கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

நாணயப்போர் - தோழர் கி.வெங்கட்ராமன்

“நாணயம் நடுநிலை வகிக்கவில்லை” என்று புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் ஜான் மேனார்டு கீன்ஸ் 1933இல் கூறினார். சந்தையில் பொருள்களின் மதிப்பை அல்லது விலையைக் குறிப்படும் ஊடகமாக மட்டும் செயல்பட்டு வந்த பணம் ஊடகம் என்ற நிலையிலிருந்து மாறி பொருளியல் ஆதிக்கம் செய்யத் தொடங்கியதையே கீன்ஸ் இவ்வாறு குறிப்படுகிறார்.
 கீன்சுக்குப் பிறகான கடந்த 75 ஆண்டுகளில் பணத்தின் ஆதிக்கம் உச்ச நிலைக்குப் போய்விட்டது. உற்பத்தித் துறையின் மீது நிதி மூலதனம் கொடுங்கோன்மை செலுத்துகிறது. நுகர்வுப் பொருள் களை உற்பத்தி செய்பவர்களை விட நிதி முதலாளிகளே பொருளியல் ஆதிக்கத்தில் முதன்மை பெற்றுவிட்டனர்.
 இதன் அடுத்த கட்ட விளைவாக உலகப் பொருளியல் துறையில் இன்று “நாணயப் போர்” நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்காகப் புகையைக் கையில் பிடிப்பது போல் வல்லரசுகளின் ஆட்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் முண்டி யடித்துக் கொண்டிருக்கின்றனர்.
 சீன அரசு தமது நாட்டு யுவான் நாணயத்தின் மதிப்பைச் செயற்கையாக 25 விழுக்காடு குறைத்துவிட்டது. தனது நாட்டின் நாணய மதிப்பைத் தானே முன்வந்து குறைப்பதா என்ற கேள்வி பலருக்கு எழுந்திடும். இதைப் புரிந்து கொள்ள நாணய மதிப்பின் வரலாற்றை ஒரு சில வரிகளில் பார்ப்பது தேவையானது.
 பண்டமாற்று நடைபெற்ற பழைய காலத்தில் பணம் அல்லது நாணயம் என்ற ஒன்று இல்லை. உற்பத்தி விரிவடைந்து வணிகம் என்பது தனித்த ஒரு பொருளியல் செயல்பாடாக வளர்ந்த காலத்தில் தான் இந்தப் பண்டப் பரிமாற்றத்தை எளிதாக்கப் “பணம்” என்ற ஒன்று முளைத்தது.
 இது ஒரு ஊடகமாகச் செயல்பட முக்கியமாக இரண்டு கூறுகள் தேவைப்பட்டன. ஒன்று, அது ஒரு அரசின் ஏற்பை (அங்கீ காரத்தை) பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, இதுவே வரம்புக்குட்பட்டு தற்காலிகமாக ஒரு பண்டமாகச் செயல்படும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
 தொடக்க காலத்தில் உலோக நாணயங்கள் இவ்வாறு செயல் பட்டன. இந்நாணயத்தில் பொதிந்துள்ள உலோகத்தின் மதிப்பும் இதற்கு ஈடாக மாற்றிக் கொள்ளப் படும் உற்பத்திப் பொருளின் மதிப்பும் ஏறத்தாழ சமமாக இருந்தன. ஒரு நாணயம் ஒரு குறிப்பட்ட அரசின் ஆட்சிப் பரப்பிற்குள்ளேயே செல்லத் தக்கதாகப் புழக்கத்தில் இருக்கும்.
 தொடக்கத்தில் நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கடல் கடந்த வணிகம் கூட பண்டமாற்றாகவே இருந்தது. ஆயினும் இவ்வாறான வெளி வணிகம் விரிவடைந்தபோது நாடுகளுக்கிடையில் செயல்படும் ஒரு பொது நாணய மதிப்பு தேவைப்பட்டது. அவ்வாறான மதிப்பு ஊடகமாகத் தங்கம் செயல்பட்டது.
 காகிதப் பணம் வந்த போது அது தங்கத்தின் மதிப்பால் அளக்கப்பட்டது. எனவே ஒரு நாட்டில் இருக்கும் தங்கக் கையிருப்பை அடிப்படையாக வைத்தே நாணயம் அச்சடிக்கப் பட்டது. அதாவது ஒரு நாட்டின் தங்கக் கையிருப்பு என்பது அந்நாட்டின் நாணய மதிப்பைத் தீர்மானித்தது.
 அரசின் பற்றாக்குறை வரவு செலவுக்கு இது வரம்பு கட்டியது. ஊதாரிச் செலவுகள், போருக்கான பற்றாக் குறை பட்ஜெட் ஆகியவற்றிற்கு வரம்பு கட்டப் பட்டன.
 முதல் உலகப் போர் இந்த நாணய மதிப்பின் வரம்பை வல்லரசுகளுக்கு உணர்த்திற்று. போர் செலவீனங்களை ஈடுகட்ட விருப்பம் போல் பணம் அச்சடித்துக் கொள்ள முடியவில்லை. முதல் உலகப் போரில் வெற்றி பெற்ற அமெரிக்க, பிரித்தானிய வல்லரசுகள் இதில் 1922 ஆம் ஆண்டு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இதன்படி உலக நாணய மதிப்பைத் தீர்மானிக்கிற காரணியாகத் தங்கம் மட்டுமின்றி அமெரிக்க பணமான டாலரும் பிரிட்டனின் பணமான பவுண்டும் இருக்கலாம் என்று அறிவித்தன.
 இவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் உலகின் கணிசமான பகுதியாக இருந்ததால் அந்தந்த நாடுகளில் நாணய கையிருப்பாக தங்கத்தோடு டாலரும், பவுண்டும் சேர்ந்து கொண்டன.
 இரண்டாவது உலகப் போரின் முடிவில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் வலுவிழந்தது. நாணயச் சந்தையிலும் பிரிட்டனின் பவுண்டு மதிப்பிழந்தது. இனி தங்கமும் அமெரிக்க டாலரும் மட்டும்தான் உலக வணிகத்தின் பொது நாணயம் என்று அமெரிக்க வல்லரசு 1944 ஆம் ஆண்டு அறிவித்தது.
 இரண்டாவது உலகப் போரைக் காட்டிலும் அதிகம் பொருள் இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்ட போராக வியட்நாம் போர் திகழ்ந்தது. வியட்நாம் மீதான தனது ஆதிக்கப் போரில் அமெரிக்க வல்லரசு பெரும் நிதிப் பற்றாக் குறையைச் சந்தித்தது. இதிலிருந்து மீள்வதற்காக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் 1971 ஆகஸ்ட் 15ல் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “இனி தனது வணிகத்தில் அமெரிக்க அரசு தங்க மதிப்பைக் கணக்கில் கொள்ளாது. அமெரிக்காவோடு வணிகம் செய்யும் நாடுகள் டாலர் மதிப்பை மட்டுமே பொது மதிப்பாகக் கொள்ள வேண்டும்” என்றார்.
 அமெரிக்க மூலதனம், தொழில் நுட்பம், வெளிவணிகம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றில் உலகின் பெரும்பாலான நாடுகள் சிக்கியிருந்ததால் 1971க்குப் பிறகு உலகப் பொது நாணயமாக அமெரிக்க டாலரே ஆதிக்கம் பெற்றது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவைப் பொறுத்தே உலக நாட்டு நாணயங்களின் மதிப்புகளும் அமைந்தன.
 இப்பொழுது உலக மயத்தையொட்டி உற்பத்தித் துறையை விட நிதி மூலதனம் கொடுங் கோலோச்சத் தொடங்கியதால் டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உற்பத்தித் துறை சார்ந்த நாடுகளைக் கடுமையாகப் பாதித்தன. 2008இல் அமெரிக்க நிதியரசர்களின் வீழ்ச்சியும் டாலர் மதிப்பின் சரிவும் உற்பத்தித் துறை சார்ந்த நாடுகளை நிலை குலைய வைத்தன.
 இச்சிக்கலிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கும் தனது பொருளியல் மேல்நிலையை வலுப் படுத்துவதற்கும் சீனா இப்போது நாணயப் போரை தொடங்கி விட்டது. சீன அரசு டாலருக்கு நிகரான தனது யுவான் நாணய மதிப்பை 25% குறைத்து விட்டதால் அமெரிக்கச் சந்தையில் சீனப் பொருள்கள் விலை மலிவாக இறங்கத் தொடங்கி விட்டன. ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கிற அமெரிக்க உற்பத்தித் துறை, தனது சொந்த நாட்டுச் சந்தையை இழந்து வருகிறது. அமெரிக்காவில் மட்டு மின்றி ஐரோப்பியச் சந்தையிலும் சீனப் பொருள்களின் ஆதிக்கம் பரவி வருகிறது.
 ஏற்கெனவே கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை அள்ளிக் கொடுத்து நொறுங்கி வரும் தொழில் நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த வல்லரசுகள் பெரும் முயற்சி செய்கின்றன. இது அடுத்து வேறு ஒரு நோயாகப் படிநிலை அடைந்துள்ளது. அதுதான் கடன் சுமை.
 எடுத்துக்காட்டாக அமெரிக்க வல்லரசின் இன்றைய வெளிக்கடன் 14 இலட்சம் கோடி டாலர் ஆகும். அந்நாட்டின் மொத்த உற்பத்தியும் 14 இலட்சம் கோடி டாலர்தான். அதாவது அமெரிக்கா தனது தலை மூழ்கும் கடனில் உள்ளது. இது போல் ஜப்பானின் வெளிக்கடன் 167% எஈக ஆகும். அதாவது ஜப்பான் கடனில் மூழ்கி வெகு நாட்கள் ஆகிவிட்டன. பிரான்ஸ் கடன் அளவு 86%. இங்கிலாந்து 53%. ஜெர்மனி 72%. இத்தாலி 115% இவ்வாறு கிட்டத்தட்ட எல்லா மேற்கத்திய வல்லரசுகளும் கடனில் சிக்கியுள்ளன.
 இதனைச் சரி செய்வதற்கு இந்நாட்டு அரசுகள் செலவினக் குறைப்பு என்ற பெயரால் மக்கள் மீது ஒரு பொருளியல் தாக்குதலை நடத்துகின்றன. பிரான்சு அரசு பெருமளவு வேலை வாய்ப்பை வெட்டியுள்ளது. அந்நாட்டு அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 2 ஆண்டுகள் உயர்த்தப் பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியும் என்பதால் இந்த ஏற்பாடாம். பிரான்சு அரசின் இம்முடிவை எதிர்த்து பிரஞ்சு தேசமே போர்க் கோலம் பூண்டுள்ளது.
 பிரிட்டன், ஜெர்மனி, போர்ச்சுகல், இத்தாலி போன்ற அனைத்து நாடுகளிலும் இலட்சக் கணக்கில் வேலை இழப்பு, மருத்துவக் காப்பீடு மறுப்பு, குழந்தை நல நிதி வெட்டு, ஓய்வூதியம் தள்ளிவைப்பு போன்ற பல பிரச்சினைகளில் மக்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். அந்நாடுகள் எல்லாவற்றிலும் தொழிலாளர், மாணவர், உழவர் போராட்டங்கள் வெடித்துள்ளன.
 சீன நாணயம் மதிப்பு குறைக்கப்பட்டு விட்டதால் அந்நாட்டில் விலையேற்றம் ஏற்பட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி சீன அரசுக்குக் கவலை இல்லை. செங்கொடிச் சீன அரசு ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி என்ற தாராள மயக் கழிசடைப் பாதைக்குப் போய் ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
 இந்தியாவில் ஏற்கெனவே பணவீக்கமும் விலையேற்றமும் கொடிகட்டிப் பறக்கின்றன. சேமிப்பை அதிகப்படுத்திப் பணப் புழக்கத்தைக் குறைப்பது என்ற பெயரால் வங்கி வட்டி விகிதத்தை மன்மோகன் சிங் அரசு 1% உயர்த்தியது. இது உள்நாட்டுச் சேமிப்பை அதிகரிப்பதற்குப் பதில் அமெரிக்காவின் வட்டி மூலதனம் வெள்ளமெனப் பாய வழிவகுத்தது. ஏனெனில் அமெரிக்காவில் ரூ100க்கு ஆண்டுக்கு 25 பைசா வட்டிதான் வழங்கப்படுகிறது.
 எந்த உற்பத்தியிலும் நேரடியாக ஈடுபடாத இந்த வட்டி மூலதனம் பல தீய விளைவுகளைத் தூண்டி விடுகிறது. பங்குச் சந்தை சூதாட்டத்தில் ஓரளவுக்கு மேல் இலாபகரமாக இந்த வட்டி மூலதனம் செயல்பட முடிய வில்லை. எனவே தங்கம், தானியம், பெட்ரோலியம் ஆகிய துறைகளில் இணைய வணிகத்திலும் (ஆன்லைன் வர்த்தகம்), மனை வணிகத்திலும் (ரியல் எஸ்டேட்) இந்த வட்டி மூலதனம் பாய்கிறது. இதனால் தங்கத்தின் விலையும் மனை நிலத்தின் விலையும் அச்சமூட்டும் அளவுக்குத் தாறுமாறாக உயர்ந் துள்ளது.
 தானிய விலை பெருமளவு உயர்ந்திருந்தாலும் விளைவித்த உழவர்களுக்கு அதனால் இலாபம் ஏதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத ஊக பேரப் பெரு வணிகர்களே கொள்ளை இலாபம் பெறுகிறார்கள். மனை விலையேற்றம் உழவர்களை நில விற்பனைக்குத் தூண்டுகிறது. பெரு நகரங்களில் மட்டும் மனை வணிகத்தில் இது நாள் வரை கோலோச்சி வந்த வடநாட்டு வெளிநாட்டு பெருநிறுவனங்கள் சிறு நகரங்களிலும் அவற்றை யொட்டிய கிராமங்களிலும் கால் பதித்து வருகின்றன. தமிழர் தாயகம் நம் கண்முன்னாலேயே அயலாரிடம் கை மாற்றப்பட்டு வருகிறது.
 பழையபடி தங்க நாணய மாற்றுதான் இப்போது தலை யெடுத்துள்ள நாணயப் போரை நிறுத்த உதவும். வெற்றுக் காகிதப் பணத்திலிருந்து தங்க நாணய மாற்றுக்குத் திரும்புவது போர்ப் பொருளாதாரத்தையும் ஊக வணிகத்தையும் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும்.
 உழைக்கும் மக்களைப் பொறுத்த வரை எந்த அளவுக்கு பணப் பொருளாதாரத்திலிருந்து விலகுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது பற்றியும், உலக நாணய மதிப்பிற்குப் பதில் உள்ளூர் நாணய மதிப்பைச் சார்ந்திருப்பது பெரும் தற்காப்பு என்பது குறித்தும் வேறு ஒருவாய்ப்பில் பார்க்கலாம்.

0 கருத்துகள்:

போபால் பேரழிவும் தொலைந்து போன நீதியும் - தோழர் கி.வெங்கட்ராமன்

பன்னாட்டுக் குழுமங்களின் பேயாட்சி தில்லியில் நடக்கிறது என்பதற்கான சான்று தான் அண்மையில் வெளியான போபால் வழக்குத் தீர்ப்பு. இருபதாயிரம் பேர் சாவு, இரண்டு இலட்சம் பேர் நடைப்பிணம், அடுத்தடுத்தத் தலைமுறையும் ஊனப் பிறவிகள்... என்ற கொடுங்குற்றத்தைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை; அதுவும் 26 ஆண்டுகளுக்குப் பிறகு! தண்டனையை அறிவித்த போபால் நீதிமன்றம், தண்டிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சொந்தப் பிணை வழங்கி விடுதலை செய்தது.
          போபால் நச்சு வாயுப் பேரழிவுக்கு முதன்மைப் பொறுப்பாளியான வெள்ளைக்கார குற்றவாளிக்கு எந்த தண்டனையும் இல்லை.
          உழைப்பாளிகள், பொதுமக்கள் உயிர்களை விட கம்பெனிகளின் இலாபம் காக்கப்பட வேண்டியது என்பதே இந்தியாவின் எழுதப்படாத சட்டம் என்ற உண்மையை போபால் வழக்கு தெளிவுபடுத்திவிட்டது.
          நடந்தது என்ன?
          மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலை யிலிருந்து 1984 திசம்பர் 2-3 நள்ளிரவில் வெளியான நச்சு வாயுவுக்கு இருபதாயிரம் பேர் பலியானார்கள். இரண்டு இலட்சம் பேர் உழைக்க முடியாத அளவுக்கு உடல் ஊனமுற்றவர்களாக உருக்குலைந்தார்கள். இவர்களது நுரையீரல்கள் குலைந்தன. எலும்புகள் வலுவிழந்தன. கண்பார்வை முற்றிலுமோ பெருமளவிலோ பறிபோனது. பலருக்கு புற்றுநோய் உருவானது. இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் எலும்பு வலு இல்லாமல், மூச்சுத்திணறல் நோயுடன் பிறந்தன. இவர்களுக்கு நினைவாற்றால் குறைந்து காணப்படுகிறது.
          இது வெறும் விபத்தா? முதலாளியின் இலாப வேட்டைக்காக தெரிந்தே இந்த மரணப்படுகுழி வெட்டப்பட்டதா என்பதே இச்சிக்கலின் மையப் பொருளாக விவாதிக்கப்படுகிறது. விபத்து என்ற அடிப்படை யிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது சரியா என்பதே விடைகாண வேண்டிய வினா.
          யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் தொழிற்சாலை போபாலில் 1969-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 51% பங்குகளை அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனே உரிமையாகக் கொண்டுள்ளது. மீதிப்பங்குகள் சில இந்திய நிதி நிறுவனங்களுடையவை.
          இந்த வகையில் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனின் உரிமையாளரான வாரன் ஆண்டர்சன்தான் முதலாளி.
          போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் கார்பரில் என்ற பூச்சிக் கொல்லி நச்சு தயாரிக்கப்பட்டது. ‘செவின்’ (Sevin) என்ற பெயரால் இது விற்கப்பட்டது.
          கார்பரில் தயாரிப்புக்கு மீத்தைல் ஐசோ சயனேட் என்ற நச்சுத் திரவமே அடிப்படைப் பொருளாகும். 1979ஆம் ஆண்டு வரை இது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், 1979ல் போபால் தொழிற்சாலை வளாகத்திலேயே மீத்தைல் ஐசோ சயனேட் தயாரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.
          இந்த மீத்தைல் ஐசோ சயனேட் ஆட்கொல்லி நஞ்சு என்பதால் இந்த நிலையம் நிறுவப்படுவதற்கு தொடக்கத் திலிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது. போபால் மாநகராட்சி ஆணையர் எம்.என்.புக். என்பவர் 1975ஆம் ஆண்டிலேயே இந்த நச்சு நிலையம் நிறுவப்படுவதற்கு மாநகராட்சியின் அனுமதி கோரப்பட்டபோதே, எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத பகுதியில் இந்த நிலையம் நிறுவப் பட்டால் மட்டுமே அனு மதிக்க முடியும் என்று உறுதிபடக் கூறினார்.
          மத்தியப் பிரதேசத்தின் அன்றைய முதலமைச்சர் பி.சி.சேத்தி தலையிட்டு போபால் மாநகராட்சி ஆணையர் பதவியிலிருந்து புக்கை மாற்றல் செய்தார்.
          மீத்தைல் ஐசோ சயனேட் வழியாக கார்பரில் தயாரிக்கும் வழிமுறை ஆபத்து நிறைந்தது என்பதால், இந்த வழிமுறையையே அனுமதிக்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்தனர். மாற்று வழிமுறையில் கார்பரில் தயாரிக்க முடியும் என்று எடுத்துக் கூறினர்.
          ஆனால் மீத்தைல் ஐசோ சயனேட் வழிமுறையில் தான் செலவு குறைவு என்பதால் யூனியன் கார்பைடு நிறுவனம், பாதுகாப்புக்கு ஆபத்தான அந்த வழிமுறையையே தேர்ந்தெடுத்தது. மக்கள் உயிரைவிட தங்களது இலாபமே அதற்கு முக்கியம்.
          1975இல் மீத்தைல் ஐசோ சயனேட் மாதிரி உற்பத்தித் தொடங்கிய போது அங்கு ஆய்வு மேற்கொண்ட போபால் மாவட்டத் தொழிற் சாலை ஆய்வாளர் அதனைத் தொடரக்கூடாது என உத்தரவிட்டார். அதற்காக அந்த ஆய்வாளரும் மாற்றப்பட்டார்.
          அந்த அளவுக்கு மேல்மட்ட அரசியல் செல்வாக்கு யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சனுக்கு இருந்தது. அன்றைக்கு பிரதமர் இந்திராகாந்திக்கு நெருக்கமாக இருந்து, சட்டப் புறம்பான அதிகார மையமாக செயல்பட்ட, திரேந்திர பிரம்மச்சாரி என்ற ‘சாமியார்’ வாரன் ஆண்டர்சனுக்கு மிகவும் நெருக்கமானவர். யூனியன் கார்பைடு விருந்தினர் மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்து சீடர்களுக்கு யோகாக வகுப்பு நடத்தி வந்தார். ஆண்டர்சன் - திரேந்திர பிரம்மச்சாரி - பி.சி.சேத்தி கூட்டணி அன்று வலுவாக செயல்பட்டது.
          1979இல் ஐசோ சயனேட் உற்பத்தி தொடங்கியதிலிருந்தே யூனியன் கார்பைடு ஆலையில் விபத்துகளும் தொடங்கின. 1981லிருந்து மீத்தைல் ஐசோ சயனேட் சேகரிப்புக் கலத்திலிருந்து நச்சுவாயுக் கசிவு விபத்துகள் ஆலையில் அடிக்கடி நிகழத் தொடங்கின. 1981 மார்ச்சில் ஒரு தொழிலாளி மரணம், ஏப்ரலில் ஒரு பொறியாளருக்கு நச்சுவாயுக் காயங்கள், ஆகஸ்ட்டில் வாயுக் கசிவால் 20 தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதி, திசம்பரில் நச்சுவாயுக் கசிவால் ஆலைக்கு அருகில் வசித்த நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு என்று பாதிப்புகள் அதிகரித்தன.
          இந்திப் பத்திரிக்கையாளர் ராஜ்குமார் கேசவானி, 1981, 1982 இரு ஆண்டுகளும் “எந்த நேரமும் யூனியன் கார்பைடில் விபத்து நேரலாம்” என கட்டுரை எழுதி எச்சரித்தார். “எரிமலை மீது போபால்”, “காத்துக் கொண்டிருக்கும் பேராபத்து” போன்றவை அவரது கட்டுரைத் தலைப்புகள்.
          கார்பைடு தொழிலாளர் சங்கம் ஆலையில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி ம.பி. முதலமைச்சருக்கும், இந்திய உள்துறைக்கும், தொழிலாளர் துறைக்கும் புகார் மனு அளித்தது. “கொல்லும் கார்பைடு ஆலை” என்று விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொண்டது.
          எதிர்க்கட்சிகள் இச்சிக்கல் குறித்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் விவாதம் எழுப்பின.
          இந்நிலையில் யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சன் ஆணைப்படி பாதுகாப்புத் தணிக் கைக் குழு அமெரிக்காவிலிருந்து போபாலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. சி.எஸ்.டைசன் என்பவர் தலைமையிலான அக்குழு ஆலையை ஆய்வு செய்து தனது அறிக்கை யை 1982 மார்ச்சில் வாரன் ஆண்டர்சனிடம் அளித்தது.
          ஆலையில் 61 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றுள் 30 குறைபாடுகள் மிக அவசரமாகக் கவனித்துக் களையப் பட வேண்டியவை என்றும், அவ்வாறு உடனே செய்யாம லிருந்தால், எந்த நேரத்திலும் மனிதப் பேரழிவு நிகழக்கூடும் எனவும் டைசன் அறிக்கை எச்சரித்தது.
          இதற்கு ஆகும் செலவு 20 இலட்சம் டாலர் (அன்றைய மதிப்பில் 48 கோடி ரூபாய்) எனவும் டைசன் குழு மதிப்பிட்டது.
          இந்தச் செலவை மேற் கொள்ள ஆண்டர்சன் மறுத்தார். மேலும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைக்கத் தொடங்கினார். பாது காப்புக் குறைபாடுகள் குறித்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து மொத்தமாக போபால் ஆலையை இந்தோனேசியா அல்லது பிலிப் பைன்சுக்கு மாற்றுவதற்கான பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்.
          இவையெல்லாம் ஆண்டர் சன் நேரடியாக ஈடுபட்டு நடந்த செயல்பாடுகள் என்பதற்கு அடுக் கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.
          இந்த நிலையில் நச்சுவாயுக் கசிவு ஏற்படுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மீத்தைல் ஐசோ சயனேட் சேமிப்புத் தொட்டிக்கு இருந்த குளிரூட்டிகள் நிறுத்தப்பட்டு விட்டன. வெளி யாகும் ஹைட்ரஜன் சயனைடு நச்சுவாயுவைத் தூய்மைப் படுத்தி நச்சில்லா வேறுவாயுவாக மாற்றும் கருவி நிறுத்தப்பட்டுவிட்டது. வெப்பநிலையைக் காட்டும் கருவிகள், கசிவைக்காட்டும் கருவிகள் போன்றவை நிறுத்தப் பட்டுவிட்டன. கண்காணிப்புப் பணிக்கான ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது.
          இவ்வாறான சூழலில்தான் 1984 திசம்பர் 2ஆம் நாள் இரவு கழிவுத் தண்ணீர் மீத்தைல் ஐசோ சயனேட் தொட்டிக்குள் சென்றது. தண்ணீர் கலந்தவுடன் வெப்ப உமிழ்வினை தொடங்கியது. (சுண்ணாம்பு நிரப்பிய வாளியில் தண்ணீர் ஊற்றினால் வெப்பம் வெளிப் படுவதைப் போன்ற வேதிவினை இது) சில நிமிடங்களில் 200 சென்டிகிரேடு என்ற அளவுக்கு வெப்பநிலை உயர்ந்தது. நாற் பதாயிரம் கிலோ மீத்தைல் ஐசோ சயனேட் ஒரே நேரத்தில் வெளி யேறியது.
          வெளிக்காற்றோடும், தண் ணீரோடும், ஐசோ சயனேட்டுக்கு நிகழ்ந்த வேதிவினையில் ஹைட் ரஜன் சயனைடு என்ற ஆட்கொல்லி நச்சுவாயு தோன்றி போபாலையே பிணக்காடாகியது. இருபது ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். நீதிமன்ற கணக்குப்படி இது 15 ஆயிரத்து 500 பேர். ஏறத்தாழ இரண்டு இலட்சம்பேர் நடைப்பிணமாக மாற்றப்பட்டார்கள்.
          பேரழிவுச் செய்தியறிந்து அமெரிக்காவிலிருந்து போபால் வந்த யூனியன் கார்பைடு முதலாளி வாரன் ஆண்டர்சனை போபால் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார். செய்தியறிந்த அன்றைய ம.பி. முதலமைச்சர் அர்ஜூன் சிங் ஆண்டர்சனை யூனியன் கார்பைடு விருந்தினர் மாளிகையிலேயே “சிறை” வைக்கும்படி ஆணை யிட்டார்.
          நான்கு நாள்களில் சொந்தப் பிணையில் வெளிவந்த ஆண்டர் சனை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை அதிகாரியும் பாதுகாப்பாக போபால் விமான நிலையம் அழைத்துச் சென்றனர்.
          ம.பி. மாநில அரசின் தனி விமானத்தில், திசம்பர் 7ஆம் நாள் தில்லி சென்ற ஆண்டர்சன், அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கின் விருந்தினராகத் தங்கிவிட்டு அடுத்தநாள் அமெரிக்கா பறந்தார். ராஜீவ்காந்தி அமைச்சரவை யில் மூத்த அமைச்சர் பி.வி.நரசிம்ம ராவ் அவரை வழியனுப்பி வைத்தார்.
          இவையெல்லாம் 2005வரை கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு நடந்து இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டதால் கமுக்கம் நீக்கப் பட்ட ஆவணங்களாக இவை வெளியாயின. ஆண்டர்சன் அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்பே ராஜீவ் காந்தியிடம் வாக்குறுதி பெற்றே போபால் வந்தார் என்பது இப்போது தெளிவாக வெளிப்பட்டு விட்டது. ஆனால் அன்றைக்கு அது இந்த அளவு வெளியாகவில்லை.
          போபால் நச்சுவாயு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நீதியும், நிவாரணமும், பெற்றுத் தரும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாக ராஜீவ்காந்தி அரசு அறிவித்தது. “போபால் நச்சுவாயுக் கசிவுப் பேரழிவு இழப்பீடுக் கோரிப் பெறும் சட்டம் - 1985” என்ற சட்டத்தை 1985 மார்ச்சில் பிறப்பித்து பொறுப்பைத் தான் எடுத்துக் கொண்டது.
          பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்திய அரசு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 330 கோடி டாலர் அதாவது அன்றைய மதிப்பில் 7920 கோடி ரூபாய் இழப்பீடு கோரியது.
          இதனை இந்திய நீதி மன்றத்தில் விசாரித்து முடிவு செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
          எனினும் விசாரணைக்கு யூனியன் கார்பைடு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஒத்துழைப்பதாக ஆண்டர்சன் சார்பில் உறுதிப்பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது.
          போபால் நடுவர் நீதி மன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் யூனியன் கார்பைடு ஆலை செய்த மேல் முறையீடு 1989ல் உச்சநீதி மன்றம் சென்ற போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அகமதி கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டார்.
          மொத்தமாக 4.7 கோடி டாலர், அதாவது அன்றைய மதிப்பில் 723 கோடி ரூபாய் இறுதி இழப்பீடு என்று பஞ்சாயத்து கூறினார். இந்திய அரசு ஏற்றது. பிரச்சினையை அத்தோடு விடுவ தென்றும், யூனியன் கார்பைடு மீதோ, ஆண்டர்சன் மீதோ உள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறு வதாகவும் உறுதிப் பத்திரம் அளித்தது.
          இதன்படி ஆளுக்கு ரூ.12,000 வீதம் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிக்கப்பட்டது.
          தாங்கள் வஞ்சிக்கப்பட்ட தாக தெளிவுபடுத்தி ரசீதாபீவி, சம்பாதேவி சுக்ளா ஆகிய இரண்டு பெண்மணிகள் பாதிக்கப்பட்டோர் சார்பில் 1991ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆண்டர்சன் உள்ளிட்ட பொறுப் பாளிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும் என்றும், இழப்பீடு ஏற்கெனவே இந்திய அரசு கோரிய வகையில் வழங்க வேண்டும் எனவும் கோரினர்.
          இதனைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், குற்றவியல் வழக்குத் தொடர அனுமதித்தது. ஆயினும் அது தண்டனைச் சட்டப்பிரிவு 304-A படியான வழக்காக மாற்றப்பட வேண்டும் என அகமதி ஆணையிட்டார்.
          ஏற்கெனவே, 304ஆம் பிரிவின் கீழ், அதாவது மனிதச் சாவுக்குத் தெரிந்தே காரணமாக அமைந்தவர்கள் என்ற வகையில் வழக்கு நடந்து வந்தது. இதன் கீழ் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கலாம். ஆனால் 304--A என்பது கவனக்குறைவாக நடந்து கொண்டு விபத்து ஏற்படுத்துவது என்ற பிரிவாகும். இதன் கீழ் அதிக அளவு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம் அவ்வளவுதான்! அதுதான் இப்போது நடந்துள்ளது.
          நீதிபதி அகமதி கூறியது போல் இது கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்து அல்ல. தனது கொள்ளை இலாபத்தைப் பாது காத்துக் கொள்வதற்காக திட்ட மிட்டே செய்யப்பட்ட பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுத்திய மனிதக் கொலை.
          இதனை மேலே விளக்கி யிருக்கிறோம்.
          வாரன் ஆண்டர்சனுக்கு போபால் யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகப் பணியில் நேரடிப் பங்கு இல்லை; அன்றாடப் பணிகளுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனவே அவரைக் குற்றவாளியாக சேர்க்க முடியாது என்ற வாதம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. ஆண்டர்சனுக்கு போபால் ஆலை யின் கடுமையான பாது காப்புக் குறைபாடுகள் தொடக்கத் திலிருந்தே தெரியும் என்பதை விளக்கி உள் ளோம். குறிப்பாக அவர் அனுப்பிய டைசன் குழு 61 குறைபாடுகளைக் குறித்து அவருக்கு அறிக்கை அளித்ததும் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை.
          எனவே இந்தப் பேரழிவுக்கு முதன்மைப் பொறுப்பாளி வாரன் ஆண்டர்சன் ஆவார்.
          இப்போது யூனியன் கார் பைடு ஆலை கைமாறிவிட்டது. அமெரிக்காவின் டவ் கெமிக்கல்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள யூனியன் கார்பைடு ஆலைகளை 2001ஆம் ஆண்டு வாங்கிவிட்டது. போபால் ஆலைக்கும் டவ் கெமிக்கலே உரிமையாளர். எனவே இன்றைக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு டவ் கெமிக்கல்சுக்கே உள்ளது.
எனவே,
- இந்திய அரசு அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் தான் ஏற்கெனவே கோரியபடி 330 கோடி டாலர். அதாவது இன்றைய மதிப்பில் 21450 கோடி ரூபாய் டவ் கெமிக்கல்சிடம் இழப்பீடு கோரிப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.
- வாரன் ஆண்டர்சனை இந்தியா விற்கு வரவழைத்து, கைது செய்து 304 பிரிவின்படி வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
- ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்த அரசியல் பிரமுகர்களைக் கண்டறிந்து கூண்டில் ஏற்ற வேண்டும். இதில் ராஜீவ்காந்தியின் பங்கை வெளிப் படுத்த வேண்டும்.
- போபால் நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அணு ஆலை விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவை நிறைவேற்றாமல் கைவிட வேண்டும். 
- கி.வெங்கட்ராமன்

0 கருத்துகள்:

ஒட்டுண்ணி முதலாளியம் - தமிழ்த் தேசியர்களுக்கான அறைகூவல் - தோழர் கி.வெங்கட்ராமன்

உலகமயப் பொருளியல் கோலோச்சுகிற இக்காலகட்டத்தில், முதலாளிய சனநாயகம் வெறும் வாக்களிக்கிற சடங்காக குறுகிப் போய் மாற்று அரசியலுக்கான சனநாயக அரசியல் வெளி சுருக்கப் பட்டுள்ளது. நாட்டிற்கு ஏற்றாற் போல் வெள்ளை நிறவெறி, ஜியோனிய யூதவெறி, ஆரிய மேலாண்மை ஆகியவற்றோடு இணைந்து உலகமயம் செயல்படுவதால் இச்சிக்கல் தீவிரமடைந்துள்ளது.
            அதிகாரம் மய்யப்படுதல், தேர்தல் அரசியல் கட்சி வேறுபாடின்றி குற்றமயமாதல், தேர்தல்கள் ஊழல் மயமாதல் ஆகியவை இன்றைய காலகட்டத்தின் பொதுப் பண்புகளாக விளங்குகின்றன.
            முதலாளியமானது தொழில் மூலதன ஆதிக்கம், நிதி மூலதன ஆதிக்கம் என்ற நிலைகளைக் கடந்து நிதி மூலதன பேயாட்சியின் ஒரு அழுகிய நிலையைப் பெற்றெடுத்துள்ளது. ஒட்டுண்ணி முதலாளியம் அல்லது கூட்டாளி முதலாளியம் என்ற நிலையே அது. முதலாளிகள், அரசியலாளர்கள், அரசு நிர்வாகம், நீதித்துறை அனைத்தும் இணைந்த ஒரு அழுகல் கூட்டணி இந்த முதலாளியக் கட்டத்தின் தனித்தன்மையாகும். இந்த ஒட்டுண்ணி முதலாளியம் உலகு தழுவியதாக பரவி வருகிறது. இன ஆதிக்கத்தோடு இணைந்து வருகிறது. முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் பிரித்தறிய முடியாதபடி பிண்ணிப் பிணைந்து விட்டனர். இதன் விளைவாக உரிமைக் கோரும் மக்களைப் பொறுத்தவரை சனநாயக - சட்டவழி செயல்பாட்டுவெளி குறுக்கப்படுகிறது.
            இந்த நிலை எவ்வாறு உருவானது? இதனை எப்படி எதிர்கொள்வது என்பவை மக்கள் இயக்கங்கள் முன் உள்ள வினாக்களாகும்.
            தொடக்ககால முதலாளியம், போட்டி முதலாளியமாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி, மேலாண்மைத் திறன் ஆகியவற்றின் வழி முதலாளிகள் தங்கள் இலாபத்தைப் பெருக்கிக் கொள்வது என்பது போட்டி விதியாக செயல்பட்டது. உழைப்புச் சுரண்டல் அனைத்து முதலாளிகளுக்குமான பொது விதியாக இருந்த போதே மேற்கண்ட போட்டிவிதி செயல்பட்டது. இதன் போக்கில் முற்றுரிமை முதலாளியம் உருவெடுத்தது. மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் முதலாளியத்தின் உச்சகட்டம் என்ற புகழ்பெற்ற தனது நூலில் இதனைத் தெளிவாக விளக்குகிறார். நிதி மூலதனம், தொழில் உற்பத்தி மூலதனத்தை விட மேல்நிலை பெற்றதை இந்த உச்சகட்டம் குறிப்பதாக அவர் தெளிவு படுத்தினார்.
            உலகமயம்(எடூணிஞச்டூடித்ச்tடிணிண) என்பது இந்த நிதி மூலதனத்தின் முற்றுரிமை கட்டத்தை (குறிக்கிறது. “இருபதாம் நூற்றாண்டின் நிதி மூலதன காலகட்டத்திலிருந்து இந்த முற்றுரிமை நிதி மூலதன காலகட்டம் என்பது பண்புவகையில் வேறானது. வங்கி மூலதனத்தின் மேலாதிக்கம் இதன் தனித்தன்மையாகும்” என ஜான் பெலாமி பாஸ்டர் குறிப்பிடுகிறார் (The Great financial crisis – John Bellamy Foster and Fred Magodff, 2009, p. 84).
            உற்பத்தி துறையின் மீது இந்த நிதி மூலதனம் மேலாதிக்கம் செய்கிறது. இந்த மேலாதிக்கத்திற்கு ஈடுகொடுக்க முடியாத தொழில்துறை முதலாளிகளும், சிறிய நடுத்தர வங்கிகளும் களத்தை விட்டு வெளி யேறுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறிய மீன்களை பெரிய மீன்கள் வேகமாக விழுங்கி வருகின்றன. தொழில்துறையிலும் வங்கித் துறையிலும், பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை இணைத்துக் கொள்வதும் எடுத்துக் கொள்வதும் வேகம் பெற்றுள்ளன.
            இந்திய பங்குச் சந்தையில் 2010 சனவரி முதல் சூன் வரை நடைபெற்ற பங்குவணிகத்தில் ‘இணைத்தல் - கையகப்படுத்தலில்’மட்டும் சுமார் 2 இலட்சம் கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை வங்கியை ஐ.சி.ஐ.சி.ஐ. விழுங்கியது. இப்போது சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைசியா வங்கி ஆகியவற்றுக்கு ரிலையன்சும் மகிந்திராவும் குறி வைத்துள்ளன. இவற்றின் விளைவாக தொழிற்துறை சந்தையின் விரிவாக்க வேகம் குறைந்து வருகிறது.
            இன்னொரு புறம், உலக மயக்கட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாதிக்கம் உலகு தழுவியதாக இருந்த போதிலும், சிலர் நினைப்பது போல் நாட்டு அரசுகளின் வலு குறைந்து விட வில்லை. நாட்டு அரசுகள் பொருளற்றதாக மாறி உலகு தழுவிய ‘மீஅரசு’ (Superstate) உருவாகி விட்டதாக நினைப்பது தவறு. அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை ஒன்றொன்றாகக் கைவிட்டு வெளிப் படையான அடக்குமுறைக் கருவி யாக அம்பலப்பட்டு வருவது தான் உண்மை நிலை யாகும்.
            சந்தை விரிவாக்க வேகம் குறைவதற்கும் அரசின் மேற்கண்ட நிலைமைக்கும் நெருக்கமான உறவு உண்டு.
            சந்தை விரிவாக்கம் மந்த மடைவதால் முற்றுரிமை நிதி மூலதனம் தனது விரிவாக்கத்திற்கு வேறுவழிகளைத் தேடுகிறது. பங்குச் சந்தை சூதாட்டம், வங்கி மூலதனம், ஊக வணிகம், மனை வணிகம், காப்பீட்டுத் தொழில் ஆகிய துறைகளில் இந்த நிதி மூலதனம் பாய்கிறது. தொழில் உற்பத்தி தாங்கள் விரும்பும் வேகத்தில் விரிவடையாத நிலையில், படைக் கருவி உற்பத்தியில் உற்பத்தித்துறை மூலதனத்தை முற்றுரிமை முதலாளி கள் இறக்கி விடுகிறார்கள்.
            பங்குச்சந்தை சூதாட்டம், ஊக வணிகம், மனை வணிகம் ஆகியவற்றில் முதலாளிய சந்தை விதிகளின்படி போட்டிகள் நடை பெறுவதில்லை. ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினர் துணையோடு குறுக்குவழிகள் கையாளப்படுகின் றன. படைவகை உற்பத்தியும், ஆட்சியாளர்களின் துணையோடு தான் விரிவடைய முடியும்.
            இவ்வாறான கட்டத்தில் தான் ஒட்டுண்ணி முதலாளியம் அல்லது கூட்டாளி முதலாளியம் முதன்மை பெறுகிறது. முதலாளிகளும் அரசி யலாளர்களும் அரசு நிர்வாகத் தினரும், நீதித்துறை யினரும் ஒரே அணியில் கைகோத்து நிற்கிறார்கள். அது மட்டுமின்றி வெவ்வேறு அடை யாளத்தோடு, இதுவரை இருந்த இவர்கள் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து விடுகின்றனர்.
            தனிமுதலாளிகள் ஆட்சி யாளர்களுக்கோ, அதிகாரி களுக்கோ கையூட்டு கொடுத்து காரியம் சாதித்துக் கொள்வது என்பது பழைய நிலை. ஆனால், இப்போது இவர்கள் பிரித்தறிய முடியாதபடி பிணைந் திருப்பது தான் பண்பு வகையிலும் புதிய நிலையாகும். முதலாளிய சூதாடிகள் கட்சிப் பொறுப்பு களிலும், கட்சிப் பிரமுகர்கள் முதலாளிகளாகவும் இருக்கின்றனர். முதலாளிகளுக்கிடையே நடக்கும் போட்டா போட்டிகளின் செயல் களமாக பங்குச்சந்தை மட்டுமில்லை நாடாளுமன்றமும் நீதித்துறையும், அச்செயல்களத்தில் உள்வாங்கப் பட்டுவிட்டது.
            மன்மோகன் சிங் ஆட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரிய போது, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, டாட்டா ஆகியோரின் தொழில் போட்டிக் களத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றம் செயல் பட்டதை நாடு கண்டது.
            “பொருளாதார அடி யாட்கள்” அரசியல் கட்சிகளிலும் ஆட்சி நிர்வாகத்திலும் நிரம்பி யிருக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங் இந்த பொருளாதார ஆடியாட்கள் பட்டாளத்தில் முதன்மையானவராக இருக்கிறார். வெளிநாட்டு நிறுவன மான பாஸ்கோவிற்கு அரசுத் துறையிலிருந்த குத்ரே முக் இரும்புத் தாது சுரங்கத்தையும், 3000 ஏக்கர் வனத்துறை நிலத்தையும் நேரடியாக நின்று வாங்கிக் கொடுத்தவர் மன்மோகன் சிங். மாவோயிஸ்டுகள் தலைமையில் இன்று போராடி வரும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், ஒரிசா மாநில பழங்குடியினர் வேட்டையாடப் படுவதற்கு மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் ஒட்டுண்ணி கூட்டணி முக்கியக் காரணம் என்பதை ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம் (காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மே 2010).
            அரசுத் தலையீடு இல்லாமல் சந்தையே அனைத்தையும் தீர் மானித்துக் கொள்ள வேண்டும் என்ற தாராளமயம் கோலோச்சுகிற இந்த காலத்தில் தான் இந்திய அரசின் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பேரரசர் போல் பவனி வருகிறார். இவரது தலைமையில் திட்டக்குழு உயரதிகார மையமாக வலுப்பெற்றி ருக்கிறது.
            இரண்டாவது முறை மன் மோகன் சிங் தலைமையில் காங்கிரசு கூட்டணி தில்லியில் அமைச்சரவை நிறுவும் போது, தனது குடும்பத் தினருக்கும் தனது குடும்பத்தினரின் பினாமிக்கும் முக்கிய துறைகளில் அமைச்சர் பதவி பெற்றுக் கொள்வதில் கருணாநிதி ஆடிய ஆட்டத்தை எல்லோரும் அறிவர். ஆனால், இந்த ஆட்டத்தின் இயங்கு சக்தியாக திரைமறைவில் செயல் பட்டது இந்த ஒட்டுண்ணி முதலாளிய உறவு தான் என்பது பலருக்குத் தெரியவில்லை.
            ஆ.ராசாவை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கொண்டு வருவதில் நீரா ராடியா என்ற சிங்கப்பூர் வாழ் பெண்மணி முக்கியப் பங்காற்றியது இப்போது அம்பலப்பட்டுள்ளது. வைஷ்ணவி, நியோ கான்ஸ் போன்ற பொது உறவு நிறுவனங்களின் அதிபர் இந்த நீரா ராடியா. பொது உறவு என்ற நல்ல பெயரில் நடப்பது கேவலமான தரகு வேலை தான். கட்சித் தலைவர்கள், உயர்மட்ட அரசு அதிகாரிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், படைத்தளபதிகள் ஆகியோரின் பலம் - பலவீனங்களை கணக்கில் கொண்டு அவர்களை வளைத்துப் போடுவது தான் இந்த பொது உறவு நிறுவனங்களின் பணி.
            ஆ.ராசா, ராசாத்தி - கனிமொழி குடும்பத்தின் பெயரிலி (பினாமி) என்பது சோனியா காந்தி - மன்மோகன் சிங் குழுவுக்கு தெரியுமாதலால், அவருக்கு தொலைத் தொடர்புத்துறை தருவ தற்கு மன்மோகன் சிங் தயக்கம் காட்டினார். பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல் தயாநிதி மாறனுக்கும், டாட்டா - அம்பானி ஆகியோர் ஆ.ராசா வுக்கும் பரிந்துரைத்தனர். ஒரு கட்டத்தில் இது இழுபறியாக மாறியது. சுனில் மிட்டலுக்கும் டாட்டா, அம்பானிக்கும் இடையே சமரசம் பேசி மூவரையும் சம்மதிக்க வைத்து ஆ.ராசாவுக்கு அப்பதவியை வாங்கித் தருவதில் நீரா ராடியா மையப் பங்காற்றினார். இவர்க ளுக்குள் ‘பங்கு பரிமாற்றத்திற்கு’ பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் கண்டார். இதன் பயனாக இராசாத்தி குடும்பத்திற்கு தரமணியில் பல மாடிக் கட்டிடத்தை டாட்டா பரிசாக வழங்கி தன்னுடைய மனை வணிகத்தில் பங்கு தாரராக சேர்த்துக் கொண்டாராம்.
            ஆளும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி முக்கிய எதிர்க் கட்சிகளும் இவ்வாறான ஒட்டுண்ணி முதலாளியக் கூட்டணியில் இடம் பெறுகிறார்கள். சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், அமர்சிங், பாரதிய சனதாவின் அருண் ஜெட்லி, கிருஷ்ணகுமார், சி.பி.எம். கட்சியின் நிலோத்பல் பாசு, மேற்கு வங்க அமைச்சர் நிருபம் சென் போன்ற பலரும் பல்வேறு முதலாளிகளின் கூட்டாளிகள் ஆவர்.
            வேதாந்தா - ஸ்டெர்லைட் ஆலையின் முதலாளி அனில் அகர்வால், காங்கிரசு, பா.ச.க., கட்சிகளுக்கு மொத்தம் 25 இலட்சம் டாலர் அதாவது 125 கோடி ரூபாய் தேர்தல் நிதி வழங்கியிருக்கிறார்.
            கட்சிகள் மட்டுமின்றி முதன்மை ஊடகத்துறையினரும் இவ்வாறான கூட்டாளி வலைப் பின்னலில் இடம் பெறுகிறார்கள். எடுத்துக் காட்டாக, ஆ.ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறை பெற்றுத் தருவதில் நீரா ராடியாவுக்கு என்.டி.டி.வி.யின் பர்கா தத்தும், சி.என்.என். - ஐ.பி.என். தொலைக் காட்சியின் வீர் சிங்வியும் நெருக்கமாக துணை செய்தனர். ‘இந்து’ என்.ராமுக்கும் கருணாநிதி குடும்பத் திற்கும் பல்வேறு முதலாளிய நிறுவனங் களுக்கும் இருக்கும் வலைப் பின்னல் தொடர்பு அனை வரும் அறிந்த ஒன்று தான்.
            உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான எஸ்.எச். கபாடியா வின் மகள், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பங்குதாரராக இருந் ததும், பெட்ரோலியப் பொருட்கள் துறையின் இயக்குநர் வி.கே.சிபல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்ததும் ப.சிதம்பரமும், நளினி சிதம்பரமும் ஸ்டெர் லைட்டில் பங்குதாரராக இருப்பதும் வெளியில் தெரிந்துள்ள மிகச் சில உண்மைகள்.
            அரசுத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் பணியில் இருக்கும் போதே, அயல்பணி என்ற வகையில் உலக வங்கி தொடர்புடைய நிறுவனங்களில் பணி செய்வதும் பணி ஓய்வுக்குப் பிறகு அயல்நாட்டு, வடநாட்டு பெரு நிறுவனங்களில் உயர் பதவி பெறுவதும் அன்றாடம் வெளிவரும் செய்தி. எடுத்துக் காட்டாக, பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள் பணியிலிருக்கும் போதே தனியார் தொலைத் தொடர்புத் துறைக்கு வேலை பார்ப்பதும் ஒரு கட்டத்தில் அது அம்பலமாகும் நிலைமை வரும் போது பி.எஸ்.என்.எஸ். நிறு வனத்தை விட்டு தனியார் நிறுவனங்களில் நேரில் சேர்ந்து விடுவதும், மறுபுறம், தனியார் நிறுவனங்களிலிருந்து பி.எஸ். என்.எல். உயர்பதவியில் ஆட்கள் நுழைக்கப் படுவதும் அண்மையில் அம்பலமான செய்தி (காண்க: The Hindu, 19.07.2010).. இதனை சுழல் கதவு என்று அழைக்கிறார்கள்.
            இந்தச் சுழல் கதவு வழியாக பல்கலைக் கழகங்கள், உயராய்வு மையங்கள் ஆகியவை பெரு முதலாளிகளின் ஆட்களால் நிரப்பப் படுகின்றன. வேளாண் உயராய்வு நிறுவனங்களில் மான்சான்டோ ஆட்கள் இருப்பதை பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
            பல்லாயிரம் கோடி ஆயுத பேரங்களில் சாமியார்கள், சர்வதேசக் குற்றவாளிகள், அரசியல்வாதிகள் என்ற நிழல் உலகமே செயல் படுவதை நாம் பார்க்கிறோம்.
            இவ்வாறு கிடைக்கும் பல் லாயிரம் கோடியில் சில கோடிகளை வாரியிறைத்து, வாக்குகளுக்கு காசு கொடுத்து இச்சூதாட்டத்தில் வலு வுள்ள கட்சிகள் வெற்றி பெறு கின்றன.
            நிதி மூலதனப் பேயாட்சி யிலும் படைப் பொருளியலிலும் இந்த ஒட்டுண்ணி முதலாளியம் நீக்கமற நிறைந்து செயல்படுகிறது.
            பெருமுதலாளிகள், அரசிய லாளர்கள், அதிகார வர்க்கம், நீதிபதிகள், முதன்மை ஊடகங்கள், ஆய்வு மையங்கள் ஆகிய அனைத்தும் இணைந்த இந்த ஒட்டுண்ணி நிலை, தமிழ்த் தேசிய இயக்கங்கள் உள்ளிட்ட மக்கள் இயக்கங்களுக்கு ஒரு அறைகூவலாக அமைகிறது.
            முதலாளிய சனநாயக - சட்ட வெளி இவ்வகை மாற்று இயக்கங் களுக்கு குறுக்கப்பட்டு விட்டன. தமிழ்த் தேசியர்களும் பிற மக்கள் இயக்கத்தினரும் தங்கள் கோரிக்கை களை அடைவதற்கு போர்க் குணமுள்ள எழுச்சி மிக்க போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் அரசியல் கட்சிகளோ, முதன்மை ஊடகங்களோ இவர்களின் கோரிக் கையை எடுத்துச் செல்ல பயன்படப் போவதில்லை.
            ஆயினும், போர்க் குணமுள்ள மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும் அரசியல் கட்சிகளாலும், முதன்மை ஊடகத் தினராலும், “பயங்கர வாதம்”, “தீவிரவாதம்”, “பிரிவினை வாதம்”, “வளர்ச்சிக்கு எதிரான பிற்போக்குத் தனம்” என்பதாக முத்திரை குத்தப் படுகின்றன. பல்கலைக்கழகங்களும், ஆய்வு நிறுவனங்களும் இளம் படிப்பாளிகளை ஆதிக்கக் கருத்திற்கு இசைவாக வார்த்து அனுப்பு கின்றன. நேரடி அடக்குமுறைகள் ஏவப் படுவதற்கு முன்னால் இவ் வாறான கருத்து நிலை மேலாண்மை பெரும்பகுதி மக்களிடம் நிறுவப் படுகிறது. எனவே, தமிழ்த் தேசியர்கள் மற்றும் பிற மக்கள் இயக்கத்தினர் கூர்மையான கருத் தியல் தெளிவை விழிப்புணர்வுள்ள மக்கள் பகுதியிடம் ஆழமாக விதைக்க வேண்டியுள்ளது.
            இவ்வாறு கருத்தியல் தெளி வின் கீழ் திரட்டப்பட்ட மக்கள் தான் போர்க்குணமுள்ள மாற்று அரசியல் போராட்டங்களில் நீடித்து நிலைக்க முடியும். குழப்பமான கருத்துகள், அறைகுறை அணுகுமுறைகள் மாற்று அரசியலுக்கு மக்களைத் திரட்ட உதவாது. அவை மே லோட்டமான ‘கட்சிப் போராட்டங் களை’ நடத்துவதற்கு மட்டுமே பயன்படும்.
            அதே நேரம், கருத்தியல் களத்திலும் போராட்டக் களத்திலும், மக்களின் எதிரிகள் முன்னைவிட வலுவிழந்த நிலையிலேயே இருக்கிறார்கள். தங்களது உலகமய - ஆரிய - இந்திய மேலாண்மைக் கருத்துகளை விழிப்புடன் உள்ள இளையோரிடம் நிலைநிறுத்த முடியாமல் தத்தளிக்கிறார்கள். போராட்டக் களத்திலும், மக்களை ஒடுக்கிவிட முடியாமல் மேலும் மேலும் அடக்குமுறைகளை ஏவி, சர்வாதிகாரங்களை மட்டுமே சார்ந்திருக்கிறார்கள். போராடும் மக்களிடம் அவர்களது முற்போக்கு - சனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது.
            ஒட்டு மொத்தத்தில், இன்றைய நிலை என்பது மக்கள் இயக்கங்களுக்கு புதிய வாய்ப்புகளையும், அதே நேரம் புதிய சவால்களையும் ஒருங்கே வழங்கியிருக்கிற காலமாகும். கருத்தியல் தெளிவோடும், போர்க்குணமுள்ள மக்கள் திரள் போராட்ட வழியிலும் உறுதியாகப் போராடினால் தான் முன்னேற முடியும்.
            தமிழ்த்தேசியர்கள், வரலாறு வழங்கியிருக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி அறைகூவல்களை திறனோடு சந்தித்தால் விடுதலை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தான். 
(தமிழ்த் தேசத் தமிழர் கண்ணோட்டம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியான கட்டுரை)

0 கருத்துகள்:

ஈழமும் பாலஸ்தீனமும் – சில படிப்பினைகள்

நீண்ட நெடிய தமிழின வரலாற்றில் இதுவரை கண்டிராத பேரழிவை ஈழத்தில் கடந்த ஆண்டு சந்தித்தோம். முள்ளிவாய்க்கால் இந்த பேரவலத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. அதே நேரம் தமிழினம் புதிய திசைவழியில் தனது வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுத வேண்டிய தேவையையும் குறித்து நிற்கிறது முள்ளிவாய்க்கால். இது நினைக்க நினைக்க தமிழர்களை உலுக்கி எடுக்கும் பெரும் சோகம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழர் களிடத்தில் தமிழ்த் தேசியம் குறித்த புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியாக எழுந்திருப்பது இந்தப் பேரழிவிற்குப் பிறகுதான். இப்போது தான் தமிழ்நாட்டு இளைஞர்களிடையேயும் தமிழ்த் தேசிய உணர்வு பரவி வருகிறது. ஆயினும், இந்த எழுச்சியும் புத்துணர்வும் சரியான அரசியல் திசைவழியில் செலுத்தப்படாது போனால் தமிழினம் வரலாறு வழங்கியிருக்கிற இன்னொரு வாய்ப்பையும் இழக்க நேரிடும்.

ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள், புலம் பெயர் தமிழர்கள் அனைவரும் இந்தியாவை - இந்தியத் தேசியத்தைத் தமது பகை சக்தி என புரிந்து கொள்வதே புதிய திசைவழிப் பயணத்தின் மையப்புள்ளியாகும். தமிழின உரிமை குறித்த சிக்கலில் இந்தியா நட்பு நாடோ நடுநிலை நாடோ அல்ல என்ற தெளிவு தமிழின உணர்வாளர்களிடையே உரிய அளவு இன்னும் உருவாகவில்லை.

தமிழீழ சிக்கலில் இந்தியாவின் பாத்திரம் குறித்து இந்திராவுக்கு முன் - இந்திராவுக்குப் பின் என்று பார்ப்பதோ, ராஜீவ்காந்திக்கு முன் - ராஜீவ்காந்திக்குப் பின் என்று பார்ப்பதோ, சோனியா காந்தியின் பழிவாங்கும் வெறியாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதோ, காங்கிரஸ் கட்சியின் அல்லது தி.மு.க. தலைமையின் அணுகுமுறையோடு மட்டுமே இணைத்துப் பார்ப்பதோ உண்மையை உணர உதவாது என்று பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறோம். மேற்கண்ட காரணிகள் தமிழீழச் சிக்கலில் ஏற்படுத்திய தாக்கங்களை அங்கீகரித்துக் கொண்டு தான் இதனைக் கூறுகிறோம்.

இன்றைய உலகில் எந்த தேசிய இனப் புரட்சியும், மக்கள் திரள் புரட்சியும் உலக நாடுகளின் புவிசார் அரசியல் நகர்வுகளை கணக்கில் எடுக்காமல் வெற்றிகரமாக நடத்தப்பட முடியாது. புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு வல்லரசுகளின் பொருளியல் - அரசியல் - வர்க்கத் தேவைகள் மட்டுமே காரணியாக அமைந்துவிடுவதில்லை. இன ஆதிக்க நலன்களும் புவிசார் அரசியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. பல நேரங்களில் இன அரசியலே புவி அரசியலின் முதன்மைக் காரணியாக அமைவதும் உண்டு. தமிழீழச் சிக்கலில் இந்தியாவின் தலையீட்டை இந்தப் பின்புலத்தில் புரிந்து கொள்வது அவசியம். உண்மை நிலையிலும், உத்தி என்ற வகையிலும் இதில் தெளிவு ஏற்படுவது இன்றியமையாதது.

சிங்களத்திற்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் களம் இறங்குவதால் தான் இந்தியா தமிழர்களுக்கு எதிராக தானும் செயல்பட வேண்டிய புவி அரசியல் நெருக்குதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுவோர் உண்டு. இது உள்ள நிலையை தலைகீழாகப் புரிந்து கொள்வதாகும். செஞ்சீனம் உருவாவதற்கு முன்னாலேயே, இந்திய சுதந்திரத்திற்கு முன்னாலேயே காங்கிரசின் அணுகுமுறை இலங்கைத் தீவை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளும் நோக்கம் கொண்டது தான். 1945இல் இலங்கை சென்ற நேருவும், பட்டாபி சீத்தாராமையாவும் இலங்கை சுதந்திர இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கலாம் என்று பேசினார்கள்.

இலங்கையை இந்தியாவின் ஒருபகுதியாக இணைத்துக் கொள்ள முடியாத போதும் அதனை தங்கள் செல்வாக்கு மண்டலத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறையே இந்திய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. சிங்கள ஆளும் வர்க்கத்தை நட்பாக்கிக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளுக்கு துணை செய்வதே இந்திய அரசின் தொடர் அணுகுமுறையாகும். இந்திய அரசின் இந்த அணுகுமுறை தான் சீனாவின் சிங்கள ஆதரவுப் போக்கை விரைவு படுத்தியது.

இந்திய அரசின் அணுகுமுறை தமிழருக்கு எதிரானதாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் அணுகுமுறை தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் காலம் வரையிலும் இந்தியாவிற்கு ஆதரவாகவே இருக்கிறது. அதனால், எந்த நல்ல பயனும் விளையவில்லை என்பதே இனக்கொலை வரலாறு காட்டுகின்ற உண்மையாகும். மூர்க்கமான தமிழின எதிரியாகவே இந்தியா நடந்து கொள்கிறது. இது சீன அரசின் போக்கிற்கு எதிர்வினை அல்ல. இந்திய அரசின் தலையீட்டிற்கு எதிர்வினையே சீனத்தலையீடு என்பது உற்று நோக்கினால் புலனாகும்.

இந்தியாவின் அணுகுமுறைக்கு வர்க்க நோக்கங்கள் இருப்பது உண்மையே ஆயினும் அது முதன்மைக் காரணி அல்ல. ஏனெனில், தமிழீழ விடுதலைக்கு துணை செய்வதன் மூலம் தனது புவிசார் வர்க்க நலன்களை நிறைவேற்றிக் கொள்ள இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பெரிய தடை ஏதும் இருக்கவில்லை. அதற்கான வாய்ப்பான சூழலையே விடுதலைப்புலிகளின் நட்பான அணுகுமுறை ஏற்படுத்தியிருந்தது.

தமிழினத்திற்கு எதிரான இனப்பகையே இந்தியாவை நகர்த்திய முதன்மைக் காரணியாகும். அதனால் தான் நட்புக்கரம் நீட்டிய ஈழத்தமிழர்களை அழித்து ஒழிப்பதில் இந்தியா முதன்மைப்பாத்திரம் வகித்தது. இந்தியாவின் இந்த இனப்பகையானது வரலாற்றின் ஒரு கட்டத்தில் உருவாகி மறைகிற தற்காலிகப் பகையன்று. இது அடிப்படையானது; நீடித்து நிலைப்பது. ஏனெனில், இந்தியா என்பது ஆரியத்தின் நவீன வடிவம். ஆரியர் - தமிழர் பகை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி, தொடர்ந்து, தீவிரம் பெற்று வருவதாகும். சிங்களமும், ஆரிய மரபினத்தின் வழித் தோன்றல் தான். தமிழினப் பகை என்பது அதன் அடிப்படை இயல்பு.

ரிக் வேதம் தொடங்கி, இன்று ஆட்சியாளர்கள் யாராய் இருந்தாலும் தவறாமல் பங்கேற்கும் தில்லி இராம் லீலா விழா வரை அனைத்து பண்பாட்டு நடவடிக்கைகளிலும், கருத்தாடல்களிலும் இந்தப் பகை மக்கள் சமூகத்தில் ஆழமாக மீண்டும் மீண்டும் விதைக்கப்படுகிறது. தமிழ் மொழி சமஸ்கிருதத்திற்கு எதிரானது, தமிழர்கள் ஆரிய இந்தியாவின் பகைவர்கள், தமிழ் இனம் ஆரிய அதாவது இந்திய இருப்புக்கு அச்சுறுத்தலான இனம் என்பது இந்தியாவில் வேரூன்ற வைக்கப் பட்டிருக்கிற அடிப்படைக் கருத்தாகும்.

மக்கள் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த பொதுக் கருத்து அளிக்கிற வலுவில் நின்று தான் ‘சனநாயக’ இந்தியா எந்த சிக்கலும் இன்றி இந்த இனக்கொலைப் போரை வழிநடத்தியது. இதனை எதிர்ப்பவர்கள் யாராய் இருந்தாலும் - இந்திய ஒற்றுமைக்கு துணை நிற்போம் என்று சூடமேற்றி சத்தியம் செய்பவரே ஆயினும் - இந்தியாவின் பகைவர்கள், இறையாண்மைக்கு எதிரானவர்கள் என பட்டம் சூட்டுவது எளிதாக நடக்கிறது.

“பாரத வர்ஷே, பரத கண்டே” என்ற ஆரிய புராணப் புனைவு இந்த நாட்டுக்கு பாரதம் என பெயர் சூட்ட அடிப்படையாகக் கொள்ளப் பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் அது உறுதி செய்யப்படுகிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்ற அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய தமிழர் தாயக இருப்பை மேற்கண்ட புராணப் புனைவு சட்டவழியிலேயே புறக்கணிக்கிறது. எனவே, தமிழர் தாயக உரிமை பேசுவோர் பிரிவினைவாதிகளாக சட்டத்தினால் அடையாளப்படுத்தப் படுகின்றனர்.

சிங்கள ஆரியமும் இதே போன்று மகா வம்ச புனைவை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தீவின் அரசமைப்பை உருவாக்கியது. தமிழினப் பகை என்பது இதன் அசைக்க முடியாத ஆதார அச்சு. ஆரியத்தின் இன்றைய வடிவங்களான இந்தியத் தேசியமும், சிங்களத் தேசியமும் தமிழின பகை கொண்டு இயங்குவது இயற்கை யானது. இந்த இயற்கையான தன்மையை புரிந்து கொள்ளாது போனால் தமிழினம் உரிமைப் போராட்டத்தில் வெல்ல முடியாது. இவற்றுள் சிங்களத்தை மட்டும் எதிர்ப்பது இந்தியாவை நட்பாகப் பார்ப்பது அல்லது நடுநிலையாக்க முயல்வது மீண்டும் மீண்டும் பேரழிவையே ஏற்படுத்தும்.

இந்தியா போன்ற ஒரு வல்லரசை எதிர்த்து தமிழீழம் அல்லது தமிழ்த்தேசம் போன்ற சிறிய தேசம் தனது இறையாண்மையை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமா என்ற கேள்வி சிலரால் எழுப்பப் படுகிறது. அதிலும், சின்னஞ்சிறிய தமிழீழம் இந்தியாவை பகைத்துக் கொண்டு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது சரியான உத்திதானா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

உண்மை நிலையின் அடிப்படையில் தான் புரட்சியின் உத்திகள் வகுக்கப்பட முடியும். இந்தியா தமிழினத்தின் பகை என்பது உறுதியான உண்மை நிலை.

உத்தி என்ற வகையிலும் சின்னஞ்சிறிய தேசம் உலக அணி சேர்க்கையில் தனக்கான அணுகு முறையைக் கைக்கொள்வது வெற்றிக்கு இன்றியமையாத ஒன்றாகும். எல்லா நாடுகளுக்கும் நண்பனாக இருக்க முயலும் ஒரு விடுதலை இயக்கம் நடைமுறையில் எல்லா நாடுகளின் பகையை பெறுவதில் தான் முடியும் என்பதற்கு தமிழீழ நான்காம் போர் தெளிவான எடுத்துக் காட்டாகும்.

தமிழீழ விடுதலைக்கு இந்தியா பகை சக்தி என்ற தெளிவோடு உத்தி வகுத்தால் தான் உலக புவி அரசியலில் இந்தியாவிற்கு எதிரான நாடுகளை நட்பாக்கிக் கொள்ள வாய்ப்பு திறந்து விடப்படும். உண்மை நிலையை உணர்ந்து வகுக்கப்படும் உத்தியாகவும் இது அமையும். உலக அரங்கில் இதற்கான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. பாலஸ்தீனம், கொசோவா இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்.

பைபிள் பழைய ஏற்பாட்டு கதையின் அடிப்படையில் உருவான யூத இனவெறிக் கோட்பாடு தான் ஜியோனியம். இந்த ஜியோனிசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது தான் இசுரேல் நாடு. பாலஸ்தீன தேசத்தை ஆக்கிரமித்தே அந்நாடு உருவாக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக ஜியோனிய யூதவெறி இசுரேல் பாலஸ்தீனத்தை குருதிக் காடாக்கி வருகிறது. கேள்விமுறையற்ற இனக்கொலை அங்கு அன்றாடம் அரங்கேறி வருகிறது.

பல்வேறு அரபு தேசங்களின் இன உறவோடு இருக்கும் பாலஸ் தீனத்தை, புடம் போட்ட போராட்ட மரபுள்ள பாலஸ்தீனர்களை இசுரேல் என்ற சிறிய நாடு தொடர்ந்து அடிமைப்படுத்த முடிகிறது என்றால் அது இசுரேலின் தனித்த வலுவினால் அல்ல. மாறாக, அமெரிக்க வல்லரசின் உறுதியான பின்பலம் இருப்பதால் தான் கேள்விமுறை யின்றி இன அழிப்பை இசுரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. அங்குள்ள எண்ணெய் வளம் என்ற பொருளியல் சுரண்டல் நோக்கு அமெரிக்க வல்லரசின் அணுகுமுறைக்கு ஒரு முக்கியக் காரணம் என்றாலும், அது முதன்மைக் காரணி அல்ல.

எண்ணெய் ஆதிக்கம் தான் முதன்மை நோக்கு என்றால், அரபு தேசிய இனத்தை நட்பாக்கிக் கொண்டு சாதிப்பதை அமெரிக்கா முதன்மை உத்தியாக வகுத்திருக்க முடியும். ஏனெனில் அரபு தேசிய இன நாடுகளில் தான் எண்ணெய் வளம் அதிகம். மாறாக, இசுரேலை சார்ந்திருப்பதற்கு இனக் காரணமே முதன்மையானது.

யூத இனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வலுவான செல்வாக்குப் பெற்ற இனமாகும்.

பொருளியல், கருத்தியல் மற்றும் அதிகார வர்க்கத் தளங்களில் யூத இனத்தின் பிடி அமெரிக்காவில் வலுவானது. ‘அமெரிக்க இசுரேல் பொதுமக்கள் துறைக் குழு’ என்ற அமைப்பு அமெரிக்க அரசியலாளர் களுக்கு பணம் அள்ளித்தரும் முதன்மையான ஊற்றாகும். யூத முதலாளிகள் படைவகை உற்பத்தியிலும் வங்கித் துறையிலும் வலுவானவர்கள்.

அமெரிக்காவில் சனநாயகக் கட்சியோ குடியரசுக் கட்சியோ யார் ஆட்சி நடந்தாலும், யூத இன செல்வாக்கு என்பது மையமானது. “பாலஸ்தீனம் மட்டுமல்ல அமெரிக்க நாடாளுமன்றமும் இசுரேல் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பிரதேசம் தான்” என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் பேட்ரிக் புக்கனான் ஒருமுறை கூறினார்.

டைமஸ் வார்னர், வால்ட் டிஸ்னி, பாக்ஸ் நியூஸ், ஏ.பி.சி., என்.பி.சி., அசோசியேட்டட் பிரஸ், நியூஸ் வீக், வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட வலுவான ஊடகங்கள் அனைத்தும் யூதர்களுடையவை. அங்கு பணி யாற்றும் முதன்மைச் செய்தியாளர் கள், ஆசிரியர் குழுவினர் பெரும்பாலோர் யூதர்கள் தான். ஹாலிவுட் திரைத்துறை யூத ஆதிக்கத்திற்கு உட்பட்டது. எனவே, அமெரிக்கக் குடிமக்களின் கருத்தை ஆள்பவர்கள் யூதர்களே. இந்த யூத இணைப்பு தான் அமெரிக்க - இசுரேல் அச்சின் அடிப்படையாகும்.

எனவே, பாலஸ்தீனர்கள் இசுரேலையும் அமெரிக்க வல்லரசையும் ஒரு சேர எதிர்த்தார்கள். பாலஸ்தீன குழந்தைகள் கூட அமெரிக்கா தனது எதிரி என்று தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடக்கத்திலிருந்தே அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்ததால், உலக அரங்கில் அதற்கு வலுவான ஆதரவு கிடைத்தது.

இந்தத் தெளிவிலிருந்து மாறி, குழம்பியபோது தான் பாலஸ்தீனப் போராட்டம் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதுவரை அமெரிக்க எதிர்ப்பில் உறுதியாக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 1991 சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, தடுமாறத் தொடங்கினார். எதிரியான அமெரிக்காவிடம் பஞ்சாயத்துக் கோரினார். 1993 ஆஸ்லோ உடன்பாடு பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை மிகப்பெரிய வீழ்ச்சியில் தள்ளியது. அதன் விளைவாக இன்று பாலஸ்தீனம் பிளவுபட்டுக் கிடக்கிறது.

சின்னஞ்சிறிய கொசோவா செர்பிய கொடுங்கோல் ஆட்சியில் சிக்கிச் சீரழிந்தது. செர்பியா நடத்திய இனக்கொலைக்கு எல்லாம் வலுவான பின்னணியாக ரசியா இருந்தது. ரசியாவின் இந்த அணுகுமுறைக்குக் காரணம் இன உறவு தான். செர்பியர்களும், ரசியர்களும் சுலோவானிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள். கொசோவா விடுதலை இயக்கம் செர்பியாவை எதிர்த்தது போலவே ரசிய வல்லரசையும் எதிர்த்தது. இதனால், புவி அரசியலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை பெற முடிந்தது.

இன்று, கொசோவா புதிதாகப் பிறந்த தேசமாக உலகப் படத்தில் இடம் பெற்றுவிட்டது. இந்தப் படிப்பினைகளை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்காவிலாவது யூத செல்வாக்கு மட்டுமே உண்டு. ஆனால், இந்தியா என்பதே ஆரியக் கட்டமைப்பு. இது தமிழின எதிர்ப்பு என்ற அடிப்படைத் தன்மையுடையது.

இந்தியக் கட்டமைப்பில் சட்டப்படி சமத்தன்மையுள்ள மாநிலங்களாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகியவை இருந்த போதும் தில்லி அரசு இத்தேசிய இனங்களை சமமான வகையில் அணுகவில்லை. கன்னடர், மலையாளிகள், தெலுங்கர் ஆகியோருக்கு ஆதரவாகவும் தமிழினத்திற்கு எதிராகவும் இந்தியா நடந்து கொள்கிறது. ஆரிய - தமிழர் பகை இந்தியா என்ற கட்டமைப்பின் ஊடாக தொடர்வதின் வெளிப்பாடே இது. கச்சத்தீவு, மீனவர் சிக்கலிலும் இந்தப் பகை தெளிவாகப் புலனாகும்.

இந்த உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு இந்தியாவை எதிர்த்துப் போராடுவது, தவிர்க்க முடியாத தேவையாகும். எனவே தான் இரண்டின் வடிவங்கள் வெவ்வேறாக இருந்த போதிலும் தமிழீழ விடுதலையும், தமிழ்த் தேசப் புரட்சியும் இணையாக நடைபெற வேண்டிய போராட்டங்கள் என்கிறோம்.

தமிழர்க்குத் தேவை இரண்டு நாடுகள் என்கிறோம்.

ஒன்றே முடியாத போது, இரண்டு தமிழ்த் தேச விடுதலை சாத்தியமா என்று கேள்வி எழுப்புவது உலக நிலைமையை உணராததின் வெளிப்பாடு. அதனதன் தன்மையிலேயே தமிழீழ விடுதலையும், தமிழ்த் தேச விடுதலையும் தவிர்க்க முடியாத தேவை. அதுமட்டுமின்றி இரண்டு முனைகளில் ஓரு இனம் போராடுவது வெற்றியை எளிதாக்கும் உத்தியாகும். இவ்வாறான தெளிவோடு நமது அடுத்தக் கட்ட பயணத்தின் திசைவழி தீர்மானிக்கப்பட்டால் தான் தமிழினம் அடிமைத் தளையிலிருந்து விடுதலையாக முடியும்.

எனவே, ‘தமிழீழம் வெல்லட்டும், தமிழ்த்தேசம் மலரட்டும்’ என்ற இரட்டை முழக்கத்தின் கீழ் உலகத்தமிழினம் ஒன்று திரளட்டும்!

- கி.வெங்கட்ராமன்

(மயிலாடுதுறையில் 18.05.2010 அன்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் சார்பில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால வீரவணக்கக் கூட்டத்தில் ஆற்றிய உரையைத் தழுவியது.)

0 கருத்துகள்:

பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை

அன்றாடம் வான் தாக்குதல், வாரம் சராசரியாக 40 பழங்குடியினர் பலி. 3 இலட்சம் பேர் அகதிகளாக காடுகளில் தஞ்சம்... இதுதான் இன்று மைய இந்திய மாநிலங்களில் உள்ள நிலைமை. இதற்கு ஆட்சியாளர்கள் வைத்துள்ள பெயர், “பச்சை வேட்டை’ என்பதாகும்.

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளை தேடுகிறோம் என்ற பெயரில் இந்திய அரசின் ஒருங்கிணைப்பில் சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா ஆகிய மாநில அரசுகள் இந்த வேட்டையை நடத்துகின்றன.

இந்திய விமானப்படையின் கருடா என்ற போர் விமானமும் பல்லாயிரம் தரைப்படையினரும் இணைந்த ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் கொண்ட ஒருங்கிணைந்த இந்திய, மாநிலப்படை இக்கொடுந் தாக்குதலை நடத்தி வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவித்து பழங்குடி மக்கள் வாழ்கிற பகுதிகளிலிருந்து அம்மக்களை மன்மோகன் சிங் ஆட்சி வெளியேற்றி வருகிறது. காட்டு வளங்களையும், இரும்பு, தங்கம், வெள்ளி, செம்பு, வைரம், நிலக்கரி, பாக்சைட், ஸ்டெர்லைட் போன்ற கனி வளங்களையும் பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கி வருகிறது தில்லி அரசு.

இதனை எதிர்த்து தங்கள் வாழ்வா தாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தனித்தோ அல்லது மாவோயிஸ்டுகள் தலைமையிலோ போராடுகின்ற பழங்குடி இன மக்கள் மீது ஈவிரக்கமற்றப் போரை கட்டவிழ்த்துள்ளது இந்திய அரசு. மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பழங்குடியினக் காவலர்கள் என்று வேடங்கட்டிய அனைத்து முதலமைச்சர்களும் இந்தப் போரில் இந்திய வல்லரசோடு இணைந்து நிற்கின்றனர்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஸ்டர் மண்டலம் என்றழைக்கப்படும் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்குள் 26 ஆயிரம் படையாட்கள் குவிக்கப் பட்டு இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், குழந்தை காப்பகங்கள் ஆகியவை படைமுகாம் களாக மாற்றப்பட்டுள்ளன. தங்களது அன்றாட தேவைகளுக்காக காட்டுப் பழவகைகளை சேகரித்து உண்பதற்காக குடியிருப்பை விட்டு வெளியில் வரும் பழங்குடியினர் பச்சை வேட்டையில் பலியாகின்றனர். பெண்களும், குழந்தைகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதும் கேள்வி முறையின்றித் தொடர்கிறது.

“இப்பகுதிகளில் பழங்குடியினர் அரசு அமைக்கும் கண் காணிப்பு முகாம்களில் தங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சொந்த வீட்டில் வாழ்வதே தீவிரவாதக் குற்றமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. பள்ளிக் கட்டிடங்கள் படையினரின் பாசறையாக மாற்றப் பட்டுள்ளன. பள்ளிக் குழந்தைகள் படிப்பதற்கான மரத்தடிகளில் தான் அங்கு கல்வி கற்பிக்கச் செல்லும் ஆசிரியர்கள் கூட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக குற்றம் சுமத்தப்படுகிறார்கள். முற்றமுழுதான பொருளியல் முற்றுகையில் அப்பழங்குடி மக்கள் வைக்கப் பட்டிருக்கிறார்கள்” என்று எழுத்தாளர் அருந்ததி ராய் குறிப்பிடுவது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.

ஈராக் போரில் ஜார்ஜ் புஷ் கொக்கரித்தது போல இந்திய வல்லரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் “தேடுதலின் போது கொல்லப் படுபவர்களின் எண்ணிக் கை குறித்து நாங்கள் கணக்கில் பதிவு செய்து கொள்வதில்லை’’ என்று ஆணவமாய் கொக்கரிக்கிறார்.

ஈழத்தில் தமிழர்களை இனக்கொலை செய்ய சிங்களத்தோடு சேர்ந்து ‘ஆபரேசன் பெக்கான்’ திட்டம் தீட்டியதைப் போலவே சாட்சியற்ற படுகொலை செய்ய இங்கேயும் தில்லி ஆட்சியாளர்கள் திட்டமிட்டி ருக்கின்றனர். ‘மாவோயிஸ்ட் அபாயத்தை 2013க்குள் முற்றிலும் ஒழிப்போம்’ என்று மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் கூட்டணி அறிவித்துள்ளது.

ஈழத்தில் செய்தது போலவே இங்கேயும் பழங்குடியினரிடையே ஆள்காட்டிகளை இந்திய உளவுத் துறை உருவாக்கியது. சால்வாஜூடும், சிறப்புக் காவல்படை, சாந்தி சேனா, ஹர்மத் வாஹினி போன்ற பல பெயர்களில் இவ்வாறான ஆள்காட்டி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவர் களுக்கு ஆயுதம், பணம், வாகனம், பாதுகாப்பு ஆகியவற்றை அரசுகள் வழங்கு கின்றன.

இது குறித்து இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2009ஆம் ஆண்டு வரைவறிக்கை கூறுவது இந்திய வல்லரசின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலவும் வேளாண் உறவுகள் மற்றும் நிலச்சீர்திருத்தம் குறித்து நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் நான்காம் துணைக்குழு கீழ் வருமாறு கூறுகிறது:

“சல்வாஜூடும், சட்டீஸ் கர் மாநில அரசால் உருவாக்கப் பட்டு ஆயுதபாணி யாக வளர்த் தெடுக்கப்பட்டது. இதற்கு நடுவண் அரசின் ஆயுத உதவியும் அமைப்புவகை வழி காட்டலும் அளிக்கப்பட்டது”.

அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர், அன்றாட கண்காணிப்புக்கும் சோதனையிடலுக்கும் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். படை யாட்களின் அத்துமீறலுக்கு இப் பழங்குடியின பெண்களும், குழந்தை களும் கேள்வி முறையின்றி ஆளாக்கப்படுகின்றனர். இடை விடாத உளவியல் அச்சறுத்தலுக்கு இவர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். அல்ஜீரியாவில் பிரான்சும், வியட்நாமும், அமெரிக்காவும், வன்னியில் சிங்கள இந்தியக் கூட்டணியும் கையாண்ட அதே உத்தி பழங்குடி மக்களிடையேயும் இன்று தொடர்கிறது.

‘வேதாந்தா ரிசோர்சஸ்’ என்ற ஸ்டெர்லைட் குழுமத்தின் பங்குதாரராக ப.சிதம்பரம் 2004வரை இருந்தவர். இன்றும் மறைமுகமாக அந்த உறவு தொடர்கிறது. அமைச்சராவதற்கு முன் அவரும், அதற்குப் பின் அவரது மனைவியும் இந்நிறுவனத்தின் நிரந்தர வழக்கறிஞர்களாக இருக்கின்றனர். டாட்டா, எஸ்ஸார், பாஸ்கோ, மிட்டல், ஜிண்டால் குழுமங்களுடன் சோனியா - மன்மோகன் சிங் கும்பலுக்கு இருக்கும் பணஉறவு ஊரறிந்த ஒன்று.

பச்சை வேட்டையை இவர்கள் வேகமாக நடத்துவதற்கு இந்த பணஉறவும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.

படையாட்களால் கொல்லப் பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை மக்களுக்கும், தொடர்புடைய குடும்பங்களுக்கும் இந்திய, மாநில அரசுகள் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனித உரிமை அமைப்பினர் தாக்கல் செய்த இந்தப் பொதுநல மனு விசாரிக்கப் படாமலேயே 2007ஆம் ஆண்டி லிருந்து உச்சநீதிமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தில் லால்கார், கிழக்கு சிங்கூர், மேற்கு சிங்கூர், குந்தி, கும்லா, பொக்காரோ அசாரிபாக் ஆகிய பகுதிகளும் ஒட்டு மொத்தமாக இராணுவக் கட்டுப் பாட்டில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் மட்டும் பாஸ்கோ, மிட்டல், டாடா, வேதாந்தா முதலான 200 நிறுவனங்களுடன் தில்லி அரசும், மாநில அரசுகளும் தொழில் முனைவு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளன. கிழக்கிந்திய வெள் ளைக்கார கம்பெனிக்கு அடியாட் களாக பிரித்தானியப் படைகள் காலனி நாடுகளில் செயல்பட்டதைப் போல இந்த கொள்ளைக்கார கம்பெனிகளுக்கு அடியாள் படையாக இந்தியப் படைகள் பச்சை வேட்டையில் ஈடுபடுகின்றன.

எடுத்துக்காட்டாக, சோட் டா நாக்பூர் மண்டலத்தில் கடந்த ஜூலை 2009லிருந்து நடைபெற்று பச்சை வேட்டையில், மாவோயிஸ்டு களும் அவர்களுக்கு ஆதரவான பழங்குடி மக்களும் வெளியேற்றி விடபட்டுவிட்டனர் என்று அரசு அறிவித்த உடனேயே பன்னாட்டு எஃகு பகாசுர கம்பெனியான பாஸ்கோ சோட்டா - நாக்பூரில் 54 ஆயிரம் கோடி முதலீட்டில் இரும்புத் தொழிற்சாலை தொடங்கப் போவதாக அறிவித்தது.

தங்கள் சொந்த மண்ணில் அமைதியாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் வளர்ச்சி என்ற பெயரால் வாழிடங்களை விட்டு தொகைத் தொகையாக வெளியேற்றப் படுகின்றனர். வாய்பேச வழியில்லாத அரசியல் அநாதைகளான இந்த மக்களுக்கு உற்ற அரணாக மாவோயிஸ்டுகள் போராடி வருகிறார்கள்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இதனை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் காட்டி தொடர் அடக்குமுறையை இந்திய அரசு கட்டவிழ்த்து விட்டாலும், மாவோயிஸ்டுளை ஒழித்து விட முடியவில்லை. இது அடிப்படையில் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. மாறாக ஆழமான சமூகப் பொருளியல் பிரச்சினையாகும். மக்களைச் சார்ந்த அரசியல் திசை வழியில் தீர்க்கப் படாமல் போனால் இது மீண்டும் மீண்டும் தலையெடுக்கவே செய்யும்.

எனவே, இந்திய அரசு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டும். அவ்வமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும். சிறையில் வைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர்களை விடுதலை செய்து அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். பழங் குடியினரின் அவரவர் வாழிடங் களுக்கு செல்ல அனுமதித்து அவர்களின் இயல்பான வாழ்க்கை யை அனுமதிக்க வேண்டும். அடக்கு முறையின் மூலமாக இச்சிக்கலைத் தீர்க்க முடியாது என்பதை உணர வேண்டும்.

இறையாண்மை பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு என்று பெயர் சூட்டி மனித வேட்டையில் ஈடுபடும் இந்திய அரசுக்கு இது தெரியாத தல்ல.

சத்தீஸ்கர், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் வாழும் கோல்டு, கோயா, தோர்லா ஆகிய பழங்குடி மக்கள் தங்கள் தாய் நிலத்தைப் பாதுகாக்க வெள்ளைக் காரர்கள் முயன்ற போது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே வீரஞ் செறிந்த போராட்டம் நடத்தி யவர்கள். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. இன்று அவர்களுக்கு அரணாக இருந்து மாவோயிஸ்டுகள் அவர்களது வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்.

இப்பகுதிகளில் மாவோ யிஸ்டுகள் தலைமையில் தொடக்க நிலையிலான மாற்று நிர்வாக ஏற்பாடுகள் பழங்குடி மக்களின் மரபுகளை உள்வாங்கி செய்யப் பட்டுள்ளது. 3 முதல் 5 கிராமங்களை உள்ளடக்கிய புரட்சிகர மக்கள் குழு உள்ளூர் நிர்வாகமாக செயல்படு கின்றது. இது போன்ற 15 புரட்சிகர மக்கள் குழுக்கள் இணைந்தது பிரதேச புரட்சிகர மக்கள் குழு ஆகும்.

ஆயினும், பல்லாயிரக் கணக்கில் போராளிகளை ஈகம் செய்து கடந்த நாற்பது ஆண்டுகளாக போராட்டத் தீயிலேயே பயணம் செய்து வரும் மாவோயிஸ்டுகள் தங்கள் இலக்கை இன்னும் அடையமுடியாமல் இருப்பதற்கான காரணத்தை தன்னாய்வுச் செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

போர்க்களமாகக் காட்சி யளிக்கிற பழங்குடி மலையக பிரதேசங்களைத் தாண்டி அவற்றிற்கு அருகிலுள்ள சமவெளிப் பகுதியில் மக்கள் ஆதரவை அமைப்பு வழியில் திரட்ட முடியாததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தியா என்ற கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு அதில் புரட்சிகர மக்கள் போர் மூலம் புதிய சனநாயக அரசை நிறுவி விடலாம் என்று கருதுவது பிழையானது.

இந்தியா என்ற கட்டமைப்பில் பழைய சனநாயகமோ, புதிய சனநாயகமோ எதற்கும் இடமில்லை.

இந்திப் பகுதியில் கூட வெவ்வேறு மொழி களைக் கொண்ட பழங்குடியினரே பெருமளவில் திரட்டப்படுகின்றனர் என்பது தற்செயலானதல்ல.

இந்தியத் தேசியம் என்ற புதை சேற்றிலிருந்து விடுபட்டு பல்வேறு தேசியப் போராட்டங்களாக மறுவார்ப்பு செய்யப்படுவதே அம்மக்களின் விடுதலைக்கு வழி வகுக்கும். மாவோயிஸ்டுகளின் ஈகமும் வீணாகாமல் இலக்கை எட்டும்.

0 கருத்துகள்:

வெளிநாட்டுக் கல்விக் கொள்ளைக்கு புதிய சட்டம்

துறைதோறும் துறைதோறும் நாட்டை விற்பதற்கு வணிக முகவர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்ற அலங்காரப் பெயரில் இவர்கள் பவனி வருகிறார்கள். தலைமை முகவர், தலைமை அமைச்சர் என்ற பெயரில் இருக்கிறார். அவர் தான் மன்மோகன் சிங். இவரது தலைமையில் கல்வி வணிக முகவராக செயல்படுகிறவர் கபில் சிபில். மனிதவள மேம்பாட்டு அமைச்சர் என்பது இவரது பதவிக்கான சட்டப்பூர்வ பெயர்.

உயர்கல்வியை உள்நாட்டு வணிகர்களுக்கு திறந்து விட்டது போதாதென்று வெளிநாட்டு கொள்ளையர்களுக்கும் திறந்துவிட முயல்கிறார். இதற்காகவே “வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள்(நுழைவு மற்றும் செயல்பாட்டு ஒழுங்காற்று) சட்ட வரைவு, 2010” (Foreign Educational Institutions [Regulation of Entry and Operation] Bill, 2010) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உலகத் தரத்திற்கான உயர்கல்வியை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் இந்தியா விற்குள்ளேயே வழங்குவது இச்சட்டத்தின் நோக்கமாக சொல்லப்படுகிறது. “இந்தியாவில் பள்ளிக் கல்வியில் சேர்பவர்களில் 100க்கு 12பேர் மட்டுமே உயர் கல்வியில் நுழைகின்றனர். இது வளர்ச்சியடைந்த நாடுகளில் 55 விழுக்காடாகவும் உலக சராசரி அளவில் 23 விழுக்காடாகவும் இருக்கிறது. 2015ஆம் ஆண்டிற்குள் இந்த அளவை இந்தியாவில் 23 விழுக்காடாக உயர்த்துவதற்கு அரசிடம் போதிய நிதி இல்லை. இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டும் இப்போதுள்ள நிலையை மாற்ற முடியாது. இதற்காகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவிற்குள் கல்வி நிலையங்கள் அமைக்க அழைக்கிறோம்” என்று கபில் சிபல் கூறுகிறார்.

இப்போது வட அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற மேற்குலக நாடுகளில் மருத்துவம், மேலாண்மை, பொறியியல் போன்ற உயர்கல்வி பெறுவதற்கு 5 இலட்சம் இந்திய மாணவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு 750 கோடி டாலர், அதாவது 34,500 கோடி ரூபாய் வெளிநாடுகளில் செலவழிக்கின்றனர்.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் வரவழைத்துவிட்டால் அதைவிட குறைவான செலவில், இந்திய சூழலில் குடும்பத்தை விட்டு அதிக தொலைவு செல்லாமல் படிக்க வசதி ஏற்படும் என்பதும் கபில்சிபிலின் வாதம்.

ஆனால் கூர்ந்து நோக்கினால் திறமையற்ற வணிக முகவரின் விளம்பர உத்தி இது என்பது தெளிவாகும்.

பள்ளிக் கல்வியில் சேர்பவர்களில் மிகச் சிலரே உயர்கல்வி வரை செல்வதற்கு கல்வி நிறுவனங்களின் போதாமை முதன்மைக் காரணி அல்ல, மாறாக மக்களிடம் நிலவும் வறுமையும், வாய்ப்பின்மையுமே உயர்க்கல்வியில் நுழைவோர் 12 விழுக்காடாக தேங்கியிருப்பதற்கு முதன்மைக் காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த அனைவருக்குமே இடம் கொடுத்த பிறகும் காலி இடங்கள் இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கைப் போதாமல் இல்லை.

வெளிநாடு சென்று உயர்கல்வியில் சேருவது அந்நாடுகளில் வேலையில் சேருவதற்கு வாய்ப்பை வழங்குகிறது என்பதால் தான் பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்று படிக்கிறார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் எதிர்கால வாழ்க்கை என்ற கனவில் வெளிநாடு சென்று படிப்பவர்களை கபில்சிபிலின் திட்டம் நிறுத்தி விடாது.

இலாப வேட்டைக்காக வரும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்படாது என்றும், நியாயமான இலாபம் ஈட்டுவதை அரசு தடுக்காது என்றும் இச்சட்ட வரைவு கூறிக்கொள்கிறது. வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் 51 விழுக்காடு வரை தான் தங்கள் பங்கு மூலதனத்தை வைத்துக் கொள்ள முடியும் என்றும், குறைந்தது 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இந்தியக் குடிமக்களை பங்காளிகளாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இச்சட்ட வரைவு நிபந்தனை விதிக்கிறது.

மேலும் இக்கல்வி நிறுவனங்கள் கிடைக்கும் இலாபத்தை இங்கேயே மறுமுதலீடு செய்ய வேண்டுமே தவிர தங்கள் நாட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது என்றும் இச்சட்ட நிபந்தனை கூறுகிறது.

வெளிநாடுகளில் இலாப நோக்கமின்றி தரமான உயர்கல்வி வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் இருக்கவே செய்கின்றன. இவ்வாறான பல்கலைக் கழகங்களை இப்புதிய சட்டம் இந்தியாவிற்குள் ஈர்த்து விடாது. ஏனெனில் 49 விழுக்காடு பங்கு மூலதனத்திற்கு இவர்கள் இலாப நோக்கம் இல்லாதவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இது அரிதிலும் அரிது. ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் போன்ற இத்தகைய பல்கலைக் கழகங்கள் இலாப நோக்கமற்ற இந்திய குடிமக்களை தேடுகிற கடுமையான பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் மாட்டா.

மேலும் இச்சட்டம் வெளியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் பல்கலைக் கழக நல்கைக் குழு சட்டப்படி ‘நிகர்நிலைப் பல்கலைக்கழக’ அந்தஸ்து தான் முதலில் வழங்கப்படும் என்கிறது. உலகப் புகழ் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்த நிபந்தனையை ஏற்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் பல்கலைக்கழகம் துவங்குவதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்படுவதாக கபில்சிபல் கூறுவது முற்றிலும் பொய்யானது.

வெளிநாடுகளில் சேருவாரின்றி கடைதிறந்து வைத்திருக்கும் தரமற்ற பல்கலைக்கழகங்கள் இந்தியாவிற்குள் படையெடுத்து வருவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுகிறது

உயர்படிப்பு பயிற்சித் திட்டம், களப்பயிற்சி விரிவாக்கத்திட்டம், தொழில் மேலாண்மை நேரடிப் பயிற்சி என்ற பல மோசடிப் பெயர்களில் இலாபத் தொகையை தங்கள் நாடுகளுக்கு எடுத்து செல்லத் தெரிந்த தில்லுமுல்லு நிறுவனங்களே இச்சட்டத்தின் மூலம் அதிகம் பயன்பெறத்தக்கவை.

அவ்வகை பல்கலைக்கழகங்களே இங்கு கடை விரிக்கும் என்பது தெளிவு.

இவ்வகை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு இருக்காது.

வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற வணிக முத்திரையை பயன்படுத்தி கண் மண் தெரியாத கட்டணக் கொள்ளையில் இந்நிறுவனங்கள் ஈடுபடும். பிற தனியார் கல்வி நிறுவனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள ஒரு நியாயத்தை வழங்கிவிடும்.

மேற்கத்திய நுகர்வுப் பண்பாட்டு படையெடுப்பை இக்கல்வி நிறுவனங்கள் தீவிரப்படுத்தி விடும்.

எல்லா வகையிலும் தீமை நிறைந்த, கல்விக் கொள்ளையில் வெளிநாட்டு நிறுவனங்களைத் தடையேதுமின்றி அனுமதிக்கின்ற “வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் சட்டத்தை” கல்வியில் அக்கரையுள்ள அனைவரும் எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

உழவர்களை ஒழிக்க அடுக்கடுக்கான சட்டங்கள்


தில்லி அரசு வேளாண்மையின் மீது ஓர் போர் பிரகடனம் அறிவித்துள்ளது. உழவர்களை நசுக்கும் அடுக்கடுக்கான சட்டங்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டுள்ளன.

I

விதைச் சட்டம்

இந்திய ஆட்சியாளர்களின் துணையோடு ‘விதை ஏகாதிபத்தியம்’ நிறுவப்படுகிறது. நம் ஊர் உழவர்களின் கொல்லையில் எதை விதைக்க வேண்டும்; என்ன விலை கொடுத்து அந்த விதையை வாங்க வேண்டும், அதற்கு என்ன பூச்சிக் கொல்லி போட வேண்டும் என்பதை மான்சண்டோ நிறுவனம் முடிவு செய்யும். உழவர்கள் கைகட்டி வாய் பொத்தி அம்முடிவை நிறைவேற்ற வேண்டும்.

ஆழிப்பேரலை அடித்த டிசம்பர் 26, 2004 அன்று விதை அவசரச் சட்டம் -2004The Seeds Ordinance, 2004) பிறப்பிக்கப்பட்டது. அதை நிரந்தரச் சட்டமாக்குவதற்கு விதைச் சட்ட வரைவு-2004 (The Seeds Bill - 2004) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக இது உடனடியாக சட்டமாகாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த ராம் கோபால் யாதவ் தலைமையில் அமைக்கப்பட்ட நிலைக்குழு பல்வேறு உழவர் அமைப்புகளிடம் கருத்து கேட்டது. விதைச்சட்ட வரைவு உழவர்களுக்கு எதிரானது; விதை இறையாண்மையைப் பறிப்பது என எடுத்துக்காட்டிய இந்த நிலைக்குழு இச்சட்டவரைவை பெருமளவு மாற்றும்படி பரிந்துரைத்தது.

ஆனால் மன்மோகன் சிங் அரசு இதனை புறந்தள்ளி விட்டு புதிய விதைச் சட்ட வரைவை முன்வைத்துள்ளது.

உழவர்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளில் முக்கியமான ஒன்று விதையுரிமை. இந்த விதையுரிமையைப் பறித்து பன்னாட்டு விதைக் கம்பெனிகளுக்கு வழங்குவது ஒன்றுதான் புதிய விதை மசோதாவின் நோக்கமாகும்.

அது மட்டுமின்றி பல்வேறு தேசிய இனமக்களின் மரபான வேளாண் தொழில்நுட்ப அறிவைத் துடைத்தழிப்பதற்கு இச்சட்டம் துணை செய்கிறது. தேசிய இன மாநிலங்களின் வேளாண்துறை அதிகாரத்தை வெட்டிக் குறுக்குகிறது.

மாநில உரிமை பறிப்பு

இச்சட்ட வரைவின் விதி 3(1)இன் கீழ் மைய விதைக்குழு ((Central Seed Committee) ஒன்றை தில்லி அரசு நிறுவி விதைச் சட்டத்தைச் செயலாக்கும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட உயர்மட்ட அமைப்பாக இது திகழும். ஏற்கெனவே நடப்பில் உள்ள 1966ஆம் ஆண்டு விதைச் சட்டத்தில் மையவிதைக்குழு என்பது அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட ஒருவித கூட்டுக்குழுவாக இருந்தது. இப்பிரதிநிதிகளை அம்மாநில அரசுகளே நியமிக்கும்.

ஆனால் புதிய சட்டத்தின் விதி 4(1) “மையவிதைக் குழுவை மைய அரசு நியமிக்கும்” என்று கூறுகிறது. இந்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் இக்குழுவில் பெரும்பான்மையோராக இருப்பர். எல்லா மாநிலங்களிலிருந்தும் உறுப்பினர்கள் இடம் பெற மாட்டார்கள். அதற்குப் பதிலாக இந்திய மாநிலங்கள் ஐந்து தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஏதேனும் மூன்றிலிருந்து தொகுதிக்கு ஒருவராக மொத்தம் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். இவர்களும் தில்லி அரசாலேயே நியமிக்கப்படுவர்.

தாவரத் திருட்டு


கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் வெள்ளையர்கள் இங்கிருந்து பஞ்சு, அவுரிச் செடி போன்றவற்றை அடி மாட்டு விலைக்கு வாங்கித் துணியாக்கி நம் மக்களிடையே அதை விற்று கொழுத்தார்கள். இன்று அதற்கு ஒருபடி மேலே போய் வெள்ளையர் கம்பெனிகள் இங்குள்ள தாவரப் பொருட்களைத் (Plant Materials) திருடிச் சென்று காப்புரிமைப் பதிவின் வழி தமதாக்கிக் கொண்டு சிறுசிறு மாற்றங்கள் செய்து மீண்டும் நம் உழவர்களிடமே விற்பனை செய்கிறார்கள். இதற்கு உயிரித் தொழில்நுட்பம்(Bio-technology) என்ற உயர் தொழில்நுட்பத்தைத் துணை கொள்கிறார்கள்.

இதற்கு அரண் சேர்க்கவே இந்த விதைச் சட்ட வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

அண்டை அயலாரிடம் கூட உழவர்கள் விதையை விற்பனை செய்ய முடியாது. இச்சட்ட விதி 13(1) “பதிவு செய்யாத எந்த விதையையும் விற்கக்கூடாது” என்று தடை விதிக்கிறது. சரி, சொந்தப் பயன்பாட்டுக்காக விதை வைத்துக் கொள்ளத் தடை ஏதுமில்லை என சுதந்திரமாக இருக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. இச்சட்டப்படி நியமிக்கப்படும் விதை ஆய்வாளர் (Seed Inspector) ஒரு உழவர் வைத்திருக்கும் பதிவு செய்யப்படாத விதை சொந்தப் பயன்பாட்டுக்காக அல்ல விற்பனைக்குத்தான் என ஐயுற்றால் அவ்விதையை அவர் பறிமுதல் செய்யலாம்.

தமிழக உழவர்களில் ஒரு பகுதியினர் அடுத்த போகத்திற்கான விதையைத் தாங்களே சொந்தாமாக சேமிக்கின்றனர். அல்லது அக்கம்பக்கத்து உழவர்களிடம் பறிமாற்றம் செய்து கொள்வதும் உண்டு. இங்குள்ள சிறுநிறுவனங்கள் உற்பத்தி செய்யும் விதைகளைப் பயன்படுத்துவோரும் உண்டு. ஆனால் இந்தத் தங்குதடையற்ற விதைச் சுதந்திரம் பறிபோகிறது.

பதிவு செய்வதற்கு இச்சட்டம் விதிக்கும் நிபந்தனை மிகக் கடுமையானது. விதையைப் பதிவு செய்வதற்கு முன்னால் வேறுபட்ட பல இடங்களில் பயிரிட்டுப் பரிசோதிக்கப்பட வேண்டும் (Multilocational Trial) என நிபந்தனை விதிக்கிறது. மரபான விதைகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே பொருத்தமானவை. வறட்சிப் பகுதியில் வறட்சி தாங்கும் ரகங்கள் பயிராகின்றன. மண்ணுக்கு மண் விளைச்சல் வேறுபடும். இந்நிலையில் பல இடங்களில் பரிசோதிப்பது என்பது உள்ளூர் வகைகளை நிராகரிப்பதற்கான சூதான உத்தியே ஆகும்.

உள்ளுர் சிறுநிறுவனங்களும் இந்நிபந்தனையை நிறைவேற்ற முடியாது. இவ்வளவு தரக்கட்டுப்பாடு விதிக்கும் இந்த விதைச் சட்டம், பன்னாட்டு நிறுவனங்களிடம் பல்லிளிக்கிறது. இச்சட்ட விதி 15 இதற்கொரு சான்றாகும்.

மரபீனி மாற்று விதைகளை (Genetically modified seeds or Transgenic Seeds) 1986ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆய்வுக்குட்படுத்திய பிறகே விற்பனைக்கு அனுமதிக்க முடியும் என விதி 15(1) மீசையை முறுக்கிறது.

ஆனால் அடுத்த பத்தியிலேயே இவ்வாறான ஆய்வேதுமின்றி இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிக உரிமம் அளிக்கத் தடை ஏதுமில்லை என்று பன்னாட்டு கம்பெனிகளின் காலில் விழுகிறது.

இவ்விதைச் சட்டம் உழவர்களை எந்நேரமும் ஒருவகை கண்காணிப்பிலேயே வைத்திருக்க விதை ஆய்வாளர் (Seeds Inspector) என்ற ஏற்பாட்டைச் செய்கிறது (விதி 34). இந்த விதை அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகாமல் உழவர்கள் ஒடுங்கிக்கிடக்க வேண்டும். விதை ஆய்வாளர் எந்த உழவரின் வீட்டிற்குள்ளும் நுழைந்து, சந்தேகப்படும்படியான எந்த பண்டப் பாத்திரத்தையும் திறந்து பார்க்க, பூட்டிக்கிடந்தால் உடைத்துத் திறக்க அதிகாரம் பெற்றவர் என்று இச்சட்டம் கூறுகிறது. விதைச் சோதனையின் போது (Seed Raid) அவருக்குத் தேவையான காவல்துறையினரை மாநில அரசு அனுப்ப வேண்டும் என இச்சட்டம் பணிக்கிறது.

மாநில உரிமையைப் பறிக்கிற தமிழர்களின் மரபான அறிவியல் தொழில்நுட்பத்தை அழிக்கிற, உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிற இந்த விதைச் சட்டத்தை தடுக்க உழவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.

II

உயிரித் தொழில்நுட்பச் சட்டம்

இந்திய அமெரிக்க அரசுகளின் கூட்டுச் சதி விளைவாக மேலும் ஒரு மக்கள் விரோதச் சட்டம் வர உள்ளது. “இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுக்காற்றுச் சட்டம் 2009, ((Bio-technology Regulatory Act of India 2009) என்பதே அது. இன்று சட்ட முன்வடிவாக இது முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த 2005, ஜூலை 18-ல் வாசிங்டனில், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ்ஷூடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களில் இந்திய அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி (Indo-U.S. Knowledge Initiative) என்பதும் ஒன்று. அதற்கு இணங்கவே உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று வரைவுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உயிரித் தொழில்நுட்பச் சட்டம் எனப் பொதுப்படக் கூறப்பட்டாலும், குறிப்பாக மரபீனிமாற்று உயிர்களைப் பற்றியே இச்சட்டம் பேசுகிறது. எனவே மரபீனி மாற்ற உயிரிகள் சட்டம் என்பதாகவே இது புரிந்து கொள்ளப்பட வேண்டும். மரபீனி மாற்றப் பயிர்களின் தீமை குறித்து ஏற்கெனவே பலரும் அறிந்ததுதான்.

உழவர்களின் வாழ்வுரிமையை, பல்வேறு தேசிய இனங்களின் மரபான அறிவியல் - தொழில்நுட்ப மரபுரிமையை மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கிற, மண்ணையும், சுற்றுச்சூழலையும் நஞ்சாக்குகிற, நல்வாழ்வைக் கேள்விக்குறி ஆக்குகிற ஒரு மக்கள் விரோதச் சட்டமே 2009 இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம் ஆகும்.

மாநில உரிமை பறிப்பு


மரபீனி மாற்ற உயிரிகள் குறித்து மாநில அரசுகள் எந்தவித ஒழுங்குமுறைச் சட்டங்கள் அல்லது ஆணைகள் பிறப்பித்திருந்தாலும் இனி அவை இப்புதிய சட்டப்படி நீக்கப்படுகின்றன என்று உயிரித் தொழில்நுட்பச் சட்ட வரைவு கூறுகிறது. தங்கள் தங்கள் மாநில எல்லைக்குள் மரபீனி மாற்றப் பயிர்களையோ, மற்ற உயிரிகளையோ மாநில அரசுகள் இனி தடை செய்ய முடியாது. ஏற்கெனவே கேரள மாநில அரசும், ஜார்கண்ட் மாநில அரசம் தங்கள் மாநிலத்தில் மரபீனி மாற்ற உயிரிகளை வளர்க்கக்கூடாது எனத் தடை விதித்துள்ளன.

பி.ட்டி கத்தரிக்கு பல்வேறு மாநில அரசுகள் மாநிலங்களில் தடை விதித்தன. அதன் பிறகு இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியா முழுவதற்கும் பி.ட்டி கத்தரிக்கு தற்காலிகத் தடைவிதித்தது.

இச்சட்டம் செயலுக்கு வருமானால் இத்தடைகள் தானாகவே நீங்கிவிடும்.

அறிவுசார் ஒப்பந்தமும், அதிகாரக் குவிப்பும்

பெரிதும் வட அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களால் வழி நடத்தப்படுகிற உலகமயப் பொருளியலின் ஓரு பகுதியாக இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தம் உருவாக்கப் பட்டுள்ளது.

இதனைச் செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள அறிவு வாரியத்தில் மான்சாண்டோ, வால்மார்ட் பிரதிநிதிகளும், எம்.எஸ்.சாமிநாதனும் இடம் பெற்றுள்ளனர்.

ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள புதிதாக வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் என்பதில் மரபீனிப் பொறியியல் குறித்ததாக ‘இந்திய உயிரித் தொழில்நுட்பச் சட்டம் 2009’ உள்ளது.

இதுவரை மரபீனி மாற்ற உயிரிகள் தொடர்பான வெளிக்கள ஆய்வுகளுக்கும், வணிகரீதியானப் பயன்பாட்டுக்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு (Genetical Engineering Approval Committee-GEAC) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபீனி மாற்ற உயிரிகளால் தொடர் சூழல் மாசுபாடு நிகழும் என்ற ஐயம் உள்ளதால், மரபீனி மாற்ற உயிரிகளுக்கு ஏற்பு வழங்குவதில் வரம்பு விதிப்பதற்காகவே இவ்வகை ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள உயிரித்தொழில் நுட்பச் சட்டப்படி நிறுவப்படும் “தேசிய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்” (National Biotechnology Regulatory Authority -NBRA) ஒரு சர்வாதிகார அமைப்பாகவே செயல்படும் ஆபத்து உள்ளது.

இந்த ஆணையத்திற்கு ஒரு தலைவரும், ஒழுங்குமுறை அதிகாரிகளும் இருப்பார்கள். அதேநேரம் ஆணையத் தலைவரின் அதிகாரமே மேலோங்கியதாக இருக்கும் என்பதை இச்சட்டம் தெளிவாக்குகிறது.

ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்ட முறையிலோ, ஆணைய உறுப்பினர்களின் தகுதியிலோ ஆணையம் முடிவெடுத்த முறைமையிலோ (Procedure) முறைகேடு நடந்திருப்பதாகக் காட்டி ஆணையத் தலைவரின் முடிவை செல்லத் தகாததாகக் கூற முடியாது என இச்சட்டம் சாற்றுகிறது.

இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தீர்ப்பாயம் மட்டுமே ஆணையத்தலைவர் மேற்கொண்ட முடிவின் மீது மேல்முறையீட்டை விசாரிக்கலாம். தவிர வேறு எந்த நீதிமன்றத்திற்கும் அத்தகைய அதிகாரம் கிடையாது என இவ்வரைவுச் சட்டம் கூறுகிறது.

ஆணையத்தின் தலைவரோ, பிற அதிகாரிகளோ ஒருதலைச் சார்பாக நடந்து கொண்டு, நியாயமற்ற முறையில் ஒரு மரபீனி மாற்ற விதைக்கோ, மருந்துப் பொருளுக்கோ அனுமதி வழங்கினார்கள் என்று குற்றம் சாட்டி எந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாது என தடை செய்கிறது.

அறிவியலுக்கு எதிரானது - கருத்துரிமையைப் பறிப்பது


இச்சட்ட வரைவின் 13(63)-வது பிரிவின்படி மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிராக தக்க ஆதாரங்களின்றி பொதுமக்களிடையே பரப்புரை செய்பவர்கள் ஆறுமாதம் வரை சிறைத் தண்டனைப் பெறுவதுடன் இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்த வேண்டி வரும். இப்பிரிவு அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானது. அறிவியலில் பிழையாத்தன்மை என்ற ஒன்று இல்லை. ஆகவே இவர்கள் கூறும் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு எதிரான கருதுகோளை முன்வைப்பது அறிவியலுக்கு புறம்பானது அல்ல. அதற்கு தண்டனை என்பது கம்பெனிக்காரர்களின் அறிவே இறுதியானது என அறிவியலுக்கு வரம்புக்கட்டும் சூழ்ச்சித் திட்டமாகும். அறிவைக் கைது செய்யும் முயற்சி ஆகும்.

இச்சட்ட வரைவின் 4ஆம் அத்தியாயம், அறிவியலாளர்கள் தனியார் ஆய்வகங்களில் கம்பெனிகளின் மரபீனி மாற்ற விதைகளை ஆய்வு செய்வதைத் தடை செய்கிறது. மான்சாண்டோ நிறுவனம் சொல்லுவது சரியா தவறா என்று கண்டறிவதற்கு சொந்த முறையில் ஒருவர் தனிப்பட்ட ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்டால் 5 ஆண்டு சிறை அல்லது 10 இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் என இவ்விதி அறிவியலாளர்களை அச்சுறுத்துகிறது.

மேலும் சட்டமுன்வரைவு 27(1)ன் படி மரபீனி மாற்றப்பயிர்களின் ஆய்வு முடிவுகள், அவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி போன்றவை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி தகவல் பெற முடியாது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் இத்தொழில்நுட்பம் குறித்து அறியும் உரிமையை உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் இச்சட்டம் மறுக்கிறது. கருத்து சுதந்திரத்தை நசுக்கும் சட்டமாகும் இது.

ஒருபுறம், அறிவாளர்கள் சொந்த முறையில் மரபீனி மாற்ற விதைகளை ஆய்வு செய்யவும் கூடாது; தகவல் பெறவும் முடியாது என்று ஆதாரங்களை அடைத்து வைத்துவிட்டு, ஆதாரம் இல்லாமல் திறனாய்வு சொன்னால் 6 மாதம் சிறை என்று அச்சுறுத்துவது அப்பட்டமான கம்பெனி ஆட்சி நடக்கிறது என்பதையே எடுத்துக்கூறுகிறது.

பி.ட்டி கத்தரி குறித்த முடிவுகளை அறிவதற்கு தகவல் உரிமை சட்டப்படி உச்சநீதிமன்றத்தைக் கிரீன் பீஸ் அணுகியது. தகவல் பெற்றது. அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டியது. பல்வேறு அறிவாளர்களும், உழவர்களும் திரட்டினர். இனி இவ்வாறு நடக்காமல் தடுப்பதே இச்சட்டவரைவின் நோக்கம்.

மான்சண்டோ, சின்ஜென்டா, டூபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்குச் சேவை செய்யவே இந்திய உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம், 2009 கொண்டு வரப்படுகிறது.

III

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பண்ணை அமைக்க அனுமதி

இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தத்திற்கு இசைய மேலும் ஒரு சட்டம் வர இருக்கிறது. வேளாண் நிலங்களை அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி வழங்கும் சட்டவரைவே இது.

இதுவரை வெளிநாட்டவர் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நகர்ப்புற நிலங்களையும் மனைகளையும் வாங்குவதற்கு சட்ட வாய்ப்பு இருந்தது. ஆயினும் வேளாண் நிலங்களை வாங்குவதற்கு தடை இருக்கிறது. இந்தத் தடையே கூட பல்வேறு விதிவிலக்குகளின் மூலமாக ஏற்கெனவே பலவீனப்படுத்தப்பட்டுவிட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் தற்போது கொண்டு வரப்படும் சட்டவரைவு எந்த விதிவிலக்குகளும், தடைகளும் இல்லாமல் வேளாண் நிலங்களை வாங்கிக் குவிப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இசைவு அளிக்கிறது. வேளாண் பொருள் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்துதல் (உணவுப் பதப்படுத்துதல், சந்தை வாய்ப்பு, உயிரி எரிபொருள் போன்றவை) ஆகியவற்றில் அமெரிக்க பகாசுர நிறுவனங்களை அனுமதிப்பது என 2005-ல் ஜார்ஜ் புஷ்ஷூ‘_ம் மன்மோகன் சிங்கும் கையெழுத்திட்ட இந்திய - அமெரிக்க அறிவுசார் முன்முயற்சி ஒப்பந்தம் வலியுறுத்தியது.

இது தான் இப்போது இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட வரைவாக முன் வைக்கப்பட்டுள்ளது.

2010 - 2011 ஆம் நிதியாண்டுக்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்திலும் அதற்கு முன்பும் அடுக்கடுக்கான உழவர் எதிர்ப்பு திட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேதி உரங்கள் மீதான விலைக் கட்டுப்பாடு நீக்கம், விதைச் சட்டம், உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்றுச் சட்டம் என உழவர்கள் ஒரு மூச்சு முட்டும் முற்றுகையில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே காவிரி நீர் வரவில்லை. முல்லைப் பெரியாறு மறுக்கப்படுகிறது. பாலாற்றில் கசிந்து வரும் நீரும் மறிக்கப்படுகிறது.

இவையெல்லாம் சேர்ந்து உழவர்களை வேளாண்மை செய்ய விடாமல் நசுக்குகின்றன. இவற்றில் சிக்கிய உழவர்கள் எதிர்த்துப் போராடமல் இருந்தால், வேளாண்மையை விட்டுவிட்டு வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு ஊரை காலி செய்து உள்நாட்டு அகதிகளாக அலைய வேண்டிய அவலம் தான் நேரும்.

இதைத்தான் இந்திய, பன்னாட்டு பெரு முதலாளிகளும் தில்லி ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள். நிலத்தை குறைந்த விலைக்கு முகம் தெரியாதவர்களிடம் விற்கிற இந்த மண்ணின் உழவர்கள் தங்கள் கண்ணெதிரிலேயே அதே நிலம் பலமடங்கு விலைக்கு கைமாறப் போவதையும், அங்கு வடநாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் வேலியிட்டு பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணைகள் அமைப்பதை கையைப் பிசைந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான் வரும்.

இவ்வாறு நிலத்தையும் ஊரையும் இழக்கும் உழவர்களுக்கு செழிப்பான, மனநிறைவான வாழ்வளிக்கும் நிலையில் நகரங்களும் இல்லை.

இருக்கிற நிலத்தையும் இழந்து, புதிய வாழ்க்கையும் கிடைக்காமல் சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக உழல நேரும்.

எனவே, பன்னாட்டு நிறுவனங்களை பண்ணை அமைத்துக் கொள்ள, வேளாண் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கிக் குவிக்க அனுமதிக்கும் சட்ட வரைவை உழவர்கள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். முறியடிக்க வேண்டும்.

0 கருத்துகள்:

பி.ட்டி. கத்தரிக்குத் தடை: தொடர வேண்டிய விழிப்புணர்வு

பி.ட்டி. கத்தரிக்குத் தடை: தொடர வேண்டிய விழிப்புணர்வு

அக்கறையுள்ள அறிவாளர்களும், உழவர்களும் ஒன்றிணைந்து போராடினால் அரசைப் பணியவைக்க முடியும் என்பதற்கு பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருப்பது ஒரு எடுத்துக்காட்டு. மான்சான்டோ நிறுவனத்தின் பி.ட்டி.கத்தரியைத் தற்போதைக்கு சந்தைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்று 09.02.2010 அன்று இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அறிவித்தார்.

பி.ட்டி.பருத்தியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு அறிவாளர்களையும், உழவர்களையும் விழிப்புறச்செய்தது. பி.ட்டி. கத்தரியை அனுமதித்தால் பிற உணவுப் பயிர்களுக்கும் கம்பெனி ஆதிக்கம் தொடரும் என்பதை இவர்கள் உணர்ந்தனர். எனவே பி.ட்டி.கத்தரி பற்றிய விவாதத்தில் இவர்கள் கூர்மையாகப் பங்கேற்றனர். ஆயினும் இந்திய அரசின் மரபீனிப் பொறியியல் ஏற்பிசைவுக்குழு அறிவியல் வழிப்பட்ட எந்தவித எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் கடந்த 2009 அக்டோபர் 14 அன்று பி.ட்டி.கத்தரி விற்பனைக்கு ஏற்பு வழங்கியது. இக்குழுவில் உச்சநீதிமன்றத்தின் பார்வையாளராக இடம் பெற்றிருந்த செல் உயிரியலாளர் முனைவர். பி.எம்.பர்கவா இம்முடிவு எவ்வாறு தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்பதை வெளிப்படுத்தினார். பி.ட்டி.கத்தரிக்கு ஏற்பு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட உள்குழு பெரிதும் அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டோவின் கையாள்களால் நிரப்பப்பட்டிருந்தது என்பதை டவுன் டு எர்த் இதழ் அம்பலப்படுத்தியது. (காண்க: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், பிப்ரவரி 2010)

ஆயினும், வலுவான எதிர்ப்பு தொடர்ந்ததன் காரணமாக இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னால் மக்கள் கருத்து கேட்டு அறியப்படும் என இந்திய அரசு அறிவித்தது.

இதற்கேற்ப கொல்கத்தா, புவனேஸ்வர், ஆமதாபாத், சண்டிகர், ஐதராபாத், பெங்களுர் ஆகிய இடங்களில் பொது விசாரணைகள் நடைபெற்றன. எல்லா இடங்களிலும் அறிவாளர்கள், உழவர்கள், தொண்டு நிறுவனங்கள், மக்களமைப்புகள் ஆகியவற்றின் பேராளர்கள் பங்கேற்று பி.ட்டி.கத்தரியினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினர். உத்தரப்பிரதேசம், ஜார்கண்டு, கேரளா, ஆந்திரம், கர்நாடகா ஆகியவற்றின் முதலமைச்சர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோர் பி.ட்டி.கத்தரியை ஆய்வின்றி சந்தைக்கு அனுமதித்துவிடக்கூடாது எனக் கேட்டுக்கொண்டு அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இவற்றின் விளைவாக ‘பி.ட்டி.கத்தரி’ குறித்து எழுந்துள்ள எதிர்க்கருத்துக்களை உரியவாறு ஆய்வு செய்த பிறகே அதனை சந்தைக்கு இந்திய அரசு அனுமதிக்கும்’ என்று 09.02.2010 அன்று சுற்றுச்சூழல் இணை அமைச்சர் செயராம் ரமேசு அறிவித்தார்.

அவரது விரிவான அறிக்கை இச்சிக்கல் குறித்து நாமும் வேறு பல அமைப்பினரும் எழுப்பிய ஐயங்களை உறுதிசெய்வதாக அமைந்தது.

பி.ட்டி.கத்தரி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுயேச்சையான ஆய்வகங்களில் செய்யப்பட்டவை அல்ல. மாறாக மான்சான்டோவின் துணைநிறுவன ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை அப்படியே ஏற்பிசைவுக்குழு கேள்வியின்றி ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அரசு அறிக்கை ஒப்புக்கொண்டது. பி.ட்டி.பருத்தி சட்டவிரோதமான வழிகளில் சந்தைக்கு வந்து, சந்தையை ஆக்கிரமித்து உள்ளுர் பருத்தி வகைகளை முந்திச்சென்றது என அமைச்சரின் அறிக்கை (பத்தி 12,13 ) கூறுகிறது. இதுபற்றி மீளாய்வு செய்யவேண்டியது அவசியம்தான்என்றும் ஏற்றுக்கொள்கிறது.

பி..ட்டி.கத்தரிக்கு ஒப்புதல் வழங்கும் முன் பல் சூழல் கள ஆய்வு செய்யப்படவில்லை என்று பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற அறிவியலாளர் செரிலானி, நியூசிலாந்தின் நுண்ணுரியியல் ஆய்வாளர் ஜாக் ஹய்ன்மேன் உள்ளிட்ட பலரும் சுட்டிக்காட்டியதை சரியான செய்தி என்று அமைச்சரின் அறிக்கை ஏற்றுக்கொண்டது (பத்தி 16).

சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய நாட்டின் உள்நாட்டு மருத்துவ முறைகளில் மருந்துப்பொருளாக பயன்படும் கத்தரியில் மரபீனி மாற்றுத் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தீய விளைவுகளை ஆய்வுக்குழு ஆய்வுக்கே எடுத்துக்கொள்ளவில்லை என்பதை மாற்று மருத்துவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர். அமைச்சரின் அறிக்கை இச்சிக்கலை உறுதிப்படுத்துகிறது (பத்தி 20)

பி.ட்டி.கத்தரிக்குப் பதிலாக கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் “சொந்தமாக உருவாக்கியுள்ள” மரபீனி மாற்று கத்தரியை அனுமதிக்கப்போவதாக சட்டமன்றத்தில் தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தார். இது மான்சான்டோவின் பி.ட்டி.கத்தரிக்கு உள்ளுர் முகமூடி அணிவித்து உலவவிடும் சூதான முயற்சி என்பதை எச்சரிக்கையாகக் கூறியிருந்தோம் (காண்க: பிப்ரவரி இதழ்). சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தற்சார்பு வேளாண்மை வல்லுனர்களும் தமிழக முதலமைச்சரை சந்தித்தபிறகு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் சட்டமன்ற அறிவிப்பு கடைபிடிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஆபத்தானது என நாம் எடுத்துக்காட்டியதை அமைச்சர் செயராம் ரமேசின் அறிக்கையும் உறுதிசெய்கிறது.

“2005 மார்ச்சு மாதத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், மான்சான்டோவும் செய்துகொண்ட பொருள் மாற்ற உடன்பாடு. (விணீtமீக்ஷீவீணீறீ ஜிக்ஷீணீஸீsயீமீக்ஷீ கிரீக்ஷீமீமீனீமீஸீt) கவலையோடு கவனிக்கத்தக்கது. இந்த ஆய்வின் விளைவாக உருவாகும் மரபணு மற்றும் பிற மரபீனி மாற்ற கத்தரி விளைபொருள்கள் இறுதியில் மான்சான்டோ நிறுவனத்திற்கே உரிமையானது என்பதை மேற்சொன்ன உடன்பாடு வலியுறுத்துகிறது” என அமைச்சர் அறிக்கை பத்தி 11 சுட்டிக்காட்டுகிறது.

பி.ட்டி.கத்தரிக்கு மான்சான்டோவே உலக உரிமம் பெற்றிருக்கும்போது பல்கலைக்கழகத்தின் சார்பில் ‘சொந்தத் தயாரிப்பாக உருவாக்கப்படுவதாக’ தமிழக அரசு கூறியது ஒரு மோசடி அறிவிப்பு என்பது உறுதியாகிறது.

மான்சான்டோவின் பி.ட்டி.கத்தரிக்கு பல்கலைக்கழக முகமூடி அணிவித்து வெளியிடுவதை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். ஏனெனில் பி.ட்டி.கத்தரிக்கு எதிராக சொல்லப்பட்ட அனைத்து செய்திகளும் இந்த முகமூடிக் கத்தரிக்கும் பொருந்தும்.

ஆந்திராவில் அக்கறையுள்ள அறிவியலாளர்கள் முன் முயற்சி எடுத்து ஆறு இலட்சம் உழவர்களை ஒன்றிணைத்து இருபது இலட்சம் ஏக்கரில் மேற்கொள்ளும் பூச்சிக் கொல்லியில்லா வேளாண்மை. சிந்தித்துப்பார்க்க வேண்டிய மாற்று என அமைச்சர் செயராம் ரமேசு அறிக்கையே ஒத்துக்கொள்கிறது.

இதனைத் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

தமிழர்களை நோயாளியாக்கும், உழவர்களை கடனாளியாக்கும், மண்ணை மலடாக்கும், வெளிநாட்டு மன்சான்டோவின் காலடியில் மண்ணின் வேளாண்மையைக் கட்டிப்போடும் மரபீனி மாற்றக் கத்தரியை எந்தவடிவிலும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. மண்ணின் மரபான நுட்பம் சார்ந்து தலை நிமிரும் தற்சார்பு வேளாண்மைக்கு அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுக்க வேண்டும்.மரபீனி மாற்றப் பயிர்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ள பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு இன்றி இவற்றை அனுமதிக்கக் கூடாது.

பி.ட்டி.பருத்தி, பி.ட்டி. வெண்டை, பி.ட்டி. நெல் உள்ளிட்ட அனைத்து மரபீனிப் பயிர்களின் வெளி ஆய்வு மற்றும் விற்பனையை இந்திய அரசு மீளாய்வு செய்து அவற்றிற்கு உரியவாறு தடைவிதிக்க வேண்டும்.

இத்திசையில் இந்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ்நாட்டு உழவர்கள் வலியுறுத்த வேண்டும். அறிவியலாளர்கள் இம்முயற்சியில் முன்னோடியாகத் திகழ வேண்டும்.

0 கருத்துகள்:

உயர்கல்வி: அதிகாரக் குவிப்பும் உலகமயமும்

உயர்கல்வி: அதிகாரக் குவிப்பும் உலகமயமும்
அடுத்தடுத்து கல்வியை இந்திய - பன்னாட்டு ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டு வருகின்றது. இந்தி பேசாத மாநில மாணவர்கள் இந்தி படிக்க வேண்டும் என்றும், உயர்கல்வியில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்த இந்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் இப்போது இத்திசையில் அடுத்த அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி தேசிய ஆணையம், அனைத்திந்திய அளவில் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்று அடுக்கடுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் தேசிய இனங்களின் தனித்தன்மைகளை மறுத்து, மாநில உரிமைகளைப் பறித்து உலகமயத்திற்கு கல்வியைத் திறந்து விடும் உள்நோக்கம் கொண்டவை.

மனித வளத்துறை நிறுவிய வல்லுநர் குழு, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கான தேசிய ஆணையம் குறித்த வரைவை வெளியிட்டுள்ளது. உயர்கல்வியில் திட்டமிடுதல், நிர்வாகம், ஒழுங்குமுறை, நிதிஏற்பாடு உள்ளிட்ட அனைத்தையும் இந்திய மைய அதிகாரத்தில் குவிக்கிற ஏற்பாடே இந்த ஆணையம்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கல்விக் கொள்ளைக்கு வழிவகுத்த நிலை குறித்து சில வாரங்களுக்கு முன்னால் இந்திய அரசு எழுப்பியக் கூச்சல் உண்மையில் கல்வியின் பால் உள்ள அக்கறையினால் அல்ல, மாறாக இச்சிக்கலை பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியை தனது பேராதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கெட்ட நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதே என்பது இப்போது தெளிவாகிறது.

உயர்கல்வியில் ஊழல்மயம், அரசியல் குறுக்கீடு ஆகியவற்றை தடுத்து கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் நல்ல நோக்கத்திலேயே இவ்வாறான தேசிய ஆணையம் அமைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள வரைவு சொல்லிக் கொண்டாலும், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக உள்ளது.

தேசிய உயர்கல்வி ஆணையம், தேர்தல் ஆணையத்தைப் போல உயர் தன்னாட்சி பெற்ற கல்வி நிர்வாக அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் இந்த வரைவை கூர்ந்து பார்த்தால் அதிகாரமும் ஊழலும் மையப்படுவதற்கே இது வழிவகுக்கும் என்பது புலனாகும்.

ஒரு கல்வியாளர் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஆணையமாக இந்த உயர்கல்வி ஆணையம் இருக்குமாம். இதற்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்றவர்கள், பல்துறை வல்லுநர்கள், புகழ்பெற்ற கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட பேரவை ஒன்று நிறுவப்படும் என்று இந்த சட்டவரைவு கூறுகிறது. இப்பேரவையில் அடிப்படை உறுப்பினர்கள் என்று சிலரும் இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் என்று வேறு சிலரும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்கள் கூடுதல் அதிகாரம் பெற்றவர்களாகவும் இணை உறுப்பினர்கள் அதிகாரம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அடிப்படை உறுப்பினர்களை இந்திய அரசு நியமிக்கும். இணை உறுப்பினர்களை மாநில அரசுகளின் ஆலோசனைப் பட்டியலிலிருந்து ஆணையம் பொறுக்கி எடுத்துக் கொள்ளும்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முழுக்க முழுக்க உயர்கல்வி ஆணையத்திடம் மட்டுமே இருக்கும். மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிலிருந்து உயர்கல்வியைப் பாதுகாப்பதற்கே இந்த ஏற்பாடு என வரைவுச் சட்டம் கூறிக்கொள்கிறது. மாநில அரசுகளின் அரசியல் குறுக்கீட்டிற்கு துணைவேந்தர் நியமனம் அடிக்கடி உள்ளாகிறது என்பது உண்மையே. ஆனால், இந்திய அரசு நிறுவனமான ஆணைய அதிகாரத்தின் கீழ் துணைவேந்தர் நியமனம் நடைபெற்றால் அங்கே அரசியல் குறுக்கீடு இருக்காது என்று நம்புவதற்கு மக்கள் ஒன்றும் அறியாதவர்களல்ல. இன்றைய தேர்தல் ஆணையர், சி.பி.ஐ. போன்ற நிறுவனங்கள் ஆளுங்கட்சியின் ஆணைக்கு ஏற்ப ஆடுவதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

இதே போன்ற நிலை தான், உயர்கல்வி ஆணையத்திற்கும் ஏற்படும்.

மாநில அரசுகள் பல்கலைக்கழகங்கள் நிறுவும் உரிமை இவ்வாணைய அதிகாரத்தின் கீழ் வெகுவாக கட்டுப்படுத்தப்படும்.

உயர்கல்வியை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுவதற்கு எந்தத் தடையும் இல்லாத வகையில் இவ்வாறான அதிகாரக்குவியல் உருவாக்கப்படுகிறது. ஏற்கெனவே பல்கலைக்கழக நல்கைக் குழு(ஹி.நி.சி.) தொழில்நுட்பக் கல்வி தேசியக் கழகம், இந்திய மருத்துவக் குழு (வி.சி.மி.) போன்ற பல்வேறு அமைப்புகளின் மூலம் கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரம் குறுக்கப்பட்டது. அவசரநிலை காலத்தில் கல்வி அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நடுவண் அரசின் அதிகாரம் வலுப்பட வழிசெய்யப்பட்டது.

இப்போது நடுவண் அரசிற்குள்ளேயே பல்வேறு துறைகளின் அதிகாரத்தின் கீழிருந்த உயர்கல்வி ஏழு நபர் ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

உலகமயமும், இந்தியமயமும் இணைந்து நின்று மாநிலங்களின் கல்வி அதிகாரத்தை பறிக்கின்றன. கேள்வி முறையின்றி உயர்கல்வியை உலகமய வேட்டைக்கு திறந்து விடும் நோக்கில் இந்த அதிகாரக் குவியல் நடக்கிறது. தில்லி ஆளுங்கட்சி கைப்பாவை அமைப்பாக உயர்கல்வி ஆணையத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது.

இதற்கு ஏற்ப பள்ளிக் கல்வியை இந்திய மயப்படுத்தும் முயற்சி தான் கபில்சிபல் அறிவித்துள்ள ‘தேசியக் கல்வித் திட்டம்’ என்பது. பள்ளிக்கல்வியிலும் தேசிய இனத் தனித்தன்மை, மாநில அரசின் உரிமை ஆகியவற்றை மறுக்கும் திட்டமே இது. புவியியல், உயிரியல், கணிதம் போன்றவற்றில் கூட பா.ச.க. ஆட்சிக் காலத்தில் ஒரே பாடத்திட்டம் என்ற பெயரால் இந்துத்துவ கருத்துகள் புகுத்தப்பட்டதை நாடறியும்.

பல்வேறு தேசிய இன மாநிலங்களின் தனித்தன்மைகள், அவற்றின் குறிப்பான தேவைகள் ஆகியவற்றை மறுத்து ஒற்றைத் தன்மையில் இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் புகுத்தப்பட இது வழிவகுக்கும்.

பள்ளிக்கல்வியின் சி.பி.எஸ்.சி., கேந்திர வித்தயாலயா போன்ற வழிகளில் குறுக்கிட்டது போதாதென்று இப்போது தேசியப் பாடத்திட்டம் என்ற போர்வையில் தனது பிடியை இறுக்குவதற்கு தில்லி அரசு முனைகிறது. இது இந்தித் திணிப்பை இணைத்துக் கொண்டே வரும் என்பது தெளிவு.

கல்வியை இந்தியமயமாக்கும் அடுத்த முயற்சியே அனைத்திந்திய நுழைவுத் தேர்வு என்பதும் ஆகும். தொழில் வகைப் படிப்புகளுக்கு இனி அனைத்திந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் சில அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகள் பெரிதும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை ஒட்டியே அமைந்திருக்கின்றன. சி.பி.எஸ்.சி. 12ஆம் வகுப்புப் பாடங்களிலிருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டு, மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் வெளியில் நிறுத்தப்படுவது மெய்நிலையாகும்.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் பார்ப்பன - இந்தி மயமான பாடத்திட்டமாகும். தேசிய இனங்கள், சிறுபான்மை மதங்கள் ஆகியவை இப்பாடத் திட்டங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கல்வியாளர்கள் பலரும் எடுத்துக்காட்டி இருக்கின்றனர்.

ஆனால், அதனைத் திருத்திக் கொள்ளாமல் அதே திசையிலேயே இன்னும் வேகமாக தில்லி அரசு பயணிக்கிறது என்பதற்கான அடையாளமே இந்த அனைத்திந்திய நுழைவுத் தேர்வுத் திட்டமாகும்.

தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நீக்கப்பட்ட பிறகு, மருத்துவம், பொறியியல் போன்ற உயர்படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் முன்பை விட அதிகம் இடம் பிடிக்க முடிந்திருப்பது மெய்ப்பிக்கப்பட்ட நிலை. இப்போது அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி நகர்ப்புறத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் புறந்தள்ளப் படுவார்கள்.

இந் நுழைவுத்தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தியிலும் நடைபெறும் என்பது திண்ணம். தமிழ்நாட்டு அரசு சார் உயர்கல்வி நிறுவனங்களில் வடநாட்டு மாணவர்கள் அதிகமாக இடம் பிடிப்பதற்கு இது வழி ஏற்படுத்தும்.

ஏற்கெனவே உயர்கல்வியில் தன்நிதிக் கல்லூரிகள் கோலோச்சுவதன் காரணமாக கேள்வி முறையின்றி வெளிமாநில மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள் பெரும் எண்ணிக்கையில் புகுந்து இனச் சமநிலையை சீர்குலைத்தது போதாதென்று அரசு சார் கல்லூரிகளிலும் வெளியார் குவிவது தீவிரப்படும். தமிழக மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு இன்னும் சுருக்கப்படும்.

உயர்கல்வி ஆணையம், அனைத்திந்தியப் பள்ளிப் பாடத்திட்டம், அனைத்திந்திய நுழைவுத் தேர்வு ஆகிய இந்த அறிவிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்திசைவானவை. தேசிய இன உரிமைகளைப் பறிக்கும் நோக்கம் கொண்டவை. உலகமய வேட்டைக்கும் வெளியார் ஆதிக்கத்திற்கும் வழி ஏற்படுத்துபவை. எனவே, இந்திய அரசின் இந்த அறிவிப்புகளை தமிழ்நாட்டு மாணவர்களும், அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மார்ச் மாத இதழில் வெளியான கட்டுரை)

0 கருத்துகள்: