கி. வெங்கட்ராமன்

My Photo

சரியானதை சாத்தியப்படுத்துவோம்!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர்
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மாத இதழின் இணையாசிரியர்
எழுத்தாளர் | சூழலியல் கருத்தாளர் | சமூக செயல்பாட்டாளர்


ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் எழுத்து - பேச்சு - செயல்பாடுகள்
அனைத்தும் இத்தளத்தில் ஒருங்கு திரட்டப்பட்டுள்ளன.

மக்கள் பணத்தை வங்கிகள் திருட மோடியின் புதிய சட்டம்

மக்கள் பணத்தை வங்கிகள் திருட மோடியின் புதிய சட்டம்


உங்கள் பணம் உங்கள் கையில்’’ என்று கூறி, எல்லா மக்களையும் வங்கிக் கணக்கில் இழுத்துவிட்ட நரேந்திர மோடி அரசு, இப்போது உங்கள் சேமிப்புத் தொகை - உங்களுக்கு இல்லைஎனக் கூறிவிட்டது!

நிதித்தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு - சட்ட வரைவு _- 2017” (The Finance Resolution and Deposit Insurance Bill - 2017) என்ற பெயரில், மோடி அரசு நாடாளுமன்ற குளிர் காலக்கூட்டத் தொடரில் சட்டவரைவு ஒன்றை முன்வைத் திருக்கிறது.

கடந்த 2017 சூன் 14 அன்று, மோடி அமைச்சரவையால் இறுதி செய்யப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு ஆய்வுக்குழுவிற்கு விடப்பட்ட இந்த வரைவுச் - சட்டம் வழியாக இந்தத் திட்டம்  நிறை வேற்றப்படும் ஆபத்து இருக்கிறது!

இச்சட்டத்தின் முதன்மையான ஏற்பாடு தீர்வுக் கழகம்’’ (Resolution Corporation) என்ற ஒற்றை சர்வாதிகார அமைப்பை நிறுவி, அதன் அதிகாரத் தின்கீழ் அனைத்து அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஊரக வங்கிகள், காப்பீட்டுக் கழகங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவ னங்கள் போன்ற அனைத்தையும் வைப்பதாகும்.

இந்தத் தீர்வுக் கழகம், இந்திய நிதி அமைச்சகத் திற்குக் கட்டுப்பட்ட கீழ் அமைப்பாக மட்டும் இருக்கும்.

இந்திய சேம வங்கி (ரிசர்வ் வங்கி), காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை ஆணையம், பங்குச்சந்தை கட்டுப் பாட்டு வாரியம் (செபி), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் போன்ற தற்சார்பான (சுயேச்சையான) நிறுவனங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு - அகற்றப்பட்டு, அந்த இடத்தில் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட - ஆனால் அமைச்சரவைக்குக் கட்டுப்பட்ட தீர்வுக் கழகம் அமைக்கப் படுகிறது.

ஏற்கெனவே, ஓரளவுக்கு தற்சார்பாக இருந்த திட்டக் குழுக் கலைக்கப்பட்டு, நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நிதி ஆயோக் அமைக்கப்பட்டது.

நாட்டின் வரி விதிப்பு குறித்தும், வரி வருமானப் பங்கீடு குறித்தும் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திடமிருந்து பிடுங்கப்பட்டு, அவற்றுள் மறைமுக வரி குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் கொண்ட சரக்கு சேவை வரி மன்றம்’’ (ஜி.எஸ்.டி. கவுன் சில்) நிறுவப்பட்டுவிட்டது.

பல்கலைக்கழக நல்கைக் குழு, அனைத்திந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகம், மருத்துவக் கல்விக் கழகம் போன்ற தனித்த நிறுவனங் களை ஒழித்துக்கட்டி, அவை அனைத்திற்கும் சேர்த்து ஒற்றை தேசியக் கல்வி வாரியம் அமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.

இந்திய சேம வங்கியின் நிர்வாகக் குழு ஒப்புதலின்றியே 500 ரூபாய் - 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்ற முடிவு, தலைமை அமைச்சரின் தான டித்த மூப்பான அறிவிப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நாட்களின் எண்ணிக்கை திட்டமிட்டு வெட்டப்படுகிறது. இந்திய அரசுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள், பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள், உயராய்வு நிறுவனத் தலைவர்கள் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அறிவுரை பெறுவதற்கு அரசே வற்புறுத்தியது.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நிறுவனங்களைக் குடைசாய்த்து, தனது அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட அமைப்பாக தாழ்த்தப்படுவதுதான் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளில் மோசமானவையாகும்!

அந்த வரிசையில், நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு சட்டத்தின்படி அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம்”, சேம வங்கி போன்ற தற்சார்பான நிதித்துறை அமைப்புகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி, நடுவண் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (Central Vigilance Commission), நடுவண் புலனாய்வுக் குழு (சி.பி.ஐ.) போன்றவற்றையும் தாண்டி தனித்த புலனாய்வு அதிகாரமும் கொடுக்கப்பட்ட அமைப்பாகும்.

இந்தத் தீர்வுக் கழகம், ஏதாவதொரு வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் சிக்கலான நிலையில் (Critical) இருப்பதாக மதிப்பிட்டாலோ அல்லது சிக்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதினாலோ அந்த வங்கியை இன்னொரு அரசுத்துறை அல்லது தனியார் வங்கியோடு இணைக்கலாம். அல்லது இன்னொரு நிறுவனம் அந்த வங்கியை எடுத்துக் கொள்ள அறிவுறுத் தலாம். அல்லது அந்த வங்கியை மீட்க முடியாது என்று அறிவித்து கலைத்துவிடலாம். அதற்கு இச்சட்டத்தின் விதி 48 மிக விரிவான வாய்ப்புகளை வழங்குகிறது.

இச்சட்ட வரைவின் 42, 43, 44 ஆகிய விதிகள் வங்கி வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கான வட்டியை நிறுத்தவோ, தள்ளிப்போடவோ, மாற்றியமைக்கவோ தீர்வுக்கழகத்திற்கு அதிகாரம் வழங்குகிறது. அது மட்டுமின்றி, வங்கி மற்றும் காப்பீட்டுக்கழகப் பணியாளர்கள், அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட் டோரின் ஊதியத்தை நிறுத்திவைக்கவோ, குறைக்கவோ, சில காலத்திற்கு மறுக்கவோ, அவர்களின் எண்ணிக் கையைக் குறைக்கவோ, அனைவரையும் வெளி யேற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யவோ தீர்வுக் கழகத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.

இச்சட்ட வரைவின் விதி 52, வாடிக்கையா ளர்களின் சேமிப்பு வைப்புத் தொகையை அவர்கள் இசை வின்றியே எடுத்துக்கொள்வதற்கு வழி செய்கிறது. விதி 52-இன் துணை விதிகள் மூலம் (அ) - வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை (Liability) இரத்து செய்வது, (ஆ) -_ பொறுப்புகள் நிறைவேற்றுவதில் மாற்றங்கள் செய்வது, (இ) -_ வாடிக்கையாளர்களின் நிலைத்த வைப்புத் தொகையின் காலத்தை தன்னிச்சையாக நீட்டிப்பது அல்லது மாற்றியமைப்பது, (ஈ) - வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை முழுமையாகவோ பகுதியாகவோ முதலீட்டுக்கு எடுத்துக் கொள்வது என்ற கட்டற்ற அதிகாரத்தை தீர்வுக் கழகத்திற்கு வழங்குகிறது.

அதாவது, வங்கிகள் நொடித்துப்போகும் என்று கருதினால் வாடிக்கையாளர்களின் சேமிப்புத் தொகையை _- அந்த இழப்பை ஈடு செய்ய வாடிக்கையாளரின் இசைவின்றியே எடுத்துக் கொள்ளலாம் என்று பொருள்!

ஏற்கெனவே, வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கு எந்த குறைவும் வந்துவிடாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதற்காகவே வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிப் பாட்டுக் கழகம்(Deposit Insurance and Credit Guarantee Corporation - DICGC) என்ற அமைப்பு 1961ஆம் ஆண்டு சட்டப்படி நிறுவப்பட்டுள்ளது.

அரசு வங்கிகள் கலைக்கப்படும் நிலை ஏற்பட்டால், ஒரு இலட்ச ரூபாய் வரையிலாவது வாடிக்கையாளரின் சேமிப்புத் தொகை முழுமையாகக் கிடைப்பதற்கு இந்த உறுதிப்பாட்டுக் கழகத்தின் வழியாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய நிலையில், வங்கி சேமிப்புத் தொகைக்கு ஈடாக, இந்தக் கழகத்திடம் ஏறத்தாழ 16 இலட்சம் கோடி ரூபாய் வைக்கப்பட்டுள்ளது.

அரசு வங்கிகளுக்கு உழவர்களாலோ, சிறு உற்பத்தியாளர்களாலோ, சில்லறை வணிகர்களாலோ ஆபத்து ஏற்படுவது இல்லை! இந்திய சேம வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படியே, ஒட்டுமொத்த வாராக் கடன் 14.6 இலட்சம் கோடி ரூபாயாகும்! இந்த வாராக் கடனில் 88.4 விழுக்காடு வாராக்கடன் தொகை ஐந்து கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்களிடமிருந்து நிலுவையில் நிற்பதாகும். அதிலும், அதானி, அம்பானி, டாட்டா உள்ளிட்ட இந்தியாவின் முதல் பன்னிரெண்டு பணக்காரர்களிடமிருந்து வசூலிக்க முடியாமல் நிற்கும் வாராக்கடன் ஏறத்தாழ 4 இலட்சம் கோடி ரூபாயாகும்!

இந்த முதல் வரிசை முதலாளிகளின் மடியில்தான் நரேந்திர மோடியின் ஆட்சி தவழ்கிறது! இவர்களின் வாராக்கடன்தான் வங்கிகள் நொடிப்பதற்கு முதன்மைக் காரணமாகும். இவற்றை முறையாக வசூலித்து விட்டாலே வங்கிகள் நிலைப்பெற்றுவிடும். இப்பெரு முதலாளிகளிடமிருந்து வாராக் கடன்களை வசூலிக்கத் தடை போடும் மோடி, நிலைகுலையும் வங்கிகளை தூக்கி நிறுத்துவதற்கு மாற்று வழியாகத்தான் பணத்தாள்  செல்லாது என அறிவித்தார்.

பணப்பரிமாற்றத்தை வன்முறையாகத் தடுத்து நிறுத்தி, அனைத்து மக்களையும் வங்கிகளில் பணம் போடும்படி மோடி வற்புறுத்தியது இதற்காகத்தான்! முதலாளிகளிடமிருந்து வாராக் கடனை வசூலிக்கா மலேயே, மக்களின் பணத்தை கட்டாயப்படுத்தி வங்கிகளில் செலுத்த வைத்ததன் மூலம் வங்கிகளை நிலைகுலைவிலிருந்து காத்துவிடலாம் என்று கருதினார்.

ஏற்கெனவே எரிவளி மானியம், உழவர் மானியம், உதவித் தொகைகள் ஆகியவற்றை வங்கிகளில் செலுத் துவது, “ஜன்தன்என்ற மக்கள் சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது என்று பல வகைகளில் எளிய மக்களை வங்கியோடு கட்டிப்போடும் வேலையை மோடி அரசு தொடங்கிவிட்டது.

வங்கிக் கணக்குகளில் குறைந்தது ரூபாய் 1,000 முதல் 5,000 வரை (Minimum Balance) வைத்திருக்க வேண்டும். அதற்குள் குறைந்தால் தண்டத்தொகை வசூல் என்று கெடுபிடி செய்கிறது

எல்லா மக்களின் பணத்தையும் வங்கியை நோக்கி விரட்டியதற்குப் பிறகு, இப்போது உங்களுக்கு சொல்லாமலேயே உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிகளைப் பாதுகாப்போம்என்று மோடி அரசு அறிவிக்கிறது.

இதற்கு முன்னர், வாராக்கடனில் சிக்கியுள்ள அரசு வங்கிகளுக்கு இந்திய அரசின் நிதியிலிருந்து 2 இலட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் உயிர்ப்புத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நிலைப்படுத்தப்படும் வங்கிகளின் சேமிப்புத் தொகையிலிருந்து மேலும் மேலும் பெருமுதலாளிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இனி புதிதாக வாராக்கடன் குவிந்தால், இன்னொரு முறை அரசு நிதியிலிருந்து உயிர்ப்புத் தொகை தர முடியாது என்பதனால், ஏழை எளிய மக்கள் - உழைப்பாளர்கள் - ஓய்வூதியர்கள் போன்றவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு உறுதியான சேமிப்பு என்று கருதிக் கொண்டிருப்பதிலும் கைவைக்கிறார் மோடி!

இந்தியாவின் ஒட்டுமொத்த வாராக்கடனில் அரசு வங்கிகளின் வாராக்கடன்தான் 80 விழுக்காட்டிற்கு மேலாக உள்ளது. தனியார் வங்கிகள் கடன் திரும்ப வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு கொடுக்கும்போது, ஆட்சியாளர்களின் உயர்மட்ட அதிகாரிகளின் கையூட்டுத் தேவைகளுக்காக எந்த உறுதியுமற்று பெருமுதலாளிகளுக்கு சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடன் தொகை வாரி வழங்கப் பட்டிருக்கிறது. இதனால்தான் தனியார் வங்கிகளை விட, அரசு வங்கிகள் சிக்கலில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றன.

இப்பெருமுதலாளிகளின் வாராக்கடனை வசூலித்து வருங்காலத்தில் கடன் கொடுப்பதை முறைப்படுத்தினாலே போதும் எந்த சிக்கலும் வராது! ஆனால், மோடி அரசு மக்களை பலி கொடுத்து -  மக்களின் பணத்தை வழிப்பறி செய்து, பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்குவதிலேயே குறியாக இருக்கிறது. அதற்காகவே, எந்த சட்ட நெறிமுறைகளையும் மதிக்காமல் சர்வாதிகார ஆட்டம் போடுகிறது. இந்தப் போக்கை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு வழியாகத் தான், நிதித் தீர்வு மற்றும் வைப்புக் காப்பீடு சட்டத்தைக் கொண்டு வருகிறது!

அமெரிக்க வல்லரசும் பிற மேற்குலக நாடுகளும் 2008 நிதி மூலதன நெருக்கடியிலிருந்து திவாலான லேமென் பிரதர்ஸ், கோல்டுமேன் சாக் போன்ற வங்கிகளைப் பாதுகாப்பதற்கு அரசின் கருவூலத்திலிருந்து கண்ணை மூடிக் கொண்டு, நிதியை வாரி வழங்கி அந்த வங்கிகளைத் தூக்கி நிறுத்தின.

பல இலட்சம் கோடி டாலர் நிதியை விழுங்கிய அந்த வங்கிகளை வீழ்வதற்கு விட முடியாதவை’’ (Too big to fail) என அமெரிக்க அரசு வகைப்படுத்தி, தன் செயலை ஞாயப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதலில் 2013இல் சைப்ரஸ் நாடு, வீழ்ச்சியிலிருந்து தனது வங்கிகளைப் பாதுகாக்க வாடிக்கையாளரின் சேமிப்புத் தொகையிலிருந்து 50 விழுக்காடு வரை எடுத்துக் கொண்டு, வங்கிகளைக் காப்பாற்ற முயன்றது. அதே வழியை இந்தியாவிலும் பின்பற்றலாம் என்று மோடி அரசுக்கு அமெரிக்கா, பிரான்சு, சீனா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20’’ கூட்டமைப்பு 2014 லிலேயே அறிவுரை வழங்கியது.

இந்த அடிப்படையிலேயே மோடி அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவருகிறது.

அரசு வங்கிகளை தனியாருக்கு மொத்தமாகக் கொடுத்து விடுவது என்ற சதி நோக்கமும் இதிலுள்ளது! இதற்காகவே, இந்திய அரசு வங்கி (ஸ்டேட் வங்கி) சட்டத்தைக் கைவிட்டு, அந்த வங்கியையும் தனியாருக்கு வழங்கலாம் என்ற ஏற்பாட்டை இந்த புதிய சட்டத்தின் வழியாக மோடி அரசு செய்கிறது. 

இதற்காக எந்த சட்டக் குறுக்கீட்டிற்கும் மக்கள் கண்காணிப்பிற்கும் நாடாளுமன்ற விவாதத்திற்கும் அப்பாற்பட்ட தீர்வுக்கழகத்தை உருவாக்கி, அதன் கையில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்படைக்கத் திட்டமிடுகிறது.

வருங்காலத்திற்குத் தேவையான சேமிப்பைத் திருடர் அச்சமின்றி கையிலும் வைத்திருக்க முடியாது, ஓரளவுக்கு மேல் தங்கமாகவும் வைக்க முடியாது, வங்கிகளையும் நம்பி சேமிக்க முடியாது என்றால் பெரும்பான்மை மக்களை பொருளியல் நடவடிக்கைகளிலிருந்தே முடக்கி வைப்பது என்றாகும்!

எனவே, முதலாளிகளின் கைத்தடி - முரட்டு மூடர் பாசிஸ்ட் மோடியின் இச்சட்டத்தை மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு நின்று முறியடித்தே ஆக வேண்டும்!

(இக்கட்டுரை தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 டிசம்பர் 16 - 31 இதழில் வெளியானது).



0 கருத்துகள்: