கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

ஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது! உடனே விடுதலை செய்க!

ஹீலர் பாஸ்கர் கைது :

மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது!
உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

புகழ் பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர், நேற்று (02.08.2018) கோவையில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்ற மரபுவழி மருத்துவர் ஹீலர் பாஸ்கர் என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரிந்திருக்கும்.
வரும் ஆகத்து 26ஆம் நாள் கோவை புதூரில், “மருந்து – மாத்திரைகள் – ஸ்கேனிங் இல்லாத இனிய சுகப்பிரசவத்திற்காக” - இலவச பயிற்சி அளிக்க ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதனை எதிர்த்து, ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹீலர் பாஸ்கரும், அவரது அலுவலக மேலாளர் சீனவாசனும் கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மோசடி செய்யும் நோக்குடன் ஏமாற்றுதல் (420) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் கிருத்திகா என்ற பெண்மணிக்கு, அவரது கணவர் யூடியூப்பை பார்த்து வீட்டில் இயற்கை பிரசவம் நடத்த முயன்றபோது, கூடுதல் குருதிப்போக்கு ஏற்பட்டு கிருத்திகா இறந்து போனதைத் தொடர்ந்து, மரபுவழி மருத்துவர்களையும் மருத்துவ ஆலோசகர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத் துறை அமைச்சரும், நல்வாழ்வுத்துறை செயலாளரும் தொடங்கினர். அலோபதி மருத்துவர்கள் பலரும், “முற்போக்கு” சிந்தனையாளர்கள் சிலரும், பெண்ணியவாதிகள் சிலரும்கூட இந்த கூக்குரலில் இணைந்தனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான், ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மத நம்பிக்கைகளின் பெயரால் உடலுக்கும், மனதிற்கும் ஊறு விளைவிக்கக்கூடிய செயல்கள் குற்றச்செயல்களாக கருதப்படுவதில்லை. ஆனால், மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை கூட குற்றச்செயலாக வரையறுக்கப்பட்டு அச்சுறுத்தல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இச்செயல் கருத்துரிமைக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ் மரபு அறிவியல் அனைத்தையும் “மூடநம்பிக்கை” என ஒதுக்கும் செயலும் ஆகும்!
எந்த மருத்துவமும் அதற்குரிய பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்படுவதே சரியானது. முறையான மரபுவழி மருத்துவமும் அவ்வாறுதான் நடந்து வருகிறது.
மரபுவழி பிரசவத்தில் சுகப்பிரசவம் என்பதுதான் பொதுப் போக்காக இருந்தது. இதற்கு முன்பு மரபுவழி சுகப்பிரசவத்தில் தாயோ, குழந்தையோ இறந்தது அரிதான நிகழ்வாகும்! ஒரு தலைமுறைக்கு முன்பான எந்தக் குடும்பத்தை விசாரித்தாலும், இந்த உண்மையை உறுதி செய் முடியும்.
அரசின் துணையோடு மரபுவழி அறிவியலும், அதன் ஒரு பகுதியான மரபு வழி மருத்துவமும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில், பயிற்சி பெற்ற மரபுவழி மருத்துவர்கள் மிகவும் குறைந்துபோனார்கள்.
மரபுவழி மருத்துவத்தை ஒரு மருத்துவமாகவே நடைமுறையில் இந்திய – தமிழக அரசுகள் ஏற்பதில்லை! எனவே, மரபுவழி மருத்துவத்திற்கு முறையான பயிற்சி அளித்து முறைப்படுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. பெயருக்கு ஒரு ஓரத்தில், சித்த மருத்துவப் பிரிவும், “சித்த மருத்துவக் கல்லூரிகளும் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவம் என்றாலே அலோபதி மருத்துவம் என்றும், மண்ணின் மருத்துவங்கள் “மாற்று மருத்துவம்” என்ற பெயரிலும் புறந்தள்ளப்பட்டது.
மருத்துவத் துறையில் நிகழ்ந்து வரும் அரசின் இத்தாக்குதலைத் தொடர்ந்து அனுமதித்தால், இன்றைக்கு பல போராட்டங்களுக்கிடையில் முன்னேறி வரும் மரபு வழி வேளாண்மையும் புறந்தள்ளப்படும். இரசாயண மருத்துவம் போலவே, இரசாயண வேளாண்மையும் மீண்டும் உறுதிப்படும்!
அறிவியல், பகுத்தறிவு, முற்போக்கு, நவீனம் என்ற பெயரால் திணிக்கப்படும் “வளர்ச்சி” வாதத்தின் (Growthism) ஒரு சீரழிவே இச்செயல்!
தமிழ் மொழி, தமிழர் மரபு, தமிழர் மரபின் அறிவியல் ஆகிய அனைத்தையும் புறக்கணிக்கச் செய்வதில்தான் “வளர்ச்சி” வாத ஆதிக்கத்தின் வெற்றியே இருக்கிறது. இந்த வளர்ச்சி வாதத்தின் உச்சமாகத்தான், மரபுவழி மருத்துவமே தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் கடந்த பல ஆண்டுகளாக மரபுவழி மருத்துவத்தை பரப்பி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர் மரபு அறிவியலுக்கும், தமிழின உரிமைக்கும், அடிப்படை சனநாயக உரிமைக்கும் எதிரானதாகும்!
எனவே, ஹீலர் பாஸ்கரையும், அவரது அலுவலக மேலாளரையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும், மரபுவழி மருத்துவத்தை மருத்துவமாக அங்கீகரித்து அதை ஒரு கல்வித்திட்டமாக ஆக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் செயல் திட்டங்கள் வகுக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

1 கருத்துகள்:

உண்மை எது பொய் எது என்பதைக் கண்டறிந்து காவல் துறையும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/