கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

Showing posts with label தீட்சிதர். Show all posts

நடராசர் ஆலயத்தை தமிழக அரசு ஏற்க தனிச் சட்டம் தேவை

சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்தியது செல்லாது என கடந்த 6.1.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு எதிர்பாராத ஒன்றல்ல என்ற போதிலும் நீதியின் பாற்பட்டதல்ல என்ற வகையில் ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த தி.மு.க ஆட்சியில் 30.4.2007 நாளிட்ட அரசாணைப்படி சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் நிர்வாகம் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் கொணரப்பட்டு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 2009ல் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது.
இவ்வழக்கு முதன்மை எதிர்த் தரப்பே (பிரதிவாதியே) இல்லாத வழக்கு போல் நடந்து முடிந்துள்ளது. தீட்சிதர்களுக்கு ஆதரவாக சுப்பிரமணியம் சாமி ஒரு வாதியாக தன்னை இணைத்துக் கொண்டார். எதிர்த் தரப்பில் தமிழக அரசோடு சிவனடியார் ஆறுமுக சாமியும், சிவ நெறியாளர் சத்தியவேல் முருகனாரும் இணைந்து கொண்டனர்.
ஆனால், முதன்மை எதிர்வாதியான தமிழக அரசு தீட்சிதர்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டது. அரசாணையை ஆதரித்து வலுவாக வழக்கு நடத்தவில்லை. மூத்த வழக்கறிஞர் யாரையும் நியமிக்காமல் ஏனோதானோ என்று இவ்வழக்கை நடத்தியது. இவ்வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு ஜெயலலிதா அரசின் இப்போக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தி.மு.க ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை ஆணையை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியான சூழலில் சிதம்பரம் தீட்சிதர்கள் ஒரு குழுவாக சென்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான செயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்ததையும் அப்போது அவர்களுக்கு இவ்வழக்கில் செயலலிதா அதரவு அளித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போதே தீட்சிதர்களோடு செயலலிதா கூட்டணி சேர்ந்துவிட்டார். அதன் விளைவாகவே தமிழக அரசு சார்பில் அக்கறையற்ற தன்மையில் இவ்வழக்கு இப்போது நடத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள வழக்கின் உண்மை நிலையை ஆய்ந்து முடிவு சொல்ல வேண்டிய நீதிமன்றம் தனது சட்டக் கடமையிலிருந்து தவறிவிட்டதை இவ்வழக்கை மேலோட்டமாக ஆய்வு செய்தால் கூடப் புரியும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தன் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்காக சுப்பிரமணியம் சாமி கேவலமான உத்திகளை தமது வாதத்தில் கையாண்டார். திராவிடர் கழகத்தில் இளமைக் காலத்தில் இருந்த போது “சிறீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ” என்று மேடைகளில் கருணாநிதி பேசியதையும், அன்று அவர் பேசிய கடவுள் மறுப்பு உரைகளையும் நீதிபதிகள் முன்னால் வைத்து, இன்றும் அத்திராவிடர் கழகத்தோடு தோழமை கொண்டுள்ள கருணாநிதியின் நோக்கம் இக் கோயிலை இடிப்பது தான் என்று கொஞ்சமும் கூச்சம் இன்றி நெஞ்சாரப் பொய் கூறினார். தேவாரம், திருவாசகம் பாடவேண்டும் என்று திமுக ஆட்சியினர் கூறுவது புனித மொழியான சமஸ்கிருதத்தை புறக்கணிப்பதற்குத்தான் என்று வாதிட்டார். ம.க.இ.க வினரும் அவர்களது தோழமை அமைப்பினரும் நீதிமன்ற ஆணைப்படி 2.3.2008 அன்று ஆறுமுகசாமியை தேவாரம் பாடவைக்க அழைத்துச் சென்றபோது தீட்சிதர்கள் தடுத்ததையும் அதையொட்டி காவல்துறையினரை தீட்சிதர்கள் தாக்கியபோது ஏற்பட்ட பதட்டத்தையும் ஏடுகள் படமாக வெளியிட்டன. அப்படத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டிய சுப்பிரமணியம் சாமி, "அக் கூட்டத்தில் நாத்திகம் பேசும் கம்யூனிஸ்ட் கலகக்காரர்கள் இருப்பதைப் பாருங்கள்" என்று கூறினார்.
ஊரறிந்த ஆத்திகரான ஜெயலலிதாவின் தமிழக அரசு வலுவாக இதில் தலையிட்டிருந்தால் “நாத்திகர்களின் சூழ்ச்சி” என்ற சுப்பிரமணியம் சாமியின் சூது வாதத்தை முறியடித்திருக்க முடியும்.
மற்றபடி நீதிமன்றத்திற்கு 'புதிய வெளிச்சம் பாய்ச்சக் கூடிய' எந்த வலுவான வாதத்தையும் சுப்பிரமணியம் சாமி வைக்கவில்லை.
தில்லை கோயில் நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்றது செல்லுமா செல்லாதா என்ற வழக்கானது தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் தீட்சிதர்கள் தனித்த சமயப் பிரிவினரா? அல்லது வகையறாவினரா? (Religious Denomination or section ) என்றக் கேள்வியையும் தில்லை நடராசர் கோயில் தீட்சிதர்கள் சொத்தாக அவர்கள் நிர்வாகத்திலேயே இருந்து வந்ததா என்ற கேள்வியையும் சுற்றியே நடந்து வருகிறது. இப்போதும் இவ்விரண்டு சிக்கல்கள் தான் முதன்மையாக விவாதிக்கப்பட்டன.
சீரூர் மடம் தொடர்பான வழக்கில் சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கும் இணைக்கப்பட்டு 1954-ல் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பைத்தான் தீட்சிதர்களும் சுப்பிரமணியம் சாமியும் முதன்மையாக முன்வைத்தார்கள்.
ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயத்தின் முன்னாள் இவ்வழக்கில் கர்நாடகாவின் சீரூர் மடம் தொடர்பான சிக்கலே பெரிதும் விவாதிக்கப்பட்டது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது தீட்சிதர்களுடைய மேல் முறையீடும் நிலுவையில் இருந்தது. தாங்கள் தனித்த சமயப் பிரிவினர் எனபதை தங்கள் மேல் முறையீட்டில் முதன்மை வாதமாக தீட்சிதர்கள் முன் வைத்தனர். தில்லை தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினரா என்ற அந்தக் குறிப்பிட்ட கேள்வி மட்டும் சீரூர் மட வழக்கோடு இணைத்து விவாதிக்கப்பட்டது.
தாங்கள் தனித்த சமயப் பிரிவினர் என தீட்சிதர்கள் வாதம் செய்வதற்கு ஒரு அடிப்படையான காரணம் உண்டு. தாங்கள் தனித்த சமயப் பிரிவினர் என்று மெய்ப்பித்துவிட்டால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 26–ன் பாதுகாப்பை அவர்கள் பெற்றுவிடலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 26-ன், குறிப்பாக அதன் உட் பிரிவுகள் (b) மற்றும் (d) ஆகியவற்றின் துணையோடு மீண்டுவிடலாம் என்பதே தீட்சிதர்களின் முயற்சி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 26 நான்கு உட் பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் இவ்வழக்குக்குத் தொடர்புடையவற்றை பார்க்கலாம்.
"26 பொது ஒழுங்கு, ஒழுக்கம் , சுகாதாரம் ஆகியவற்றிக்கு உட்பட்டு மதம் தொடர்பான செயல்பாடுகளை நிர்வகிக்கும் சுதந்திரம்; ஒவ்வொரு மத பிரிவினர் அல்லது மதத்தின் வகையறாவினர் கீழ்வருவனவற்றுக்கு உரிமைப்படைத்தவர்கள் ஆவர்.
(a)          .......................................................................................................................................................
(b)          மதம் தொடர்பான தங்கள் சொந்த செயல்பாடுகளை தாங்களே நிர்வகித்துக் கொள்ளலாம்.
(c)           .......................................................................................................................................................
(d)          சட்ட நெறிப்படி இவ்வாறான சொத்துகளை நிர்வாகம் செய்துகொள்ளலாம். ”

மேற்கண்ட அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு இணங்க தாங்கள் தனித்த மதப் பிரிவினர் (Religious Denomination ) என்றும், தில்லை நடராசர் ஆலயம் மற்றும் அதனுடைய சொத்துகள் தங்களுக்கு சொந்தமானவை என்றும் அதனால் அவற்றை தாங்களே நிர்வகித்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் தீட்சிதர்கள் வாதிடுகின்றனர்.
இது உண்மையா என்பதைப் பார்க்க வேண்டும.
சுப்பிரமணியம் சாமி வளைத்து வளைத்து மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகிற சீரூர் மடத்தீர்ப்பு அவர் கருதுகிற அளவுக்கு தீட்சிதர் தரப்புக்கு அவ்வளவு வலு கூட்டும் தன்மையது அல்ல. ஏனெனில், தீட்சிதர்கள் தனிமதப் பிரிவினர் என்று அத்தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது வெறும் கருத்துரையே (observation) தவிர தீர்ப்புரை அல்ல.
அது தீட்சிதர்களைப் பற்றி கீழ்வருமாறு கூறுகிறது.
“தீட்சிதர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள் ஆவர். இந்த வகுப்பை சேர்ந்த பிறர் யாரும் வழிபாடுப் பணிகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தனிச் சிறப்பான ஒட்டுமொத்த சிறப்புரிமை பல நூற்றாண்டுகளாக நிலைப்பட்டு அங்கீகரிக்கப்படுள்ளது”
இது எவ்வளவு வலுவற்ற வரையறை என்பது மேம்போக்காகப் பார்த்தாலே புரியும். மிகப் பெரும்பாலான கோயில்களில் பிராமணர்களே வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யும் அர்ச்சகர்களாக உள்ளனர். பார்ப்பனர்களுக்குள்ளேயே இவர்கள் தனிக் குழுவினராகவும் பல இடங்களில் கீழ் நிலையினராகவும் நடத்தப்படுகின்றனர். அதை வைத்து இவர்களை தனித்த சமயப் பிரிவினர் என்று யாரும் அழைப்பதில்லை. அவர்களும் அவ்வாறு அழைத்துக் கொள்வதில்லை.
உண்மையில் தீட்சிதர்கள் பெரிய புராணம் கூறும் “தில்லைவாழ் அந்தணர்கள்” அல்லர். தில்லைவாழ் அந்தனர்கள் ஆதி சைவர்கள். பார்ப்பன‌ர் அல்லர். தீட்சிதர்கள் 8-ஆம் நூற்றாண்டில் கேரளப்பகுதியிலிருந்து வந்தவர்கள். இது ஒருபுறமிருக்க...
சீருர் மடத்தீர்ப்பின் முக்கிய பலவீனமே அது அரசமைப்புச் சட்டப் பிரிவு 26 கூறுகிற மதப்பிரிவினர் (Religious Denomination) என்பதை ஓர் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ளாமல், ‘பிரிவினர்’ ( Denomination ) என்பதை மட்டும் தனிப்பிரித்து விவாதிக்கிறது. ஆக்ஸ்போர்டு அகர முதலியிலிருந்தும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தீர்ப்புகள் சிலவற்றிலிருந்தும் ‘பிரிவு’ அல்லது ‘பிரிவினர்’ என்பதற்கு அளித்துள்ள விளக்கத்தை மேற்கோள் காட்டி அதையே மதப் பிரிவினர் (Religious Denomination ) என்பதற்கான விளக்கமாக கொடுக்கிறது.
இந்தக் குறைபாட்டை பின்னால் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சரி செய்து தெளிவுரை வழங்கியிருக்கின்றன. அவற்றுள் 1961-ல் நீதிபதி கஜேந்திரக் கட்கர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் தர்கா குழு – எதிர்- சையத் உசைன் அலி என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு முக்கியமானது. (AIR ,1961 – SC- 1402) பிரிவு அல்லது பிரிவினர் என்பது மதத்தோடு இணைந்தே அரசமைப்புச் சட்ட பிரிவு 26-ல் குறிக்கப்படுகிறது என விளக்கமளித்த இந்த ஆயம் மதப் பிரிவினர் (Religious Denomination ) என்பதற்கு மூன்று கூறுகளை வரையறுப்பாக எடுத்து வைத்தது.
1)            ஆன்ம உயர் வாழ்வுக்காக மேற்கொள்ளப்படும் தனித்த மத நம்பிக்கைகளின் தொகுப்பு, ஒருவகை நம்பிக்கைகளின் அமைவு; அதாவது பொது நம்பிக்கை.
2)            பொது அமைப்பு முறை.
3)            தனித்த வகையானப் பெயர்.
இந்த வரையறுப்பின் படி தீட்சிதர்கள் தனி மதப்பிரிவினர் அல்லர்; தனி மத வகையறாவினர் அல்லர் என்பது தெளிவாகும். அவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள் என்கிறபோது அல்லது அவர்களிலேயே ஒரு குழுவினர் என்கிற போது அவர்கள் தங்களுக்குள் தனிவகையான பொது நம்பிக்கை கொண்ட குழுவினர் அல்லர் என்பது தெளிவாகும்.
"பொது தீட்சிதர்கள் என்பது இவர்கள் தங்கள் வாழ் நெறி முழுவதையும் கட்டுப்படுத்துவதற்காக வைத்துக் கொண்ட முறைமை அல்ல. கோயில் நிர்வாகம் தொடர்பாக மட்டுமே செயல்படுகிற ஒரு அமைப்பு வடிவமே தவிர வேறல்ல. எனவே, இத்தீர்ப்பு கூறுகிற இரண்டாவது வரையறையும் தீட்சிதர்களுக்குப் பொருந்தி வராது.
கோயிலில் சமயப் பணி செய்வதால் கிடைக்கிற வருமானம் மட்டுமே தங்களுக்குள்ள வாழ்வூதியம் என்று தீட்சிதர்கள் கூறிக்கொள்வது முழு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதைக் கொண்டு இவர்கள் தனித்த மதப் பிரிவினர் என்று கொள்ள முடியாது.
சீரூர் மட வழக்கு தீர்ப்பில் அம்மடாதிபதிகள் மத்துவாச்சாரியாரை தங்கள் குருவாகக் கொண்டு ஒழுகுகிற சிவாலி பிராமணர்கள் என்று கூறி அவர்களை தனித்த மதப் பிரிவினர் என்று உச்ச நீதிமன்றம் கூறியது அந்த வரையறை தீட்சிதர்களுக்குப் பொருந்தாது. இத் தீர்ப்பும், இப்போது சுப்பிரமணியம் சாமியும் கூறுவது போல் தீட்சிதர்கள் வேதமத ஒழுகலாறு கொண்ட ஸ்மார்த்த பிராமணர்கள் என்றான பிறகு இவர்களை தனித்த மதப் பிரிவினர் என்று கூறுவது சற்றும் பொருந்தாது. இவர்கள் வழிபடும் கடவுளோ, வழிபடும் முறைகளோ வேறுபட்ட ஒன்றல்ல.
 அரவிந்தர் வழி வந்த தாங்கள் தனித்த மதப் பிரிவினர் என்று கூறி தங்களுடைய சொத்துகளுக்கு அரசமைப்புச் சட்ட விதி 26-ன் படி பாதுகாப்புக் கோரி புதுச்சேரி ஆரோவில்லிருந்து சிலர் வழக்கு தொடுத்தபோது ஆர்.எஸ் மிட்டல் – எதிர் - இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் 1995-ல் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் சில தனித்த சடங்குகளைப் பின்பற்றி ஒரு சான்றோரை தங்கள் வழிகாட்டியாகக் கொண்டு ஒரு சிலர் செயல்படுவதாலேயே அவர்களை தனித்த மதப் பிரிவினர் என வரையறுக்க முடியாது எனக் கூறியது. மேற்கண்டவற்றை நோக்கும் போது தீட்சிதர்கள் தங்களை தனித்த மதப் பிரிவினர் என்று கூறிக் கொண்டு அரசமைப்புச் சட்டபிரிவு 26-ன் பாதுகாப்பைக் கோர முடியாது என்பது தெளிவு.
அடுத்து இவர்கள் தனித்த மதப் பிரிவினரே ஆயினும் சிதம்பரம் நடராசர் ஆலயத்தை இவர்கள் தான் கட்டி, பாதுகாத்து வருகிறார்கள் என்பதை மெய்ப்பித்தால் தான் இக் கோயிலை தங்களுடைய சொத்து என்று உரிமை கோர முடியும். அதற்கான ஆதாரம் எதையும் இவர்கள் முன் வைக்கவில்லை.
தங்களிடம் எந்த ஆவணமும் இல்லை என சுப்பிரமணியம் சாமியே ஒத்துக் கொள்கிறார். அவர் தன்னுடைய வாதுரையில் கீழ்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது.
"தீட்சிதர்கள் இந்தக் கோயிலை நிறுவினார்கள் என மெய்ப்பிக்க எழுத்து வழிபட்ட எந்த ஆவணமும் இல்லை என்ற போதிலும், இது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. சிதம்பரத்திலோ அல்லது வேறு எங்கிருந்தோ எந்த குழுவினரும் இக் கோயில் தொடர்பாக உரிமை கோரவில்லை”
இது தான் சுப்பிரமணியம் சாமியின் ஆகப் பெரிய வாதமே.
 இவர்கள் வரையறைப்படி இந்த வழக்கில் எதிர்வாதியாக இருக்கிற ஆறுமுக சாமியும் இந்து தானே? சத்தியவேல் முருகனாரும் இந்து தானே? இவர்களும் இவர்களைப் போல் பல கோடிபேரும் தில்லை நடராசர் ஆலயம் தீட்சிதர்களால் நிறுவப்பட்டதல்ல என்று கருதுகிறார்கள். அப்படி இருக்க ஒட்டு மொத்த இந்துக்களின் நம்பிக்கையாக சுப்பிரமணியம் சாமி அடித்துக் கூறுவது கடைந்தெடுத்த பொய் அல்லவா!
இச் சிக்கலில் மதம் சார்ந்த குழு மற்றும் நம்பிக்கைகள் என்பது ஒரு பகுதியாகவும் நடராசர் கோயில் அது தொடர்பான சொத்துகள் இன்னொரு பகுதியாகவும் விவாதிக்கப் படுகின்றன. சொத்து சிக்கல் என்று வருகிற போது அதற்கு ஆவணச் சான்றுகள் முக்கியம். அப்படி ஒன்றும் எங்களிடம் இல்லை என்று சுப்பிரமணியம் சாமியே ஒத்துக் கொள்கிறார். ஒட்டு மொத்த இந்துக்களின் நம்பிகை இது என்று அவர் கூறுவதும் பொய் என்பதை மெய்நடப்பு கூறுகிறது.
எந்தக் குழுவினரும் உரிமைக் கோரவில்லை என்று அடுத்து சுப்பிரமணியம் சாமி கூறுகிற பொய்யுரை நகைப்புக்கிடமானது. ஏனெனில், இதிலுள்ள மையமான வாதமே சிதம்பரம் நடராசர் ஆலயம் தீட்சிதர்களுக்கோ வேறு யாருக்குமோ தனிச் சொத்து அல்ல என்பது தான். எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை; ஆனால் வேறு எந்தக் குழுவினரும் இதற்கு உரிமை கோரவில்லை என்பதால் அது எங்களுடைய சொத்து என்று கூறும் சுப்பிரமணியம் சாமியின் வாதம் திருடர்களின் வாதமே தவிர வேறொன்றுமில்லை.
இக் கோயில் மன்னர்களால் நிறுவப்பட்டு மன்னர்களால் பராமரிக்கப்பட்டு, மன்னர்களால் விரிவாக்கப்பட்டு செயல்படுகிற ஒன்று என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஆதாரம் உண்டு.
கிளியூர் இலங்கேஸ்வரன் என்பவர் நாள்தோறும் நடராசருக்கு 200 செந்தாமரை மலர்கள் கொண்டுவர பணியாளர்களை நியமித்ததையும் அதற்கு இராச இராச சோழன் இசைவு அளித்ததையும் இக் கோயிலிலேயே உள்ள இராசராசன் காலத்து கல்வெட்டு கூறுகிறது. (ARE 284 / 1913).
இக் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் தென் பகுதியில் உள்ள பாண்டிய தேவன் கல்வெட்டு இக் கோயில் நிர்வாகம் பாண்டியர் பொறுப்பில் இருந்ததையும் நீர்நிலைப் பராமரிப்புத் தொடர்பாக அம்மன்னன் வரித்தள்ளுபடி செய்ததையும் குறிப்பிடுகிறது. ஆதித்த சோழன் (871- 907) தனது ஆட்சிக் காலத்தில் பொன் கூரை வேய்ந்தான் என்று நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி கூறுகிறது.
 இக் கோயிலின் முதல் திருச்சுற்று (பிரகாரம்) விக்கிரம சோழன் திருமாளிகை என்றும், இரண்டாம் திருச்சுற்று குலோத்துங்க சோழன் திருமாளிகை என்றும், மூன்றாம் திருசுற்று தம்பிரான் திருவீதி என்றும் அழைக்கப்பட்டன. மேற்கு கோபுர வாயில் குலோத்துங்க சோழன் திருமாளிகை பெருவாயில் என்று அழைக்கப்பட்டது.
விஜய நகரப் பேரரசு காலத்தில் இக் கோயில் தனி நிர்வாகிகள் மூலம் அரசரால் நிர்வகிக்கப்பட்டது. நிர்வாகிகளில் ஒருவரான தேவர் மகாராயர் என்பவர் பற்றி இக் கோயில் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கிறது.
1680-ல் சைவ வேளாளர் சிவப் பிரகாசமும் 1684-ல் தில்லை சிற்றம்பலத் தவமுனி என்பவரும் 1711-ல் தில்லைக் காசித் தம்பிரான் என்பவரும் கோயில் நிர்வாகிகளாக இருந்ததற்கு செப்பேட்டு ஆதாரங்கள் உள்ளன.
பின்னாளில் பிச்சாவரம் சமீன்தார்கள் பொறுப்பில் சிதம்பரம் நடராசர் கோயில் நிருவகிக்கப்பட்டு வந்தது. நள்ளிரவு பூசை முடிந்த பிறகு கோயிலைப் பூட்டி சாவியை பல்லக்கில் வைத்து தீட்சிதர்கள் பிச்சாவரம் எடுத்துச் சென்று சமீன்தாரிடம் கொடுத்துவிட்டு, காலையில் மீண்டும் பெறுகிற பழக்கம் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு தொடர்ந்திருக்கிறது.
பிச்சாவரம் சமீன்தார் நலிந்து போகிற வரை அதாவது 1925 ஆம் ஆண்டு வரை இந்தப் பழக்கம் கடைபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.(விரிவிற்கு காண்க : கரையான் புற்றுக்குள் கருநாகம் – முனைவர் த.செயராமன், தமிழர் கண்ணோட்டம் 2008 ஏப்ரல் இதழ்)
தீட்சிதர்கள் நடராசர் கோயிலின் பணியாளர்களாக இருந்து வந்தார்களே அன்றி ஒரு காலத்திலும் கோயில் நிர்வாகம் அவர்கள் கையில் இருந்ததில்லை. ஆனால் பிச்சாவரம் சமீன் பலவீனம் அடைந்ததைப் பயன்படுத்தி கோயில் மற்றும் அதன் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கைப்பற்ற தீட்சிதர்கள் முனைந்தார்கள்.
அப்போது வெள்ளையர் ஆட்சி. பல்லாயிரக் கணக்கான கோயில்கள் வரலாற்று வழியில் பல மன்னர்களால் கட்டப்பட்டு அதற்கு வலுவான வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் அவற்றை நிர்வாகம் செய்வதற்கான நிர்வாக ஏற்பாடுகளைச் செய்வதற்கு வெள்ளையர் ஆட்சி பல வரைவுச் சட்டங்களை உருவாக்க முனைந்தது. அச் சூழலில் 1922-ல் சென்னை மாகாண நீதிக் கட்சி ஆட்சியின் போது இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டு 1927-ல் அது செயலுக்கு வந்தது.
அப்போதிருந்தே அரசின் கட்டுப்பாட்டிற்குள் நடராசர் கோயில் சென்றுவிடாமல் தடுப்பதற்கு அடுத்தடுத்து வழக்குகளை தீட்சிதர்கள் தொடுப்பதும், அவ்வப்போது இக்கோயில் நிர்வாகத்தை ஏற்க அரசு ஆணை பிறப்பிப்பதும், அவற்றை எதிர்த்து தீட்சிதர்கள் வழக்கு தொடுப்பதும் தொடர்கதையாக நீடிக்கிறது.
சுப்பிரமணியம் சாமி சொல்வது போல் தனித்த சமூகக் குழுவினர் யாரும் உரிமை கோராது போனாலும் அரசர்கள் உருவாக்கிய கோயில் என்பதால் அரசு நிர்வாகம் செய்ய முனைந்து கொண்டிருப்பதுதான் தொடரும் வரலாறு. ஏனென்றால் இது பொதுச் சொத்து.
ஆனால், இந்த உண்மைகளை உச்ச நீதிமன்றத்தில் செயலலிதா அரசு எடுத்துவைத்து வலுவாக வாதாட வில்லை. நீதிபதிகளும் இந்த உண்மைகளை கவனிக்கத் தவறிவிட்டார்கள். அதனால், மாபெரும் அநீதி தீர்ப்புரையாக வந்திருக்கிறது.
தீட்சிதர்கள் கைகளில் இக் கோயில் இருக்கும் வரை சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாட வாய்ப்பில்லை. தமிழ் உரிமையை, தமிழர் உரிமையை நிலை நாட்ட வேண்டுமானால் இக் கோயில் அரசின் பொறுப்பில் இருப்பது தேவை.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக இது வந்துவிட்டாலும் இத் தீர்ப்பை எதிர்கொண்டு மீண்டும் சிதம்பரம் நடராசர் ஆலயத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வழி இல்லாமல் போய்விடவில்லை.
சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை ஏற்று நடத்த அரசாணையாக இல்லாமல் தனிச் சட்டம் ஒன்றை தமிழக அரசு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். உடனடியாகக் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவசரச் சட்டம் இயற்றி நடராசர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும்.
செயலலிதா அரசு இதைத் தானாக செய்யும் என நம்புவதற்கில்லை. எனவே சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த தனிச் சட்டம் கொண்டுவருமாறு வலியுறுத்தி இக்கோயில் மீது அக்கறையுள்ளோரும் தமிழின உணர்வாளர்களும், தொடர் போராட்டங்கள் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
- கி.வெங்கட்ராமன் (kevaetamil@gmail.com)

தில்லையம்பலத்தில் தேவாரம் - கி.வெங்கட்ராமன்

கொண்ட கொள்கையில் உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் தமக்கு ஆதரவான துணை சக்திகளைத் திரட்டிக் கொள்ள முடியும் என்பதற்கு சிவனடியார் ஆறுமுகசாமி ஒரு எடுத்துக்காட்டு. சிதம்பரம் நடராசர் ஆலய சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாட கடந்த 9 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது. அவர் மட்டுமின்றி பிற பக்தர்களும் அங்கு தமிழில் பாடி வழிபட வாய்ப்பு திறந்து விடப்பட்டுள்ளது. இது வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வு.

சிதம்பரம் வட்டம் குமுடிமூலை கிராமத்தைச் சார்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி இந்தியாவெங்கும் சைவத் தலங்களுக்குச் சென்று தமிழில் வழிபட்டு வந்தார். சிதம்பரத்தில் அது நடக்கவில்லை என்ற ஆதங்கத்தில் 1999 ஆம் ஆண்டு
தனது முயற்சியைத் தொடங்கினார். 9-9-1999 அன்று இரவு பூசை நேரம் முடிந்த பிறகு அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படும் சிற்றம்பல மேடையில் நின்று
சிவபுராணம் பாட முயன்ற போது ஆறுமுகசாமியை அங்குள்ள தீட்சிதர்கள் அடித்து அவமானப் படுத்தி வெளியேற்றினர். இதன் மீது அவர் மேற்கொண்ட சட்ட முயற்சியினால் 28-10-1999 காலை 9.30  மணியளவில் கடலு}ர் சட்டப்
பணிகள் ஆணைய நிர்வாக அலுவலர், சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாக செயலர்
ஆகியோர் முன்னிலையில் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடி நடராசரை வழிபட்டார். அன்று இரவே சிதம்பரம் நகர காவல்நிலைய அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமரசத்தில் ஆறுமுகசாமி தொடர்ந்து இதேபோல் பாடி
வழிபடலாம் என சிதம்பரம் தீட்சிதர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்த வாக்குறுதி மீண்டும் மீண்டும் மீறப்பட்டது. ஒவ்வொரு முறை ஆறுமுகசாமி
முயலும் போதும் அவரை அடித்துத் துன்புறுத்தி வெளி  யேற்றுவது என்பதைத் தீட்சிதர்கள் தொடர் நடவடிக்கையாக மேற்கொண்டனர். இச்சிக்கல் தொடர்பாக ஆறுமுகசாமி தமது சொந்த முயற்சியில் சில தமிழ் அன்பர்களின் துணையோடு துண்டறிக்கைள் அச்சடித்து மக்களிடம் பரப்பி வந்தார். ஒரு  கட்டத்தில் நம்மையும் அணுகினார். சிதம்பரம் தமிழ் காப்பணி இப்பிரச்சினை தொடர்பாக 7-12-1999-இல் துண்டறிக்கை வெளியிட்டு பரப்புரை செய்தது.தீட்சிதர்களின் தமிழ் விரோத சாதிவெறிப் பார்ப்பனியச்
செயல்பாட்டை அந்த அறிக்கை விளக்கமாக அம்பலப்படுத்திக் கண்டித்தது. ஒரு அமைப்பு என்ற வகையில் இப்பிரச்சினையை
மக்களிடையே தமிழ் காப்பணி முதன்முதலாக எடுத்துச் சென்றது.
ஆறுமுகசாமி தேவாரம் பாட அனுமதிக்கப்படாததை கண்டித்தும் தமிழில் அர்ச்சனை செய்யும் உரிமை எந்த தடையும் இன்றி தமிழக ஆலயங்களில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ் காப்பணி சார்பில் அதன் தலைவர் (மறைந்த) முனைவர்
ச.மெய்யப்பனார் அவர்கள் தலைமையில் உண்ணாநிலைப்
போராட்;டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.


மெய்யப்பனாரும் தமிழ்  காப்பணியின் வேறு சில நிர்வாகிகளும் இதற்கு   முன்னமேயே சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தேவாரம் பாடப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. 1987 ஆம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர்
வ.சுப.மாணிக்கனார் அவர்கள்  தலைமையில் உலகறிந்த பல்வேறு
தமிழறிஞர்கள் ஒன்றிணைந்து சிதம்பரத்தில் உள்ள தமிழ்
உணர்வாளர்கள் துணையோடு இதற்கான முயற்சியை
மேற்கொண்டனர். சிற்றம்பல மேடையில் தேவாரம் ஒலிப்பதை
தீட்சிதர்கள் ஏற்க மறுத்தனர். வ.சுப.மாணிக்கனார் உண்ணா
நிலைப் போராட்டத்தை அறிவித்தார். அப்போது நடராசர்
ஆலயத்திற்கு குடமுழுக்கு விழா நடந்து கொண்டிருந்தது.
தொடர்ந்து தீட்சிதர்கள் அடாவடியாக தமிழை தடுத்துக்
கொண்டிருக்க, தமிழக அரசோ இது பற்றி பாராமுகமாக இருந்தது.
குடமுழுக்கை ஒட்டி ஆலயத்தில் எழுப்பப்பட்டிருந்த "வேள்வித்
தீயில் வீழ்ந்து மாய்வோம்" என்று வ.சுப.மா. இறுதி எச்சரிக்கை
விடுத்தார். அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் திரு. இராம.வீரப்பன் தலையீட்டில் சமரசம் நடந்தது. வேறு வழியின்றி
"காலப்பூசையின்" முடிவில் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடப்படும் என்று தீட்சிதர்கள் ஒத்துக் கொண்டு கையொப்ப
மிட்டனர். ஆயினும் நம்முடையதமிழறிஞர்கள் கவனக்
குறைவாகவோ அல்லது அதற்கு மேல் போராட்டத்தை அடு;;த்த
கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலைமையின்
காரணமாகவோ யார் பாடுவது என்பது குறித்து வலியுறுத்தாமல்
விட்டுவிட்டார்கள். ஆயினும் இது மகத்தான முதல் கட்ட வெற்றி. இதற்குப் பிறகு தான் காலையில் பூசை முடிந்த பிறகு தீட்சிதர்களில்
ஒருவர் சிற்றம்பல மேடையில் 'நடராசர் திருமுன்' பக்தர்கள்
அனைவரின் காதில் விழும்படியாக தேவாரம் பாடுவது நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பிற ஆலயங்களில் கடவுள் சிலைநிறுவப்பட்டுள்ள கருவறைக்கு அடுத்து இருக்கும் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள்
அனுமதிக்கப்படும் இடத்தில் நின்று மனமுருகி தமிழில் பாடி வழிபாடு நடத்துவது நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால் சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் மட்டும் இந்த உரிமையை தீட்சிதப் பார்ப்பனர்கள் தடுத்து வந்தனர்.
அர்த்த மண்டபத்திற்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் தான் பக்தர்கள் நின்று தமிழில் பாடி வழிபாடு நடத்தலாம் என்று அடாவடி
செய்தனர். இது தொன்றுதொட்டு நிலவும் ஐதீகம் என்று காரணம்
கூறி தமிழுக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு
எதிராகவும் தீண்டாமை கடைபிடித்தனர்.
இக்கொடுமைக்கு எதிராக ஆறுமுகசாமி செய்த முயற்சிக்கு
தமிழ் அன்பர்களும் சில தனிப்பட்ட வழக்குரைஞர்களும் துணை
புரிந்தார்கள். சிதம்பரத்திலும் கடலு}ர் மாவட்ட நீதிமன்றத்திலும்
வழக்குகள் நடந்தன. அவை யெல்லாம் உரிய வெற்றிபெறாத
நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற
வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் வழக்குரைஞர்
தோழர் ராஜுவிடம் ஆறுமுக சாமியை அறிமுகம் செய்து
வைத்து இவ்வழக்கை தொடர்ந்து நடத்த துணை செய்யுமாறு
இக்கட்டுரையாளர் கேட்டுக்கொண்டார்.
ராஜு அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அதன் சகோதர அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவை இதனை தங்களது இயக்க
போராட்டமாகவே முனைப்போடு முன்னெடுத்தன. பாட்டாளி மக்கள்
கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட
கட்சிகளின் உறுதுணையோடு தொடர் போராட்டங்களை
ம.உ.பா.மை. நடத்தியது. ம.க.இ.க. வுடன் இணைந்து செயல்பட
முடியாத சூழலில் த.தே.பொ.க.வும் தமிழ் காப்பணியும் இச்சிக்கலில்
இணையான இயக்கங்களை நடத்தி வந்தது. தெருமுனைக் கூட்டங்கள் உள்ளிட்ட பரப்பல்கள் நடந்தன. இந்த வகையில் கடந்த
12-08-2006 அன்று தமிழ் காப்பணி நடத்திய எழுச்சி மிக்கக் கூட்டம்
குறிப்பிடத்தக்கது(விரிவிற்கு காண்க : தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).

ம.உ.பா.மை. துணையோடு ஆறுமுகசாமி அளித்த மனுவின்
மீது தமிழக இந்துசமய அறநிலையத்துறை மயிலாடுதுறை
இணை ஆணையர் 2004 திசம்பரில் அளித்த உத்தரவு
தீட்சிதர்களுக்கு ஆதரவாகஅமைந்தது. தொன்றுதொட்டு வந்த
வழக்கம் என்ற பெயரால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடுவதை அந்த ஆணை தடை செய்தது. இதன் மீது ஆறுமுகசாமி
முன்வைத்த சீராய்வு மனு மீது அறநிலையத்துறை ஆணையர் 30-
4-2007-இல் அளித்த உத்தரவு தெளிவானது. சிறப்பானது.
தீட்சிதர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட எதிர்வாதங்கள் அனைத்தையும் தக்க முறையில் எதிர்கொண்டு அளிக்கப்பட்ட
ஆணையாகும் இது. தீட்சிதர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிற
"வகையறாக் கோயில்"- Dinominational temple  என்ற  வாதத்தை இவ்வாணை தெளிவாக
மறுத்தது. 1888-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம்
வழங்கிய ஒரு தீர்ப்பை இதற்கு ஆதாரமாக காட்டியது "ஏ.எஸ்.103
மற்றும் 159ஃ1888" என்ற வழக்கில் நீதிபதிகள் n~ப்பர்டு, முத்துசாமி
ஐயர் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற ஆயம்
அளித்தத் தீர்ப்பு "சிதம்பரம் நடராசர் கோயில் பன்னெடுங்
காலமாக ஒரு பொதுக் கோயிலாக இருந்து வருகிறது என்பதை
மறுக்க முடியாது. இக்கோயில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து
என்பதற்கு ஆதாரமே கிடையாது" எனக் கூறியது(தீர்ப்பு நாள் :
17.03.1890). அதுமட்டுமின்றி 23.01.1940-ஆம் நாள் சென்னை
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கட்ரமண ராவ், நிஜாம்
ஆகியோர் அடங்கிய ஆயமும் "இக்கோயில் தீட்சிதர்களின்
சொந்தக் கோயில் அல்ல என்பதிலும், அது அரசு சட்டத்தின்
கீழ் வருகிற ஒரு பொதுக் கோயில் என்பதிலும் எவ்வித ஐயமும்
இல்லை" என்று உறுதி செய்தது. ஆயினும் இவ்வாறான
தீர்ப்புகளுக்கும், தமிழக அரசின் ஆணைகளுக்கும் எதிராக உச்ச
நீதிமன்றம் சென்று தடை வாங்கியதை வைத்துக் கொண்டு
நடராசர் ஆலயத்தை தீட்சிதர்கள் தொடர்ந்து தங்களது நிர்வாகத்தின்
கீழ் வைத்திருக்கிறார்கள்.
சைவ சமயத்தில் தனிப்பிரிவு அல்லது வகையறா என்பதற்கு
இடமில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை(ஆதிவிசுவேசுவரர்
காசி விசுவநாதர் திருக்கோயில் எதிர் உ.பி. அரசு - 1997(4)SCC606) எடுத்துக்காட்டி தீட்சிதர்கள் வாதத்தை அறநிலையத்துறை ஆணை
மறுத்தது. அதுமட்டுமின்றி தொன்று தொட்டு நிலவும் பழக்கம்
என்பதற்கான வரையறையை இந்த அரசாணை எடுத்துக்காட்டியது.
ஒரு திருக்கோயிலில் கடை பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள்
தொன்மையானவையாகவும் நினைவிற்கு எட்டாதவையாகவும்
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வழக்கம் தொடங்கிய நாளில்
இருந்து தடையின்றி நடந்திருக்க வேண்டும். அதற்கான
திட்டவட்டமான சான்றுகள் இருக்க வேண்டும்.
சுந்தரர், நடராசர் கோயில் 'திருக்களிற்றுப் படிமருங்கு' நின்று
அதாவது பஞ்சாட்சரப் படியிலிருந்து தேவாரம் பாடினார்
என்பதைப் பெரிய புராணம் பதிவு செய்கிறது. சுந்தரர் தீட்சிதர்
அல்லாதவர். மேலும் கி.பி. 14, 15, 18 ஆகிய நு}ற்றாண்டுகளில்
படையெடுப்புகள் காரணமாகவும் சைவ வைணவ மோதல்
காரணமாகவும் நடராசர் ஆலய பூசைகள் அவ்வப்போது பல
ஆண்டுகள் தொடர்ச்சியாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதன் பிறகே
தீட்சிதர்களின் சூழ்ச்சியால் பக்தர்கள் சிற்றம்பல மேடையில்
தேவாரம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணை 'இந்திய அரசமைப்புச் சட்டம்
வழங்கும் சம உரிமையை சாதி அல்லது வேறு காரணங்களை
காட்டி, பழக்கவழக்கங்கள் என்ற பெயரால் யாரும் மறுக்க
முடியாது' என்ற சட்டநிலையை எடுத்துக்காட்டி ஆறுமுகசாமியோ
அல்லது வேறு பக்தர்களோ சிற்றம்பல மேடையில் தமிழில்
பாடி வழிபடுவதை தீ;ட்சிதர்கள் தடுக்க முடியாது என
வலியுறுத்தியது.


ஆயினும் தீட்சிதர்கள் இந்த ஆணைக்கு சென்னை உயர்நீதி
மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கினார்கள். அதன்பிறகு உயர்
நீதிமன்ற வழிகாட்டுதலுக்கிணங்க தமிழ்நாடு இந்துசமய
அறநிலையத்துறை செயலரிடம் முறையீடு செய்தார் ஆறுமுகசாமி.
29-02-2008 அன்று வழங்கிய ஆணையில் பக்தர்கள் காலப்
ப10சை முடிவில் அதன் ஒர் பகுதியாக கருதத்தக்க அளவிற்கு
அரை மணி நேரம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட வழிபாட்டு
பாடல்களை தமிழில் பாடி வழிபடலாம் என்றும் அவ்வாறு
செல்பவர்கள் தீட்சிதர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்
என்றும் கூறியது. இதனடிப்படையில் ம.க.இ.க., விடுதலை சிறுத்தைகள் துணையோடு 02.03.2008 அன்று காலை தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் திமிரோடு வழிமறித்துத் தாக்கினர். காவலுக்கு சென்ற கடலு}ர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினரையும் தாக்கினர். கடும் போராட்டத்திற்கு
இடையில் ஆறுமுகசாமியை சிற்றம்பல மேடைக்கு து}க்கிச் சென்று காவல்துறையினர் நிறுத்திய போதும் நடராசர் சிலையை பூணு}ல் அணிந்த மாமிச மலைகளாக குறுக்கே
நின்று மறித்தார்கள் தீட்சிதர்கள். நடராசர் திருமுன் தேவாரம்
பாடுவது என்ற அரசாணையை செயல்படுத்த விடாமல் தீட்சிதர்கள்
செய்த அராஜகம் உலகெங்கும் உள்ள தமிழர்களையும், சனநாயக
சக்திகளையும் விழித்தெழச் செய்தது. பார்ப்பனியத்தின்
கொடுங்கொன்மை விளங்காதவர் களுக்கும் விளங்க வைக்கப்பட்டது.
மாலையில் மீண்டும் தேவாரம் பாட முயன்றவர்கள் மீது
காவல்துறை தடியடி நடத்தி வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 34
பேரை கைது செய்தது. அடுத்த நாள் தீட்சிதர்கள் சிலரும் கைது
செய்யப்பட்டார்கள். ஆறுமுகசாமியும் கைதானார். தமிழில் வழிபாடு நடத்த வருபவர்களைத் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 04- 03-08 அன்று தமிழக அரசு உறுதியாக அறிவித்தது. இதைத்
தொடர்ந்து 05-03-2008 அன்று காலை ம.க.இ.க. தோழர்கள் ஐந்து
பேர் காவல்துறை பாதுகாப்போடு சிற்றம்பல மேடையில் தேவாரம்
பாடி அரசாணைப்படி உள்ள வழிபாட்டு உரிமையை நிலை
நாட்டினர். இதற்கிடையில் கைதான அனைவரும் 05-03-08 அன்று மாலை விடுதலையாயினர்.
06-03-2008 அன்று சிற்றம்பல மேடையில் நின்று மனமுருகி தேவாரம் பாடி நீண்ட கால தன்னுடைய போராட்டத்தை வெற்றிகரமாக ஆறுமுகசாமி நிறைவு செய்தார்.
ஆயினும் பக்தர்கள் அனைவரும் சிற்றம்பல மேடையில் தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை இடையீடு இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தும் தேவை எழுந்தது. அதற்கான முயற்சியை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கொண்டது. 11-03-2008 அன்று
சிதம்பரம் நகர காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இதற்கான சந்திப்பு நடந்தது. 12- 03-2008 தொடங்கி நாள்தோறும் காலையில் 'காலப் பூசை' முடிந்ததும் 7.30 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் தமிழில் பாடி நடராசரை வழிபடலாம்  எனவும், அதற்கு தீட்சிதர்கள் எந்த வகையிலும் இடையூறு செய்யக் கூடாது எனவும் உடன்
படிக்கையானது. த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் மற்றும் பட்டு தீட்சிதர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர். இதன்படி 12-03-2008 முதல் 15-03-2008 வரை காவல்துறை பாதுகாப்போடு தமிழகமெங்கும் இருந்து சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் கம்பீரமாக தெளிந்த இசையில் தேவாரம், திருவாசகம் பாடினர். 15-03-2008 அன்று தமிழ் வழிபாட்டுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் நா.இரா.சென்னியப்பனார் எழுத்துப் பூர்வமாக தெரிவித்ததைத்
தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து நாள்தோறும் காலையில்
சிவனடியார்கள் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம்
பாடி வழிபட்டு வருகின்றனர். ஆயினும் சிதம்பரம் நடராசர்
ஆலயம் தொடர்ந்து தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருப்பது எந்த
வகையிலும் ஞாயமற்றது. தீட்சிதர்கள் தனித்த சமய வகைப்
பிரிவினர் என்பதற்கோ, இது அவர்களது வகையறாக் கோயில் என்பதற்கோ எந்த சட்ட ஆதாரமும் இல்லை. தவிரவும் வகையறாக்
கோயில்களின் நிர்வாகத்தையும் அரசே ஏற்று நடத்தலாம் என்று
உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்புரைத்திருக்கின்றது(காண்க :
தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2006).
அரசு நிர்வாகத்தின் கீழ் வராமல் பார்ப்பனர்கள் வசமே கோயில் ஒப்படைக்கப்பட்டால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன
நேரும் என்பதற்கு தில்லை தீட்சிதர்களின் அடாவடியே
எடுத்துக்காட்டு. அரசுக் கட்டுப்பாட்டில் வந்தால் பூசை,
சடங்குகள் நின்றுவிடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பூசை
சடங்குகள் நிறைவேற்றுவதற்கு பக்தர்களைக் கொண்ட நிர்வாகக்
குழுவை ஏற்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை. நடராசர்
கோயில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும் கோவிந்தராச பெருமாள்
கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அங்கு வழிபாட்டுச் சடங்குகள் எந்த இடைய10றும் இன்றி நடந்து தான் வருகின்றன. அதே போல் ஏற்பாடு நடராசர் ஆலயத்திலும் செய்து கொள்ள முடியும். கோயில் நகைகளைத்; திருடுவது, கோயில் வளாகத்திற் குள்ளேயே குடித்து விட்டு கும்மாளமிடுவது, பிற குற்றச்
செயல்கள் போன்றவற்றில் தீட்சிதர்கள் ஈடுபடுவது யாரும்
அறியாத ஒன்றல்ல. ஏதோ அரசு நிர்வாகத்தில் போனால் தான்
எல்லாம் கெட்டுவிடும் என்று ஐயுறுவதிலும் பொருளில்லை.
அரசு நிர்வாகத்தில் இருந்தால் பொதுமக்கள் தட்டிக்
கேட்டுத் தலையிட சட்ட வாய்ப்பு உண்டு. தீட்சிதர்களின் தனிக்
கோயில் என்றால் அந்த வாய்ப்பு இல்லை. எனவே இனியும்
தாமதிக்காமல் உரிய சட்ட ஏற்பாடுகள் செய்து சிதம்பரம் நடராசர் ஆலயத்தைத் தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு  வரவேண்டும். தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் அதுவரை தொடர வேண்டும்.