கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

வார்சா பருவநிலை மாநாடும் வல்லரசுகளின் வல்லடியும் - தோழர் கி.வெங்கட்ராமன்

ஐ.நா.வின் முன் முயற்சியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த இன்னுமொரு மாநாடும் தோல்வியில் முடிந்துள்ளது. 2013 நவம்பர் 11 தொடங்கி 22 வரை போலந்து தலைநகர் வார்சாவில் நடைபெற்ற ஒப்பந்த உறுப்பு நாடுகளின் 19 ஆவது மாநாடு (conference of parties- COP 19) உருப்படியான முடிவேதும் எட்டாமல் பெயருக்கு ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுக் கலைந்தது.
புவி வெப்பமாதல் குறித்தும் அதன் விளைவாக ஏற்பட்டு வரும் தாறுமாறான பருவநிலை மாற்றங்கள் குறித்தும் ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் 1997 டிசம்பரில் கூடிய உலக நாட்டுதலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை கியோட்டோ அறிக்கை எனப்படும். இதில் கையொப்பமிட்டுள்ள நாடுகளே ஒப்பந்த உறுப்பு நாடுகள் எனப்படுகின்றன. 193 நாடுகள் இவ்வாறு ஒப்பந்த உறுப்பு நாடுகளாக உள்ளன.
இந்த உறுப்பு நாடுகளின் மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று கியோட்டோ அறிக்கையில் ஏற்றுக் கொண்ட முடிவுகளை செயல் படுத்துவது குறித்தும், 2015 இல் பாரிசில் இன்னொரு உச்சி மாநாடு நடத்தி இறுதி செய்யவுள்ள அடுத்த பருவநிலை ஒப்பந்தம் குறித்தும் பேசி வருகின்றன. (கியோட்டோ அறிக்கை குறித்த விரிவிற்கு காண்க: தமிழர்கண்ணோட்டம் இதழ்கள் மே 2007 டிசம்பர் 2009, சனவரி 2010)
அவ்வகையில் வார்சா மாநாடு 19 ஆவது மாநாடாகும்.
பெருந்தொழில் முனைவோரின் மிகை இலாபா நோக்கு, அதற்கேற்ப வளர்க்கப்பட்டுள்ள கண்மண் தெரியாத நுகர்வுவெறி ஆகியவை இணைந்து இப்புவி மண்டலத்தின் இயற்கை வளங்களை மிகையாக உறுஞ்சி கழிவுகளை மிகையாக வெளியிட்டதன் விளைவாக புவி வெப்பமயமாதல் என்ற சிக்கல் விளைந்து பருவ நிலைமாற்றங்கள் சீரற்ற தன்மையை அடைந்தன என்ற உண்மையை கியோட்டோ அறிக்கை ஏற்றது.
இதனை சரி செய்ய வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுவாயுக்களின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், புவி வெப்பமடைதல் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குமேல் உயராமல் பார்த்துக் கொள்வ தென்றும் கியோட்டோவில் முடிவானது.
இவ்வாறு நச்சுவாயுக்களை வெளியிட்டதில் தொழில்துறையில் முன்னேறிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சப்பான் ஆகியவை கூடுதல் பங்கு வகிப்பதால் இதனை சரி செய்வதிலும் அவற்றின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். என்பதும் ஏற்கப்பட்டது. இதற்கு “பொது நோக்கு - வேறுபட்ட பொறுப்பு’’ (common but differential responsibilities) என்று பெயர்.
கியோட்டோவுக்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு பருவ நிலை மாநாட்டிலும் வெவ்வேறு சாகசங்கள் செய்து வல்லாதிக்க நாடுகளின் கூடுதல் பொறுப்பை தட்டிக் கழிப்பதில் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து முனைப்புக் காட்டின. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேரு நாடுகளில் அமைச்சர்கள் அளவிலான பன்னாட்டு மாநாடுகள் பல நாட்கள் நடைப்பெற்ற போதிலும் பேச்சு வார்த்தை இழுபறிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஆனால் அறிவியலாளர்கள் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் வேகத்தில் பருவ நிலை மாற்றங்கள் ஏற்பட்டு புயல், பெருமழை, கடல் சீற்றம், பெரும்வறட்சி, என தாறு மாறன நிகழ்வுகள் ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கி வருகின்றன.
குறிப்பாக புவியின் வெப்ப அதிகரிப்பால் துருவங்களில் உள்ள பல்லாயிரம் சதுரகிலோ மீட்டர் பனிப்பாறைகளும், இமயமலை உள்ளிட்ட மலைச்சிகரங்களின் உறைபனிகளும் உருகி பெருவெள்ளம், கடல் மட்ட உயர்வு போன்றவை ஏற்படுவதும், கடல் வெப்பம் அதிகரிப்பதால் உருவாகும் வெப்பச் சலனம் காரணமாக புவிக் கோட்டுப் பகுதிகளில் கடும் வறட்சி ஏற் படுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மிகையாக அதிகரித்துள்ளன.
பருவ நிலையில் ஏற்படும் இம் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளை ஐ.நா. வல்லுநர்கள் தர வரிசைப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கியோட்டோ அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள மொத்தம் 193 நாடுகளில் அதிகம் பாதிக்கப்படும் முதல் எண் நாடாக வங்காள தேசம் உள்ளது. வங்காள தேசத்தின் போலோ, குதுப்தியா தீவு மாவட்டங்கள் கடல் அரிப்புக் காரணமாக பெருமளவு நீரில் மூழ்கி விட்டன. இன்னும் 20 ஆண்டுகளுக்குள் இத்தீவுகள் முற்றிலும் காணாமல் போய்விடும் என அஞ்சப்படுகிறது. இத்தீவுகளில் வாழும் 20 இலட்சம் மக்களில் பாதி பேருக்குமேல் நிலம் இழந்து, ஊரிழந்து, பருவநிலை அகதிகளாக நாட்டின் உள்பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.
இவ்வாறு பாதிப்படையும் தர வரிசையில் 20 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
அதிலும் ஆந்திராவும் தமிழ்நாடும் மிக அதிகப் பாதிப்புகளை சந்திக்கவுள்ள மாநிலங்கள் என அடையாளமிடப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளில் ஆந்திரா 60 புயல்களைச் சந்தித்துள்ளது. அதன் பாதிப்புகள் தமிழகத்திற்கும் நேர்கிறது.
அண்ணாப் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள பருவநிலை குறித்த ஆய்வறிக்கை அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கிறது. 2020க்குள் தமிழ்நாட்டின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 3.7. டிகிரி செல்சியஸ் உயரும் என்றும் இவ்வாய்வறிக்கைக் கூறுகிறது.
இதன் காரணமாக தமிழ் நாட்டின் 1100 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் 2020க்குள் 18 செ.மீ அதிகரிக்கும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. ஏற்கெனவே கடும் கடல் அரிப்புக்கு உள்ளாகிவரும் எண்ணூர், புதுவை, விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட பகுதிகள் இன்னும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். கடல் அரிப்பு நிலங்களை விழுங்கி அப்பகுதி மக்களை வெளியேற்றும். கடற்கரையை ஒட்டி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாகிப் போவதால் பல தொடர் பாதிப்புகள் ஏற்படும்.
இன்னொருபுறம் ஏற்படும் வெப்பச் சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களில் மழை அளவு குறைந்து குடிநீர் பஞ்சமும் வேளாண்மை பாதிப்பும் அதிகரிக்கும் ஆபத்துள்ளது.
இந்த ஆய்வும் இந்திய அரசின் மானாவாரி வேளாண்மை ஆய்வு நடுவம் என்ற இந்திய அரசு நிறுவனத்தின் இன்னொரு ஆய்வும் காவிரி பாசன மாவட்டங்கள் குறித்த அதிர்ச்சியான விவரங்களைக் கூறுகின்றன.
தமிழகத்தில் 7 மாவட்டங்கள் ஈரமண்டலத்திலிருந்து வறட்சி மண்டலமாக மாறி வருகின்றன. என இவ்வாய்வறிக்கைகள் கூறுகின்றன. 1988ஆம் ஆண்டோடு ஒப்பிட காற்றில் ஈரப்பதம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 27 விழுக்காடு குறைந்து அரை வறட்சிப் பகுதியாகி விட்டன என்று இந்த அறிக்கைக் கூறுகிறது.
இது இயல்பாக இயற்கைச் சூழலில் ஏற்பட்ட மாறுதல்களால் விளைந்த விபரீதமல்ல. முதலாளிய அமைப்பின் வரம்பற்ற இயற்கைச் சுரண்டலால் ஏற்பட்ட செயற்கை விபரீதமாகும். அதனால்தான் நாடுகளின் அரசுகள் கூடி இதை தடுத்து நிறுத்துவதற்கு திட்டமிட வேண்டிய தேவை எழுகிறது. அவற்றுள் ஒன்றுதான் வார்சா மாநாடு.
பருவ நிலை குறித்த வார்சா மாநாடு நடந்த பின்னணி கவனிக்கத் தக்கது. 2013 நவம்பர் 8 ஆம் நாள் பல்லாயிரம் தீவுக்கூட்டங்களின் நாடான பிலிப்பைன்சை ஹையானா என்ற பெரும்புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 இலட்சத்திற்கு மேற்பட்டோர் ஊரிழந்து உண்ண உணவும் குடிக்கநீரும் இன்றி வீதியில் வீசப்பட்டனர்.
இச்சூழலில் நவம்பர் 11 அன்று தொடங்கிய வார்சா பருவ நிலை மாநாட்டில் முதல் பேச்சாளராக பிலிப்பைன்சு நாட்டின் பேராளர்யெப்சானோ (Yeb sano) பேச அழைக்கப்பட்டார். ஹைனா புயல் ஏற்படுத்திய பேரழிவை கண்ணீரும் விம்மலுமாக விளக்கிப் பேசிய சானோ “ இந்த வார்சா மாநாட்டில் உருப்படியான ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லையென்றால் இம் மன்றத்திலேயே எனது உயிர் போகட்டும்’’ என்று கூறி காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் அமர்ந்தார். மனிதர்களின் பேராசைச் சுரண்டலால் ஏற்பட்ட பேரழிவு இது என பல நாட்டுப் பேராளார்களும் பேசினார்கள்.
ஆனால் இதுவரை நடந்த பருவநிலை குறித்த மாநாடுகளிலேயே வார்சா மாநாடு தான் மிகக் கேவலமான போலி உரைகளின் மாநாடாகத் நிகழ்ந்தது.
2009 இல் கோபன் ஹேகனில் நடைபெற்ற பருவ நிலை மாநாட்டில் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, கியோட்டோ ஒப்பந்தத்தையே திரிபுப்படுத்தி சொற்சிலம்பம் ஆடினார். “பொது நோக்கு-- வேறுபட்ட பொறுப்பு” (common but differential responsibilities) என்பதைத் திரித்து “பொது நோக்கு’’ - வேறுபட்ட எதிர் வினை” (common but differential responses) என்று மாற்றிப் பேசினார்.
அடுத்தக் கட்டப் பித்தலாட்டம் இப்போது வார்சாவில் நடந்தது. “பொது நோக்கு - அனைவருக்கும் பொறுப்பு’’ (Common and universal responsibilities) என்று வார்சா கூட்டறிக்கையில் மாற்றப்பட்டது. அதிகம் மாசுப்படுத்தியவர், அதிகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாடே கைவிடப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட அதிக தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்கள் பொறுப்புகளை கைகழுவினர்.
கடந்த ஆண்டு தோகாவில் நடைபெற்ற 18 ஆவது மாநாட்டில் பருவநிலை மாற்றங்களால் வறிய நாடுகள் அடையும் இழப்புகளை ஈடு செய்வதற்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் நிதி வழங்குவதற்கான பொறி அமைவை ஏற்படுத்துவது என முடிவானது. இந்த மாநாட்டில் அந்த பொறியமைவுநிறுவுவது குறித்து துல்லியமான முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 2009 கோபன் ஹேகன் மாநாட்டிலேயே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 2010 தொடங்கி ஆண்டுக்கு 10 கோடி டாலர் இழப்பீட்டு நிதி வழங்குவதென்றும் 2020க்கு பிறகு ஆண்டுக்கு 100 கோடி டாலராக இதனை உயர்த்துவதென்றும் முடிவானது.
இதன்படி வார்சா மாநாட்டிற்குள் 30 கோடி டாலர் நிதி வந்திருக்க வேண்டும். ஆனால் வந்ததோ 6 கோடி டாலர்தான்.
இது குறித்த வார்சா மாநாட்டில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்ட போது 2015 பாரிசு மாநாடு முடிந்த பிறகு பார்க்கலாம் என அமெரிக்காவும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கைவிரித்தன.
அதே போல் கோபன்ஹேகனில் தங்கள் நாட்டுக் தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்டைஆக் ஸைடு அளவை 1990 ஆம் ஆண்டை ஒப்பிட 2020க்குள் 25 விழுக்காடு குறைத்து விடுவோம் என்றும், ஆண்டுக்காண்டு அந்த விகிதத்தை வெளிப்படையாக செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்த சப்பான் அவ்வாறு ஒரு விழுக்காடு கூட கார்பன் வெளியீட்டை குறைக்காதது மட்டுமல்ல, 3 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை தங்கள் நாடு அதிகரித்துக் கொள்ள அனுமதி வேண்டு மென்று வார்சா மாநாட்டில் வலியுறுத்தியது.
ஆஸ்திரேலியாவும் தான் ஏற்றுக் கொண்டவாறு கார்பன் வெளியீட்டை ஒரு விழுக்காடு கூட குறைக்கவில்லை.
1990 ஆம் ஆண்டை ஒப்பிட 40 விழுக்காடு கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை குறைத்துக் கொள்வோம் என 2009 இல் உறுதி கூறிய அமெரிக்கா 0.3 விழுக்காடு அளவு தான் குறைத்துள்ளது.
இவ்வாறு எந்த முனையிலும் எள்ளளவு முன்னேற்றமும் இல்லாத நிலையில் இம் மாநாட்டில் பங்கேற்ற சீனா, இந்தியா உள்ளிட்ட 133 நாடுகளின் பேராளர்கள் இம் மாநாட்டில் பங்கேற்ற 150 தன்னார்வ அமைப்புப் பேராளர்கள் ஆக மொத்தம் 4700 பேரில் ஒருவர் விடாமல் 20.11.2013 அன்று வெளிநடப்பு செய்தனர்.
மறுபுறம் பிலிப்பைன்சு அமைச்சர் சானோ 10 ஆவது நாளாக தனது உண்ணாப் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து கொண்டிருந்தார்.
இந்த இக்கட்டான சூழலில் 22.11.2013 மாநாட்டின் இறுதி நாள் பின்னிரவில் ஒன்றுக்கும் ஆகாத ஒரு தொளதொளப்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.இழப்பீடு குறித்த பொறி அமைவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்வதாக அறிவித்தன. எவ்வளவு நிதி என்பதை அடுத்த ஆண்டு இறுதியில் தென் அமெரிக்க நாடான பெருதலைநகர் லீமாவில் நடைபெறவுள்ள 20 ஆவது மாநாட்டிற்குள் தெரிவிப்பதாகவும் அனைத்து நாடுகளும் ஒத்துக் கொண்டு கலைந்தன.
கொள்கை அளவில் கோரிக்கை ஏற்கப்பட்டதாக சானோவிடம் வலியுறுத்தி அவரது உண்ணாப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வைப்பதில் அனைத்து நாட்டுப் பேராளர்களும் வெற்றி கண்டனர் என்பதைத் தவிர வார்சாவில் சாதித்தது எதுவுமில்லை.
சுற்றுச் சூழல் இழப்பீடு நிதிக்கு அரசுகளை மட்டும் நாடாமல் தனியார் பெருமுதலாளி நிறுவனங்களையும் அழைக்கலாம் என்ற அமெரிக்காவின் முன் மொழிவின் மீதே அடுத்த மாநாட்டு விவாதங்கள் சுழலும் என்பதற்கான அறிகுறிகளும் இம்மாநாட்டிலிலேயே தெரிந்தன.
மொத்தத்தில் திக்குத் திசை தெரியாத பயணத்திற்கு உலகத்தை அழைத்து செல்வதாகவே பருவ நிலை குறித்த பன்னாட்டு மாநாடுகள் காலத்தைக் கழிக்கின்றன.
வரம்பற்ற தனி முதலாளி இலாபத்தையும், அடுத்த தலைமுறை குறித்துக் கவலைப்படாத நுகர்வு வெறியையும் அனுமதித்துக் கொண்டே தீர்வு தேடும் வரை பருவநிலை மாற்றம் குறித்து உறுப்படியான எந்த முடிவுக்கும் உலகம் வர முடியாது.
இயற்கையோடு இயைந்து செல்லும் சிறு உற்பத்தி முறையும், கொள்ளை இலாபத்தை அனுமதிக்காத நிகரமை நோக்கிய பொருளியல் அமைப்பும் நிறுவப்படாத வரை இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு ஏது மில்லை.
இந்த உண்மையை உணராமல் கண்ணை மூடிக்கொண்டு இருட்டு அறையில் கருப்புப் பூனையைத் தேடும் வேலையில் உலக நாடுகள் தொடரும் வரை வார்சாவைப் போல மாநாடுகளின் எண்ணிக்கைக் கூடுமே தவிர நடக்கப் போவது எதுவுமில்லை.

0 கருத்துகள்:

“தமிழக அரசு மூவர் தூக்கை இரத்து செய்ய வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!

“தமிழக அரசு மூவர் தூக்கை இரத்து செய்ய வேண்டும்”
உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!
இராசீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு மற்றும், நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் நேற்று(24.11.2013) சென்னையில் நடைபெற்றது.
சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன்,  திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் – சட்டமன்ற உறுப்பினர் திரு. உ.தனியரசு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, சி.பி.எம். கட்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. பீமாராவ், இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான், இயக்குநர்கள் கவுதமன், புகழேந்தி தங்கராஜ் , வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரறிவாளினின் தந்தை திரு. குயில்தாசன், தாய் திருமதி. அற்புதம் அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டு ஆவணப்படம் குறித்து பேசினார்.
அவர் பேசும் போது, “வழக்கமான ஆவணப்படங்களில் தென்படுகின்ற வறட்சியான தகவல் குவிப்பு இல்லாமல், விறுவிறுப்பான படமாக உருவாக்கப்பட்டுள்ள ‘உயிர்வலி’ ஆவணப்படக் கலைஞர்களுக்கு முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் தலைப்பு ‘உயிர்வலி’யாக இருந்தாலும், இங்கு பேசப்படுவது நீதியின் வலி, ஞாயத்தின் வலி.
கடந்த மாதம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது தலைமையில், கர்நாடகாவின் பெல்காம் சிறையில், சந்தன வீரப்பனுடன் தொடர்புபடுத்தப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்களையும், கர்நாடக தூக்குத் தண்டனை சிறைவாசிகளையும் ஒரு குழுவாக சந்தித்துவிட்டு வந்தோம். பேரறிவாளனின் தாயார் திருமதி. அற்புதம் அம்மையார் அவர்களும் எங்களுடன் வந்திருந்தார்கள்.
தமிழகச் சிறைகளில் காணப்படுகின்ற கெடுபிடித்தன்மை போல, கர்நாடகச் சிறைகளில் எவ்விதக் கெடுபிடிகளும் கிடையாது.
நாம் இங்கு பேரறிவாளன் பற்றி பேசிக் கொண்டுள்ளோமே, அவரைப் போல அங்கு ஞானப்பிரகாசம் என்பவர் தூக்குத் தண்டனைப் பெற்றுள்ளார். நமது பேரறிவாளனாவது ஓரளவு அரசியல் புரிதல் உள்ளவர், ஆனால், ஞானப்பிரகாசம் எந்தவித அரசியலும் தெரியாத அப்பாவி மனிதர்.
கர்நாடகச் சிறையில் வாடும் இந்த நான்கு தமிழர்களுக்கும் முதலில் வாழ்நாள் தண்டனை தான் தரப்பட்டது. ஆனால், உலகில் எங்குமே நடக்காத கொடுமை இவர்களுக்கு நிகழ்த்தப்பட்டது. வாழ்நாள் சிறைத் தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருந்த இவர்களது வழக்கில், இந்திய அரசின் உச்சநீதிமன்றம் மரண தண்டனையாக்கி உறுதிப்படுத்தியது.
மேல்முறையீட்டுக்காக ஒரு வழக்கு வந்தால், அதிலுள்ள தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது அத்தண்டனையைக் குறைக்க வேண்டும் என்பது தான் உலகெங்கும் உள்ள நடைமுறை. ஆனால், இந்திய அரசின் உச்சநீதிமன்றம் இதற்கு நேர்மாறாக, தண்டனை அதிகரித்து, அவர்களைத் தூக்கிலிட தீர்ப்பளித்தது. இந்தியாவில் தமிழ் இனத்தைத் தவிர வேறு எந்த இனத்திற்கும் இப்படிப்பட்ட அநீதி இழைக்கப்படவில்லை.
இத்தனைக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம் ஒருமுறை கூட வீரப்பனை பார்த்ததில்லை. சிறைக்குள் வந்தபிறகு தான் அவர் வீரப்பன் புகைப்படத்தையே பார்த்திருக்கிறார். காவல்துறையினர், உண்மையில் வீரப்பனுடன் இருந்த ஒரு ஞானப்பிரகாசத்தைப் பிடித்து, போலி மோதலில் கொன்றுவிட்டனர். ஆனால், அதைச் சொன்னால் தங்கள் மீது குற்றம் வந்துவிடுமே என அஞ்சி, அப்பாவியான இந்த ஞானப்பிரகாசத்தின் மீது வழக்கு நடத்தி, அவருக்கு தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர் காவல்துறையினர்.
காவல்துறை இப்படி செய்தது இருக்கட்டும், பொய்யாக ஒருவருக்கு தூக்குத் தண்டனை அளிக்கப்படும் வரை நீதித்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
இராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த இரகோத்தமன்,  தியாகராஜன், நீதிபதி கே.டி.தாமஸ் போன்றோர், இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனை தேவையில்லை என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இப்பொழுதாவது இவர்கள் பேசுகிறார்களே என்பதும், இவர்களது கூற்றுகள் நம் ஞாயத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கும் என்பதும் நமக்கு ஆறுதல் அளித்தாலும் கூட, பதவியில் இருக்கும் போது முதுகெலும்பே இல்லாதவர்ளாய் செயல்பட்ட இவர்கள், இப்பொழுது இதனைக் கூறி என்ன பயன்? 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் வாடுகிறார்களே? தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார்களே?
இராஜீவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான தியாகராஜன், இந்த ஆவணப்படத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்போது, நாங்கள் அதை அப்படியே பதிவு செய்வதில்லை எனச் சொல்கிறார். இதைச் சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்?
இப்படிப்பட்ட அதிகாரிகளின் பொய்யான வாக்கமூலங்களால் தானே, ஞானப்பிரகாசம் என்ற அப்பாவி, தூக்குக் கயிற்றின் முன் நிற்கிறார். இரகோத்தமன்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.
இன்னொருபுறம், ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருந்தன? வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே, ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்ற அவலம் இங்கு நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஆங்கில ஊடகங்களின் செய்திகளைப் பார்த்தால்தான், தாங்கள் அறிவாளிகள் என்பது போல பலர் காட்டிக் கொள்கிறார்கள்.
உச்சநீதிமன்றம், 13 வழக்குகளில் சட்ட அறியாமை காரணமாக தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன என சொல்லியிருக்கிறது. மனசாட்சியைக் கொன்று வழங்கப்பட்ட பலத் தீர்ப்புகை, இப்பொழுது திருத்தி எழுதிவிட முடியுமா?
இந்திய அரசின் இனப்பகையின் காரணமாக தமிழர்கள் எப்படியெல்லாம் வதை படுகிறார்கள் என்பதை சாட்சியமாகப் பேசுகின்ற இந்த ஆவணப்படத்தை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக போட்டுக் காட்டும். தமிழ்நாட்டு மக்கள் சக்தியை நம் ஞாயத்திற்காகத் திரட்ட இது பயன்படும்.
1998இல், இராசீவ் கொலை வழக்கில் 26 பேருக்குத் தூக்கு வழங்கியவுடன், அப்பொழுதிருந்த மவுனத்தை உடைத்து, அய்யா பழ.நெடுமாறன் அவர்களது தலைமையில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நிதி திரட்டி, இயக்கம் நடத்தி ஞாயத்தைச் சொன்னோமே, அதைப்போல மக்கள் மன்றத்தில் நம் ஞாயத்தை எடுத்துச் செல்வோம்.
ஒரு முக்கிய சாட்சியமாக வந்துள்ள இந்த ஆவணப்படத்தை முன்வைத்தாவது, தமிழக அரசு, இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி -161இன்படி தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!” எனத் தெரிவித்தார்.
திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வின் முன்னதாக ஆவணப்படம் திரையிடப்பட்டு, படத்தை உருவாக்கிய கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வீரவணக்கம்! - தோழர் கி.வெங்கட்ராமன்

சமத்துவம், மனித உரிமை காக்கும் போராட்டங்களின் உலக தழுவியக் குறியீடாக வாழ்ந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, தனது 95 ஆவது வயதில் நேற்று (05.12.2013) இரவு காலமானார் என்ற செய்தியை தென்னாப்பிரிக்கக் குடியரசுத் தலைவர் சுமா அறிவித்த போது, தமிழர்கள் உள்ளிட்ட மனித நேய உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.
மாமனிதர் - தலைசிறந்த மகத்துவப் போராளி மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.
கற்பனையிலும் கருதிப்பார்க்க முடியாத நிறவெறி ஒடுக்குமுறையின் கீழ், தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்கள் சிக்கி நசுக்குண்டு இருந்த போது, இளம் வயதிலேயே மண்டேலா நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தார்.
வால்டர் சிசிலு, ஆலிவர் டேம்போ ஆகியோரோடு இணைந்து, ஆப்ரிக்க தேசியக் காங்கிரசின் இளைஞரணியின் தலைமைக்குழுவுக்கு வந்ததிலிருந்து, அவரது போராட்ட வாழ்வு தீவிரம் பெற்றது.
வெள்ளை நிறவெறிக்கு எதிரான, கருப்பின மக்களின் சம உரிமைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்தி வந்த மண்டேலா, வெள்ளை நிறவெறி ஆட்சியின் அடக்குமுறைகள், கண்மண் தெரியாத கைதுகள், சித்திரவதைகள் ஆகியவற்றை எதிர் கொண்டு, ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டது.
1961இல், 'தேசத்தின் ஈட்டி' என்ற பெயரில் மண்டேலா தலைமையிலான தோழர்கள், சிசுலு, தென்னாப்பிரிக்கக் கம்யுனிஸ்ட் கட்சித் தோழர் ஜோஸ் லோவா ஆகியோர் உருவாக்கிய விடுதலைப்படை வீரஞ்செறிந்த கருப்பின மக்களின் போராட்டத்தை வழிநடத்தியது.
இன சமத்துவத்திற்கானப் போராட்டத்தில், தொழிலாளிகளை ஈடுபடுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை வழிநடத்தியதால், 1961-இல் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, சிறையிலிருந்தபடியே 1963இல் ரிவோனியா சதி வழக்கில் விசாரிக்கப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
அச்சதி வழக்கு விசாரணையையே கருப்பின மக்களின் சமத்துவத்திற்கான விவாதக் களமாக மண்டேலா மாற்றினார். ஜவனர்பெர்த் நீதிமன்றத்தில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை, தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் தணிக்கைக் கெடுபிடியைத் தாண்டி தென்னாப்பிரிக்கா எங்கும் பரவியது. உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் அவருடைய உரை இடம்பெற்றது. அது, மேற்குலகம் உள்ளிட்ட உலக நாடுகள் எங்குமுள்ள மனித நேயர்களை வீதிக்கு அழைத்தது. ”மண்டெலாவை விடுதலை செய்! நிறவெறி அரசு ஒழிக!” என்ற முழக்கம் உலக நாடுகள் எங்கும் எதிரொலித்தது.
ரோபன் தீவு தனிமைச் சிறையில் கொடுமையான சூழலில் அடைபட்டிருந்த போதும், கருப்பின மக்களின் விடியலுக்கானப் போராட்டத்திற்கு சிறையிலிருந்தபடியே தலைமை தாங்கினார் மண்டேலா.
நெடிய போராட்டத்தின் விளைவாகவும், உலகம் முழுவதும் அப்போராட்டத்திற்கு ஏற்பட்ட வலுவான ஆதரவினாலும் 1993 - இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்தது.
தென்னாப்பிரிக்க கருப்பின மக்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றத் தேர்தலில், ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. 1994 தொடங்கி 1999 வரை, நெல்சன் மண்டெலா தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராகச் செயல்பட்டார்.
மிக நீண்ட காலம் ஒடுக்குண்டு இருந்த கருப்பின மக்களிடம் பொங்கி வந்த பழிவாங்கும் உணர்ச்சி, தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்கு எதிராக திரும்பி விடாமல் பாதுகாக்கும் அரணாகவும் மண்டேலா திகழ்ந்தார். நிறவெறி ஆட்சியில் கொடுங்கோன்மை புரிந்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை தண்டித்து, அதே நேரம் வெள்ளையின மக்களுடன் கருப்பின மக்களுக்கு நல்லிணக்கம் ஏற்படுத்திய செயலிலும் மண்டேலா வெற்றி பெற்றார்.
1999க்குப் பிறகு, அரசு மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகி, எய்ட்ஸ் ஒழிப்புப் பணியி்ல் முழுக்கவனம் செலுத்தினார்.
அமைதிக்கான நோபல் பரிசு, ஆர்தர் ஆப் லெனின், பாரத ரத்னா உள்ளிட்ட 205க்கும் மேற்பட்ட உயர் விருதுகளை மண்டேலா பெற்றார்.
கடந்த ஓராண்டாக மூச்சுத் திணறல் நோயில் பாதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, 05.12.2013 இரவு தனது கடைசி மூச்சை நிறுத்தினார்.
உலகில் எங்கு இன சமத்துவத்திற்கு, ஒடுக்குண்ட இனங்களின் விடுதலைக்கு போராட்டங்கள் நடைபெற்றாலும், அவற்றுக்கு ஒரு மாபெரும் உந்து விசையாக நெல்சன் மண்டேலா திகழ்வார்.
தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது. அவருடைய பிரிவால் துயரமடைந்திருக்கும், ஆப்ரிக்க மக்களோடும், உலகெங்குமுள்ள ஒடுக்குண்ட மக்களோடும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
- கி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

0 கருத்துகள்: