ஒவ்வொரு நாளையும் சக மனிதர்களுக்கு
பயனுள்ள நாளாக்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவர். அப்படிப்பட்ட
சிறப்பான தொரு வாழ்க்கையை நடத்தி மறைந்தவர் இயற்கைவேளாண் அறிவியலாளர்,
சூழலியல் போராளி அய்யா கோ.நம்மாழ்வார் அவர்கள்.தஞ்சை மாவட்டம்,
திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தில் 1938 ஏப்ரல் 6 ஆம் நாள்
பிறந்த நம்மாழ்வார் அவர்கள் பிறருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து கடந்த
30.12.2013 அன்று இயற்கை எய்தினார்.
அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் வேளாண் இளம் அறிவியல் பட்டம் பெற்று, கோயில்பட்டி
மண்டல வேளாண் ஆய்வுமையத்தில் வேளாண் அறிவியலாளராக பணியாற்றினார். அது
பசுமைப் புரட்சி என்றப் பெயரால் வேதியியல் வேளாண்மை தொடங்கபட்டக் காலம்.
ஒட்டுமொத்த
அரசுத்துறையும் வேளாண் தொழில் நிறுவனங்களின் முகவர்களாக
மாற்றப்பட்டதையும், ஒட்டுமொத்த வேளாண்மை வெளி இடுபொருள்களைச் சார்ந்து அதிக
செலவு பிடிக்கும் தொழிலாக மாற்றப்பட்டதையும் , வேளாண் நிலம் வேதி உப்புகளை
கொட்டும் களமாக மாற்றப்பட்டதையும் கண்ட நம்மாழ்வார் இந்த அழிவுப் பணியில்
தாமும் பங்குதாரராக இருக்க விரும்பாமல் அப்பணியிலிருந்து வெளியேறினார்.
இயற்கையோடு
இயைந்த, வெளி இடுபொருள்கள் சாராத தற்சார் பான வேளாண்மையே மண்ணையும்
மக்களையும் பாதுகாக்கும் என்று உணர்ந்த நம்மாழ்வார் அதை பரப்புவதையே தம்
வாழ் நாள் பணியாக முடிவு செய்து கொண்டார்.
இது
அடுத்தடுத்தத் தளங்களில் அவருடைய கவனம் விரிவடைய காரணமாயிற்று. அரசு
முன்வைத்துள்ள கல்வி முறை, பொருளியல் கொள்கை, ஆட்சி முறை, ஆகிய அனைத்தும்
ஒன்றுடன் ஒன்று இணைந்து தற்சார்பை குலைத்து வருவதை எதிர்த்து போராடினால்
அன்றி வேளாண்மையை மட்டும் தனியாகப் பாதுகாத்துவிட முடியாது என்று உணர்ந்த
நம்மாழ்வார் பன்முகத் தளங்களில் தமதுப் பணிகளை விரிவுபடுத்தினார். இயற்கையை
பாதுகாக்கும் சூழலியல் போராளியாக மலர்ந்தார்.
1979
ஆம் ஆண்டு “குடும்பம்’’ என்ற தொண்டு அமைப்பை நிறுவி இப் பணிகளை தொடங்கிய
நம்மாழ்வார் அடுத்தடுத்து பல்வேறு அமைப்புகளை உருவாக்கி தமதுப் பணிகளைத்
தொடர்ந்தார். இறுதியில் கடவூர் அருகில் அவர் நிறுவிய “வானகம்’’ மாற்று
வாழ்வியல் பயிற்சி நிலையமாக உருவானது.
மக்களிடமிருந்து
கற்றுக் கொள்வது, மக்களுக்கு கற்றுத் தருவது என்பதை தமது வாழ்க்கை
நெடுகிலும் கடைபிடித்தார். அந்த வகையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த
உழவர்கள் கூட இவரால் நாடெங்கிலும் வேளாண் அறிவியலாளராக அறிமுகப்படுத்
தப்பட்டார்.
இன்றையக் கல்வி முறை உழைப்
பிலிருந்து மனிதர்களைப் பிரித்து விடுவதையும், உழைப்பை இழிவாகக் கருத
வைப்பதையும் பார்த்த நம்மாழ்வார் உழைப்போடு இணைந்த மாற்றுக் கல்வி
முறைகளையும் சிந்தித்தார்.
இயற்கையோடு
இயைந்த உற்பத்திமுறை ,உணவு முறை, வாழ் வியல் முறை ஆகியவை குறித்து
நம்மாழ்வார் சிறார்களிடம் உரை யாடுகிற முறையே தனிச் சிறப்பானது.
சிறார்களுடன் உரையாடுகிற போது மிக சிக்கலான அறிவியல் செய்திகளை மிக எளிமையா
கவும் நேர்த்தியாகவும் அழகுற அவர் சொல்லும் பாங்கு அவருக்கே உரியத் தனிச்
சிறப்பான ஒன்று. அப்போது அக்குழந்தைகளுக்கு இடையே தாடிவைத்த மூத்த குழந்தை
ஒன்றை நாம் பார்க்க முடியும்.
1990-களில்
தொடங்கி அடுத்தடுத்து தீவிரம் பெற்றுள்ள உலக மயப் பொருளியல் ஒட்டுமொத்த
இயற்கையை சூறையாடுவதையும், மக்களிடம் பொதிந்துள்ள மரபான அறிவியல் மற்றும்
தொழில் நுட்ப அறிவை கொள்ளை அடிப்பதையும் மக்களுக்கு விளக்கி போராட்டக்
களங்களை அமைப்பதில் நம்மாழ் வார் கவனம் செலுத்தினார்.
காலம்
காலமாக மனிதர்களுக்கு மருந்தாகவும், வேளாண்மையில் பூச்சி விரட்டியாகவும்
இன்னும் பல முனைகளில் பயன்படும் பொரு ளாகவும் விளங்கிவந்த வேம்பு, கிரேஸ்
என்ற வட அமெரிக்க பன்னாட்டு நிறுவனத் தால் காப்பு ரிமை என்ற பெயரால் கிரேஸ்
நீம் என்று பெயர் சூட்டப்பட்டு அந் நிறுவனத்தின் தனிச் சொத்தாக
மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு அவரவர் தோட்டத்தில் நிற்கும் வேப்பமரம் கூட
கிரேஸ் நீம் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட சொத்தாக மாறியது. அதன் இலையையோ
பழத்தையோ, கொட்டையையோ, மரப்பட்டையையோ, வேப்ப எண்ணெய்யையோ எதைப்
பயன்படுத்தினாலும் கிரேஸ் நிறுவனத்தாருக்கு காப்புத்தொகை கட்ட வேண்டிய சட்ட
நிலைமை ஏற்பட்டது.
இதனைக் கண்டு
நம்மாழ்வாரும் வடநாட்டில் வந்தனாசிவா அம்மையாரும் கொதித் தெழுந்தார் கள்.
நாடெங்கும் இந்த அநீதியை எதிர்க்க மக்களை அணிதிரட்டு வதில் பெருமுயற்சி
மேற்கொண்டார்கள்.
உலக வர்த்தக அமைப்பு
மாநாடு 1998 மே மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற போது அம்மாநாட்டு
அரங்கத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து இந்தியக் கொடியை கையிலேந்திக்
கொண்டு நம்மாழ் வாரும் வந்தனா சிவாவும் நடத்திய ஆர்ப்பாட்டம் உலகின்
கவனத்தை இச்சிக்கலில் ஈர்த்தது. வந்தனா சிவா தொடுத்த வழக்கின் காரணமாக
வேம்பு தொடர்பான காப் புரிமை இரத்து செய்யப்பட்டது.
தமிழ்
மக்களிடையே புழக்கத்தில் உள்ள பழமொழிகள், சொற் றொடர்கள், தமிழ்
இலக்கியங்கள் ஆகியவற்றை ஆழ்ந்து நோக்கிய நம்மாழ்வார் தமிழ் இனத்தின்
அறிவியல் மரபை கண்டுணர்ந்து மக்களிடம் வெளிப்படுத்தியதோடு அவற்றை
செயல்முறையில் மீட்டுருவாக்கம் செய்வதிலும் முனைப்புக் காட்டினார்.அந்த
வகையில் தமிழினத்தின் வளமான அறிவியல், அறவியல் மரபின் செறிவான பேராளராக
நம்மாழ்வார் திகழ்ந்தார்.
தமிழகத்தின்
உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும் நம்மாழ்வார் தம்மை இணைத்துக்
கொண்டார்.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பு வகித்த தமிழ்த் தேசிய
முன்னணியின் சார்பில் 2003 டிசம்பர் 13 அன்று கல்லனையில் தொடங்கி காவிரி
உரிமை மீட்பு நடைப்பயணம் பத்து நாட்கள் நடைபெற்று டிசம்பர் 22 அன்று
நெய்வேலியில்முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
”காவிரி
மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை தரக் கூடாது’’ என்ற
முழக்கத்தை முன் வைத்து பலதரப்பட்ட மக்களின் பேராதரவோடு நடைப்பெற்ற
எழுச்சிமிக்க பரப்புரைப் போராட்டம் அது. கல்லணையில் அந்த நடைபயணத்தை
தொடங்கி வைத்த வர் நம்மாழ்வார். ஆழமான எழுச் சியுரையாற்றி நடைப்பயணத்தை
தொடங்கி வைத்ததும் இல்லாமல் திருக்காட்டுப் பள்ளி வரை ஏறத் தாழ 22
கிலோமீட்டர் நடைப் பயணத்தில் பங்கேற்று நடந்து வந்தார்.
வேளாண்மையிலிருந்து
உழவர் களை வெளியேற்றும் நோக்கத் தோடு 2009-ஆம் ஆண்டு தி.மு.க அரசு
கொண்டுவந்த வேளாண் மன்றச் சட்டம் சட்டமன்றத்தில் எந்த வேறுபாடுமில்லாமல்
அனைத்துக் கட்சிகளின் ஆதர வோடு நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து தமிழக
உழவர் முன்னணி உள்ளிட்ட கட்சி சார் பற்ற உழவர் அமைப்புகள், சென் னையில்
கூடி, ஆலோசித்து அச் சட்டத்தை எதிர்த்து திண்டிவனம் தொடங்கி சென்னை கோட்டை
நோக்கி உழவர் நெடும்பயணம் நடத்துவது என்று தீர்மானிக்கப்
பட்டது.இப்பரப்புரைப் போராட்டத்திற்கு தலைமையேற்க நம்மாழ்வார் இசைந்தார்.
அதற் கானப் பணிகள் விரைந்து மேற் கொள்ளப்பட்ட நிலையில் தமிழக அரசு
அச்சட்டத்தை திரும்பப் பெற்றது.
முல்லைப்
பெரியாறு உரிமைப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்
உள்ளிட்ட அனைத்து மக்கள் போராட்டங்களிலும் நம்மாழ்வார் பங்கு
செலுத்தினார்.மரபீனி மாற்று விதைகள் குறித்து மிக சிக்கலான அறிவியல்
செய்திகளை எளிமையாக விளக்கி அதனை எதிர்த்து மக்களைத் திரட்டியதில்
நம்மாழ்வாரின் பங்கு தமிழ் நாட்டில் தலையாயது.
மான்சாண்டோ
எதிர்ப்பு நாளில் 12.10.2013 அன்று திருவாரூரில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் நம்மாழ்வார் வெளிப்படுத்திய போர்க்குணம்
மகத்தானது.திண்டுக்கல் காந்தி கிராமப் பல்கலைக் கழகம் 2007 ஆம் ஆண்டு
நம்மாழ்வார் அவர்களின் வாழ்நாள் பணிகளைப் பாராட்டி முனைவர் பட்டம்
வழங்கியது.
காவிரிப் பாசனப் பகுதியை
பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக் கும் திட்டத்தைக் கண்டித்து கிராமம்
கிராமமாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி வலுவான போராட்டத்தை
முன்னெடுக்கும் வகையில் கிராமக் குழுக்களை உருவாக்கும் முயற்சியில் தமது
உடல் நலத்தையும் பாராமல் தீவிரமாக செயலாற்றினார். சொல்லுக்கும் செயலுக்கும்
இடை வெளி யின்றி அவர் வாழ்ந்தார்.
மீத்தேன்
பேரழிப்பு திட்டத் திற்கு எதிரான பரப்புரைப் பணிகளுக்கு இடையில் அப்போராட்
டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.கே. ஆர்.லெனின் அவர்களது
இல்லத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பிச்சினிக்காட்டில் 30.12.2013அன்று
இரவு அமைதியாக இயற்கை எய்தினார்.
கடைசி
நாள் வரை ஓயாது மக்கள் பணியாற்றிய அய்யா நம் மாழ்வார் மறைவை எடுத்த
எடுப்பில் யாருமே நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை ஆகிவிட்டது.
தமிழ்
இனத்தின் மரபார்ந்த, அறம் சார்ந்த அறிவியல் வழிப் பட்டு இயற்கையோடு
இயைந்து வாழ்வதும், இயற்கையைப் பாதுகாக்க விழிப்புணர்வுடன் தொடர்ந்து
போராடுவதும் தான் அய்யா நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழர்கள் செய்யும்
கைம்மாறு.
அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம்.
0 கருத்துகள்:
Post a Comment