரியில் யார் யாருக்கு எந்தெந்த வீடு என டோக்கன் கொடுப்பதாக அறிவித்தார்கள். 

டோக்கன் வாங்க முயலும்போது தான், இது இந்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் என்றும், ஒவ்வொரு குடும்பத்தினரும் 1.5 இலட்சம் ரூபாய் பங்குத் தொகை செலுத்தினால்தான் வீடு ஒப்படைக்கப்படும் என்றும் திடீர் நிபந்தனை விதித்தனர். 

அந்த நிபந்தனையின் கீழ் குடியேறிய மக்கள் அரசு கூறிய பங்குத் தொகையை செலுத்த முடியாததால், அந்த ஒன்பது மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டுக்கான இணைப்பையும், தண்ணீர் இணைப்பையும் துண்டித்தனர். ஒவ்வொரு குடம் தண்ணீர் பிடிப்பதற்கும் பல மாடிகளிலிருந்து கீழறங்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்ட மக்களில் பெரும்பாலோர், அந்தப் பகுதிகளிலேயே தகரக் கொட்டைகளிலோ, வாய்ப்புள்ள சிலர் வேறு இடங்களில் வாடகை வீடுகளிலோ குடியேறினர். இவ்வாறு 864 குடும்பங்கள் அடிப்படை வாழ்வுரிமை மறுக்கப்பட்டு தத்தளிக் கின்றனர். 

இதுபோதாதென்று, இப்போது கடந்த வாரம் அரும்பாக்கத்திலிருந்து அகற்றப்பட்ட குடிசைப்பகுதி மக்கள் ஏறத்தாழ 100 குடும்பத்தினர் இதே கே.பி. பார்க் குடியிருப்புப் பகுதிக்கு விரட்டப் பட்டுள்ளனர்.  
“சிங்காரச்சென்னை” என்ற பெயராலும், “எழில்மிகு சென்னை” என்ற பெயராலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு நகரின் அழகைக் கெடுப்பதாகக் கருதும் ஆட்சியாளர்கள், இவர்களை மட்டுமே நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஊரறிய உலகறிய சென்னையின் முக்கிய நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடிக் கட்டடங்களையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் கட்டியிருக்கிற பெரிய ஆக்கிரமிப்பாளர்களை கண்டு கொள்ளாமல் அந்த ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவதற்கு பல்வேறு விதித் தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். 

தாராளமய – உலகமயத்தின் இன்னொரு சூறையாடலாக இது நிகழ்ந்து வருகிறது. இதனை இனியும் அனுமதிக்க முடியாது! மார்வாடிகள், குசராத்திகள், பனியாக்கள் என தமிழ்நாட்டிற்கு வந்தவர்களெல்லாம் இதே சென்னையில் வளமாய் வாழ்ந்து கொண்டிருக்க, சொந்த மண்ணின் தமிழ் மக்களோ தமிழ்நாடு அரசாலேயே இப்படி அலைக்கழிக்கப்படுவது வேதனையானது!

எனவே, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே குடியிருப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள கே.பி. பார்க்கின் 864 குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இந்தியத் தலைமையமைச்சரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு மக்களிடமிருந்து தலா 1.5 இலட்சம் பங்குத் தொகை என்ற நிபந்தனையை இரத்து செய்ய வேண்டும். அதை வழங்கிய வேண்டிய சட்டநிலைமை இருந்தால், அந்தப் பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். துண்டிக்கப்பட்ட லிப்ட் மற்றும் குடி தண்ணீர் இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை குடிசை மாற்று வாரியத் திட்டத்தோடு இணைக்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!



ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! 

எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


இன்று (26.04.2021) நடந்த எட்டுக் கட்சிக் கூட்டத்தில் கோவிட் தொற்று ஆக்சிஜன் தேவைக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி அலகை நான்கு மாதங்களுக்கு இயங்க அனுமதிப்பது என்றும், நோய்த் தொற்று தேவைக்கேற்ப அதன் காலத்தை நீட்டிப்பது என்றும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிக்கிறது. 

இந்திய அரசின் பி.எச்.இ.எல். தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு மாற்று நிறுவனங்களின் வழியாக தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கும்போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிப்பது தீய உள்நோக்கம் கொண்டதாகும். 

ஸ்டெர்லைட் ஆலையில் அமைந்துள்ள ஆக்சிஜன் தயாரிப்பு அலகுதான் தேவை என்றால், உடனடியாக அவசர சட்டம் நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அந்த ஆலையைக் கையகப்படுத்தி, இதை செய்திருக்க முடியும். மாறாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் குழுவினர் கண்காணிப்பில் வேதாந்தா நிறுவனமே மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கலாம் என அனுமதிப்பது நாளைக்கு நிரந்தரமாக அந்த ஆலையைத் திறந்துவைக்க வாய்ப்பு ஏற்படுத்தும். 

ஒருவேளை, ஸ்டெர்லைட்டிலுள்ள பொறியாளர்கள்தான் இதை இயக்கத் தேவை என்றால், தமிழ்நாடு அரசே தனது பொறுப்பில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்போது, அந்த நாட்களுக்கு அந்த குறிப்பிட்ட வல்லுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

இந்த வழிகள் எதையும் கருதிப் பார்க்காமல், வேதாந்தாவின் நிர்வாகத்திலேயே ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் அலகை இயக்குவது, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான முன்னோட்டம் என ஐயப்பட இடமிருக்கிறது! 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய எட்டுக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று கூறிய கருத்தை கூட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தி.மு.க. பேராளர் கனிமொழி, அனில் அகர்வாலின் வேதாந்தாவின் பொறுப்பில் ஸ்டெர்லைட் ஆலையை அப்படியே வைத்துக் கொண்டு, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் மின்சாரம் தரலாம் என்று கூறிய ஆலோசனை அரசாலும் ஏற்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னால், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க வைக்கும் உள்நோக்கம் இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் பேராளர்களையும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெறச் செய்யலாம் என்பது கண்துடைப்பு வேலை! மேலும், இந்தக் குழுவில் இடம்பெறுவது என்ற முடிவை ஏற்காத மக்கள் இயக்கங்களும், பிறரும் பிளவுபடும் ஆபத்திருக்கிறது. வேதாந்தாவின் பொறுப்பில் ஆலை இருக்கும்போது  பொதுமக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. 

மொத்தத்தில், மருத்துவ ஆக்சிஜன் தேவைக்கு மாற்று வழிகளைக் கருதிப் பார்க்காமல் ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் அலகை இயங்க வைப்பது என்ற முடிவு தூத்துக்குடி மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்! 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் போலவே, இதே வேதாந்தா குழுவினருக்குச் சொந்தமான ஆலைகள் இராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் (Hindustan Zinc Limited - HZL), சத்தீசுகட் மற்றும் ஒடிசா (Bharat Aluminium Company - BALCO), அரியானா (Cairn Oil & Gas), ஜார்கண்ட் (ESL Steel Limited), கோவா மற்றும் கர்நாடகா (Sesa Goa Iron Ore) ஆகியவை இயங்குகின்றன. இந்த உருக்கு ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்திக்கான வாய்ப்பு இருக்கிறபோது தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் கவனம் செலுத்துவது ஆக்சிஜன் தயாரிக்கிற நோக்கத்தோடா? தமிழர்களை பலிகொடுத்து அனில் அகர்வாலுக்கு உதவி செய்யும் உள்நோக்கத்தோடா என்ற ஐயம் வலுவாக எழுகிறது! 

எனவே, தமிழ்நாடு அரசு இம்முடிவைக் கைவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது என்றும், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு மாற்று வழிகளைக் காண வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 

சமற்கிருத செய்தித் திணிப்பு! ஆரியத்துவா ஆதிக்கம்! - ஐயா கி.வெங்கட்ராமன் கண்டனம்



சமற்கிருத செய்தித் திணிப்பு!
ஆரியத்துவா ஆதிக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 

ஐயா கி.வெங்கட்ராமன் கண்டனம்

இந்திய அரசின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகைத் தொலைகாட்சி உள்ளிட்ட அனைத்து மாநில மொழி தொலைக்காட்சிகளும் அன்றாடம் காலை 7.15 முதல் 7.30 வரை சமற்கிருத செய்தி அறிக்கையை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும், ஒரு வேளை அந்த நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால் அடுத்த அரைமணி நேரத்திற்குள் 15 நிமிடத்தை சமற்கிருதச் செய்தி ஒளிபரப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்று இந்திய அரசின் பிரசார் பாரதி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

அதுமட்டுமின்றி ஒவ்வொறு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் சமற்கிருத வாரந்திர செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்த குறிப்பிட்ட நேரம் வாய்க்கவில்லை என்றால் அந்த நாளுக்குள் நேரத்தை ஒதுக்கீடு செய்து அதனை கட்டாயம் ஒளிபரப்ப வேண்டும் என்றும் இந்த சுற்றறிக்கை கட்டளையிடுகிறது.

யாருக்கும் தாய்மொழி இல்லாத சமற்கிருதத்திற்கு நாள் தோறும் கால்மணிநேரம் செய்தி அறிக்கைக்காக ஒதுக்கீடு செய்தவதும் வாரந்தோறும் ஒளிபரப்புவதுமே மிகையானது.

இப்போது அது போதாதென்று ஒவ்வொறு நாளும் கால்மணிநேரம் தமிழ் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக சமற்கிருத செய்தியை ஒளிபரப்பவேண்டும் என்பது சமற்கிருதத் திணிப்பு மட்டுமின்றி தமிழ் நீக்கமும் ஆகும்.

இந்தியா ஆரியத்துவா நாடுதான் என்பதை சமற்கிருதத் திணிப்பின் மூலம் மோகன் பகவத் - மோடி அரசு நிலைநிறுத்த விரும்புகிறது.

ஏற்கெனவே பல துறைகளில் சமற்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவருவதன் தொடர் நடவடிக்கையாகவே இந்த சமற்கிருத திணிப்பு விளங்குகிறது. தமிழின ஒதுக்கலின் இன்னொறு நடவடிக்கையாகும் இது. தமிழினம் இதை ஒரு போதும் ஏற்காது.

இந்திய அரசின் செய்தி ஒளிபரப்பு துறை இந்த சமற்கிருதத் திணிப்பு சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



 

தமிழ்நாடு நாளில் புளியங்குடி காவல்துறையின் அடாவடிக்கு.. - தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


தமிழ்நாடு நாளில்
புளியங்குடி காவல்துறையின் அடாவடிக்கு..
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

இன்று (01.11.2020) தமிழ்நாடு நாளில் தமிழர் தாயகம் காக்க வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமைப் போராட்டத்தை அறிவித்து, துண்டறிக்கைப் பரப்புரையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது.

இதை தென்காசி மாவட்டம் – கடையத்தில் நடத்துவதற்கு தனது சொந்த ஊரான புளியங்குடியிலிருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் அவர்களை, பயங்கரவாதியை பிடிப்பது போல தென்காசி பேருந்து நிலையத்தில் சூழ்ந்து கொண்டு கடையம் பேருந்தில் ஏறவிடாமல் புளியங்குடிக்கே வலுக்கட்டாயமாக காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

அதேநேரத்தில், தோழர் பாண்டியனின் துணைவியார் ஒரு திருமணம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்த நிலையில், பூட்டியிருந்த அவரது வீட்டில் வெளியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து, புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் நான்கைந்து காவலர்கள் அத்துமீறி அவர் வீடு புகுந்து, வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒத்துழையாமைப் பரப்புரைத் துண்டறிக்கைகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஆளில்லாத வீட்டில் ஏன் நுழைகிறீர்கள் என்று கேட்டதற்கு, உங்களையும் கைது செய்து ஜீப்பில் ஏற்றுவேன் என்று ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மிரட்டியிருக்கிறார்.

வெளிப்படையாக அறிவித்துவிட்டு, அமைதியான முறையில் ஒத்துழையாமைப் பரப்புரை செய்யும் சட்டவழிப்பட்ட தடுத்து நிறுத்தியது மட்டுமல்லாமல், எந்த நீதிமன்ற ஆணையும் இல்லாமல் அத்துமீறி தோழர் க. பாண்டியன் வீடுபுகுந்த காவல்துறையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ்நாடு அரசுக் காவல்துறை அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் மீதும், அவரோடு சென்ற காவலர்கள் மீதும் சட்டநடவடிக்கை எடுத்து, மனித உரிமையையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, ஒருபக்கம் மொழிவழி தேசிய இன மாநிலமாகத் தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாள் என அறிவித்துவிட்டு, மறுபுறம் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க அரசமைப்புச்சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமைப்படி பரப்புரை செய்ய முயன்றவர்கள் மீது இவ்வாறான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தும் நடவடிக்கைகளையும் ஏவிவிட்டிருப்பது தமிழ்நாடு அரசின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு அளிக்கும் துணிச்சலில்தான் அலெக்ஸ்ராஜ் போன்ற கீழ்நிலை அதிகாரிகள் இவ்வளவு அத்துமீறி அப்பட்டமான சட்டமீறலில் ஈடுபடுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. அப்பட்டமான இச்சட்டமீறலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டிப்பதோடு, இதில் தொடர்புடையோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam