"தூய்மைப் பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை தாக்கியக் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" --- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
தூய்மைப் பணியாளர்கள் மற்றும்செயல்பாட்டாளர்களை தாக்கியக்
காவல்துறையினர் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
====================================
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், நேற்றிரவு (13.08.2025), தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதலைக் கண்டு, சனநாயக உணர்வுள்ள அனைவரது மனமும் கொந்தளித்துக் கிடக்கிறது. சனநாயக நாட்டில், தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மக்களின் குரல்வளையை நெரிப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம்!
கொரோனா பெருந்தொற்று காலத்திலும், சென்னையின் பெருவெள்ளம் – புயல் காலங்களிலும், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, முன்நின்று களப்பணியாற்றியவர்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள்! ஆனால், இவர்களின் உழைப்பிற்கு உரிய மதிப்பை தி.மு.க. – அ.தி.மு.க. அரசுகள் வழங்கியதே இல்லை! சென்னை மாநகராட்சியின் கீழ் அரசுப் பணியாளர்களாக இருக்க வேண்டிய இவர்களை, பகுதி பகுதியாகத் தனியார்மயப்படுத்தி, இன்றைக்கு நிரந்தரமில்லாத குறைந்த ஊதியப் பணியில் சிக்கித் தவிப்பவர்களாக ஆட்சியாளர்கள் தவிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இராம்கி என்ற ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு, 2700 கோடி ரூபாய் ஒப்பந்தம் வழியே, தாரை வார்க்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சற்றொப்ப 2000 பேர், உழைப்போர் உரிமை இயக்கத்தின் முன்னெடுப்பில் கடந்த 01.08.2025 அன்று முதல், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு அமைதியான வழியில், நிரந்தர வேலை கேட்டும், தங்கள் பழைய ஊதியமே தொடர வேண்டுமெனக் கோரியும் காத்திருப்பு அறப்போராட்டம் நடத்தினர். கடந்த 12.08.2025 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்று, போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு வந்தனர்.
எதிர்க்கட்சியாக இருந்த போது தி.மு.க. அளித்த வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற முன்வராதம “திராவிட” மாடல் தி.மு.க. அரசு, காவல்துறையை ஏவி போராடும் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று (13.08.2025) சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் காரணம் காட்டிக் கொண்டு, உடனடியாக நேற்று நள்ளிரவே பெரும் காவல்படையைக் குவித்து, வன்முறையை ஏவி, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த பெண்களையும், முதியவர்களையும் கைது செய்திருப்பதும், போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த வழக்கறிஞர், மாணவர்கள், இளைஞர்கள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடுமையாகத் தாக்கி, சிறைப்படுத்தி வைத்திருப்பதும் அதிகாரத் திமிரில் ஆட்சியாளர்கள் நடத்தும் உட்சபட்ச வெறியாட்டமாகும்!
போராட்டக் குழுத் தலைவர் வழக்கறிஞர் பாரதி, புளியந்தோப்பு மோகன், சமூக செயல்பாட்டாளர்கள் வளர்மதி, நிலவுமொழி செந்தாமரை போன்றோரெல்லாம் குறிவைத்துக் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். வளர்மதி, நிலவுமொழி உள்ளிட்டோரை வேண்டுமென்றே பல காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், இரவு முழுக்கக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும், அரசின் நிதிநிலையைச் சீர்குலைக்கும் அளவுக்குப் பெரியவை அல்ல. இவர்களின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கான கோரிக்கைகள் இவை. ஆனால், திராவிட ஆட்சியாளர்களின் சீரழிந்த சாதிய மனநிலையும், அதிகாரத் திமிரும் இந்த வன்ம வெறியாட்டத்தை நடத்த ஊக்கமளித்திருக்கிறது.
பாசிச பா.ச.க.வின் தனியார்மயமாக்கலை எதிர்ப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் தி.மு.க., அதே தனியார்மயத்தையே தனது அரசுக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. எனவேதான், தூய்மைப் பணியாளர்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் எனப் பல தரப்பினரும், தனியார்மயமாக்கல் மற்றும் தற்காலிக ஒப்பந்த வேலைவாய்ப்புகளை எதிர்த்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்த நிலையில்தான், கைது செய்யப்பட்டோர் ஆங்காங்க விடுதலை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. தமிழ்நாடு அரசு, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் எவ்வித வழக்குமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், செயல்பாட்டாளர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த நேரத்திலாவது துயரங்களை சூழ்ந்து நிற்கும் அத்தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் உடனே நிறைவேற்றிட வேண்டுமென்றும் என்றும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துக் கேட்டுக் கொள்கிறேன்.
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 98419 49462, 94439 18095
நூல்கள் பெற்றிட: 98408 48594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================
"*கனிவான சொற்களில் கல்வி மறுப்புக் கொள்கையே மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள கல்விக்கொள்கை!*" ---- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச்செயலாளர் ஐயா *கி.வெங்கட்ராமன்* அறிக்கை!
*கனிவான சொற்களில் கல்வி மறுப்புக் கொள்கையே மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள கல்விக்கொள்கை!*======================================================
_தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச்செயலாளர் ஐயா_ *கி.வெங்கட்ராமன்* _அறிக்கை!
இதற்குத்தான் இந்த ஆரவாரமா என்று நொந்துபோகும் வகையில்தான் இன்று ( 8-8-2025) தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 அமைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்டது, பள்ளிக் கல்வி குறித்த தி.மு.க. அரசின் கல்விக் கொள்கையாகும். உயர்கல்விக் கொள்கை அடுத்து வெளியிடப்படுமாம்.
அடிப்படையில், மோடி தலைமையிலான பா.ச.க. அரசின் “தேசியக் கல்விக் கொள்கை 2020” இன் தமிழ்நாட்டுப் பதிப்பாகத்தான் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள பள்ளிக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. “பிஎம்சிறீ” என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட “தலைமை அமைச்சர் - எழுச்சியுறும் இந்தியாவின் பள்ளிகள்” (Pradhan Manthri Schools for rising India - PMSHRI) திட்டத்தைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று வாள் சுழற்றிய திராவிட மாடல் அரசு பிஎம்சிறீ திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதை அறிவிப்பதுதான் இன்று அறிவிக்கப்பட்ட கல்விக் கொள்கை.
பிஎம்சிறீ திட்டம் ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளி, மற்றும் ஒரு உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி, “அருமைப்பள்ளி” (School of Excellence) என தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ செயல்படுத்துவதற்கான முன்மாதிரிப் பள்ளி என்று பா.ச.க. அரசு அறிவித்தது.
அதையேதான் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள மாநில பள்ளிக் கல்விக் கொள்கை “வெற்றிப் பள்ளிகள்” என்ற பெயரால் அறிவித்திருக்கிறது. (தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்விக் கொள்கை - இயல் 1 - பத்தி 1.7.2)
மோடி அரசின் பிஎம்சிறீ திட்டம் கூறுவது என்ன? ஏற்கெனவே இயங்கிவரும் அரசுப் பள்ளிகளில் கட்டடங்கள், கரும்பலகை, கல்விக் கருவிகள் உள்ளிட்ட நல்ல உள்கட்டமைப்பும், கற்பித்தலில் சிறந்த ஆசிரியர்களும் சிறப்பாக உள்ள பள்ளிகளை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளை “அருமைப்பள்ளிகள்” என அறிவிக்கும் திட்டமாகும். அவ்வாறு அறிவிக்கப்படும் அருமைப் பள்ளிகளுக்கு, கூடுதல் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தனிக்கவனம் செலுத்தப்படும் என்று பிஎம்சிறீ திட்டம் கூறுகிறது.
தமிழ்நாடு கல்விக் கொள்கை சொல்லது என்ன? “வெற்றிப் பள்ளிகள் என்பது ஒரு வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளைப் போன்று அனைத்து வசதிகளையும் வழங்குவதற்காக தொடங்கப்படும் முன்னெடுப்பாகும். இதன் மூலம் மாணவர்கள் உயர்தர வரிசையில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பெற முடியும். அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு வெற்றிப் பள்ளிகளாக மேம்படுத்தப்படும். இந்தப் பள்ளிகளைக் கண்காணிக்கவும் உதவிசெய்யவும் ஒவ்வொரு மாவட்டமும் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. ஒப்பார் குழுக் கற்றல் மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கும் இவ்வெற்றிப் பள்ளிகள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் மையங்களாகவும் செயல்படும்” என்று அறிவிக்கிறது இந்தக் கொள்கை.
பிஎம்சிறீ பள்ளியின் திராவிடப் பதிப்பான வெற்றிப்பள்ளி என்பது, பள்ளிக்கல்வியிலிருந்தே அரசு படிப்படியாக விலகிக்கொண்டு மாணவர்களைக் கைகழுவும் ஏற்பாடாகும்.
அரசுப் பள்ளிகளே எளிய மக்களுக்கான பள்ளிகள்தான். அதற்குள்ளேயே, பாகுபாடு காட்டவும், பின்தங்கிய மாணவர்களை கைதூக்கிவிடுவதற்கு மாறாக கல்வியிலிருந்து வெளியேற்றவும்தான் இத் திட்டம் வழிவகுக்கும். ஏனெனில், பிஎம்சிறீ திட்டத்தின்படி இந்தப் பள்ளிகள் தமிழ்நாடு அளவில் அரசுப் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் தரச்சோதனைகளின் வழியாகத்தான் தேர்வு செய்யப்படும். “ஒரு வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப்பள்ளியை தேர்ந்தெடுப்பது” என்பது அதைத்தான் குறிக்கிறது. ஏற்கெனவே தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள பள்ளிகள்தான் வெற்றிப் பள்ளிகள் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படும்.
அத் தரச்சோதனைத் தேர்வில் தங்கள் பள்ளி இடம் பெற வேண்டுமென்றால், உயர் தேர்ச்சி பெறமுடியாத மாணவர்களைத் தங்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றுவதுதான் ஒரே வழி என்ற நிலைக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தள்ளப்படுவார்கள்.
நிதி நெருக்கடி என்ற பெயரால், பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் குறைவான நிதியில் கணிசமான பகுதி இந்த வெற்றிப் பள்ளிகளுக்குச் செலவிடப்பட்டு, ஏற்கெனவே புறக்கணிப்பில் உள்ள மற்ற அரசுப் பள்ளிகள் மேலும் புறக்கணிக்கப்படும்.
அதைவிடப் பயங்கரமானது, பிஎம்சிறீ திட்டப்படி இந்த அருமைப் பள்ளிகளோடு அக்கம் பக்கத்தில் உள்ள பள்ளிகள் துணைப்பள்ளிகளாக இணைத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பாகும்.
பிஎம்சிறீ - யின் இந்தப் படுமோசமான பள்ளி புறக்கணிப்புத் திட்டத்தைத்தான் வெற்றிப்பள்ளி என்ற பெயரால் “இவ்வெற்றிப்பள்ளிகள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் மையங்களாகவும் செயல்படும்” என்று கூறும் தமிழ்நாட்டுத் திட்டமாகும்.
மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை அத்தியாயம் 7, ஒப்பீட்டளவில் சிறப்பாக இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளோடு அக்கம் பக்கத்தில் 15 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள இடைநிலை உயர்நிலைப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை பள்ளி வளாக இணைப்பு என்ற பெயரால் (Merger of School Complex) அறிவித்தது.
உலகம் முழுவதும் முன்னேறிய நாடுகளில் கூட கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அருகமைப் பள்ளிகள் (Neighbourhood schools) அமைத்து வருகிறார்கள். மாறாக மோடி அரசு தேர்ச்சி குறைவான பின்தங்கிய பள்ளிகளையும், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்புக் கவனம் செலுத்தி வலுப்படுத்தாமல், அவற்றை மூடிவிட வேண்டும் என்பதற்காக அறிவித்துள்ள திட்டம்தான் பள்ளி வளாக இணைப்பு என்ற சூதான திட்டம். இது உண்மையில் கல்வி மறுப்புக் கொள்கையாகும்.
இதைத்தான் 2019-இல் எடப்பாடி பழனிசாமி அரசு அரசாணை எண் 145-இன்படி அறிவித்தது. அடிப்படையில் இதே கல்வி மறுப்புத் திட்டத்தைத்தான் வெற்றிப் பள்ளிகள் திட்டம் என்று தி.மு.க. அரசு இப்போது அறிவிக்கிறது. இது மிகவும் அபாயகரமானது!
ஏற்னெவே பள்ளிகள் சார்ந்த முறைசார் கல்வியை நீர்த்துப் போக வைத்து, கல்வித் தொண்டர்கள் என்ற பெயரால், மோடி அரசு அறிவித்த போது, தமிழ்நாடு அரசு அதையே இல்லம் தேடிக் கல்வி என்று அறிவித்தது. அதே போல், தமிழ்நாடு அரசு அறிவித்த “எண்ணும்- எழுத்தும் திட்ட”மும் சராசரியாக உள்ள எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பாடத்திட்ட அடைவுகளை மறுக்கும் திட்டம்தான். இவை மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகள்தான்.
அதையே, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மாநில அரசின் கல்விக் கொள்கையும் பலபடப் பாராட்டி உறுதி செய்கிறது.
உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளிலும், பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளிலும் 11, 12-ஆம் வகுப்பு ஆகிய இரு வகுப்பு பாடங்களிலிருந்து கேள்விகள் இடம்பெறும் நிலையில், மிகப் பெரும்பாலான கல்வியாளர்கள் 11-ஆம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு இருக்க வேண்டும்; அதில் பெறப்படும் மதிப்பெண்ணும் மேற்கல்வி்க்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்கள். இப்போது, 11-ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு இருக்காது என மாநில பள்ளிக் கல்விக்கொள்கை அறிவிக்கிறது. (இயல் 6 )
பள்ளிக் கல்விக் கொள்கையில், இந்திய அரசின் கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு வரையிலான பொதுத் தேர்வு, இந்தி - சமற்கிருதத்தைத் திணிப்பு ஆகியவை இருக்காது ஆகியவை மட்டும்தான் அடிப்படை வேறுபாடு. மற்றபடி மோடி அரசின் பிற்போக்கான தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் தமிழ்நாட்டுப் பதிப்புதான் இன்று தி.மு.க. அரசு அறிவித்துள்ள மாநிலக் கல்விக்கொள்கை -2025 ஆகும்.
அனைவருக்கும் கல்வி, சமத்துவக் கல்வி, என்றெல்லாம் அலங்காரமாக அறிவித்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாக கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டு எளிய மக்களைக் கைகழுவிவிடும் பிற்போக்கான கொள்கைதான் இன்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை ஆகும்.
சாரத்தில் இது கல்விக் கொள்கை அல்ல, கல்வி மறுப்புக் கொள்கை!
எனவே, இந்த “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025” ஐ தி.மு.க. அரசு திரும்பப் பெற்று, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான சமநீதி கல்விக் கொள்கையை உருவாக்கி அறிவிக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
பளபளப்பான சொல் அலங்காரத்தோடு தி.மு.க. அரசு அறிவித்துள்ள இந்தக் கல்வி மறுப்புக் கொள்கையை எதிர்த்து கல்வியாளர்களும் மாணவர் இயக்கங்களும், தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள அரசியல் இயக்கங்களும் களம்காண முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
============================================
"நீலகிரியில் சுற்றுச்சூழலை நாசமாக்கிய தார் ஆலை மக்கள் எழுச்சியால் மூடப்பட்டது!" ---- தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
நீலகிரியில் சுற்றுச்சூழலை நாசமாக்கியதார் ஆலை மக்கள் எழுச்சியால் மூடப்பட்டது!
===================================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
கி. வெங்கட்ராமன் அறிக்கை!
===================================
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள தேவாலா பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தி.மு.க. பிரமுகர் இராயன் என்பவருக்குச் சொந்தமான PRCC - தார் கலவை ஆலை, இன்று (04.08.2025) மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்கது. இது மக்கள் முன்னெடுத்த ஒன்றுபட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்!
தொடர்ந்து நச்சுப் புகையால் சுற்றுசூழல் மாசு ஏற்படுவதுடன், அக்காற்றை சுவாசித்து வாழ்ந்து வரும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த இந்த தனியார் ஆலையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. பெரியோர் முதல் சிறு குழந்தைகள் வரை ஆஸ்துமா - நுரையீரல் தொற்று - புற்றுநோய் எனப் பல்வேறு விதமான கொடிய தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த ஆலைக்கு எதிராக தொடர்ந்து மக்கள் போராடினர். பல்வேறு கட்சி - இயக்கங்களுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கமும் அப்போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று, வழக்குகள் பெற்றது. தார் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, காழ்ப்புணர்வின் காரணமாக, அப்பகுதியின் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் தமிழ்ச்செல்வன் மீது தாக்குதல் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 28.07.2025 அன்று, PRCC - தார் கலவை ஆலையில் - பல ஆயிரம் டன் கணக்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள் பாரம் தாங்காமல் - PRCCக்கு சொந்தமான தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு அருகில் உள்ள வீடுகளின் மேல் விழுந்ததில் பல வீடுகள் சேதம் அடைந்தது. நல் வாய்ப்பாக, வீட்டிலிருந்தவர்கள் உயிர் பிழைத்தனர்.
மேலும் அபாயகரமான நிலையில் விரிசலடைந்து காணப்படும் தடுப்புச்சுவர் மீண்டும் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் சூழல் காணப்படுகிறது. மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் அருகில் உள்ள பல வீடுகள் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புகள் ஏதேனும் நடந்து விடுமோ என இப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இதனையடுத்து, 30.07.2025 அன்று PRCC - தார் கலவைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 01.08.2025 அன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று (04.08.2025) மாவட்ட நிர்வாகம் PRCC தார் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. இந்த முடிவு, அடுத்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல், நீண்ட காலமாகப் போராடிவரும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டுமெனில், இத்தடையை நிரந்தரமான தடை என மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என்றும், தார் ஆலைக்கு எதிராகப் போராடியோர் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================
"கல்வியாளர் வசந்திதேவி மறைவுக்கு இரங்கல்!" ---- தமிழ்த்தேசியப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
கல்வியாளர் வசந்திதேவி மறைவுக்கு இரங்கல்!=============================
தமிழ்த்தேசியப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
============================
துடிப்புமிக்க கல்வியாளர் பேராசிரியர் வே. வசந்திதேவி, நேற்று (1.8.2025) மதியம் காலமானார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டு முன்னோடி தொழிற்சங்க வாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான திரு. சக்கரைச் செட்டியார் அவர்களின் மகள் வழி பெயர்த்தியான வசந்திதேவி திண்டுக்கல்லில் 1938-இல் பிறந்தவர். இவரது தந்தையார் பி.வி. தாஸ் அவர்களும் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவர், திண்டுக்கல் நகராட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். திண்டுக்கல் நகரத்தில் இருந்த தூய்மைப் பணியாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறையோடு பாடாற்றியவர். காங்கிரசுக் கட்சியில் சித்ரஞ்சன் தாஸ் அவர்களைத் தனது வழிகாட்டி தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த அவர், சித்ரஞ்சன் தாஸ் துணைவியார் வசந்திதேவி அவர்களின் பெயரையே தனது மகளுக்கும் சூட்டினார்.
சென்னைக்குப் புலம் பெயரந்த காரணத்தினால், வசந்திதேவியின் படிப்பு சென்னையிலேயே தொடர்ந்தன. இராணிமேரி கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் வரலாற்றுத் துறையில் படித்த வசந்திதேவி, 1970 களில் பிலிப்பைன்ஸ் சென்று தனது முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அந்தக் காலகட்டத்தில் நடந்த வீரஞ்செறிந்த வியட்நாம் விடுதலைப் போராட்டமும், சேகுவாரா எழுச்சியும் வசந்திதேவியை பொதுவுடைமை இயக்கத்தின் பால் ஈர்த்தன.
இராணிமேரி கல்லூரி, மீனாட்சி கல்லூரி போன்ற கல்லூரிகளில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த வசந்திதேவி, ஆசிய வளர்ச்சிவங்கி அதிகாரியான தனது கணவரின் பணிகாரணமாக, பிலிப்பைன்ஸ்சுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. நீண்டகால் விடுப்பில் சென்றிருந்த வசந்திதேவி, விடுப்பு முடிந்து திரும்பியபோது, கும்பகோணம் மகளிர் அரசு கல்லூரியில் வரலாற்றுத் துறை தலைவராகப் பணியமர்ந்தார்.
அப்போது, திருவாரூரில் இருந்த மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியின் ஒன்றுபட்ட தஞ்சைமாவட்ட அலுவலகத்திற்கு வந்து, குடந்தையில் அவருக்கு வீடுபார்ப்பதற்கும், வந்தவுடன் முதல் பயணமாக கீழவெண்மணி ஈகியர் இடத்தைப் பார்க்க வேண்டும் எனக் கோரியும், இந்து என். ராம் அவர்களின் அறிமுகக் கடிதத்தோடு என்னை அணுகியது நினைவுக்கு வருகிறது.
சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், உழவுத் தொழிலாளர்களான தங்களது கோரிக்கைகளுக்காகவும் செங்கொடி சங்கத்தில் அணிதிரண்ட ஒரே காரணத்திற்காக, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 44 பேர், 1968 டிசம்பர் 25 நள்ளிரவில் ஒரே குடிசையில் வைத்து கொளுத்திக் கொல்லப்பட்ட இடம் கீழவெண்மணி! அந்த ஈகியரின் நினைவு மண்டபத்திற்கு வசந்திதேவி அவர்களை நான் அழைத்துச் சென்று காட்டியபோது, அவர் வெளிப்படுத்திய உணர்ச்சிக் கொந்தளிப்பு இன்றும் என் கண்முன்னே நிற்கிறது.
கல்வியாளராக, மனிதஉரிமைச் செயல்பாட்டாளராக தொழிற்சங்க வாதியாக பல தளங்களில் பணியாற்றியவர் பேராசிரியர் வசந்திதேவி. இராணிமேரி கல்லூரியிலும், பிறகு குடந்தை மகளிர் கல்லூரியிலும் முதல்வராகப் பணிபுரிந்த அவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக அமர்த்தப்பட்டபோது, அப்பல்கலைக் கழகத்தைக் கட்டமைப்பதிலும், அதன் பாடத் திட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த பிரிவுகளை இணைப்பதிலும் மிக முக்கியமான பங்காற்றினார்.
பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் ஆணைய தலைவராக அமர்த்தப்பட்டு, சென்னை மாநகரத்தில் சாலையோர குடும்பப் பெண்கள், புறக்கணிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் நலனுக்காகத் தன்னால் இயன்ற பணிகளைச் செய்தார்.
வயது முதுமை காலத்திலும், கல்வி உரிமைக்கான போராட்டக் களங்களில் தொடர்ந்து செயல்பட்டார். குறிப்பாக மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து, அதன் வரைவுக் கட்டத்திலிருந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் இடைவிடாமல் பங்கேற்றார்.
பேராசிரியர் வே. வசந்திதேவி அவர்கள் நிறைவாழ்வு வாழ்ந்து தனது 87-ஆவது வயதில் மறைவுற்றாலும், அவரது இழப்பு எளிதில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
பேராசிரியர் வே. வசந்திதேவி அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
"நிலத்தடி நீருக்கு வரியா....?" ----- தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
நிலத்தடி நீருக்கு வரியா?=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர்
கி. வெங்கட்ராமன் கண்டனம்!
=====================================
இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.எம். பாட்டீல், நிலத்தடி நீர் பயன்படுத்தும் உழவர்கள் மீது நீர்ப்பயன்பாட்டு வரி விதிக்கப்படும் என அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகியவை சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாட்டு உரிமை நீரைப் பிடித்து வைத்துக் கொள்வதால் நீர் முற்றுகையில் நீண்டநாளாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், காவிரிப் பாசனப் பகுதியில் கூட உழவர்கள் பெரிதும் நிலத்தடிநீரைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
உழவர்கள் பொறுப்பற்ற முறையில் நீரை வீணடிக்கிறார்கள் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தேவையற்று பம்புசெட் மோட்டார் ஓடிக் கொண்டிருந்தால் அது அடிக்கடி பழுதடையும் என்ற செய்திகூடத் தெரியாதவர்கள் அல்ல உழவர்கள்.
பொதுவாக, நிலத்தடிநீர் உறிஞ்சுவது அதிகரித்து வருவதும், அதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்று கொண்டிருப்பதும், நீர் உப்பாவதும் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு பொது சிக்கலாகும்.
தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் கலந்து பயன்படுத்த பொருத்தமற்றதாக மாறிவருவது கண்மூடித்தனமான தொழில் வீக்கத்தோடு இணைந்து வரும் பேராபத்து ஆகும்.
எனவே, இந்திய அரசு நிலத்தடிநீர் பெருக்கத்தை உறுதி செய்வதற்கு அறிவியல் வழிப்பட்ட மனிதநேயம் உள்ள மாற்றுத் திட்டங்களைக் கருதிப் பார்க்காமல், ஏற்கெனவே கடன்வலையில் சிக்கியுள்ள உழவர்கள் மீது நீர் வரி என்ற பெயரால் மேலும் ஒரு தாக்குதல் தொடுப்பது மனிதப்பகை நடவடிக்கை மட்டுமல்ல, பொருளியல் வழியிலும் பிற்போக்கான திட்டமாகும்.
பசுமைப் புரட்சி என்ற பெயரால் திணிக்கப்பட்ட ஒட்டுரக - இரசாயன வேணாண்மைதான் கிராமப்புற நிலத்தடிநீர் உறிஞ்சல் அதிகரித்திருப்பதற்கு முதன்மைக் காரணமாகும்.
எனவே, இரசாயன வேளாண்மைக்கு மாற்றாக, குறைவான நீர்ப்பயன்பாடு உள்ள இயற்கை சார்ந்த மரபு வேளாண்மைக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள் செயல்படுத்தி, உழவர்களை இரசாயன வேளாண்மை என்ற விலங்கிலிருந்து விடுவிக்க வேண்டும். உடனடித் தேவையாக ஒட்டுவகை வேளாண்மையிலும், சொட்டுநீர்ப்பாசனத்தை விரிவுபடுத்த வேண்டும். நீர் சிக்கனத்தில் முன்வரிசையில் உள்ள உழவர்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்களும் விருதுகளும் வழங்க வேண்டும்.
பெருவளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு ஏற்பாடுகள் செய்வதையும், கழிவுநீர் சுழற்சி ஏற்பாடுகள் நிறுவுவதையும் சட்டக் கட்டாயமாக்க வேண்டும்.
கிராமங்களிலும் நகரங்களிலும் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களுக்கு மானியமும் ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.
இவ்வாறான மாற்றுத் திட்டங்களைச் சிந்திப்பதற்கு மாறாக, ஏற்கெனவே தள்ளாடிவரும் உழவர்கள் மீது வரித்தாக்குதல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசின் இந்த உழவர்பகைத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என மு.க. ஸ்டாலின் அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================
Subscribe to:
Posts (Atom)